புதன், டிசம்பர் 02, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 37

சென்னை திரிபுர சுந்தரி விலாசம் அச்சகத்தில் 1905ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 'குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்' நூலில், புலவனின் பெயருக்கு முன்னால்  இடப்பட்டுள்ள அடைமொழிகளைப் பாருங்கள்:

அலா நிய்யத்தி சுல்தான் அப்துல்காதிறு லெப்பை ஆலிம், ஆரிபு பில்லா, சாகிபு ஒலியுல்லா என்னும் இயற்பெயருடைய குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடற் றிரட்டு.

இந்த அடைமொழிகளுக்கு அருகதையானவன்தானா இந்த அம்மணப் புலவன் என்பதை, இப்புலவனுடைய தரம் தாழ்ந்த கற்பனையின் துணை கொண்டு இதனைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்ல. இன்னும் மிகமிகக் கொச்சையான வருணனைகளும் புலவனின் பாடல்களில் ஏராளம் காணப்படுகின்றன. "அவையெல்லாம் உள்ளர்த்தம் பேசிடும் அகமிய ஞானங்கள்" எனக் கூறுவோரின் பிதற்றல்களையும் இனித் தொடர்ந்து காணலாம் ...

ஞாயிறு, மே 10, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 36

உன்னை அலங்கரித்து, உனக்குச் சுவையானவற்றை உண்ணத் தந்து, இப்படியாக உனக்குப் பணிவிடை செய்ய நான் தயாராக இருக்கும்போது நீ ஏன் என்னை ஏறெடுத்தும் பாராமல் இருக்கின்றாய் மனோன்மணியே?

உனக்கு என் மீது ஆசை இல்லையோ?

                        எனக் கேட்கின்றான் கவிஞன்.

உன் மீதுள் ஆசித்து உயிர் பொருள் உன் தாளுக்கு அளிப்ப
   என் மீதில் ஆசை உனக்கில்லை ஏன் மனோன்மணியே

என அமைகிறது பாடல். இது மட்டுமன்று, இன்னும் சொல்கின்றான் கவிஞன்.

என்னுடைய காசையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு, நீ என் ஒருவனை மட்டுமே அணைத்துக்கொள்ளாமல், கண்டவனையெல்லாம் கட்டி அணைத்துக்கொள்கின்றாயே? இப்படி நீ வேசியாயிருப்பாய் என்பது தெரிந்திருந்தால் நான் காசு பணத்தை உன்னிடம் காட்டாமலே இருந்திருப்பேன் என்கின்றான் புலவன்.

வேசைக் குணத்தை விரும்புவாய் என்றறிந்தால்
   காசைப் பணத்தை நான் காட்டேன் மனோன்மணியே

இப்படி வேசி என்ற பெயரைப் பெற்று, வீட்டிலிருந்து வெளியேறி ஊர் சுற்றித் திரிகின்ற உன்னை 'தாசி' என்று சொன்னாலும் தகுமன்றோ என மகத்துவம் மிக்க வல்ல அல்லாஹ்வைப் பார்த்து பிறமதச் சித்தாந்தத்திற்குச் சோரம் போன இந்தக் கழிசடைக் கவிஞன் குறிப்பிடுகின்றான்.

இது மட்டுமல்ல, இறைவனாகிய இந்தத் தாசியைக் கூட்டிக் கொடுப்பதாகக்கூட (லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்) கற்பனை செய்து, கற்பனையில் இழிந்த நிலைக்கு இறங்கிச் செல்கின்றான் புலவன். வேசியாக, தாசியாக நீ இருக்கும்போது தடி போலிருக்கும் நான் உன்னை எப்படி ஜாதிகெட்டக் குணங்குடியாருக்குக் கூட்டிக் கொடுப்பேன்? எனக் கேட்கின்றான் கவிஞன்.

வேசி என்று பேர் படைத்து வெளியில் புறப்பட்டவளைத்
   தாசி என்று சொல்லத் தகாதோ மனோன்மணியே

தடி போலிருந்து உனை யான் சாதிகெட்ட பாழுங் குணங்
   குடியார்க்கு எப்படிக் கூட்டிக் கொடுப்பேன் மனோன்மணியே

என இவ்வளவும் சொல்லி, இகழ்ந்து பாடி, அல்லாஹ்வாகிய காதலியோடு ஊடல் கொள்கின்றான் இப்புலவன். இனி, ஊடல் நீங்கிக் கூடல் நிலைக்கு வந்து புலவன் புலம்புபவைப் பின்னால் அணிவகுக்கின்றன.

இங்ஙனமாக ஏக அல்லாஹ்வுடைய மகோன்னதத்துக்கு மாசு கற்பிக்கின்ற வகையில் மாப்பிள்ளை-பெண்டாட்டி உறவு பேசி இறைவனைப் பெண்டாள நினைக்கின்றான் இச்சண்டாளக் கவிஞன்.

இந்தப் புலவனெல்லாம் மாபெரும் இறைநேசனாம். மெஞ்ஞான நாதாவாம்; ஸூஃபித் திலகமாம். இப்புலவனுடைய பாடல் நூலின் பழைய பதிப்பு ஒன்றில் இப்புலவனின் பெயருக்கு முன்னால் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகளைப் பார்ப்போம் …

புதன், மே 06, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 35

‘மனோன்மணிக் கண்ணி’யில் இறைவனை மனோன்மணி என்னும் பெண்ணாக உருவகித்துக்கொண்டு, இவருடைய விரக தாபங்களை எல்லாம் விவரித்துப் பாடுகின்றார். அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்பதற்கு முன்னால், மனோன்மணிக் கண்ணியின் கடைசிப் பாடலாகக் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளதை முதலில் பார்த்தாக வேண்டும்.

அப்பாடல்:
உமையாள் பாதம் முன் நிற்க
ஆதியந்தம் கடந்த உமையாள்தன் பாதம்
   அகண்ட பரி பூரணமாம் ஐயர் பாதம்
சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம்
   தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றிச்செய்து
ஆதியந்தங் கடந்த நந்திபாதம் என்றும்
   வாலை மனோன் மணியம்மை பாதமென்றும்
ஓதியந்தங் கடந்தண்ட மிரண்ட தாக
   ஒன்றுமறியா வறிஞன் உரை செய்தானே

உமையாள் பாதத்தையும் ஐயராகிய சிவபெருமான் பாதத்தையும் கணபதியின் பாதத்தையும் கைகுவித்து வணங்கித் துதி செய்துவிட்டு, நந்திப் பெருமான் பாதத்தையும் இறுதியாக மனோன்மணியம்மை பாதத்தையும் ஓதி உரை செய்தாராம் இந்தப் புலவர்.

“இல்லை இறைவன் அல்லாஹ்வைத் தவிர” என ஈமான் கொண்டவன் எவனும் இவ்வாறு பாடத் துணிய மாட்டானன்றோ? உமையாள் பாதத்துக்குத்தான் இப்புலவன் முன்னுரிமை கொடுக்கின்றான். ‘உமையாள் பாதம் முன் நிற்க’ என்னும் பாடல் தலைப்பு இதைத்தானே காட்டுகிறது? உமையாளை அடுத்து, சிவபெருமானை கும்பிட்டுவிட்டு, அதையடுத்து கணபதி கடவுளுக்குத் தொழுது இறைஞ்சிக் கரம் குவிக்கின்றார். பிறகுதான் இவருடைய மனோன்மணி என்னும் காதலியாகிய அல்லாஹ்வைப் பற்றிப் பாட வருகின்றார்.

இதிலிருந்து குணங்குடி மஸ்தானின் கடவுள் கொள்கையைக் குன்றின் மேலிட்ட விளக்கு போல நாம் சிரமமின்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது.

பெண்ணாக, ஆணாக, குழந்தையாக என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு இறைவனைப் பிற மதத்தார் எப்படியெல்லாம் வழிபட்டார்களோ அதுபோலக் குணங்குடி மஸ்தானும் வழிபடுகின்றார். இறைவனைப் பெண்ணாகக் கருதி அவர் பாடும்போது அவர் அபத்தத்தின் எல்லைகே சென்றுவிடுகின்றார். அதையும் பார்ப்போம்:

கண்ணே என் கண்மணியே கண்குளிர்ந்தக்கட்டழகுப்
     பெண்ணே அமிர்தப்பிழம்பே மனோன்மணியே

எனக் கூப்பிடுகின்றார். இறைவனாகிய பெண்ணோடு மணவறையில் கைகோர்த்துக்கொண்டு அப்பெண்ணின் கண்களில் மைதீட்டி, மார்பில் கைவைத்துக் காமப்பாலைக் குடிப்பதாகவெல்லாம் கனவு காண்கிறாராம் இந்தக் குணங்குடி மஸ்தான்.

மலர்ந்திருக்கும் பொற்கமல மணவறையில் இருவரும் கை
   கலந்திருக்கவும் கனவு கண்டேன் மனோன்மணியே
மைதீட்டவும் கயற்கண் மலரின் மலர் முலையில்
   கைப்பூட்டவும் கனவு கண்டேன் மனோன்மணியே
வாமப் பாலைப் பருக மறுவாலிபம் வருக
   காமப்பாலுண்ணக் கனவு கண்டேன் மனோன்மணியே

இவ்வாறு கனவு கண்ட புலவர், அடுத்து இறைவனிடம் – அதாவது அல்லாஹ்வாகிய காதலியிடம் என்ன கூறுகின்றார் பாருங்கள்:

கூந்தல் இலங்கக் குரும்பைத் தனம் குலுங்க
   நேர்ந்து நடம் புரிந்து நிற்பாய் மனோன்மணியே

மலர்மாலைகள் கிடந்து மார்பில் பின்னலாடும் உன்றன்
   அலர் முலையும் யான் என்று அணைவேன் மனோன்மணியே

பிடியாரைப் போலும் பிடிப்பேன் முலையைக் குணங்
   குடியாரைப் போலும் குடிப்பேன் மனோன்மணியே

காதம்பரிமளிக்கும் கஸ்தூரிப் பொட்டிடுவேன்
   போதும் சவ்வாதுமணிந்து புணர்வேன் மனோன்மணியே

தலைக்கு மினுக்கெண்ணெய் தடவிச் சடை பின்னி வைப்பேன்
   முலைக்கு வன்னக்கச்சு இறுக்கி முடிப்பேன் மனோன்மணியே

இப்படிப் பலவாறாகத் தன் காதலிக்கு அலங்காரம் செய்து அவளைப் புணர விரும்பிய புலவன், பின்னர் அக்காதலிக்கு தீப ஆராத்தி எடுத்து அவளுக்கு உணவு படைக்கின்றானாம்.

கற்பூர மேற்றிக் கரத்தீப ஆலாத்தி
   எப்பாரும் போற்ற எடுப்பேன் மனோன்மணியே

முக்காலமும் பூசை முடிப்பேன் முக்காலமல்லால்
   எக்காலமும் பொங்கலிடுவேன் மனோன்மணியே

சாதம் தளிகை சமைத்துச் சாம்பிராணித் தூபமிட்டுப்
   பாதம் தொழுதிட்டுப் படைப்பேன் மனோன்மணியே

முட்டை பொரிப்பேன் முழுக் கோழியும் பொரிப்பேன்
   தட்டைப் பீங்கானில் தருவேன் மனோன்மணியே

இவ்வாறாக எல்லாம் தன் காதலிக்குப் பணிவிடை செய்வாராம்.

இந்தப் பாடல்களுக்கு உள்ளர்த்தம் பேசி இதைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்ற ஸூஃபிச் சாம்பிராணிகள் அனேகர் உள்ளனர். பிற மதத்தவர் சிவலிங்கத்துக்குக்கூட சிம்பாலிஸம் சொல்வார்கள். அதுபோல சிம்பாலிஸம் பேசியே சீரழிந்து போனவர்கள் இந்த ஸூஃபிஸவாதிகள். இனி, மனோன்மணி கண்ணியைத் தொடருவோம்.

புதன், ஏப்ரல் 29, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 34

சந்நியாசியின் சல்லாபம்

இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றே ஸூஃபிஸமாகும். இந்த ஸூஃபிஸ வியாதியை முஸ்லிம்களிடமிருந்து முற்றாகக் குணப்படுத்தினால் தான் இஸ்லாம் நலம் பெறும்.

ஸூஃபிஸத்தை ஏன் வியாதி என்கின்றோம்?

கிரேக்க கீழை நாட்டுச் சித்தாந்தங்களைப் பார்த்து இஸ்லாத்துக்குள்ளும் அத்துவைதக் கோட்பாட்டைத் திணித்தவர்கள் இந்த ஸூஃபிஸவாதிகளே. இறைவனோடு இரண்டறக் கலப்பதில் இவர்களுக்கு அப்படி என்னவோ ஓர் அலாதி இன்பம்! அல்லாஹ்வோடு எந்த அடியானும் இரண்டறக் கலந்துவிட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

அல்லாஹ், ஒரே இறைவனே! அவன், ‘அஹது’ ஆகவே இருக்கின்றான். இரண்டு என்கிற பேச்சுக்கே அங்கு இடம் கிடையாது. அப்படியிருக்க, பலவீனமான அடியானும் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வும் கலந்து, இரண்டு பேரும் வெவ்வேறு என்ற தன்மையிலிருந்து நீங்கி, இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து, இரண்டற ஆகிவிடுகின்றார்களாம். இங்ஙனம் இரண்டறக் கலக்கும் தன்மையே அத்துவைதம் ஆகும்.

இப்படியிருக்க, அடியானும் ஆண்டவனும் இரண்டறக் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாகி நிற்கின்ற நிலைதான் பேரின்ப நிலையாம். இப்பேரின்ப நிலையைப் பாடுவதற்குச் சில வழிகெட்ட கவிஞர்கள் சிற்றின்ப உருவகங்களை அமைத்துக் கவிதை இயற்றி இருக்கின்றார்கள்.

சைவ வைணவத் தமிழிலக்கியங்களில் இறைவனைக் காதலியாகவும் தன்னைக் காதலனாகவும் உருவகித்துக்கொண்டு புலவர்கள் பாடுகின்ற இத்தகு இயல்பினை சகஜமாகக் காணலாம். இதை பக்தி இலக்கியத்தின் உன்னத மரபு என அவர்கள் போற்றிக் கொண்டாடுவர். ஆனால் இஸ்லாத்தில் அப்படியெல்லாம் உருவகிப்பதற்கோ பாடுவதற்கோ கிஞ்சிற்றும் அனுமதி இல்லை. அவர்களுக்கு வேண்டுமானால் அது உன்னத மரபாயிருக்கலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை அது கண்டிக்க வேண்டிய கழிசடை மரபேயாகும்.

அல்லாஹ்தான் எஜமானன். மனிதப் படைப்புகள் அனைத்தும் அவனுடைய அடிமைகளே. ஏன்? நபி (ஸல்) அவர்களைக்கூட, ‘அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ’ (முஹம்மது – ஸல் அவனுடைய அடிமை) என்றுதானே உறுதிப் பிரமாணம் கூறுகின்றோம்?

நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்வை ஆண்டவன் என்றும் தன்னை அடிமை என்றும்தானே கூறினார்கள்? அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எந்நிலையிலும் இரண்டறக் கலந்து ஒன்றாக ஆகிவிடவில்லையே! இப்படியிருக்க இந்த ஸூஃபிஸவாதிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகின்றார்கள் என்று கருதுவது இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்றாகும்.

இனி, குணங்குடியாருக்கு வருவோம். குணங்குடியார் அல்லாஹ்வோடு இரண்டறக் கலந்து பேரின்ப நிலை பெறுவதற்காக வழிகெட்ட கவிஞர்களைப் பின்பற்றி சிற்றின்ப உருவகம் அமைத்துப் பல பாடல் தொகுப்புகளைப் பாடியுள்ளார்.

“அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக யாரும் / எதுவும் இல்லை”

என இறைமறை இயம்புகிறது. ஆனால் குணங்குடி மஸ்தானோ இறைவனை ஒரு பெண்ணுக்குச் சமமாக வைத்து உருவகம் செய்கின்றார். இது அவர் செய்த முதல் தவறென்றால், இறைவாகிய அப்பெண்ணை இவருடைய காதலியாகக் கற்பனை செய்கின்றாரே, அது இரண்டாவது பாவமாகும். இனி, அக்காதலியாகிய அல்லாஹ்வோடு இக்காதலனாகிய கவிஞன் கூடுவதையும் ஊடுவதையும் சல்லாபிப்பதையும் மனம் போன போக்கில் பாடிச் செல்வது இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகவே நமக்குக் காட்சியளிக்கிறது.

இவ்வாறு காமக் களியாட்டப் பாடல்களைப் பாடிப் பாடி இணைகின்றாராம் குணங்குடி மஸ்தான். செக்ஸ் சாமியார் ரஜனீஷ்கூட ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என ஒரு நூல் எழுதியுள்ளாரன்றோ? அதே பாணிதான் இந்த மஸ்தானிடமும் காணப்படுகின்றது.

நிராமயக் கண்ணி, பராபரக் கண்ணி, ரஹ்மான் கண்ணி, மனோன்மனிக் கண்ணி, நந்தீஸ்வரக் கண்ணி ஆகிய குணங்குடி மஸ்தானுடைய கண்ணிவகைப் பாடல்களை எடுத்துக்கொள்வோம். இவற்றிலெல்லாம் புலவர் இறைவனைப் பெண்ணாக உருவகித்துக்கொண்டு தாறுமாறாகக் கற்பனை செய்து பாடியுள்ளார்.

இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகின்ற வழிகெட்டக் கோட்பாட்டினைக் குணங்குடி மஸ்தான் கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய பாடல் வரிகளே சான்று பகர்கின்றன:

அத்து விதமே அறிவகண்டி தாகாரக்
       கர்த்தவியமே என் கண்ணே பராபரமே
                            (கண்மணிமாலைக் கண்ணி, பாடல்-1)

அத்துவிதம் வாழி அறிவுகண்டிதம் வாழி
        கர்த்தனே நீ வாழி கண்ணே பராபரமே
                             (கண்மணிமாலைக் கண்ணி, பாடல்-94)

என்பவை அத்துவைதத்துக்கு வக்காலத்து வாங்கி இவர் பாடியுள்ள பாடல்களாகும்.

 தொடரும், இன்ஷா அல்லாஹ் ...

ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 33

சாதாரணமாக, எந்த வழிகெட்ட ஒரு கவிஞருங்கூட தம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தையே பாடுவார். இங்குக் குணங்குடி மஸ்தான் அதுகூட பாடவில்லை. இவருடைய கடவுளே இவருடைய குருநாதரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தானே! இவரைப் பொருத்தவரை கடவுள் வணக்கம் பாடுவதும் குருவணக்கம் பாடுவதும் ஒன்றுதான். இனி, பாடலைப் பார்ப்போம்:

இணங்கு மெய்ஞ்ஞானப் பேரின்பக் கடலின்
     இன்னமு தெடுத்து எமக்களிப்போன்
பிணங்கிய கோச பாசமா மாயைப்
     பின்னலைப் பேர்த் தெறிந்திடுவோன்
வணங்கிய தவத்தினோர்க்கு அருள் புரிய
     வள்ளலாய் வந்த மாதவத்தோன்
குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என்
     குருபாதம் சிரத்தின் மேல்கொள்வாம்


“முஹ்யித்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் தான் தமக்கு இன்பம் செய்விப்பார்களாம். தம்முடைய துன்பம் துயரங்களை எல்லாம் அவர்கள் தான் பேர்த்து எறிவார்களாம். அவர்களை வணங்கித் தவம் செய்பவர்களுக்கு, அவர்கள் அருள் புரியும் வள்ளலாம். அத்தகைய குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என் குருவின் பாதத்தை யாம் தலைமேல் வைப்போமாக” எனப் பாடுகின்றார் குணங்குடி மஸ்தான்.

‘கோசம்’, ‘பாசம்’, ‘மா மாயை’ இவையெல்லாம் சைவ சித்தாந்த சாம்ராஜ்யத்தின் தனிப்பட்ட காப்பிரைட் உரிமைகள். மாற்றாருக்குரிய இந்த காப்பிரைட் சமாச்சாரங்களை எல்லாம் பேர்த்தெடுத்து, குணங்குடி மஸ்தான் இஸ்லாமிய மாளிகை மீது வீசி மாசுபடுத்துகின்றார்.

இந்த அந்நிய சாம்ராஜ்யத்து வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, "இவை உள்ளர்த்தம் பேசும் இறை ரகசியக் குறியீடுகள்" எனப் பிதற்றுகின்றன சில அகமியக் கிறுக்குகள். மஸ்தானின் உளறல்களில் அகமியம் கற்பிப்பதற்காகவே இவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, “அஷ்ஹது கலிமாவுக்கும் அகமியப் பொருள் உண்டு” என அளந்துவிடுகின்றனர்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தராத, கற்றுத் தராதவற்றையெல்லாம் கடை விரித்துப் பேசும் இந்த அகமிய அதிமேதாவிகள், மெய்ஞான நாதாக்களாம்! ஸூஃபிகளாம்! இவர்களுடைய வெற்று வார்த்தைகள் ஸூஃபித்துவக் கோட்பாடாம்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நீர், நெருப்பு, காற்று எல்லாம் கடவுளர்களே என அத்துவைதம் பேசும் புழுத்துப் போன சித்தாந்தமே கிரேக்கத் தத்துவங்களாகும். அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல இந்து மத வேதாந்தங்கள்.

இவ்விரண்டையும் எடுத்து வந்து புனிதமிக்க இஸ்லாமியப் பேழையில் திணித்தவர்கள் பெரும்பாலான நம் ஸூஃபிக் கவிஞர்களாவர். இவர்களுடைய ஸூஃபித்துவ வலையில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பூச்சிகள் மீது ஒருவித மயக்க மருந்து தெளிக்கப்படுகின்றது. அதிலிருந்து அவ்வளவு எளிதில் இந்தப் பூச்சிகளால் மீள முடிவதில்லை. கடைசியாக நரகின் எரிவிறகுகளாக இவைகளை இட்டுச் செல்லக்கூடிய விஷம் கலந்த மதுபானம் தான் ஸூஃபிஸமாகும்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ் ...