திங்கள், மார்ச் 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தமனை நோக்கி அல்லாஹ்வின் வீடாகிய கஃபா ஸஜ்தா செய்ததாகப் பாடி ஒரு வகையாக முரண்பட்ட உமறுப் புலவர், இன்னொரு இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்தமனையைப் பற்றிப் பாடும்போது வேறொரு வகையாக முரண்படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பெரிய தந்தையான அபூதாலிபின் வீட்டில் வளருகின்ற காரணத்தால் அபூதாலிபுடைய வீட்டில் செல்வமெல்லாம் செழித்து வளர்கிறதாம்.

அதுமட்டுமல்ல!

தாமரை மலரில் வாழும் சீதாதேவியாகிய செல்வி லட்சுமி என்பவள் அபூதாலிபுடைய வீட்டு முற்றத்தில் நாள்தோறும் வந்து வீற்றிருந்தாளாம். அப்படி லட்சுமி கொலுவிருந்தமையால் அபூதாலிபிடம் வீரமும் கல்வியும் வெற்றியும் குடிகொண்டன எனக் கற்பனை செய்கிறார் புலவர்.

அல்லாஹ்வுடைய வீட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டுக்கு சிரம் சாய்க்கச் செய்ததன் மூலம் இஸ்லாமிய வட்டத்துக்குள்ளே முரண்பட்டு நின்ற உமறுப் புலவர், இந்துமதப் பெண் கடவுளைப் பெருமானார் வளர்ந்து வந்த வீட்டு முற்றத்தில் கொண்டுபோய் குடியமர்த்தி வைத்ததன் மூலம் பிற சமயத்தாரின் வழிபடு தெய்வங்களையெல்லாம் தாமும் வழிமொழிகின்றார். முன்னதை அகமுரண் என்றால் பின்னதைப் புறமுரண் எனலாம். இத்தகைய இருவகை முரண்களும் சீறாப்புராணத்தில் மலிந்து கிடக்கின்றன.

'புகைறா கண்ட படலம்' என்ற படலத்தின் முதல் பாடலில் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிபுடைய வீட்டில் வளர்ந்ததனால் அந்த வீட்டில் ஒன்றுக்குப் பத்தாகச் செல்வம் கொழித்தது" எனப் பாடிய உமறுப் புலவர், அதைத் தொடர்ந்த இரண்டாம் பாடலில் பாடுகிறார்:
சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற் குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய் நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத் திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்.
(சலத ரத்தைநேர்=கருமேகத்தை ஒத்த) (வனசத் திலகு செல்வி=தாமரை மலரில் இலங்கும் லட்சுமி).

இன்னொரு படலமாகிய 'தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படல'ப் பகுதியில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தசைக்கட்டியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கிக் காட்டியதாகப் பாடுகின்ற வேளையிலும் லட்சுமியை மறந்துவிட வில்லை உமறு. "தாமரை மலரிலிருந்து தோன்றி நிற்கின்ற லட்சுமியைப் போன்று தசைக் கட்டியில் உதித்த அந்தப் பெண் எழிலோடு திகழ்ந்தாள்" என வர்ணிக்கிறார் புலவர் "விரிநறைக் கமல மென்மலரில் செய்யவள் இருப்பதென எழில் சிறந்து ..." (பாடல் 25) எனப் போகிறது பாடல்.

புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள் 'லட்சுமி கடாட்ச'த்தின் மீது எந்த அளவுக்கு மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை உமறுவின் புராணம் பிரதிபலித்துக் காட்டுகிறது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, மார்ச் 11, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10

கஃபத்துல்லாஹ் என்பது, கஅபா என்ற, 'புனிதமும் புகழும் பெற்றுச் சிறந்துள்ளது' என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். புனித ஆலயமான கஃபத்துல்லாஹ்வை, 'கியாமன் லின்னாஸ்' - மனிதர்களுக்கு ஆதார ஸ்தலமாக, அபயம் அளிக்கக் கூடியதாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் [005:097]. ஆனால், கஃபாவோ தனக்கே அபயம் தேடக் கூடிய இடமாக ஆமினாவின் வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீட்டை நோக்கி ஸுஜூது செய்ததாகப் பாடுகிறார் உமறுப் புலவர்.

கஃபா என்றாலே புனிதத்தைத் தன்னகத்தே கொண்டது எனப் பொருளிருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா புனிதத்தையே அடைந்தது என்பதாக முரண்படக் கவிதை எழுதியுள்ளார் புலவர்.

"அவர்கள் (நன்றி செலுத்துவதற்காக) இந்த இல்லத்தின் இறைவனையே வணங்கட்டும்" [106:003] என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் இல்லத்தை நோக்கி இறைவனின் இல்லமான கஃபத்துல்லாஹ் ஸுஜூது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.

இவ்வாறு அல்லாஹ்வின் இல்லம், அவனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பவருடைய தாயின் வீட்டுக்கு ஸுஜூது செய்து புனிதமடைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப் புலவர்.
பெருமானாரின் புகழை நிமிர்த்திப் பாடுவதாக நினைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் இல்லமான கஃபத்துல்லாஹ்வின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிக்கின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்வான்? அவனுடைய அடியாரும் தூதருமாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை எப்படி அங்கீகரிப்பார்கள்?
"அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்?" [003:094], [061:007]
என அடுக்கிக் கூறுவதோடு,
"அப்பொய்யர்கள் (மறுமையில்) வெற்றியடைய மாட்டார்கள்" [010:069], [016:116]
என்றும் உறுதி செய்கிறது அருமறை குர்ஆன்.
"என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், தன் இருப்பிடத்தை நரகில் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது)
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் எச்சரிக்கையும் அவன் தூதருடைய எச்சரிக்கையும் இவ்வாறு இருக்க, இந்தச் சீறாப்புராணத்துக் காரருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அவருடைய கற்பனை வண்டவாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக்கொடி காட்டினார்கள் எனக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்?

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மார்ச் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9

இஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப் பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ... ஏராளம்.

தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால், ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம்பெற்றிருக்காது.

ஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக் கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை, 'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது செய்து எழுந்தனவாம்.

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.

சீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும் உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன.

உலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.

புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 106)

பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ஸுஜூது செய்த கஃபத்துல்லாஹ், "இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்" என்று வாய் திறந்து ஓதியதாம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.