இஸ்லாமிய இலக்கியம்(?) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமிய இலக்கியம்(?) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 16, 2025

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 43

 

‘மெளன குரு வணக்கம்’, ’சின்மயானந்த குரு’ என்னும் தலைப்புகளின் கீழ் தாயுமானவர் பாடியுள்ள பல்வேறு பாடல்களில்,

 தட்சிணா மூர்த்தியே. சின்மயானந்த குருவே,

எனவும்

சின்மயானந்த சுகவெள்ளம் படிந்து நின்

திருவருள் பூர்த்தியான …………

மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில்

வரு மெளன குருவே

எனவும் தன்னுடைய மெளன குருவைக் கூப்பிடுகின்றார், இந்தக் கூப்பாட்டின் எதிரொலிதான் குணங்குடியில் கேட்கின்றது.

தாயுமானவர், தன்னுடைய குருவான மெளன சுவாமிகளையும் அவருக்கும் குருவான திருமூலரையும் சேர்த்து, ‘சித்தர் கணம்’ எனும் தலைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதிலொரு பாடல் :

திக்கொடு திகந்தமும் மனவேகமென்னவே

சென்றோடியாடி வருவீர்,

எனத் தொடங்கும் அப்பாடல்

…… கையில் உழுந்து அமிழும் ஆசனமாய் ஓரேழு

கடலையும் பருக வல்லீர்

இந்த்ரனுலகும் அயிராவதமுமே கைக்கெளிய

பந்தாயெடுத்து விளையாடுவீர்

ககன வட்டத்தையெல்லாம் கடுகிடையிருத்தியே

அஷ்டகுலவெற்பையும் காட்டுவீர்

மேலும் மேலும் மிக்க சக்திகளெல்லாம் வல்ல நீர் அடிமை

முன் விளங்கலருசித்தியிலரோ

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச்

சித்தர்கணமே

என முடிகிறது.

இதன் தொடக்கவரி குணங்குடியாரின், ‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து’ எனும் பாடலை நினைவுபடுத்தும் அதேவேளையில் ஏனைய வரிகள் மற்றொரு பாடலை நினைவூட்டுகின்றன. அப்பாடலுக்கு வரும்முன் இந்தத் தாயுமானவருடைய பாடலின் பொருளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

தொடரும்.

சனி, நவம்பர் 12, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-41

குணங்குடியாருடைய வாழ்க்கைமுறை பற்றியும் அவருடைய ஆன்மஞான பரிபாஷைகள் பற்றியும் அவர் வாய்மொழியாகவே நிறைய பாடல்களைப் பார்க்கின்றோம். குணங்குடியாரின் வாழ்க்கை முறைகள் அவருடைய ஒரிஜினல் வாழ்க்கையன்று. மாறாக, அது வேறொரு மூலபாடத்தின் மறுபதிப்பேயாகும். இப்படிப்பட்ட மறுபதிப்பு வாழ்க்கையைக் குணங்குடியாரிடம் மட்டுமல்ல, இன்னும் பல இஸ்லாமிய ஸூஃபிக் கவிஞர்களிடமும் நாம் நிறையவே காணலாம்.

தமிழ்நாட்டின் சில ஞானிகளுக்கே உரிய இத்தகைய வாழ்க்கை முறைகளைத்தான் நம் தமிழகத்தின் தர்காக்களின் ஸூஃபிக் கவிஞர்களும் கடைப்பிடித்துள்ளனர்.

குணங்குடியாரின் ஆன்மீக வாழ்க்கைமுறை எப்படி இருந்தது? என்பதற்கு விடைகாண வேண்டுமென்றால் தாயுமானவரின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டாலே போதுமானதாகும். ஆகவே, தாயுமானவரின் வாழ்க்கை முறையைப் பற்றி இங்கு நாம் சுருக்கமாகக் காண்போம். இதைக் காண்பதன் மூலம் பின்வரும் பகுதிகளில் குணங்குடியாரை மட்டுமின்றி பீரப்பா போன்றோரையும் நாம் எளிதில் புரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.

‘தாயுமானவர் திருப்பாடல் திரட்டு’ (அமெரிகன் டைமன் அச்சகம், சென்னை. 1919) என்னும் நூலின் 13ஆவது பக்கத்தில் தாயுமான சுவாமிகள் சரித்திரத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

தாயுமானவர் சிவயோகமும், சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்றலாகிய அத்துவைத சாயுச்சிய ஆனந்தமும் கைவரப் பெற்றவர். தாயுமானவருடைய குருவாகிய மௌனகுரு சுவாமிகள் தாயுமானவரை நோக்கி, “சும்மா இரு” எனத் திருவாய் மலர்ந்தருளி உபதேசித்தார். பின்னர் ஒருமுறை தாயுமானவரை அருகழைத்து அவருக்கு ஆன்ம ஞானத்தைப் போதித்து, “ஏ மாணவா! நீ அஞ்செழுத்தால் சில ஆகமப் பூஜைகளை செவ்வனே செய்து முடித்து, வெளிப்புலன்களிலே சிந்தை நாடா வண்ணம் சரீரத்தை, சிரசு, கழுத்து, இடை முதலிய அவயங்கள் நேராகத் தம்பத்தைப் போல் அசையாது நிறுத்தி, இடை பிங்கலைகளின் வழித்தாக இயங்கா நின்ற பிராணவாயுவை அம்ச காயத்திரியாகிய அஜபா மந்திரத்தினாலே தடுத்து, சுழுமுனை நாடியின் வழியாகச் செலுத்தி, இருகண்களும் புருவ மத்தியே நாடியவண்ணமாகச் சிதாகாயமாகிய ஆன்ம நிலய அந்தர் முக நாட்டத்தில் மனத்தை நிலைநிறுத்தித் தியானமாகச் சமாதியிலிருந்து சதா நிஷ்டை புரிந்து வருவாயாக! இதுவே மெஞ்ஞான நிட்டையாகிய சிவயோகமாம். இங்ஙனம் சதா நிஷ்டையிலிருந்து வருங்கால் அந்தர் முகத்திலே நாத ஒலிகளும் விந்து ஒலிகளும் தோன்றும். அவற்றுள் அழுந்தாது ஆன்மாவின்கண் அழுந்தி உறைந்து நிற்றல் வேண்டும். அப்போது அகண்ட பரிபூரணாகார சிற்சிகோதய சின்மயானந்த வஸ்துவாகிய சிவோதயப் பிரகாசமுண்டாகி உன்னை விழுங்கி நிற்குமாதலால், அந்நிலையில் உன் செயல் ஒழிந்து, நீ சிவத்துடன் இரண்டறக் கலந்து, அத்துவைத நிலையடைந்துவிடுவாய். அப்போது  எங்கும் நீ நிவனொன்றையே காண்பாய். இதுவே சித்தாந்த மஹாவாக்கிய உண்மைப் பொருளாகும். இந்நிலையே சலியாது நிலை பெறுக!”

மௌனகுரு சுவாமிகள் தாயுமானவருக்குப் போதித்த இந்த வாழ்க்கையைத்தான் குணங்குடியாரும் மேற்கொண்டிருக்கின்றார். நபி (ஸல்) நமக்குப் போதித்துத் தந்த வாழ்க்கையைப் பற்றி இவர் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

… தொடரும்

வியாழன், அக்டோபர் 13, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-40

கி.பி 1705ஆம் ஆண்டிலிருந்து 1742ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்த தாயுமானவர், ஒரு இந்துமத ஸூஃபிக் கவிஞர். குணங்குடி மஸ்தான் என்ற இஸ்லாமியச் சித்தரோ கி.பி.1788ஆம் ஆண்டில் தொண்டியில் பிறந்தவர். தாயுமானவர் இறந்து, 47 ஆண்டுகளுக்குப் பிறகு குணங்குடி மஸ்தான் பிறக்கின்றார்.

தாயுமானவர் ஒரு ‘முஷ்ரிக்’ கவிஞர். இதில் யாருக்கும் சந்தேகமேயில்லை. இந்த முஷ்ரிக்கின் வழித்தடத்தில் அப்படியே கால் பதித்துக் கவி தொடுக்கின்றார் குணங்குடியார்.

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு’ நூலின் முகப்புப் பக்கத்தில், ஶ்ரீ தாயுமான சுவாமிகளின்’ உருவப் படமொன்று இடம்பெற்றிருக்கக் காணலாம்.


அதுபோலக் ‘குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல் திரட்டி’லும் குணங்குடி மஸ்தானின் உருவப் படமொன்று தவறாமல் தரப்பட்டிருக்கும்.

இரண்டு உருவப் படங்களிலும் எப்படி ஒரு கோவணம் மட்டுமே உடையாக இருக்கின்றதோ இதுபோல இரண்டு புலவர்களின் பாடல்களிலும் ஒரே அத்துவைதக் கோவணமே இழையோடிக் கிடப்பதைக் காணலாம்.

எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை தன்னில் வரித்துக்கொண்டு, அவர்களைப் போன்று செயல்படுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்” என்பது நபிமொழி (அபூதாவூத் 4031).

பிறரின் ஆச்சார-அநுஷ்டானங்களைப் பின்பற்றி, அதுபோன்று நடப்பவன் நம்மைச் சார்ந்தவனல்லன்” என்பதும் நபிமொழி (திர்மிதீ).

மேற்காணும் நபிமொழிகளைப் படித்தறிந்துள்ள நாம், தாயுமானவரின் பிரதிபலிப்பைக் குணங்குடியாரிடம் பார்க்கின்றபோது எத்தகைய முடிவுக்கு வரவேண்டியதிருக்கும்?

அப்படி என்னதான் தாயுமானவரின் பிரதிபலிப்புக் குணங்குடியாரிடம் காணப்படுகிறது என வினவலாம். இரண்டு பேருடைய பாடல் போக்குகள், கருத்துப் பரிமாற்றங்கள், சொல்லடுக்குகள் ஆகியவை மட்டுமல்லாது வாழ்க்கை முறைகளிலும் தாயுமானவரை அப்படியே பின்பற்றி வாழ்கின்றார் குணங்குடியார்.

- தொடரும்

திங்கள், ஜனவரி 24, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 39

குணங்குடி மஸ்தான், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைத் தன்னுடைய ஆன்மீக குருவாகவும் அதற்கும் மேலாக, அல்லாஹ்வுக்கே இணையாகவும் பல பாடல்களில் பாடிச் செல்கின்றார். அத்துவைதக் கவிதைகளைக் குஞ்சு பொரிப்பதற்காக அவர் தமிழ்நாட்டுத் தாயுமானவரிடமிருந்து ஏகப்பட்ட முட்டைகளை எடுத்துக் கொள்கின்றார். தாயுமானவரின் முட்டைகளை மட்டுமல்ல, அவரின் கவிதைப் பறவைகளைக்கூட அப்படியே வளைத்துப் பிடித்து, இலேசாகச் சாயம் தடவி தன்னுடையதாகவே காட்டிக் கொள்கின்றார்.

அப்படிப்பட்ட இடங்களில் மாற்றாருக்குரிய கடவுள் பெயர்கள், அவர்களுடைய பக்திநெறிக் குறியீடுகள் ஆகியவைகூட அப்படியே குணங்குடியாருடைய கவிதை(?)களிலும் இடம்பெறுகின்றன. நந்தீஸ்வரன், மனோன்மணி, வாலை, அம்பலம், சிவம், தட்சிணாமூர்த்தி, மூர்த்தி, திருநடனம், திருக்கூத்து, சிவயோகம், சின்மயம், சிவராஜயோகம், சச்சிதானந்தம், பஞ்சாட்சரம், சரியை, கிரியை, யோகம், ஞானம், பசுபதி, பாசம் போன்ற சொல்லாட்சிகளுக்குக் குணங்குடிப் பாடல்களில் குறைவே இருக்காது.

'இச்சொற்களெல்லாம் உள்ளர்த்தம் பேசும் அகமியக் கருத்துடையவை. இவை, சாமானியருக்குப் புரியாது. இவைகளுக்குரிய இஸ்லாமிய பரிபாஷையே வேறாகும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மீக குருவாகிய ஷெய்க்கைக் கைப்பிடித்தால்தான் இயலும்' என வாய்க்கு வந்தவாறு இஸ்லாத்தோடு முடிச்சுப் போட்டு இவற்றை சிம்பாலிசப்படுத்துவர் சிலர். குர்ஆன் - ஹதீஸைப் புறக்கணித்துவிட்டு, பிறமதச் சித்தாந்தங்களுடன் கொண்டுள்ள கள்ளத் தொடர்பை நியாயப்படுத்துவதற்காக ஸூஃபித் தோன்றல்கள் கட்டிவிடும் கதைகள்தாம் இவை.

இத்தகைய ஒரு கள்ளத் தொடர்பைத் தாயுமானவர் மூலமாக நிலைநாட்டிக் கொண்டவர்தான் குணங்குடியார். யார் இந்தத் தாயுமானவர்?

- தொடரும்

புதன், டிசம்பர் 02, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 37

சென்னை திரிபுர சுந்தரி விலாசம் அச்சகத்தில் 1905ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 'குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்' நூலில், புலவனின் பெயருக்கு முன்னால்  இடப்பட்டுள்ள அடைமொழிகளைப் பாருங்கள்:

அலா நிய்யத்தி சுல்தான் அப்துல்காதிறு லெப்பை ஆலிம், ஆரிபு பில்லா, சாகிபு ஒலியுல்லா என்னும் இயற்பெயருடைய குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடற் றிரட்டு.

இந்த அடைமொழிகளுக்கு அருகதையானவன்தானா இந்த அம்மணப் புலவன் என்பதை, இப்புலவனுடைய தரம் தாழ்ந்த கற்பனையின் துணை கொண்டு இதனைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்ல. இன்னும் மிகமிகக் கொச்சையான வருணனைகளும் புலவனின் பாடல்களில் ஏராளம் காணப்படுகின்றன. "அவையெல்லாம் உள்ளர்த்தம் பேசிடும் அகமிய ஞானங்கள்" எனக் கூறுவோரின் பிதற்றல்களையும் இனித் தொடர்ந்து காணலாம் ...

ஞாயிறு, மே 10, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 36

உன்னை அலங்கரித்து, உனக்குச் சுவையானவற்றை உண்ணத் தந்து, இப்படியாக உனக்குப் பணிவிடை செய்ய நான் தயாராக இருக்கும்போது நீ ஏன் என்னை ஏறெடுத்தும் பாராமல் இருக்கின்றாய் மனோன்மணியே?

உனக்கு என் மீது ஆசை இல்லையோ?

                        எனக் கேட்கின்றான் கவிஞன்.

உன் மீதுள் ஆசித்து உயிர் பொருள் உன் தாளுக்கு அளிப்ப
   என் மீதில் ஆசை உனக்கில்லை ஏன் மனோன்மணியே

என அமைகிறது பாடல். இது மட்டுமன்று, இன்னும் சொல்கின்றான் கவிஞன்.

என்னுடைய காசையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு, நீ என் ஒருவனை மட்டுமே அணைத்துக்கொள்ளாமல், கண்டவனையெல்லாம் கட்டி அணைத்துக்கொள்கின்றாயே? இப்படி நீ வேசியாயிருப்பாய் என்பது தெரிந்திருந்தால் நான் காசு பணத்தை உன்னிடம் காட்டாமலே இருந்திருப்பேன் என்கின்றான் புலவன்.

வேசைக் குணத்தை விரும்புவாய் என்றறிந்தால்
   காசைப் பணத்தை நான் காட்டேன் மனோன்மணியே

இப்படி வேசி என்ற பெயரைப் பெற்று, வீட்டிலிருந்து வெளியேறி ஊர் சுற்றித் திரிகின்ற உன்னை 'தாசி' என்று சொன்னாலும் தகுமன்றோ என மகத்துவம் மிக்க வல்ல அல்லாஹ்வைப் பார்த்து பிறமதச் சித்தாந்தத்திற்குச் சோரம் போன இந்தக் கழிசடைக் கவிஞன் குறிப்பிடுகின்றான்.

இது மட்டுமல்ல, இறைவனாகிய இந்தத் தாசியைக் கூட்டிக் கொடுப்பதாகக்கூட (லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்) கற்பனை செய்து, கற்பனையில் இழிந்த நிலைக்கு இறங்கிச் செல்கின்றான் புலவன். வேசியாக, தாசியாக நீ இருக்கும்போது தடி போலிருக்கும் நான் உன்னை எப்படி ஜாதிகெட்டக் குணங்குடியாருக்குக் கூட்டிக் கொடுப்பேன்? எனக் கேட்கின்றான் கவிஞன்.

வேசி என்று பேர் படைத்து வெளியில் புறப்பட்டவளைத்
   தாசி என்று சொல்லத் தகாதோ மனோன்மணியே

தடி போலிருந்து உனை யான் சாதிகெட்ட பாழுங் குணங்
   குடியார்க்கு எப்படிக் கூட்டிக் கொடுப்பேன் மனோன்மணியே

என இவ்வளவும் சொல்லி, இகழ்ந்து பாடி, அல்லாஹ்வாகிய காதலியோடு ஊடல் கொள்கின்றான் இப்புலவன். இனி, ஊடல் நீங்கிக் கூடல் நிலைக்கு வந்து புலவன் புலம்புபவைப் பின்னால் அணிவகுக்கின்றன.

இங்ஙனமாக ஏக அல்லாஹ்வுடைய மகோன்னதத்துக்கு மாசு கற்பிக்கின்ற வகையில் மாப்பிள்ளை-பெண்டாட்டி உறவு பேசி இறைவனைப் பெண்டாள நினைக்கின்றான் இச்சண்டாளக் கவிஞன்.

இந்தப் புலவனெல்லாம் மாபெரும் இறைநேசனாம். மெஞ்ஞான நாதாவாம்; ஸூஃபித் திலகமாம். இப்புலவனுடைய பாடல் நூலின் பழைய பதிப்பு ஒன்றில் இப்புலவனின் பெயருக்கு முன்னால் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகளைப் பார்ப்போம் …

புதன், மே 06, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 35

‘மனோன்மணிக் கண்ணி’யில் இறைவனை மனோன்மணி என்னும் பெண்ணாக உருவகித்துக்கொண்டு, இவருடைய விரக தாபங்களை எல்லாம் விவரித்துப் பாடுகின்றார். அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்பதற்கு முன்னால், மனோன்மணிக் கண்ணியின் கடைசிப் பாடலாகக் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளதை முதலில் பார்த்தாக வேண்டும்.

அப்பாடல்:
உமையாள் பாதம் முன் நிற்க
ஆதியந்தம் கடந்த உமையாள்தன் பாதம்
   அகண்ட பரி பூரணமாம் ஐயர் பாதம்
சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம்
   தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றிச்செய்து
ஆதியந்தங் கடந்த நந்திபாதம் என்றும்
   வாலை மனோன் மணியம்மை பாதமென்றும்
ஓதியந்தங் கடந்தண்ட மிரண்ட தாக
   ஒன்றுமறியா வறிஞன் உரை செய்தானே

உமையாள் பாதத்தையும் ஐயராகிய சிவபெருமான் பாதத்தையும் கணபதியின் பாதத்தையும் கைகுவித்து வணங்கித் துதி செய்துவிட்டு, நந்திப் பெருமான் பாதத்தையும் இறுதியாக மனோன்மணியம்மை பாதத்தையும் ஓதி உரை செய்தாராம் இந்தப் புலவர்.

“இல்லை இறைவன் அல்லாஹ்வைத் தவிர” என ஈமான் கொண்டவன் எவனும் இவ்வாறு பாடத் துணிய மாட்டானன்றோ? உமையாள் பாதத்துக்குத்தான் இப்புலவன் முன்னுரிமை கொடுக்கின்றான். ‘உமையாள் பாதம் முன் நிற்க’ என்னும் பாடல் தலைப்பு இதைத்தானே காட்டுகிறது? உமையாளை அடுத்து, சிவபெருமானை கும்பிட்டுவிட்டு, அதையடுத்து கணபதி கடவுளுக்குத் தொழுது இறைஞ்சிக் கரம் குவிக்கின்றார். பிறகுதான் இவருடைய மனோன்மணி என்னும் காதலியாகிய அல்லாஹ்வைப் பற்றிப் பாட வருகின்றார்.

இதிலிருந்து குணங்குடி மஸ்தானின் கடவுள் கொள்கையைக் குன்றின் மேலிட்ட விளக்கு போல நாம் சிரமமின்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது.

பெண்ணாக, ஆணாக, குழந்தையாக என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு இறைவனைப் பிற மதத்தார் எப்படியெல்லாம் வழிபட்டார்களோ அதுபோலக் குணங்குடி மஸ்தானும் வழிபடுகின்றார். இறைவனைப் பெண்ணாகக் கருதி அவர் பாடும்போது அவர் அபத்தத்தின் எல்லைகே சென்றுவிடுகின்றார். அதையும் பார்ப்போம்:

கண்ணே என் கண்மணியே கண்குளிர்ந்தக்கட்டழகுப்
     பெண்ணே அமிர்தப்பிழம்பே மனோன்மணியே

எனக் கூப்பிடுகின்றார். இறைவனாகிய பெண்ணோடு மணவறையில் கைகோர்த்துக்கொண்டு அப்பெண்ணின் கண்களில் மைதீட்டி, மார்பில் கைவைத்துக் காமப்பாலைக் குடிப்பதாகவெல்லாம் கனவு காண்கிறாராம் இந்தக் குணங்குடி மஸ்தான்.

மலர்ந்திருக்கும் பொற்கமல மணவறையில் இருவரும் கை
   கலந்திருக்கவும் கனவு கண்டேன் மனோன்மணியே
மைதீட்டவும் கயற்கண் மலரின் மலர் முலையில்
   கைப்பூட்டவும் கனவு கண்டேன் மனோன்மணியே
வாமப் பாலைப் பருக மறுவாலிபம் வருக
   காமப்பாலுண்ணக் கனவு கண்டேன் மனோன்மணியே

இவ்வாறு கனவு கண்ட புலவர், அடுத்து இறைவனிடம் – அதாவது அல்லாஹ்வாகிய காதலியிடம் என்ன கூறுகின்றார் பாருங்கள்:

கூந்தல் இலங்கக் குரும்பைத் தனம் குலுங்க
   நேர்ந்து நடம் புரிந்து நிற்பாய் மனோன்மணியே

மலர்மாலைகள் கிடந்து மார்பில் பின்னலாடும் உன்றன்
   அலர் முலையும் யான் என்று அணைவேன் மனோன்மணியே

பிடியாரைப் போலும் பிடிப்பேன் முலையைக் குணங்
   குடியாரைப் போலும் குடிப்பேன் மனோன்மணியே

காதம்பரிமளிக்கும் கஸ்தூரிப் பொட்டிடுவேன்
   போதும் சவ்வாதுமணிந்து புணர்வேன் மனோன்மணியே

தலைக்கு மினுக்கெண்ணெய் தடவிச் சடை பின்னி வைப்பேன்
   முலைக்கு வன்னக்கச்சு இறுக்கி முடிப்பேன் மனோன்மணியே

இப்படிப் பலவாறாகத் தன் காதலிக்கு அலங்காரம் செய்து அவளைப் புணர விரும்பிய புலவன், பின்னர் அக்காதலிக்கு தீப ஆராத்தி எடுத்து அவளுக்கு உணவு படைக்கின்றானாம்.

கற்பூர மேற்றிக் கரத்தீப ஆலாத்தி
   எப்பாரும் போற்ற எடுப்பேன் மனோன்மணியே

முக்காலமும் பூசை முடிப்பேன் முக்காலமல்லால்
   எக்காலமும் பொங்கலிடுவேன் மனோன்மணியே

சாதம் தளிகை சமைத்துச் சாம்பிராணித் தூபமிட்டுப்
   பாதம் தொழுதிட்டுப் படைப்பேன் மனோன்மணியே

முட்டை பொரிப்பேன் முழுக் கோழியும் பொரிப்பேன்
   தட்டைப் பீங்கானில் தருவேன் மனோன்மணியே

இவ்வாறாக எல்லாம் தன் காதலிக்குப் பணிவிடை செய்வாராம்.

இந்தப் பாடல்களுக்கு உள்ளர்த்தம் பேசி இதைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்ற ஸூஃபிச் சாம்பிராணிகள் அனேகர் உள்ளனர். பிற மதத்தவர் சிவலிங்கத்துக்குக்கூட சிம்பாலிஸம் சொல்வார்கள். அதுபோல சிம்பாலிஸம் பேசியே சீரழிந்து போனவர்கள் இந்த ஸூஃபிஸவாதிகள். இனி, மனோன்மணி கண்ணியைத் தொடருவோம்.

ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 33

சாதாரணமாக, எந்த வழிகெட்ட ஒரு கவிஞருங்கூட தம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தையே பாடுவார். இங்குக் குணங்குடி மஸ்தான் அதுகூட பாடவில்லை. இவருடைய கடவுளே இவருடைய குருநாதரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தானே! இவரைப் பொருத்தவரை கடவுள் வணக்கம் பாடுவதும் குருவணக்கம் பாடுவதும் ஒன்றுதான். இனி, பாடலைப் பார்ப்போம்:

இணங்கு மெய்ஞ்ஞானப் பேரின்பக் கடலின்
     இன்னமு தெடுத்து எமக்களிப்போன்
பிணங்கிய கோச பாசமா மாயைப்
     பின்னலைப் பேர்த் தெறிந்திடுவோன்
வணங்கிய தவத்தினோர்க்கு அருள் புரிய
     வள்ளலாய் வந்த மாதவத்தோன்
குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என்
     குருபாதம் சிரத்தின் மேல்கொள்வாம்


“முஹ்யித்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் தான் தமக்கு இன்பம் செய்விப்பார்களாம். தம்முடைய துன்பம் துயரங்களை எல்லாம் அவர்கள் தான் பேர்த்து எறிவார்களாம். அவர்களை வணங்கித் தவம் செய்பவர்களுக்கு, அவர்கள் அருள் புரியும் வள்ளலாம். அத்தகைய குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என் குருவின் பாதத்தை யாம் தலைமேல் வைப்போமாக” எனப் பாடுகின்றார் குணங்குடி மஸ்தான்.

‘கோசம்’, ‘பாசம்’, ‘மா மாயை’ இவையெல்லாம் சைவ சித்தாந்த சாம்ராஜ்யத்தின் தனிப்பட்ட காப்பிரைட் உரிமைகள். மாற்றாருக்குரிய இந்த காப்பிரைட் சமாச்சாரங்களை எல்லாம் பேர்த்தெடுத்து, குணங்குடி மஸ்தான் இஸ்லாமிய மாளிகை மீது வீசி மாசுபடுத்துகின்றார்.

இந்த அந்நிய சாம்ராஜ்யத்து வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, "இவை உள்ளர்த்தம் பேசும் இறை ரகசியக் குறியீடுகள்" எனப் பிதற்றுகின்றன சில அகமியக் கிறுக்குகள். மஸ்தானின் உளறல்களில் அகமியம் கற்பிப்பதற்காகவே இவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, “அஷ்ஹது கலிமாவுக்கும் அகமியப் பொருள் உண்டு” என அளந்துவிடுகின்றனர்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தராத, கற்றுத் தராதவற்றையெல்லாம் கடை விரித்துப் பேசும் இந்த அகமிய அதிமேதாவிகள், மெய்ஞான நாதாக்களாம்! ஸூஃபிகளாம்! இவர்களுடைய வெற்று வார்த்தைகள் ஸூஃபித்துவக் கோட்பாடாம்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நீர், நெருப்பு, காற்று எல்லாம் கடவுளர்களே என அத்துவைதம் பேசும் புழுத்துப் போன சித்தாந்தமே கிரேக்கத் தத்துவங்களாகும். அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல இந்து மத வேதாந்தங்கள்.

இவ்விரண்டையும் எடுத்து வந்து புனிதமிக்க இஸ்லாமியப் பேழையில் திணித்தவர்கள் பெரும்பாலான நம் ஸூஃபிக் கவிஞர்களாவர். இவர்களுடைய ஸூஃபித்துவ வலையில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பூச்சிகள் மீது ஒருவித மயக்க மருந்து தெளிக்கப்படுகின்றது. அதிலிருந்து அவ்வளவு எளிதில் இந்தப் பூச்சிகளால் மீள முடிவதில்லை. கடைசியாக நரகின் எரிவிறகுகளாக இவைகளை இட்டுச் செல்லக்கூடிய விஷம் கலந்த மதுபானம் தான் ஸூஃபிஸமாகும்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ் ...