திங்கள், ஜனவரி 30, 2006

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-1

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை. "நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வஹ்ஹாபிஸக் கோட்பாடு உருவாகி உள்ளதாக"க் கட்டுரையாளர் தொடங்குகிறார்.

வட்டி, வரதட்சணை, புரோகிதம், சமாதிகளின் பெயரால் உண்டியல் போன்ற சமூகச் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடுகின்ற வஹ்ஹாபிகளின் குரலை, முதலாளித்துவதின் குரலாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் ஹெச். ஜி. ரஸூல். "... தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வஹ்ஹாபிஸத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகை(?)ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்..." சொல்லலாமாம்.

இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல்?) அப்புறப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். இதில் 'அரபுவகை' என்று தனிவகை ஒன்றுமில்லை. கடமையாற்றுகின்றவன் தமிழனாக இருப்பதில் கட்டுரையாளருக்கு என்ன நட்டம்?

சமாதிகளைக் காட்டி, ஏழைகளைச் சுரண்டிக் கேவலப் பிழைப்பு நடத்தும் 'சாபு'களின் பிரதிநிதியாகத் தன்னை மாற்றிக் காட்டும் 'காம்ரேட்'தான் இரட்டை நிலைபாட்டுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கின்றார். எவ்வித உழைப்புமின்றி 'முதலாளி' ஆவதற்குத்தான் இந்தியா முழுதும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை; மக்களை ஏய்த்துப் பிழைத்து வாங்கிய கார்களுக்குப் பெட்ரோல் போடக் காசு சேர்வதில்லை.

சமாதிகளைக் காட்டிச் சுரண்டிக் கொழுத்தவர்கள், இன்று வஹ்ஹாபிகளால் வாலறுந்த நரிகளாய்.

சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு' முகாரி பாடுபவர்களை, இஸ்லாத்தை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன?

இஸ்லாத்தோடு சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு? ஹெச். ஜி. ரஸூல் விளக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துணியுமுன் இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதையும் அதன் போதனைகள் யாவை என்பதையும் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு ஹெச். ஜி. ரஸூல் எழுதட்டும்.

அடிநாதம்-கொடிநாதம் எல்லாம் அப்புறம் பார்ப்போம்.

- தொடரும்

புதன், ஜனவரி 18, 2006

வஹ்ஹாபியின் வலைப்பூ

வஹ்ஹாப்(நிகரற்றக் கொடையாளன்)ஐச் சார்ந்தவன் வஹ்ஹாபி