ஞாயிறு, டிசம்பர் 09, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17

செக்கச் சிவந்த ஆடை அணிந்து, செஞ்சந்தனத்தை மேனியெங்கும் பூசியவர்களாக, செம்மணியிலான ஆபரணங்களையும் சூடிக் கொண்டு, திரண்டு நின்ற பெண்கள் அலீ (ரலி) அவர்களின் அழகைக் கண்ணாரப் பருகினர். அந்தப் பெண்களது உள்ளத்தின் உள்ளே உள்ளக் காமத்தீயின் சிவப்புதான் இவ்வாறு வெளித் தோற்றத்திலும் சிவப்பு மயமாகப் பிரதிபலிக்கிறதோ என வியந்து பாடுகிறார் புலவர் (பாடல் 139).

"அலீயின் அழகைப் பார்ப்பதற்கு இமைகள் இல்லாத ஆயிரம் கண்கள் வேண்டும்" (பாடல் 142).

"பாத்திமா ஒருத்தி மட்டுமோ இந்தப் பேரழகையெல்லாம் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறாள்" (பாடல் 146).

என்றெல்லாம் அங்குத் திரண்டிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்களாம். அவ்வாறு பேசிக் கொண்ட பெண்களின் நிலை பற்றிப் புலவரப்பா பாடுவதைக் கேளுங்கள்:
சிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். (பாடல் 141).
அலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப் பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச் சொட்ட வருணித்துச் செல்கிறார்.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஒவ்வொரு பருவப் பெண்ணின் அங்கங்களையும் வருணிக்கும்போது புலவர் தீட்டுகின்ற சொல்லோவியங்களைப் படித்துப் பார்த்தால், "இதுவும் ஓர் இஸ்லாமிய இலக்கியமா?" என அவை முகம் சுழிக்கச் செய்கின்றன.

ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் கற்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபித்தோழியராம் ஸஹாபியப் பெண்டிரைப் பற்றி இப்படி ஆபாசமாக, அவர்களின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும் விதமாகப் பாடத் துணிந்து விட்டது அவர்மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறன்றோ?

"இளமுலைப் பேதையும்" (பாடல் 148); "குரும்பையின் முலையுடைய பொதும்பையும்" (பாடல் 151); "செம்பொன் குவிமுலை மங்கையும்" (பாடல் 153); "வார் அறுத்து எழுந்து வீங்கும் வனமுலை மடந்தையும்" (பாடல் 155); "கோங்கிள முலை அரிவையும்" (பாடல் 156); அலீ (ரலி) அவர்களைச் சுற்றி நின்று மொய்த்தார்களாம்.

"குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து" நின்ற பெண்களுள் ஒருத்தியாகிய பேரிளம்பெண் என்பவள், "அலீயினைச் சேரா மாதர் அலி என இருத்தல் நன்று" என உரத்துக் கூறி நின்றாளாம் (பாடல் 159).

இவ்வாறாகத் திருவுலா வந்த அலீ (ரலி) அவர்கள் கடைசியாகத் திருமணப் பந்தலை அடைந்தார்கள். பந்தல் வாசலில், "... வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்பக் குரவை எம்மருங்கும் சூழ்ந்து" கடலொலி போல் முழங்கிற்றாம் (பாடல் 166).

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, அக்டோபர் 07, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 16

இன்னொரு சாராருடைய கேள்வி என்னவென்றால், "இலக்கியம் என்றாகும்போது இத்தகைய வருணனைகளும் கற்பனைகளும் இடம் பெறத்தானே செய்யும்; இவை இல்லாமல் எப்படி ஓர் இலக்கியம் உருப்பெறவியலும்?" என்பதாகும்.

இங்குத்தான் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் ஏனைய இலக்கியங்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாட்டை விளக்கி உணர்த்த வேண்டும். உள்ளதை உள்ளவாறு பாடுவதுதான் இஸ்லாமிய இலக்கியமாக இருக்க முடியும். "அங்ஙனம் எவ்வாறு பாடவியலும்?" என்ற கேள்வி எழலாம். சதாவதானி செய்குத் தம்பிப் பாவலருடைய 'நபிகள் நாயகம் மான்மிய மஞ்சரி' என்னும் இலக்கியத்தைச் சான்றாக வைத்து இக்கேள்விக்குப் பதிலுரைத்து விடலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸுஹைர் போன்றோர் இஸ்லாமிய வரம்புக்குள்ளேயே நின்று கவிதைகள் இயற்றிய பெருங் கவிஞர்களாவர். எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அக்கவிஞர்களை அங்கீகரித்திருக்கின்றார்கள்; ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமியத் திருமண முறைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய வரம்பையும் மரபையும் மீறிக் கொண்டு, தமிழ் மரபு என்னும் தடத்தில் கால் பதித்து நின்று உமறுப் புலவர், அலி-பாத்திமா திருமண வைபவத்தைச் சீறாப்புராணத்தில் எப்படியெல்லாம் வருணிக்கிறார் என்பதை ஈண்டுக் காண்போம்.

அலி (ரலி) அவர்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஊர்வலம் செல்வதற்காகக் குதிரைமேல் ஏறினார்கள். அப்போது, 'மடவார் குரவைகள் இயம்ப'லாயினர் (பாத்திமா திருமணப் படலம், பாடல் 121). பேரிகை, திமிலை, குடப்பறை, தடாரி, திண்டிமம், முரசு, பாரிசைப் பதலை, பவணம், வாரணி, மொந்தை, பூரிகை, நவுரி, காகளம், சின்னம், கொம்பு, கைத்தாளம் முதலிய இசைக் கருவிகளெல்லாம் பேரிடியை மிஞ்சக் கூடிய அளவுக்கு முழங்கின. (பாடல் 122).

உமறுப் புலவர் 'ஒலி'யுல்லா அக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை இசைக் கருவிகள் இருந்தனவோ அத்தனையையும் பட்டியல் போட்டுப் பாடி விட்டார். இந்த 'ஒலி'யுல்லா பாடிய அளவுக்கு எக்கச் சக்கமான இசைக் கருவிகளுக்கு ஏற்பாடு செய்ய இயலா விட்டாலும் ஒன்றிரண்டையாவது வைத்துக் கலியாண இசை முழங்குவதுதான் 'ஒலி'யுல்லாவுக்குச் செய்கின்ற மரியாதையாகும் என்று எண்ணிச் செயல் படுகின்றவர்கள் இன்றும் பலர் உள்ளனர்.

அலி (ரலி) அவர்கள் ஊர்கோலம் வருகிற அழகைக் காண்பதற்காக அந்த ஊரில் உள்ள பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து மொய்த்தார்களாம். பாதத்தில் அணிந்திருந்தச் சிலம்புகளும் இடையில் அணிந்திருந்த மேகலைகளும் ஆரவாரம் எழுப்ப, மதம் பிடித்த ஆண் யானையின் கொம்புகளைப் போலப் பெண்களின் மார்பணிகள் மின்ன, புதுத் தேனைச் சொரியக் கூடிய பூமாலைகள் நெகிழ, கடலில் நிலவுக் கூட்டம் பூத்தது போலப் பெண்கள் கூடி மொய்த்தனராம்.
பதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக் கதக்களிக் கரியின் கோட்டுக் கதிர் முலைப் பணிகள் மின்னப் புதுக்கடி நறவஞ் சிந்தும் பூங்குழன் மாலை சோர மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு மொய்த்தார். (பாடல் 132).
அலி (ரலி) அவர்களோடு கூடப்பெற மாட்டோமா என்று ஏங்கிய காரணத்தால் அந்தப் பெண்களின் மேனியில் காமத் தாபத்தால் ஏற்படக் கூடிய 'பசலை' என்னும் கொடிய நோய் படர்ந்ததாம். இத்தகைய எண்ணம் கொண்ட பெண்கள் கூட்டம் வீதியில் சூழ்ந்து கொண்டதாம் (பாடல் 134).

ஒரேயொரு மரத்தில் ஏராளமான கொடிகள் படர்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோல அலி (ரலி) என்னும் ஒரேயோர் ஆடவரைச் சுற்றிப் பல பெண்களும் பார்வையில் படர்ந்தனராம்:
குவிபெருந் தானை நார்ப்பண் கூண்டவை யலியென்றோதும் பவனியின் றருவை நோக்கிப் பல கொடி படர்ந்த தொத்த (பாடல் 132). 
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2007

பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்

திண்ணையிலிருந்து உச்சகட்ட உளறல் செவியைத் தாக்கியபோதுதான் முதன் முதலாகத் திண்ணைப் பக்கம் சென்றேன்; இப்போது மீண்டும் செல்ல வேண்டியதாகி விட்டது. 

"யாருடைய கருவைச் சுமப்பது என்பதை முடிவு செய்யும் கட்டற்ற சுதந்திரம் பெண்களுக்குக் கட்டாயம் வேண்டும்" என்ற முற்போக்குக்(?) கருத்தை 1994இல் 'லஜ்ஜை'யின்றி எழுதி, சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப் பட்டு, தற்போது நம் நாட்டில் 'ஊர் சுற்றி'ப் பார்த்துக் கொண்டிருக்கும் வங்கத்துத் தஸ்லீமாவுக்காகவும் "ஒரு பெண்ணை நபியாகத் தேர்ந்தெடுக்காதது முதல் பல துரோகங்களை அடுக்கடுக்காகச் செய்த ஆணாதிக்கவாதி" என்று முஸ்லிம்களின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றி மயிலாஞ்சி முதல் திண்ணை வரை உளறித் திரிந்த H.G.ரzooலுக்காகவும் ஆதரவுக் குரலாக அன்பர் தாஜ் என்பவரின் "பத்வா என்றொரு நவீன அரக்கம்" என்ற திண்ணையின் 16 ஆகஸ்டு 2007 கட்டுரை படித்தேன். 

'அரக்க' முடிச்சுகளை அவிழ்ப்பதற்குமுன் அவை விழுந்து இறுக்குவது யார் மீது? ஏன்? எப்போது? என்பதை இங்குச் சற்றே அலச வேண்டியதாகிறது. "நான் பக்கத்து வீட்டுக் காரனோடு படுக்கப் போகிறேன்; வரட்டுமா?" என்று தஸ்லீமா சொல்லி விட்டு மட்டும் சென்று விட்டால் எவரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், "உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் என்னைப் போல் சுதந்திரம் தேவை; அவர்களையும் அனுப்பி வையுங்கள்" என்று அழைப்பு விடுக்கும்போதுதான் அங்கு முடிச்சு விழுகின்றது. ஒரு பர்தாவைக் கடையிலிருந்து வாங்கி(யாவது) தன் வீட்டுக்குமுன் தீயிட்டால் தஸ்லீமாவை யாரும் கேட்கப் போவதில்லை. "உங்கள் வீட்டிலுள்ள எல்லாப் பெண்களின் பர்தாவையும் கொளுத்தப் போகிறேன்" என்று அறைகூவல் விடுக்கும்போது இன்னொரு முடிச்சு விழுகின்றது.
Why you don't understand Indian Muslims Fugitive Bangladeshi writer Taslima Nasreen wrote a piece on purdah in a Kolkata-based Bengali daily. Not many took notice of it. But when the same article was translated and published in an English magazine a month later with the provocative title, "Let us burn the burqa," it raised a storm. Nobody bothered to find what millions of Muslim women across the country who don't wear the burqa felt about the issue. This battle is always between the elite. The masses only bear the consequences.
முழுதும் படிக்க [சுட்டி -1]. 

'சுற்றுலாப் பயணி' விசாவில் நம் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள தஸ்லீமா, தாராளமாக ஊர் சுற்றிப் பார்க்கட்டும். அதை விடுத்து, விளம்பரத்தோடு 'தொழில்' செய்ய முனையும்போது - அதுவும் விலைபோகாத ஊரான ஹைதராபாதில் - அடுத்த முடிச்சு விழுகிறது அழுத்தமாக. 

தஸ்லீமாவைத் தாக்கியதாக எம் ஐ எம் கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களோடு 15 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். மேற்கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும்; செய்யட்டும். "நான் அச்சமற்றவள். இந்தியாவை விட்டு எங்கும் போக மாட்டேன்" என்று வசனம் பேசிய வீராங்கனை, அழுத்த முடிச்சின் இறுக்கலால் "என் மரணம் வெகு தொலைவில் இல்லை" என்று இப்போது புலம்புகிறார். 'அளவற்ற வெகுமதி' அறிவிப்பால் தஸ்லீமாவுக்குக் காவல் வலுப் படுத்தப் பட்டுள்ளதாம் [சுட்டி-2]. தஸ்லீமாவின் காவலுக்கு வேண்டுமானால் நம் வரிப் பணத்திலிருந்து செலவு செய்து கொள்ளட்டும்; ஆனால், தம் குடும்பத்துப் பெண்கள் கற்புநெறியோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் வைத்துள்ள எவரும், "தஸ்லீமாவுக்கு ஆதரவு தருகிறேன்" என்று கூறுவது வெறும் பேச்சாகத்தான் இருக்கும்; அல்லது அதற்கு வேறு உள்நோக்கம் இருக்கும்.
*** 
'குடி, குடியைக் கெடுக்கும்' என்று மதுக் கடைகளின் வாசலில் வைக்கப் பட்டிருக்கும் அபத்த விளம்பரங்களைப் போலல்லாது, குடிக்கச் செல்லும் ஒருவரை,
நம்பிக்கையாளர்களே! மது, சூது, சிலைவழிபாடு, அம்புகள் எறிந்து குறி கேட்பது ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்கச் செயல்களைச் சார்ந்தவை. ஆகவே, நீங்கள் அவற்றை விலக்கி விடுங்கள்; வெற்றியடைவீர்கள்.
என்ற [005:090] இறைவனின் கட்டளையை எடுத்துச் சொல்லி, "குடிக்காதே!" எனத் தடுப்பதற்கு மட்டுமின்றி, மீறினால் ஒரு குடிகார முஸ்லிமின் மது நிறைந்த கோப்பையைக் கையால் பறிப்பதற்கும் இன்னொரு முஸ்லிமுக்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது.
79. "He who amongst you sees something abominable should modify it with the help of his hand..."
முழுதும் படிக்க [சுட்டி-3a], மூலத்திலிருந்து படிக்க [சுட்டி- 3b]. 

இஸ்லாம் இவ்வாறு கூறி நிற்க, "குடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறது; ஆனால் அதற்கு நேரம், காலம், அளவு எல்லாம் இருக்கின்றன" என்று வழக்கம்போல் H.G.ரzooல் மே மாத 'உயிர்மை' இதழில் மேதாவித் தனமாக உளறி வைத்தார். (இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் - மெளனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்). 'புதிய வரலாறு படைக்க'ப் புறப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் 'பழைய வரலாறு'களைப் புரட்டிப் பார்க்கலாம்; ஆனால் அவற்றுள் புரட்டுதல் செய்ய முயலக் கூடாது. மீறி முயன்று விட்டு, "மேற்கத்தியர்கள் எழுதி வைத்தவற்றை நம்பி மோசம் போனேனே! ஐயகோ! உள்ளூர் முல்லாக்களின் அரக்கம் பாய்கிறதே" என்று அரற்றித் திரிவதில் பயனேதுமில்லை. ஏனெனில், பழைய வரலாறுகள் அனைத்தும் பதிவு செய்யப் பட்டுப் பாதுகாப்பாக இருக்கின்றன. நாவிதரைத் தம் வீட்டுக்கு அனுப்புவதில்லை என்பதற்காகவும் நோன்பு வருகிறது, கஞ்சி தர மாட்டார்கள் என்பதற்காகவும் தன்னை ஊர் விலக்கம் செய்வதாக அறிவித்த அதே "ஜமாஅத்தின் கொள்கைகள்தாம் என்னுடையதும்" என்று அந்தர் பல்டி (குமுதம் ரிப்போர்டர் 12 ஆகஸ்டு, 2007) அடிக்கும் கொள்கைக் குன்றுக்கு, 'இலக்கிய ஆதரவு' … தேவைதான்.
***
"முரண் கொண்டவர்களால் மதினாவுக்கு விரட்டப் பட்ட நாயகத்திற்கு, அங்கு ஆண்ட கிருஸ்துவ மன்னன் அடைக்கலம் தருகிறான். சரிசமாக இருக்க வைத்து மத ரீதியான ஐய்யப்பாடுகளை கேள்வியாக முன் வைக்கிறான். நபிகள் தனது பக்கத்து தெளிவை முன்வைக்கிறார்கள்" 
என்ற 'புதிய வரலாற்றுச் செய்தி' ஒன்றைக் கட்டுரையில் காண நேர்ந்தது. இஃது எனக்குப் புதிய செய்திதான். இந்தப் புதிய செய்தியை அன்பர் தாஜ் எங்கிருந்து பெற்றார் என்ற சான்றைத் தந்தால் நன்றியுடையவனாவேன்!. இப்போது பதிவு செய்யப் பட்டப் 'பழைய வரலாறு' சொல்வதைப் பார்க்கலாம்:
நபித்துவத்தின் 14 வது ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகல் கி.பி. 622 செப்டம்பர் 23ல் நபி (ஸல்) குபா வந்திறங்கினார்கள் (நூல்: ரஹ்மத்துல்லில் ஆலமீன்). உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) மக்காவிலிருந்து வெளியேறிவிட்ட செய்தியை மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் கேட்டவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவிற்கு வெளியில் உள்ள ஹர்ரா என்ற இடத்திற்கு வந்து காத்திருப்பார்கள். மதிய வெயில் கடுமையானவுடன் மீண்டும் மதீனாவிற்கு வந்து விடுவார்கள். ஒருநாள் மிக நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்து விட்டு மதீனாவுக்குத் திரும்பினார்கள். அது சமயம், யூதர்களில் ஒருவன் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான். நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் வெண்மையான ஆடை அணிந்து வருவதைப் பார்த்தவுடன் "ஓ அரபுகளே! நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது!" என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை வரவேற்க ஹர்ரா நோக்கி ஓடினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி). இப்னுல் கய்ஸ் (ரஹ்) கூறுகிறார்: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும் வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர்த்திப் பேசுவதாலும் ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர் முழக்கம் (அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைந்தனர். வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று "வருக! வருக!" என வரவேற்றனர். நபி (ஸல்) அமைதி தவழ வந்து கொண்டிருந்தார்கள் ... மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.
முழுதும் படிக்க [சுட்டி-4]. 

'யஃத்ரிப்' என்ற பெயரில் அன்றுவரை அறியப் பட்டிருந்த நகர், அன்றிலிருந்து 'மதீனத்துர் ரஸூல் - ரஸூலின் பட்டணம்' என்ற புதுப் பெயரைப் பெற்றது. 'மதீனா' என்று இக்காலை சுருக்கமாக வழங்கப் படும் அந்நகர், நபிகள் நாயகத்துக்கு உறவுகளால் பிணையப் பட்ட நகராகும். அவர்களின் தாயின் பிறந்த மண்ணாகும். நபிகள் நாயகத்தின் தாய்மாமன்கள் மதீனாவில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்திருந்தனர்.

*** 

இறுதியாக, 'அரக்க'த்திற்கு வருவோம். ஃபத்வா (தீர்ப்பு) என்பது, இஸ்லாத்தைப் பொருத்த மட்டில் இரண்டு அடிப்படைகளையோ இரண்டில் ஒன்றையோ அகத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். தீர்ப்பில், குர் ஆனுடைய வசனங்கள் குறிப்பிடப் பட்டு, "இன்ன-இன்ன இறை வசனங்களின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப் படுகிறது" என்று குறிப்பிடப்பட வேண்டும். அல்லது, "நிறுவப் பட்ட உறுதியான இன்ன-இன்ன நபி மொழிகளின் அடிப்படையில் இதை வழங்குகிறோம்" என்று குறிப்பது ஒரு ஃபத்வாவின் அடிப்படை நிபந்தனையாகும். இவ்விரண்டுமோ இரண்டில் ஒன்றோ இல்லாதது இஸ்லாமிய ஃபத்வா ஆகாது. சுருங்கக் கூறின், எந்த ஒரு தனி மனிதனோ குழுவோ சுயமாக இஸ்லாமிய ஃபத்வா வெளியிட முடியாது. உண்மையில் 'இஸ்லாமிய ஃபத்வா'வின் உரிமையாளர்கள் முஸ்லிம்களின் இறைவனான அல்லாஹ்வும் (அவனுடைய தூதர் மற்றும்) முஸ்லிம்களின் தலைவருமாகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்தாம். 'ஊர் விலக்கல்' என்பது இஸ்லாத்துக்கு எதிரானதும் அறியாமைக் கால அரபியரின் வழக்கமுமாகும்:
ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாயினும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் 'முஹஸ்ஸப்' என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்... உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் 'அபூதாலிப் கணவாயில்' ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.
மூன்றாண்டு கால ஊர் விலக்கல் குறித்து முழுதும் படிக்க [சுட்டி-5]. 'தலைக்கு விலை' என்பதும் இஸ்லாத்தின் எதிரிகளுடைய வழிமுறைதான்:
அவசரமாக ஆலோசனை சபையைக் கூட்டிய குறைஷிகள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் பிடிப்பதற்கு அனைத்து வழிகளையும் கையாள வேண்டுமென முடிவு செய்தனர். மக்காவிலிருந்து வெளியேறும் அனைத்துத் திசைகளையும் ஆயுதமேந்திய வீரர்களின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கினார்கள். "நபி (ஸல்) அபூபக்ர் (ரழி) இவ்விருவருள் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரி, அவருக்கு இந்தப் பரிசு உண்டு" என்று பொது அறிவிப்பு செய்தனர். (நூல்: ஸஹீஹுல் புகாரி).
முழுதும் படிக்க [சுட்டி-6]. (புதிய உதாரணமாகத் திகழ்பவர் அமெரிக்க முல்லா புஷ் ஆவார்). முல்லாக்களின் சினவயப்பட்ட சுய முடிவுகளை, இஸ்லாமிய ஃபத்வாக்களாக யாரும் கருதிவிட வேண்டாம் என்பதை வாசகர்களுக்கும் பரபரப்புக்காக ஃபத்வா என்ற சொல்லைப் பயன் படுத்த வேண்டாம் என்பதை எழுத்தாளர்களுக்கும் இங்கு வேண்டுகோள்களாக முன் வைத்து முடிக்கிறேன். 

நன்றி!
ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html

சுட்டிகள்:
1- http://indianmuslims.in/lajja-taslima-nasreen-assaulted-in-hyderabad/
2- http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=5d562b17-64dc-4a90-8396-7cfcaea2d568
3a- http://www.sahihmuslim.com/sps/smm/ (search word 'his hand')
3b- http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=70&doc=1
4- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/third_stage.htm#27
5- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/second_stage.htm#27
6- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/third_stage.htm#25

வியாழன், ஆகஸ்ட் 02, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15

கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுடைய வரலாற்று நாவல்களை நம்மில் பலர் படித்திருக்கிறோம். வரலாற்று மாந்தர்களோடு தம் சொந்தக் கற்பனையையும் வருணனைகளையும் கலந்து, படிப்பவர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய அளவுக்கு இந்த நாவலாசிரியர்கள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்வர். அதிலும் சாண்டில்யன் போன்றோருடைய படைப்புகளில் விரசமான வருணனைகள் விரிவாக இடம் பெறுவதுண்டு.

அதே சாண்டில்யன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வரலாற்று நாயகரின் புண்ணிய நாயகியரைப் பற்றி அவருடைய 'மாமூலான பாணியில்' விரசமாக வருணிப்பாரானால் முஸ்லிம்கள் அதனைச் சகித்துக் கொள்வார்களா? 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா? ஒருபோதும் மாட்டார்களன்றோ! காரணம்,
"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத் திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த் திகழ்கின்றனர்..."[033:006].
என்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதை மனதில் ஏந்திக் கொண்டு இந்த 'இலக்கிய'ப் பிரச்சினையை அணுகுவோம். இன்றைக்கு நாவல் என்னும் இலக்கிய வடிவம் பெற்றிருக்கின்ற செல்வாக்கினை பதினேழாம் நூற்றாண்டில் செய்யுள் வடிவம் பெற்றிருந்தது. உமறுப் புலவர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் 'வரலாற்று நாவல்'தான் எழுதியிருப்பார். ஆனால், அவருடைய காலம் 17ஆம் நூற்றாண்டாக இருந்தமையால் அக்காலத்தில் வழக்கிலிருந்த 'செய்யுள் வடிவத்தில்' அவர் இலக்கியச் சேவை(!) செய்ய வேண்டியதாகி விட்டது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றை, செய்யுளில் காப்பியமாகப் பாடலானார்.

அவ்வாறு பாடிய உமறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றுக்குப் புறம்பான பல கட்டுக்கதைகளைத் தம் காப்பியம் நெடுகக் கட்டவிழ்த்து விடுகின்றார். அதோடு மட்டுமின்றி, அன்னை கதீஜா முதலியவர்களைப் பற்றிப் புலவர் பாடுமிடங்கள், நம் பார்வையைக் கூசச் செய்கின்றன. கதீஜா நாயகியைப் பற்றிய உமறுவின் வருணனையை ஓரளவு பார்த்தோம்.

அந்நியப் பெண்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கின்றது. ஆனால், உமறுப் புலவரின் எழுத்தாணியோ நமது அன்னையர் திலகங்களைப் பற்றியே திரைக்கப்பால் சென்று தரங் கெட்டு வருணிக்கிறது.

இந்நிலையில், இத்தரங் கெட்ட வருணனைகளைத் தன்னகத்தே கொண்ட சீறாப்புராணத்தைப் பாடியவர் 'உமறு' என்னும் பெயருடைய ஒரு முஸ்லிம் புலவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய வரம்பு மீறிய வருணனைகளை 'இலக்கியங்கள்' என்று நியாயப் படுத்தி நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14

பாவையர் உரைத்த வண்ணம் பச்சைக் கடுதாசின் கண் மேவரக் கனகமையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையின் நினைவு மாறாச் செவ்விய ஜிபுறயீல் பால் ஈவது ஈது என்னவோதி இறையவன் அளித்திட்டானால் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 55)
வரத்தினில் உயர்ந்த பேறே! மகுசறு வெளியில் என்றன் கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை ஒருத்தரும் தீண்டாவண்ணம் உயிரென ஓம்பி ஓர்பால் இருத்தும் என்று இறசூலுல்லா இளந்தளிர் கையில் ஈந்தார் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 62).
கொஞ்சமும் ஆதாரமற்ற புனைசுருட்டான சமாச்சாரங்கள் இவை. அல்லாஹ், ஜிப்ரீல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பாத்திமா நாயகி ஆகியோரைப் பற்றி உமறுப் புலவர் இவ்வாறு புனைவதற்கு எங்கிருந்துதான் ஆதாரங்களைப் பெற்றாரோ? துணிச்சலைப் பெற்றாரோ?

விண்ணுலக நிக்காஹ்வையும் இந்தப் பச்சைக் கடுதாசிச் சங்கதிகளையும் தொடர்ந்து, பாத்திமா நாயகிக்கு மண்ணுலகின் மதினமா நகரில் நிகழ்ந்த நடைமுறைத் திருமணத்தைப் பாடும் போது உமறுப் புலவரின் கற்பனை, இன்னமும் 'பச்சை'யாகப் பரந்து செல்கிறது. அந்தப் பகுதிகளைக் காண்பதற்கு முன் இத்தகைய இஸ்லாமிய(?) இலக்கியங்களைப் பற்றி வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13

இதையடுத்து, "முழுமதி போன்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பெண்கள் திருஷ்டி கழித்தார்கள்" (பாடல் 109) எனவும் "பெண்களின் குரவை ஒலியோடு பல்வேறு வாத்திய இசைகள் முழங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கதீஜா நாயகியும் மணவறை புகுந்தார்கள்" (பாடல் 115) எனவும் பாடுகின்றார் புலவர்.

இஸ்லாம் என்னும் ஆற்றில் ஒருகாலையும் கொச்சை வருணனைகள் என்னும் சேற்றில் ஒருகாலையும் பதித்துக் கொண்டு உமறுப் புலவர் தன்னுடைய புராணம் நெடுகிலும் இவ்வாறு தடுமாறி நடந்துச் செல்கிறார்.

சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபதாவது படலம் 'பாத்திமா திருமணப் படலம்' என்பதாகும். இதில் பாத்திமா நாயகி படைக்கப் பட்டமை பற்றி உமறுப் புலவர் பின்வருமாறு பாடுகிறார்:
சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கும் இம்பர்ப் பூண்முலை யவர்க்கும் ஏக நாயகி யென்னப் பூவில் காணுதற் கரியோன் செய்தானென்னிலிக் கவின் - கொண்டோங்கு மாணிழை மடந்தை குற்ற பெற்றியார் வகுக்க வல்லார்? (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 8)
வானவர்களில் ஆண்களோடு தேவலோகத்துப் பெண்களும் உள்ளனர். அவர்கள் கண் இமைக்காத இயல்பினர் என்பது பிறமதப் புராணங்கள் கூறும் செய்தியாகும். "கண் இமைக்காத தேவலோகத்துப் பெண்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் பெண்ணினத்தார் அனைவர்க்கும் ஏக நாயகியாக பாத்திமா நாயகியைப் படைத்தான் பூவில் காணுதற்கு அரியோன்" என்கிறார் உமறுப் புலவர்.

புகைறா கண்ட படலத்தின் இரண்டாவது பாடலில் இடம் பெற்றுள்ள 'வசனத்து இலகு செல்வி' என்னும் தொடர் பிறமதப் பெண் கடவுளாகிய இலட்சுமியைக் குறித்து நின்றதை முன்னர்க் கண்டோம். 'வசனத்து இலகு செல்வி' என்பது எவ்வாறு இலட்சுமியைக் குறிப்பிடுகிறதோ அதுபோலப் 'பூவில் காணுதற்கு அரியோன்' என்னும் தொடர் பிறமதக் கடவுளான பிரம்மதேவனைக் குறித்து வருவதாகும். சைவ, வைணவ இலக்கியங்களில் இந்துக்களின் படைப்புக் கடவுளாகிய பிரம்மதேவனைச் சுட்டுவதற்காக இதே சொல்லாட்சி பல இடங்களில் கையாளப் பட்டுள்ளது. ஆகவே, படைத்தல் தொழிலைச் செய்பவனாகிய பிரம்மதேவன்தான் பாத்திமா நாயகியைப் படைத்தான் எனவும் தேவலோகத்துப் பெண்களை விடவும் அவர்கள் சிறப்புற்றுத் திகழ்ந்தார்கள் எனவும் பாடி அடுக்கடுக்காக முரண் படுகிறார் உமறுப் புலவர்.

வானவர்கள் ஆணுமல்லர் பெண்ணுமல்லர் என இஸ்லாம் கூறுகிறது. ஆனால், உமறுப் புலவரோ தேவலோகத்தில் உள்ள "இமையா நாட்டத் தெரிவையர்" எனப் பாடுகின்றார். இவ்வாறாகவெல்லாம் பிறசமய மரபுகள் என்னும் கோடாரியைக் கொண்டு இஸ்லாமின் ஏகத்துவ வேரில் உமறுப் புலவர் ஓங்கிப் போடுகின்ற இடங்களுள் இதுவும் ஒன்றாகும்.

அல்லாஹ், ஜிப்ரீல், நபிகள் நாயகம் ஆகியோரைக் தொடர்பு படுத்தி, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான பல புளுகுரைகளையும் உமறுப் புலவர் பாடிச் செல்கின்றார். அடுத்து வருவது அதில் ஒரு பகுதி:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன், வானவர்கோன் ஜிப்ரீல் தோன்றிக் கூறுகிறாராம்: "முஹம்மதே! உமக்கு ஸலாம் உண்டாகட்டும். பாத்திமாவுக்காக இறைவன் வானுகையெல்லாம் அலங்கரிக்குமாறு மலக்குகளுக்குக் கூறினான். அவர்கள் அவ்வாறு அலங்கரித்து முடித்ததும் பாத்திமா-அலீ ஆகியோருக்கு இறைவனே மஹரை நிர்ணயித்து, என்னையும் இஸ்ராயீல், மீக்காயில் ஆகியோரையும் சாட்சியாக வைத்து நிக்காஹ்வை முடித்து வைத்ததாகக் கூறினான்" என்றார்.

"ஜிப்ரீல் இவ்வாறு கூறக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்" எனப் பாடுகிறார் உமறு. இதனை, "புகழ் தர மஹரும் நாட்டி" பாத்திமாவை அலீக்கு அல்லாஹ் நிக்காஹ் செய்து விட்டதாக 32ஆம் பாடலில் பாடுகிறார். ஆனால், தொடர்ந்து வரும் 49ஆம் பாடலிலோ, "நும் புதல்வி உள்ளத்து உறைகின்ற மஹரைக் கேட்டு வருக" என்று ஜிப்ரீலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி இறைவன் கேட்பதாகப் பாடுகின்றார். அடுத்தடுத்த பாடல்களுக்குள்ளேயே ஒன்று கிடக்க ஒன்றைப் பாடி வைக்கிறார் புலவர். இப்படியாக வந்த இறை கட்டளைக்கு இணங்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகள் பாத்திமாவை அணுகி மஹர் குறித்து வினவினார்களாம் (பாடல்கள் 48-50).

அதற்கு, "மறுமை நாளில் பாவிகளான பெண்கள் அனைவருக்காகவும் நான் 'ஷஃபாஅத்' என்னும் பரிந்துரையைக் கோர வேண்டும். இதையே எனக்கு மஹராக இறைவன் ஏற்றருள வேண்டும்" என பாத்திமா நாயகி பதிலுரைத்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்களாம்:
இறுதியில் பவத்தின் மாதர் என்ஷஃபா அத் ஈடேற்றம் பெற மன்றாட்டு அருள வேண்டிப் பேரருள் கபூல்செய்தேனேல் உறுதி நன் மஹர்பெற் றேன் என்று உரைத்தார்(பாடல் 51).
அதை இறைவனும் ஏற்றுக் கொண்டு, பாத்திமாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக ஒரு 'பச்சைக் கடுதாசி'யில் எழுதி ஜிப்ரீல் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்தனுப்பினானாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவுக்கு அதைப் 'படித்து'க் காட்டிவிட்டு, "மஹ்ஷர் நாளில் நீ இக்கடித்தை என் கைகளில் தரவேண்டுமாதலால் இதனை யாரும் தொடாதவாறு பத்திரமாக வைப்பாயாக" எனக் கூறி பாத்திமாவிடம் கொடுத்தார்களாம். அந்தப் 'பச்சைக் கடுதாசி'ப் பாடலை அடுத்து காண்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

கி.மு - கி.பி.க்களின் கட்டுடைப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்லாம் குறித்துத் திண்ணையில் எழுத வந்த குலாம் ரஸூல், அது குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொண்டு எழுதியிருந்தால் எதிர்வினை புரிவதற்கான வாய்ப்பின்றிப் போயிருக்கும் எனக்கு. குலாமுடைய வழக்கமான வளவளாக்களை வடிகட்டிவிட்டோமெனில், அவர் என்ன சொல்ல முயல்கிறார் என்று ஒருவாறு முடிவுக்கு வந்து விடலாம். அவர் சொல்ல வரும் செய்தியை வாசகர்களின் வசதிக்காகக் கீழ்க்காணுமாறு 14 பத்திகளில் சுருக்கி வகைப் படுத்திக் கொள்வோம்:
01. இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபி முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு புதுக்கொள்கை.
02. அந்தக் கொள்கை அறிமுகப் படுத்தும் ஓரிறைக் கோட்பாடு என்பது சுயத்தன்மை அற்றது. கி.மு 7-4 கால கட்டத்தைச் சேர்ந்த இந்து சமூகத்தின் வேத, உபநிடங்களிலிருந்தும் கி.மு. 500 வாக்கில் தோன்றிய பாரசீக மதமான ஜெராஷ்டிரியத்திலிருந்தும் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட திருக்குறளிலிருந்தும் காப்பியடிக்கப் பட்டதுதான் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கோட்பாடு.
03. அல்லாஹ் என்பது முஸ்லிம்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கும் சந்ததியற்ற இறைவன் அல்லன். அரபுப் பழங்குடி மக்கள் வணங்கியப் பல தெய்வங்களின் தந்தையான சந்திரக் கடவுள்தான் அது.
04. அர்ரஹ்மான் என்பதும் முஸ்லிம்களின் இறைவனுடைய இன்னொரு பெயரன்று; மாறாக ஏமன் மக்கள் வணங்கி வந்த ஒரு சிலையின் பெயராகும்.
05. தற்போது முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள, ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகை என்பதும் சிரியாவில் வாழ்ந்த சாபியீன்களின் நாளொன்றுக்கு எழுவேளை வணக்கம் என்பதன் சுருக்கக் காப்பிதானேயொழிய வேறில்லை.
06. முஸ்லிகளின் தொழுகைச் செயல்முறைகள் மட்டும் நபி முகமது காட்டித் தந்ததா என்ன? அதுவும் மிகப் பழமை வாய்ந்த வைதீகச் சாதிமரபுகளுக்கு ஒரு மாற்று ஏற்பாடான, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாசரின் பதஞ்சலியின் யோக சூத்திர விரிவுரையான வியாச பாஷ்யத்தை எப்படியோ தெரிந்து கொண்டு (அல்லது ரகசியமாகப் படித்துப் பார்த்து) அதைத்தான் 'முஸ்லிம் தொழுகை' என்று நபி முகமது கற்றுக் கொடுத்தார்.
07. ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்கள், கஃபாவைச் சுற்றி வலம் வருவதைக் கோயிலைச் சுற்றி வலம் வருவதாகவும் ஹஜருல் அஸ்வதுக் கல்லை முத்தமிடுவதைக் கருப்புக் கல்லை வணங்குவதாகவும் முடி களைவதைக் கோயில் கடமைகளை முடித்து விட்டு மொட்டை போடுவதாகவும் 'அர்த்தப் படுத்திப் பார்க்க' சாத்தியமுள்ளதாக மானுடவியல்(?) ஆய்வாளர்கள்(??) ஒரு குழுவாக வந்து சொல்லி விட்டுப் போய்விட்டார்களாதலால் வரலாற்றுச் சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்து ஹஜ்ஜின் செயல்பாடுகளைக் கோயில் சார்ந்தே அணுக வேண்டும்.
08. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இபுறாகீம் நபிக்கு ஓர் ஆடு கிடைத்தது - அதுவும் ஓசியில். அதை அவர் அறுத்தார். அவருடைய அந்தச் செயல் நம்முடைய கிராமப்புற தெய்வங்களுக்காக அறுக்கப் படும் பலிகளின் அகவடிவம்தான் என்பதை இந்தக் காலத்தில் ஹஜ்ஜுக்குப் போகும் உலக முஸ்லிம்கள் - குறைந்த பட்சம் தமிழகத்திலிருந்து ஹஜ்ஜுக்குப் போகும் முஸ்லிம்கள் - மிகக் குறைந்த பட்சம் ஹஜ்ஜுக்குப் போகும் திண்ணை வாசக முஸ்லிம்கள் உணந்து, அதைக் கைவிட முன்வர வேண்டும்.
09. உபவாசம் என்ற பெயரால் இஸ்லாமுக்கு முந்தைய யூத-கிருத்துவர்களின் நடைமுறையில் இருந்ததும், இந்து சமய விரதங்களான கார்த்திகை விரதம், அவ்வை நோன்பு போன்றவற்றின் அப்பட்ட காப்பியும்தான் முஸ்லிம்களின் ரமலான் நோன்பு.
10. இந்தக் காலத்து முஸ்லிம்கள் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்குக் கத்னா செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு முந்தைய சமுதாயமான யூத-கிருத்துவ மக்களிடமிருந்து பெறப் பட்ட பழக்கம்தான்.
11. இறந்தவர்களைப் புதைப்பது என்ற புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின் தொன்று தொட்ட வழக்கத்தைத்தான் இஸ்லாமிய மரபாக நபி முகமது திரித்து விட்டார்.
12. பழந்தமிழ்ச் சமூகத்தின் வழக்கமான பரிசப் பணத்தைத்தானே 'மஹர்' என்ற பெயரால் முஸ்லிம் மணமகன், மணமகளுக்குக் கொடுக்கிறான்?
13. பெண்கள் சொத்துரிமை பெறுவதற்கு அரேபிய முற்காலச் சூழ்நிலைதான் காரணமேயன்றி, நபி முகமது எடுத்து வைத்த குர்ஆன் காரணமல்ல.
14. இவ்வாறாக, எல்லாவற்றிலிருந்தும் காலத்திற்குத் தகுந்தவாறு நபி முகமதுவால் காப்பியடிக்கப் பட்டதுதான் குர் ஆனும் இஸ்லாமும் என்பதே 'ஆழமான செய்தி' ஆகும்.
***
ஆயிற்றா? இனி, "நான் எழுதாததை எழுதியதாகக் குறிப்பிட்டு வாசகர்களைக் குழப்பப் பார்க்கிறார் வஹ்ஹாபி" என்று அடுத்த வாரம் இங்கு வந்து குலாம் புலம்பக் கூடாது என்பதற்காக, இதையும் அவருடைய திண்ணைக் கட்டுரையையும் மீண்டும் ஒருமுறை வாசகர்கள் படித்து, ஒப்பிட்டுத் தெளிந்து கொள்ள வேண்டுகிறேன். 

"வெறும் 14 பாயிண்டுகளை வைத்துக் கொண்டு வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காக வஹ்ஹாபி முயலுகிறார்" என்ற குற்றச்சாட்டை குலாம் வைப்பாரெனில் அதை நிரூபிப்பதும் நான் குழப்பம் செய்வதை வாசகர்களுக்கு இனங்காட்டுவதும் மிகமிக எளிது. "வஹ்ஹாபி எழுதிய 14 பாயிண்டுகளுக்கும் எனது கட்டுரைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. அவைகளுக்கு நேர் எதிரானதுவே எனது கருத்துகள்" என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டால் போதும்; திண்ணையும் அதன் வாசகர்களும் உண்மையை உணர்ந்து வஹ்ஹாபியைத் தோலுரித்து ஓரங்கட்டி விடுவார்கள். சொல்வாரா குலாம்? 

***

அவர் புலம்பினாலும் விளம்பினாலும் கட்டுடைப்பின் நிலைப்பாடு மாறப் போவதில்லை. ஏனெனில் அவை சான்றுகளின் அடைப்படையில் அமைந்தவை. எனவே, உடைப்போம்; ஒவ்வொன்றாய்:
  1. சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 சுட்டி 2]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:031, 007:025 சுட்டி 2].
  2. "ஏக இறைவனான அல்லாஹ்வையன்றி வேறெவரையும்/எதையும் நீங்கள் வணங்கக் கூடாது" என்று தம் சமுதாய மக்களுக்கு எல்லா நபிகளும் எச்சரிக்கை விடுத்தது போலவே நபி நூஹ் (நோவா) அவர்களும் எச்சரித்தார் [011:025-026 சுட்டி 2]. இஸ்லாமுடைய தோற்றத்தின் காலகட்டத்தை வரையறுத்து, ஓரிறைக் கோட்பாட்டுக்கென்று கி.மு.7ஐத் தேர்ந்தெடுத்த குலாம், ஓரிறைக் கோட்பாட்டுக் காரரான நூஹ் நபியவர்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பிறந்தார் என்பதை நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார். 
  3. "அல்லாஹ்வுக்குப் பிள்ளைகளா? அவ்வாறு சொல்பவர்களுக்கு இழிவும் தண்டனையும் நிச்சயமாக உண்டு" [002:116, 010:068-069, 018:004 சுட்டி 2]. சந்திரக் கடவுள், இளம்பிறை அடையாளம் போன்ற உளறல்களுக்கான ஆதாரங்களை வாசகர்கள்முன் குலாம் வைக்க வேண்டும். 
  4. "அல்லாஹ்வும் அர்ரஹ்மானும் அவன் பெயரே!" [017:110 சுட்டி 2]. ஏமன் சாமியான அர்ரகுமான் கி.மு/கி.பி எந்த ஆண்டுக்காரர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும். 
  5. நஜ்துப் பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்" என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் கடமையாக்கிய தொழுகை (நாளொன்றுக்கு) ஐவேளைகள்தாம். மேற்கொண்டு தொழுவது உன் விருப்பத்தைப் பொருத்தது ..." என்று சொன்னார்கள். இதில் "அல்லாஹ்", "கடமையாக்கியுள்ள", "தொழுகை" எனும் சொற்கள் அடிக்கோட்டுக்கு உரியன. சாபியீன்களுக்கு ஏழுவேளைத் தொழுகையை எந்தச் சாமி கடமையாக்கியது என்பதை குலாம் தெளிவாக்க வேண்டும். 
  6. அல்லாஹ்வை வழிபடும் தொழுகையின் செயல்முறைகளை அவனுடைய‌ தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கற்றுத் தரும்போது கூறினார்கள்: வரிசையாக நின்று கொள்ளுங்கள். உங்களுள் ஒருவர் தொழுகைக்குத் தலைமை ஏற்கட்டும். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறி(க் கைகட்டுவாரா)னால் நீங்களனைவரும் அவ்வாறே செய்யுங்கள். அவர் அல்ஹம்து ஓதி முடித்தால் நீங்கள் "ஆமீன்" என்று சொல்லுங்கள். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறிச் சிரம் தாழ்த்தும்போது நீங்களும் தாழ்த்துங்கள். அவர் எழுந்து, "ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்" எனச் சொன்னால் நீங்களும் எழுந்து "அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து" என்று சொல்லுங்கள். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறி கூறித் தரையில் தலைபட வணங்கும்போது நீங்களும் அதுபோன்றே வணங்குங்கள். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறி எழுந்தமர்ந்தபின் நீங்கள் எழுந்தமருங்கள் ... வியாச பாஷ்யத்தின் எத்தனையாவது பக்கத்தில் இந்த விளக்கங்கள் உள்ளன என்றும் குலாம் சொல்ல வேண்டும். 
  7. சரக்கு இல்லாத காரணத்தால், ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து அரைத்த மாவையே [சுட்டி 5] குலாம் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார். ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்து, தெளிவான ஒரு கேள்வியையும் அவருக்காக அங்கு வைத்திருந்தேன் [சுட்டி 6]. ஓராண்டைக் கடந்து, பல மாதங்களுமாகி விட்டன; இன்னும் பதில் வரவில்லை. 
  8. அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதலை முதன்முதலாகத் தொடங்கியவர்கள் என்று ஆதமுடைய இரு மகன்களை, முஸ்லிம்கள் நம்பும் இறைவனுடைய வேதம் சுட்டுகின்றது [005:027 சுட்டி 2]. நம்முடைய கிராமப்புற தெய்வங்களின் பலித் தொடக்கம் கி.மு. எத்தனை என்பதையும் அவை அல்லாஹ்வின் நபி ஆதமுடைய மகன்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் இருந்தது என்பதையும் சான்றுகளோடு குலாம் சொல்ல வேண்டும். 
  9. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் பின்வந்த முஸ்லிம்களுக்கும் நோன்பை விதியாக்கியவன், அல்லாஹ் என்ற ஒரே இறைவன்தான் [002:183 சுட்டி 2]. இதில் யூத-கிருத்துவர்கள் மட்டுமின்றி அவ்வையும் வந்து கலந்து கொண்டால் அவனுக்கென்ன? ஈசா (இயேசு) நபியின் தாயான மர்யம் அவர்களுக்கு, "நான் அர்ரஹ்மானுக்காக (ஏமன் சாமிக்கல்ல) நோன்பிருக்கிறேன் என்று சொல்" என்ற கட்டளையை அனுப்பி வைத்தவனும் அவன்தான் [019:026 சுட்டி 2]. அன்னை மர்யமுக்கும் முன்னர், கி.மு. எத்தனையில் கிருத்துவர்கள் நோன்பிருந்தார்கள் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும். 
  10. கத்னா செய்வதை முதன்முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தவர் என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரும் பாட்டனார் அண்ணல் இபுறாஹீம் நபியை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றனர். அண்ணல் இபுறாஹீம் அவர்கள் யூத-கிருத்துவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார் என்பதையும் குலாம் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும். 
  11. இறந்துபோன ஒருவரைப் பூமியில் முதன் முதலாகப் புதைத்தவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற இறைவனின் வேதம் சுட்டிக் காட்டுவது அல்லாஹ்வுடைய நபியாகிய ஆதமுடைய இரு மகன்களுள் ஒருவரை [005:031 சுட்டி 2]. அவ்விருவரும் 'புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின்' காலத்திற்குப் பிறகு எத்தனை வருடம் கழித்துப் பிறந்தனர்; எந்த கி.மு/கி.பி இல் மறைந்தனர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும். 
  12. "அவர்களுடைய (உரிமையான) மணக்கொடையை அவர்களிடம் கட்டாயம் செலுத்தி விடுங்கள்" என்று [004:024 சுட்டி 2] சட்டம் போட்டு, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணின் உரிமையை, முஸ்லிம்கள் நம்பும் இறைவனின் வேதம் நிலைநாட்டி இருப்பதால்தான் இன்றளவும் அச்சட்டத்தை எவராலும் மாற்ற முடியாமலிருக்கிறது. பழந்தமிழ்ச் சமூகத்தின் பரிசப் பண 'வழக்கம்' கி.மு/கி.பி எத்தனையில் செத்துப் போனது என்பதையும் குலாம் சொல்ல வேண்டும். 
  13. 'அரேபிய முற்கால'த்தில் பெண்களே சொத்தாகத்தான் மதிக்கப் பட்டனர் - இலவசமாகவோ மலிவாகவோ. "தகப்பன் செத்து விட்டால், அவனுடைய மனையாள்களுள் தனக்கு விருப்பமானவள் மீது ஓர் ஆடையை எடுத்து வீசுவான் மகன்காரன். அக்கணமே அவனுடைய அனுபவத்திற்கான சொத்தாகி விடுவாள் அவள்" என்று அன்னை ஆயிஷா அறிவிக்கிறார். இவ்வழக்கம்தான் 'அரேபிய முற்கால' வழக்கத்திலேயே கண்ணியமான வழக்கமானதாம். பெண்பிறப்பே பாவமானது என்ற நம்பிக்கை கொண்ட ஒரு சமுதாயம்தான் 'அரேபிய முற்கால' சமுதாயம் [016:058 சுட்டி 2]. அந்தச் சமுதாயம் குறித்த குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், பரம்பரைப் பணக்காரியும் ஊர்த்தலைவரின் மகளுமான அன்னை கதீஜாவைச் சான்று காட்டுகிறார் குலாம். "தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - ஆண்களுக்குப் பங்குண்டு. அவ்வாறே, தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - பெண்களுக்கும் பங்குண்டு" [004:007 சுட்டி 2] என்று அறுதியிட்டுப் பெண்களின் சொத்துரிமைக்கு உறுதியளித்த 'அரேபிய கலாச்சாரச் சூழல்' கி.மு/கி.பி எந்த ஆண்டில் நிலவியது என்றும் குலாம் குறிப்பிட வேண்டும். 
  14. என்றைக்கோ நிறைவடைந்து விட்ட [005:003 சுட்டி 2] அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் எவனுமில்லை [006:115 சுட்டி 2]. மீண்டும் மீண்டும் தலையைக் கொண்டுபோய் மலையில் முட்ட வேண்டாம். 
இங்கு குலாமுடைய ஒரு பாயிண்டு விடுபட்டுப் போயிருக்கிறது. அது என்னவென்று வாசகர்களால் ஊகிக்க முடிகிறதா? ஆ... அதுதான்! 'வணக்கஸ்தலமா? வரலாற்று அடையாளமா?' என்பதுதான். "அயோத்தியில் இருந்த பாபர் நினைவுச் சின்னத்தைப் போல் கஃபாவும் அரபுப் பழங்குடியனரின் பண்பாட்டுச் சின்னம்தான்" என்கிறார் குலாம் - வேறு சொற்களில் : "நபி முகமதுவுக்கு முற்பட்ட காலத்திலும் நாயக வாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது" என்று. சரி, இந்தப் பாயிண்டுக்குப் பதிலில்லையா? இருக்கிறது. ஆனால் அதை நான் சொல்லப் போவதில்லை. ஏனெனில், அதே பத்தியின் ஒருவரிக்கு மேலே "இப்ராஹீம் நபியும் அவர்தம் மகன் இஸ்மாயீல் நபியும் புதுப்பித்துக் கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம்" என்று அவரே ஸேம்ஸைடு கோல் அடித்துக் கொண்டதால் வழக்கம்போல் விளக்கம் மட்டும் தருவதோடு நிறுத்திக் கொள்கிறேன். 

கஃபா விளக்கம்: 
"திண்ணமாக ப(ம)க்காவில் உள்ளதுதான் மனிதர்களுக்கான முதலாவது இறையாலயமாகும் ..." [003:096 சுட்டி 2]. 

"... அந்தப் புராதன இல்லத்தை வலம் சுற்றி வாருங்கள்" [022:028 சுட்டி 2]. 

"நம்முடைய இல்லத்தின் அண்மையில் வசிக்கும்படி இபுறாஹீமுக்குப் பணித்து, எனக்கு எவரையும் இணையாக்கலாகாது என்றும் என்னுடைய இவ்வீட்டைச் சுற்றி வருகின்ற, நின்றும் குனிந்தும் தரையில் தலைவைத்தும் இங்குத் தொழுகை புரிகின்றவர்களுக்காக இதனைத் தூய்மைப் படுத்தி வைப்பீராக என்றும் கூறினோம்" [022:026 சுட்டி 2]. 

கஃபா என்பது அண்ணல் இபுறாஹீம் அவர்கள் புதிதாகக் கட்டிய ஒன்றன்று. அவர் 'புதுப்பித்துக் கட்டிய' புராதனமான, உலகின் முதல் இறையில்லமாகும்.

அண்ணல் இபுறாஹீம் பற்றிய, இங்குத் தேவைப் படும் குறிப்புகள்: 
"எங்கள் இறைவா! என் வழித்தோன்றலாரை, உன்னையே தொழுது வருவதற்காக உன் மாண்புறு இல்லத்தின் அண்மையில் வசிக்கச் செய்திருக்கிறேன். அதுவோ பசுமையற்றதொரு பள்ளத்தாக்கு ..." [014:037 சுட்டி 2]. 

"... என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றலாரையும் சிலை வணக்கத்திலிருந்து காத்தருள்வாயக!" [014:035] 

"தன் தந்தையான ஆஸரிடம், 'நீங்கள் சிலைகளைக் கடவுளர்களாக்கி விட்டீர்களன்றோ? திண்ணமாக நீங்களும் (சிலைவணங்கும்) உங்கள் சமுதாயத்தவரும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள் என்பதே என் கருத்து' என்று இபுறாஹீம் எடுத்துரைத்தார்" [006:074 சுட்டி 2].

"என்னருமைத் தந்தையே! எதையும் பார்க்க முடியாத, எதையும் கேட்க முடியாத, உங்களுக்கு ஏதேனும் ஒரு மிகச்சிறு தீங்கு ஏற்பட்டாலும் அதைத் தடுக்கச் சக்தியற்ற சிலைகளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?" [019:042 சுட்டி 2] 
என்று தம் தந்தையிடம் தர்க்கித்து, 

"என்னுடைய கடவுளர்களையா நீ மறுதலிக்கிறாய்? மாறிவிடு! இல்லையேல் உன்னை நான் கல்லாலடித்துக் கொல்லும் முன்னர் என் கண்முன் நில்லாமல் ஓடிவிடு" [0019:046 சுட்டி 2] 

என்று, பெற்றதந்தையால் ஊரை விட்டு விரட்டப் பட்டார் இளைஞர் இபுறாஹீம். 

உலக வரலாற்றில், கடவுளர்கள் என்று கருதப் பட்டச் சிலைகளை உடைத்து நொறுக்கிய முதலாவது அஞ்சா நெஞ்சர் அண்ணல் இபுறாஹீம் அவர்கள்தாம். "தன் தந்தை மற்றும் (சிலைவணங்கும்) அவரது சமுதாயத்தவரிடம், 'நீங்கள் சிலைகளை வணங்க வேண்டிய காரணம்தான் என்ன?' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதையர் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா?' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்?' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்து நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே?' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர். அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே?' என்று இபுறாஹீமிடம் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும்? சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும்! உங்களுக்குக் கொஞ்சங்கூட புத்தியில்லையா?' என்று இபுறாஹீம் கேட்டார்" [021:052-067 சுட்டி 2]. 

இங்குக் கடைசிக் கேள்வி என்னவெனில், சிலை எதிர்ப்பாளர் அண்ணல் இபுறாஹீம் புனரமைத்த கஃபா கி.பி.யா? அல்லது அதில் 'கொண்டு வந்து வைக்கப் பட்ட சிலைகள்' அடங்கிய 'பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாள'மான கஃபா கி.மு.வா? இதற்கும் குலாம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார். 

இஸ்லாமைப் பற்றி, இஸ்லாமிய விழுமியங்கள் பற்றி எவ்வித ஆதாரமும் தராமல் என்ன வேண்டுமானாலும் எழுதிச் சேறடிக்கலாம் என்று மனப்பால் குடிப்பதை, இதற்குப் பிறகாவது நிறுத்திக் கொள்வது குலாமுடைய மானத்துக்கு நல்லது!
ஃஃஃ
குறிப்பு: இரண்டாம் சுட்டியில் அத்தியாய எண்ணும் வசன எண்ணுமிட்டுத் தேடினால், குர்ஆனுடைய எந்த வசனத்தையும் தமிழ் யுனிகோடில் பெற்றுக் கொள்ளலாம்.  

சுட்டிகள்: 

ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா நாயகி அவர்களுக்கும் நடந்த திருமணத்தை உமறுப் புலவர் பாடும்போதுகூட, மாற்றாருடைய மரபு முறைகளெல்லாம் அங்கு இடம்பெற்றதாகக் கற்பனை செய்கிறார். பிறசமயப் பண்பாட்டின் தாக்கம் சீறாவில் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்போம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கதீஜா நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்தில் உள்ள பெரியோர்களும் கலந்து பேசினார்களாம். அப்போது அவர்கள் 'பொருத்தம்', 'நல்ல நாளின் முகூர்த்தம்' முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.
பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப பொருவிலாத குருத்தவள மணிமாலைக் குவலிதுபாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு
என, பொருத்தமற்றுப் பாடுகிறார் உமறுப் புலவர் (மணம் பொருத்துப் படலம், பாடல் 56).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா நாயகியை மணமுடிப்பதற்காக கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, "சீதனப் பொருட்களும் வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக" எனக் கேட்டாராம். அதைக் கேட்ட குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் வைத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம். இதனை உமறுப் புலவர் 'மணம் பொருத்துப் படலத்தின் 61-62ஆம் பாடல்களில் வாசகர்களுக்கு அவிழ்த்துப் பரிமாறுகிறார்.

மணம் பொருத்துப் படலத்தை அடுத்து இடம்பெறும் பகுதி, 'மணம்புரி படலம்' என்பதாம். இந்தப் படலத்தில் கதீஜா நாயகி மணக்கோலம் பூண்ட தன்மையை வருணிப்பதாகக் கருதிக் கொண்டு, உமறுப் புலவர் என்னவெல்லாமோ பாடிச் செல்கிறார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட புராணக் கதையளப்புகளில் பிறமதப் புலவர்கள் மனம்போன போக்கில் அக்காப்பிய நாயகிகளை வருணித்துச் செல்வர். அது அவர்களுடைய காப்பிய மரபு. அத்தகைய தரம்தாழ்ந்த மரபுக்குத் தாவிச் சென்று, வரலாற்று நாயகரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியும் முஃமின்களின் அன்னையுமான கதீஜா நாயகியைப் பற்றிக் கொச்சையாக வருணிக்கிறார் உமறுப் புலவர்:
பூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார் பாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார் நாக மென்முலைக் குவட்டினன் மணிவடந் தரிப்பார் மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார் உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார் குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார் திவளு நல்லொளி நுதலிடை திலதங்க ளணிவார் ...
(மணம்புரி படலம், பாடல்கள் 24-25).

இவ்வாறு அன்னை கதீஜா நாயகியை அத்துமீறி வருணிப்பதோடு நாயகியின் நெற்றிக்குப் பொட்டும் இடுகிறார் புலவர்.

இப்படலத்தின் இன்னொரு புறம் மணமகனாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டப் படுகிறது. தண்ணுமை, முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் நடுவே பவனி வந்தார்களாம் (மணம்புரி படலம், பாடல் 42). இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீதிஉலா வரும்போது அந்த ஊரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக் கூடினார்களாம் (பாடல் 51). பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப் புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். "முஹம்மதின் வடிவை நோக்கித் தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி ..." என இதனைப் பாடுகிறார் புலவர் (பாடல் 60).

இந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின் அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம் பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம் இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):
கோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால் தீதற வாரியுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொன் பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்கொல் காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்
மென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின் பவனிக்காக அமைக்கப் பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).

இங்ஙனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊர்வலமாக வந்து மணப் பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும் நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அந்தவேளையில் குரவை ஒலி ஓங்கி முழங்க மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதாகப் புலவர் எழுதிச் செல்கிறார் (பாடல் 103).

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், மார்ச் 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தமனை நோக்கி அல்லாஹ்வின் வீடாகிய கஃபா ஸஜ்தா செய்ததாகப் பாடி ஒரு வகையாக முரண்பட்ட உமறுப் புலவர், இன்னொரு இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்தமனையைப் பற்றிப் பாடும்போது வேறொரு வகையாக முரண்படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பெரிய தந்தையான அபூதாலிபின் வீட்டில் வளருகின்ற காரணத்தால் அபூதாலிபுடைய வீட்டில் செல்வமெல்லாம் செழித்து வளர்கிறதாம்.

அதுமட்டுமல்ல!

தாமரை மலரில் வாழும் சீதாதேவியாகிய செல்வி லட்சுமி என்பவள் அபூதாலிபுடைய வீட்டு முற்றத்தில் நாள்தோறும் வந்து வீற்றிருந்தாளாம். அப்படி லட்சுமி கொலுவிருந்தமையால் அபூதாலிபிடம் வீரமும் கல்வியும் வெற்றியும் குடிகொண்டன எனக் கற்பனை செய்கிறார் புலவர்.

அல்லாஹ்வுடைய வீட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டுக்கு சிரம் சாய்க்கச் செய்ததன் மூலம் இஸ்லாமிய வட்டத்துக்குள்ளே முரண்பட்டு நின்ற உமறுப் புலவர், இந்துமதப் பெண் கடவுளைப் பெருமானார் வளர்ந்து வந்த வீட்டு முற்றத்தில் கொண்டுபோய் குடியமர்த்தி வைத்ததன் மூலம் பிற சமயத்தாரின் வழிபடு தெய்வங்களையெல்லாம் தாமும் வழிமொழிகின்றார். முன்னதை அகமுரண் என்றால் பின்னதைப் புறமுரண் எனலாம். இத்தகைய இருவகை முரண்களும் சீறாப்புராணத்தில் மலிந்து கிடக்கின்றன.

'புகைறா கண்ட படலம்' என்ற படலத்தின் முதல் பாடலில் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிபுடைய வீட்டில் வளர்ந்ததனால் அந்த வீட்டில் ஒன்றுக்குப் பத்தாகச் செல்வம் கொழித்தது" எனப் பாடிய உமறுப் புலவர், அதைத் தொடர்ந்த இரண்டாம் பாடலில் பாடுகிறார்:
சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற் குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய் நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத் திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்.
(சலத ரத்தைநேர்=கருமேகத்தை ஒத்த) (வனசத் திலகு செல்வி=தாமரை மலரில் இலங்கும் லட்சுமி).

இன்னொரு படலமாகிய 'தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படல'ப் பகுதியில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தசைக்கட்டியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கிக் காட்டியதாகப் பாடுகின்ற வேளையிலும் லட்சுமியை மறந்துவிட வில்லை உமறு. "தாமரை மலரிலிருந்து தோன்றி நிற்கின்ற லட்சுமியைப் போன்று தசைக் கட்டியில் உதித்த அந்தப் பெண் எழிலோடு திகழ்ந்தாள்" என வர்ணிக்கிறார் புலவர் "விரிநறைக் கமல மென்மலரில் செய்யவள் இருப்பதென எழில் சிறந்து ..." (பாடல் 25) எனப் போகிறது பாடல்.

புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள் 'லட்சுமி கடாட்ச'த்தின் மீது எந்த அளவுக்கு மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை உமறுவின் புராணம் பிரதிபலித்துக் காட்டுகிறது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, மார்ச் 11, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10

கஃபத்துல்லாஹ் என்பது, கஅபா என்ற, 'புனிதமும் புகழும் பெற்றுச் சிறந்துள்ளது' என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். புனித ஆலயமான கஃபத்துல்லாஹ்வை, 'கியாமன் லின்னாஸ்' - மனிதர்களுக்கு ஆதார ஸ்தலமாக, அபயம் அளிக்கக் கூடியதாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் [005:097]. ஆனால், கஃபாவோ தனக்கே அபயம் தேடக் கூடிய இடமாக ஆமினாவின் வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீட்டை நோக்கி ஸுஜூது செய்ததாகப் பாடுகிறார் உமறுப் புலவர்.

கஃபா என்றாலே புனிதத்தைத் தன்னகத்தே கொண்டது எனப் பொருளிருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா புனிதத்தையே அடைந்தது என்பதாக முரண்படக் கவிதை எழுதியுள்ளார் புலவர்.

"அவர்கள் (நன்றி செலுத்துவதற்காக) இந்த இல்லத்தின் இறைவனையே வணங்கட்டும்" [106:003] என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் இல்லத்தை நோக்கி இறைவனின் இல்லமான கஃபத்துல்லாஹ் ஸுஜூது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.

இவ்வாறு அல்லாஹ்வின் இல்லம், அவனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பவருடைய தாயின் வீட்டுக்கு ஸுஜூது செய்து புனிதமடைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப் புலவர்.
பெருமானாரின் புகழை நிமிர்த்திப் பாடுவதாக நினைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் இல்லமான கஃபத்துல்லாஹ்வின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிக்கின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்வான்? அவனுடைய அடியாரும் தூதருமாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை எப்படி அங்கீகரிப்பார்கள்?
"அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்?" [003:094], [061:007]
என அடுக்கிக் கூறுவதோடு,
"அப்பொய்யர்கள் (மறுமையில்) வெற்றியடைய மாட்டார்கள்" [010:069], [016:116]
என்றும் உறுதி செய்கிறது அருமறை குர்ஆன்.
"என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், தன் இருப்பிடத்தை நரகில் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது)
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் எச்சரிக்கையும் அவன் தூதருடைய எச்சரிக்கையும் இவ்வாறு இருக்க, இந்தச் சீறாப்புராணத்துக் காரருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அவருடைய கற்பனை வண்டவாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக்கொடி காட்டினார்கள் எனக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்?

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மார்ச் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9

இஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப் பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ... ஏராளம்.

தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால், ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம்பெற்றிருக்காது.

ஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக் கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை, 'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது செய்து எழுந்தனவாம்.

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.

சீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும் உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன.

உலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.

புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 106)

பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ஸுஜூது செய்த கஃபத்துல்லாஹ், "இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்" என்று வாய் திறந்து ஓதியதாம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

புதன், பிப்ரவரி 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8

தமிழிலோ அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு குர்ஆனின் மீது ஓர் எட்டாத, அளவுக்கு மீறிய உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன் ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? பிற மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

அந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர் முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள் இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.

படிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.

உமறுப் புலவருக்கு வருவோம்! உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின் அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, "உமறே! நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக!" என்று கூறினார்களாம். அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே! வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது.

சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, "ஷாஹுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும் சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்" எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் "திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய் ..." எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம்.

அதன் பின்னர் நெய்னா லெப்பையைச் சந்தித்து உமறு விபரம் கூற, "நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால் நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்" எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப் படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், பிப்ரவரி 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7

இஸ்லாமுக்கு முரணான கவிதைகள் துர்நாற்றம் பிடித்த சீழைவிட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட 'இஸ்லாமிய இலக்கியம்' என்னும் பெயரால் இஸ்லாமுக்கு முரணானக் கருத்துகளைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.

அல்குர்ஆன், நபிமொழிகள் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாமுக்கு முரணான கருத்துகளைக் கொண்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்' எப்படித்தான் தலையெடுத்தன?

பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வம் இதற்குக் காரணமாகும்.

இன்றுங்கூட புதிதாக இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்கும் சகோதர-சகோதரிகள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு-சம்பிரதாயங்களிலிருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபட இயலாத நிலையில் இருப்பதை நாம் காணுகிறோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு-ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்?

அக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில் இருத்தியே அவர்களுடைய நிலையை அணுக வேண்டியுள்ளது. அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப் போயிருந்த நிலையில், அவற்றை விட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் இருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிலிருந்து இன்னொரு புதிய பண்பாட்டுக்கு மாறுகின்ற கட்டத்தில் (Transitional period) அவர்களுடைய நிலை இருந்தது எனலாம்.

பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதா-காலட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேரோட்டம், ஆனை-குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல், கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிறசமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதனைக் கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் 'அறிஞர்கள்' புதிய முஸ்லிம்களின் தொடரும் பழமைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி? என யோசித்தனர். அதன் விளைவாக, பிறசமயச் சடங்குகளுக்கு ஒப்பாக இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசினர்.

மூர்த்தி உற்சவங்கள் தர்ஹா உரூஸ்-கந்தூரிகள் ஆயின; தேரோட்டம் என்பது சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை-குதிரைடன் உண்டியல் ஊர்வலங்கள் அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கபுறு(மண்ணறை)களுக்குப் பூசும் சந்தன அபிஷேகமாக அட்ஜஸ்ட் செய்யப் பட்டது.

இந்தப் 'போலச் செய்தல்' (To imitate) என்னும் மனித இயல்பு, இஸ்லாமியத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத் துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.

எனவே, புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாசத் தாகத்திற்கு அந்தச் சமகாலப் புலவர்களும் கற்பனை நீர் வார்த்து, பிறமத இலக்கியங்களைப் போல 'இஸ்லாமிய இலக்கியங்களை' இயற்றத் தொடங்கினர்.

இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கு ஆதாரங்களாக அமைந்த குர்ஆன்-ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய கடமையைப் பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, குர்ஆனின் மொழியாகிய அரபுமொழியின் மீது அக்காலத் தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு விதமான தெய்வீக பக்தி ஊட்டப் பட்டது.

தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபுமொழியில் அமைந்த குர் ஆன் ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. வேற்றுமொழியில் குர்-ஆனையோ ஹதீஸ்களையோ மொழிபெயர்ப்பது, அவற்றின் புனிதத்தைக் களங்கப் படுத்துவதாகும் என்ற மடத்தனமான நம்பிக்கை நிலவிய காலம் அது. இவ்வாறாக, இஸ்லாமின் அடிப்படைகளான குர்-ஆனையும் ஹதீஸையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு, அவற்றைத் தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப் பட்டது.

தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துகளை எடுத்தெழுதுவதைத் தவறாகக் கருதிய அக்கால கட்டத்தில், அரபுமொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமீது வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.

மக்களுடைய இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொண்ட சிலர், (தங்களுடைய படைப்புகளுக்குப் புனிதப் பூச்சு வேண்டி) தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அரபு எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடலாயினர். 'அவன் வந்தான்' என்பதை avan vanthaan என (தற்கால யுனிகோடில்) எழுதுவதுபோல் அரபு எழுத்து வடிவத்தில் தமிழை எழுதியமையால் 'அரபுத் தமிழ்' என ஒரு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், இந்த அரபுத்தமிழ் வடிவத்தில்கூட குர்ஆன்-ஹதீஸ்களுடைய பொருளை எழுதி யாரும் வெளியிடவில்லை.

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், பிப்ரவரி 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத குரைஷிக் கவிஞர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் தங்களுடைய மூதாதையரின் வழிபாட்டுக் கொள்கையில் ஊறித் திளைத்தனர். கவிதையை ஓர் இன்பமூட்டும் கருவியாகக் கையாண்டனர். கவிதையைப் பாடுபவர்களும் கேட்பவர்களும் இன்பக் கிளர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக அதீதக் கற்பனைகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பொய் புனைவுகளையும் மிகுதியாகக் கையாண்டனர். இதுபோன்ற ஒரு தன்மையினைத் தமிழ் இலக்கிய மரபிலும் நாம் காண முடிகின்றது. இஸ்லாமிய வாழ்க்கைநெறி தமிழகத்தில் தழைப்பதற்கு முன்பாக இங்கே சைவ, வைணவச் சமயங்கள் செல்வாக்குற்றுத் திகழ்ந்தன. சிவபெருமானை வழிபடுபவர்களும் திருமாலை வணங்குபவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தமிழில் தத்தம் சமய இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். இன்றைய தமிழ் இலக்கியத்தின் செழிப்பிற்கு இச்சமயங்கள் முக்கிய காரணமாய் அமைந்தன. மின்சார வசதியோ பத்திரிகைகள், வானொலி, தொலக்காட்சி போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களோ இல்லாத அக்காலத்தில் மக்களுடைய பொழுதுபோக்கும் கருவிகளாக இத்தகைய இலக்கியங்கள் சிறப்பிடம் வகித்தன. இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், திருவிளையாற்புராணம் போன்ற காப்பியக் கவிதைகளை மக்கள் கூடியிருந்து பெருவிருப்புடன் கேட்டனர். கோவில் திருவிழாக்களில் பெரும் திரளான மக்களை ஈர்ப்பதற்காக இத்தகைய புராண-இதிகாசக் கவிதைகளை எடுத்துரைத்தனர். பல்வேறு கடவுளர்களின் பெயராலும் அவதாரங்களுடைய பெயராலும் அமைந்த இந்தச் சமய இலக்கியங்கள் மக்களிடையே வழிபாட்டுக்குரியனவாகக் கொள்ளப் பட்டன. இப்படிப் பட்ட ஒரு காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் புதிதாக இஸ்லாம் புகத் தொடங்கியது. மெல்ல மெல்ல இஸ்லாம் தமிழ்நாட்டில் பரவத் தலைப் பட்டதும் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்ட தமிழறிஞர்கள் இலக்கியங்கள் வாயிலாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். இவ்வாறாகத் தோன்றிய இலக்கியங்களுள் இன்று அறியப் படக்கூடிய மிகப் பழமையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் 'பல்சந்த மாலை' என்பதாகும். இந்நூல், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகும். இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனவும் சிலர் கூறுவர். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. வெறும் எட்டுப் பாடல்கள் மட்டும் அறிய வந்துள்ளன. இதையடுத்து நமக்குக் கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய 'யாக்கோபு சித்தர் பாடல்கள்' என்பவையாகும். கி.பி. 16ஆம் நூற்றண்டில் 'ஆயிரம் மஸ்அலா', 'மிஃராஜ் மாலை' ஆகிய நூல்களும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் 'சீறாப்புராண'மும் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் காலப் போக்கில் பல்கிப் பெருகலாயிற்று. புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களால் தமது முந்தைய இந்துமதக் கலாச்சாரத் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள இயலவில்லை. எனவே, அவர்கள் கோவில் திருவிழாக்களிலும் புராண-இதிகாச கதா-காலட்சேபங்களிலும் சென்று கலந்து கொண்டனர். இதைத் தடுப்பதற்காக ஆலிப் புலவர் என்பார் 'மிஃராஜ் மாலை' எழுதினார்; உமறுப் புலவர் 'சீறாப்புராணம்' பாடினார். பொய்யைக் கொண்டு இலக்கியத்திற்குச் சுவையேற்றும் இயல்பும் இந்தப் புது வெள்ளத்தால் அடித்து வரப் பட்டு, தூய இஸ்லாமுக்குள் புகுத்தப் பட்டது. இன்றுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. காப்பியம், கலம்பகம், அந்தாதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், மாலை, நாயகம், படைப் போர், மஸ்அலா, அம்மாணை, ஏசல், சிந்து, தாலாட்டு, கும்மி, கோவை, சதகம், முனாஜாத், பள்ளு, குறம், கீர்த்தனம், வண்ணம், கிஸ்ஸா, ஞானப் பாடல்கள் - முதலிய ஒவ்வொரு வகையிலும் ஏராளமான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், அவற்றுள் 25 சதவிகிதத்திற்கும் குறைவானவைதாம் தூய்மையான குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 'உண்மையான இஸ்லாமிய இலக்கியங்கள்' எனலாம். இவையல்லாத பெரும்பாலான நூல்களில், பொய்யும் கற்பனைக் கவிதைகளுமே மலிந்திருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் தட்டழிந்து திரியக் கூடியவர்களால் இத்தகைய வழிகேட்டிலக்கியங்கள், வழிபாட்டிலக்கியங்களாகப் போற்றப் படுதலைக் காண்கிறோம். உண்மையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எது? முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இயற்றியுள்ள கவிதைகள் அனைத்தும் இஸ்லாமிய இலக்கியங்கள் ஆகுமா? அவை குர் ஆனுக்கும் ஹதீஸிற்கும் அமைந்திருந்தாலும் அவற்றை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனக் கொள்ளத்தான் வேண்டுமா? முஸ்லிமல்லாத புலவர்கள் குர் ஆன் ஹதீஸிற்கு முரணில்லாத கருத்துகளைப் பாடினால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா? உமையத் இபுனு அபிஸ்ஸல்த்து என்பவருடைய கவிதையைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, "அவருடைய கவிதை ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டு விட்டது; ஆனால், அவருடைய உள்ளம் காஃபிராய் (இறைமறுப்பதாய்) இருக்கிறது" எனக் கூறினார்கள். திரு. வி. கலியாண சுந்தரனார் என்னும் தமிழறிஞர் பாடியுள்ள
அரபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்ற மரபினை வாழச் செய்த முகம்மது நபியே போற்றி!
என்ற இப்பாடலில் இஸ்லாமுக்கு முரண்பட்ட கருத்துகள் எதுவுமில்லை. திரு. வி.க.வின் உள்ளம் காஃபிராயிருப்பினும் அவருடைய இக்கவிதை ஈமான் கொண்டுள்ளதன்றோ? இதேபோன்று, உள்ளம் ஈமான் கொண்ட நிலையில் ஒருவருடைய கவிதை குஃரு(இறை மறுப்பு)க்குத் துணை போகுமானால், அக்கவிதையை மறுதலித்துவிட வேண்டும். இதுவே இஸ்லாமிய இலக்கியத்தை இனங்கண்டு கொள்ளும் வழிமுறையாகும். மிஃராஜ் மாலை, சீறாப்புராணம் போன்ற தொடக்க கால இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் தோற்றத்திற்குரிய காரணங்களை அந்தந்த நூல்களின் முன்னுரைகளே தெளிவாக எடுத்துரைக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், இந்துமதச் சகோதரர்களுடைய கோவில் திருவிழாக்களிலும் கதா-காலேட்சபங்களிலும் பெரும் திரளாகச் சென்று ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதைக் கண்ட முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், இஸ்லாமிற்கு எனக் காப்பியம் இல்லாமையால்தானே இந்த முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களை நாடிச் செல்கின்றனர் எனக் கவலைப் படலாயினர். அந்தக் கவலையின் விளைவாக, இந்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் எழுதப் பட்ட இலக்கியங்கள் அனைத்திலும் முன்னைய தமிழ்ச் சமயங்களின் தாக்கம் தவிர்க்கவியலாத அளவுக்கு இடம் பெறலாயிற்று. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், ஜனவரி 15, 2007

சிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்

முஸ்லிம்களின் வாழ்க்கை நெறியான இஸ்லாமுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, இஸ்லாமுக்கு எதிரான கொள்களை உள்ளடக்கிப் புனையப் பட்டு, இஸ்லாமியப் பயிர்களுக்கு இடையில் வளர்ந்த 'மவ்லிது' எனும் விஷச் செடிகளை வேரறுப்பதற்காக அதிலுள்ள அழுகல் கருத்துகளைச் 'சிறப்புச் செய்திகள்' என்ற தலைப்பில் திண்ணை வாசகர்களுக்காக எழுதி வருகிறேன். இஸ்லாமியப் பயிர்களோடு வளர்ந்து விட்ட விஷக்களைகளை 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' என்று தலைப்பிட்டு, குலாம் ரஸூல் என்பவர் திண்ணையில் புனிதம் கற்பிக்க முனைந்ததால், மவ்லிதுகளின் 'பண்பாடு' எத்தகையது என்று இனங் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டேன். மவ்லிதுகளின் கருவிற்குள்கூட நுழையாமல், அதிலுள்ள வெறும் சிறப்புச் செய்திகளைச் சான்றுகளோடு நான் திண்ணையில் எழுதத் தொடங்கியதுமே குலாம் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்க்கி விட்டார். குலாமுடைய கொ.ப.செ. ஆகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட சூபி என்னும் ஒரு காவி, எனக்குப் பதில் சொல்லப் போவதாக வெற்றுச் சவடாலோடு வந்து நின்றது. ஆனால், பதில்தான் தரவில்லை. சூபிக்கு எனது 'சிறப்புச் செய்திகள்' படிக்கக் கிடைக்காதிருக்கலாம். எனவே, கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்டு, எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5 என்ற முகவரியுடைய ஷாஹுல் ஹமீதியா பதிப்பகத்தார் வெளியிட்ட 336 பக்கங்கள் அடங்கிய மவ்லிது புத்தகத்திலிருந்து மீள் பதிவு: சிறப்புச் செய்தி-1
நாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, "திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்" என்று சபதமேற்றாள். அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.
சிறப்புச் செய்தி-2
தென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து (!) நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்.
சிறப்புச் செய்தி-3

தன்னைச் சுற்றிக் கூடியிருந்த சீடர்களிடம் முஹைதீன் ஆண்டவர் கூறினார்: "காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் என்னிடம் வந்து ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை எனக்கு அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து அந்த ஆண்டில் நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் தம்மிடம் என்னென்ன மறைவான விஷயங்கள், ரகசியங்கள் (இரண்டும் ஒன்றுதானே என்று யாரும் கேட்கக் கூடாது) நடக்கவுள்ளன என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன".

சிறப்புச் செய்தி-4

ஷாஹுல் ஹமீது வலீ, ஹஜ்ஜுக்குப் போகும் வழியில் லாகூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது லாகூரின் முஃப்தியாக இருந்த ஷேக் நூருத்தீன் என்பார் (ஷாஹுல் ஹமீது வலீயைப் போலவே) பிள்ளைப் பேறற்று இருந்தார். தனக்குப் "பிள்ளைப் பேறு வழங்க வேண்டும்" என்று முஃப்தி ஷேக் நூருத்தீன் (பிள்ளைப் பேறற்ற) ஷாஹுல் ஹமீது வலீயிடம் வேண்டினார். அதற்கு, விடலைப் பருவத்தில் இறந்துபோன தம் சகோதரர் யூஸுஃப் என்பாரின் பெயரை முதலில் பிறக்கும் ஆண் மகவுக்கு இட வேண்டும் என்று ஷாஹுல் ஹமீது வலீ நிபந்தனை விதித்தார்; அதையும் முஃப்தி ஏற்றுக் கொண்டார். ஷாஹுல் ஹமீது வலீ வெற்றிலைக்குள் ஒரு பொருளைச் சுருட்டி வைத்துக் கொடுத்தார். அந்தப் பொருளினால் முஃப்திக்கு நான்கு ஆண் மக்களும் சில பெண் மக்களும் பிறந்தனர்.

இவை போக, சிறப்புச் செய்தி-1இல் இடம்பெற்ற தாரியா மற்றும் அவளது வலீ குறித்தத் தொடர்ச்சியாக இம்மடலில் சிறப்புச் செய்தி-5
தாரியா சூளுரைத்தபடி நடக்கும் என்று எதிர்பார்த்தது நடக்க வில்லை. அது மட்டுமா? அவளது அன்பிற்குரிய வலீ அதீக்குல்லாஹ் உணவருந்த உட்காரும்போதெல்லாம் சாரை சாரையாக எறும்புகள் ஓடிவந்து அவரது உணவைத் தூக்கி(?)ச் சென்று விடுவது வழக்கமானது. விடாது துரத்தும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க ஊர் முழுதும் ஓடி அலைந்தார். இறுதியாக நாக் மலையின் உச்சிக்கு ஓடிப் போனார். (31ஆவது ஹிக்காயத், கண்ணி 7, வரிகள் 33-35).
சூபியின் உளறல்களுக்குச் சான்றுகளையும் அவற்றுக்கான சுட்டிகளையும் குறிப்பிட்டு இதுவரை விளக்கி இருக்கிறேன்; இனிமேலும் விளக்குவேன். ஆனால், "நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து, நாமிருவரும் ஊதி-ஊதித் திண்ணலாம்" என்ற கதை இனியும் நடக்காது. மேற்காணும் ஐந்து சிறப்புச் செய்திகளுக்கும் 'பண்பாட்டு'க்கும் உள்ள தொடர்பை சூபி விளக்கிய பிறகு யூனுஸ் நபி வாழ்ந்த வயிற்றுக்குச் சொந்தமான மீனைக் குறித்து எனது விளக்கம் கண்டிப்பாகக் கிடைக்கும். அதுவரை இம்மடலே சூபிக்கு மீண்டும்-மீண்டும் மீள்பதிவு மடலாகும். முன்னொருமுறை நான் திண்ணையில் குறிப்பிட்டிருந்ததை சூபிக்கு இங்கு நினைவூட்டுவது சாலப் பொருந்தும்: விளையாடுவது எனக்கு விருப்பமானதே - சிறுவர்களோடு; பூனைக் குட்டிகளோடும் - அவை காவி நிறமாக இருந்தாலும் சரியே!
ஃஃஃ