சனி, செப்டம்பர் 23, 2006

சிறப்புச் செய்திகள்-1

எனது 03.02.2006 திண்ணைக் கடிதத்தில் "சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் இஸ்லாமோடு என்ன தொடர்பு?" என்று குலாம் ரஸூலுக்கு ஒரு வினா வைத்திருந்தேன் [சுட்டி-1]. ஆறு மாதங்களாகியும் அதற்கு விடை சொல்ல முடியாமல் இப்போது 'பித் அத்' என்ற சொல்லாடலுடன் புதிதாக ஒரு அதி நவீனக் கண்டு பிடிப்பொன்றை, நான் ஏற்கனவே பதில் [சுட்டி-2] அளித்து விட்ட முஜீபு ரஹ்மானின் தலைப்பை[சுட்டி-3]க் காப்பியடித்து குலாம் வெளியிட்டிருக்கிறார். 

கருவிற்குள் புகுமுன் குலாமுக்கு இன்னொரு வினா: நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை? இனி 'பித் அத்' என்றால் என்னவென்று அறிந்து தெளிவோம். எல்லாரையும் போலவே சமகால முஸ்லிம்களும் கணிணியைப் பயன் படுத்துகின்றனர்; சடுதியில் பயணிக்கும் நில-நீர்-வான் ஊர்திகளைப் பயன் படுத்துகின்றனர். அச்சிடப்பட்ட திர்ஹம், தினார், ரியால் மற்றும் பெட்ரோல் கைக்கடிகாரம், கண்ணாடி போன்று நாளாந்தம் கண்டு பிடிக்கப் படுகின்ற அறிவியல் சாதனங்கள் ஆகியனவும் மற்றவர்களைப் போலவே முஸ்லிம்களாலும் பயன் படுத்தப் படுகின்றன. இவை போன்ற எண்ணற்ற இன்ன பிறவும் நபிகள் நாயகம் காலத்தில் இல்லாதிருந்து 'புதிதாக உருவான புதுமைகள்'தாம். 'பொல்லாப் புதுமை - பித் அத்' என்று முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) கூறும் மவ்லிதுக்கும் மீக்கூறியப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் என்ன தொடர்பு? கணிணியும் மவ்லிதும் நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லாத, அண்மைக் கால 'கண்டு பிடிப்புகள்' என்றாலும் கணிணியைப் பயன் படுத்துவது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தர வல்லது என்று எந்த முஸ்லிமும் (அல்லது வஹ்ஹாபியும்) நம்புவதில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிகளுக்கு அவ்வாறு சக்தி இருப்பதாக மவ்லிதுப் புரோகிதர்களால் பாமர முஸ்லிம்களிடம் மூடநம்பிக்கை போதை ஏற்றப் பட்டு, புரோகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர் முயற்சி நடக்கிறது. 

"எனது தாய் மொழியான அரபியைப் பேசுவோருக்கு வறுமை நீங்கும்; வளம் பெருகும். பிணிகள் அவியும்; நலன்கள் குவியும். அரபு மொழி மட்டுமே அல்லாஹ்வின் அருள் பெற்றது; மற்றவை அனைத்தும் பொருளற்றது" என்பதாக மனிதர்கள் பேசுகின்ற மொழிகளில் நபிகள் நாயகம் உயர்வு-தாழ்வு கற்பிக்கவில்லை. எனவே, வஹ்ஹாபியின் தாய்மொழியான தமிழோ வேறெந்த மொழியுமோ 'பித் அத்' பட்டியலில் வருவதற்கு வாய்ப்பேயில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிக்கு அத்தனை ஆசை வார்த்தைகளும் கூறப் படுகின்றன. இன்னதென்று பொருளறியாது எழுதித் தள்ளுவதை விட மேற்காணும் இரு உவமைகளே திண்ணை வாசகர்களுக்குப் போதும். அவர்களுடைய புரிதலின் நீட்சி குறித்து எனக்கு நம்பிக்கை உண்டு. 

மனிதகுலத்துக்குப் பலனளிக்கும் 'நல்ல புதுமைகளை' இஸ்லாம் புறந்தள்ளச் சொல்லவில்லை; மாறாக, அவற்றுக்கு இஸ்லாமியப் போலி முத்திரை குத்தி, அவை இம்மை/மறுமை வாழ்க்கைகளில் இறைவனின் அருளைப் பெற்றுத் தர வல்லவை என்று பம்மாத்துச் செய்யும் செயலைத்தான் 'பித் அத் - பொல்லாப் புதுமைகள்' என்று இனங்காட்டுகிறது.
"வார்த்தைகளில் வாய்மையானது அல்லாஹ்வின் வேத(வார்த்தையா)ம். வழிமுறைகளில் சிறந்தது முஹம்மதின் வழிமுறை. செயல்களில் தீயது மார்க்கத்தில் புதிதாக ஒன்றைப் புகுத்துவதாகும். எல்லாப் புதுப் புகுத்தலும் பொல்லாப் புதுமைகளாம். பொல்லாப் புதுமைகள் எல்லாமும் வழிகேடே! எல்லா வழிகேடும் பொல்லா நரகில் சேர்க்கும்"
என்பதுதான் அண்ணலாரின் எச்சரிக்கை [சுட்டி-4]. ஆனால், "தமிழ் பேசினால் நரகம்தான்" என்று வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் திருகுதாள திரிபுவாதம் செய்ய முயல்கிறார் குலாம். பிஸ்கட் முதல் பிரியாணி வரை மவ்லிதுக் கச்சேரிகளில் வழங்கப் படும் பிரசாதங்கள் வஹ்ஹாபிகளுக்கு மட்டும் சுவைக்காதா என்ன? பின் ஏன் மவ்லிதுகளை மறுக்க வேண்டும்? கச்சேரிக்குள் புகுந்து விட்டால் புரிந்து விடும். 

போவோம், வாருங்கள் வாசகர்களே! 

அண்ணலாரின் காலத்துக்கும் முன்னர் இயற்றப் பட்டத் "திருக்குறளின் ஆசிரியர் யார்?" என்று கேட்டால், ஆரம்பப் பள்ளி மாணவ-மாணவியர்கூட "திருவள்ளுவர்" என்று விடை கூறிவிடுவர். ஆனால், முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட மவ்லிதுகளின் ஆசிரியர் இன்னார்தான் என்று எவருக்கும் தெரியாது என்பதுதான் இன்றுவரை உண்மை. எனினும் இஃது ஒரு பெரிய கெடுதியில்லைதான். கெடுதிகளெல்லாம் பின்னால் வருகின்றன. மவ்லிதுக் கச்சேரிகளில் இரு கண்ணிகளுக்கிடையில் 'ஹிக்காயத்' என்னும் மவ்லிது நாயகர்கள் குறித்தச் 'சிறப்புச் செய்திகள்' வாசிக்கப் படும். அரபு மொழிச் சொற்களால் பாடப் பட்டுள்ள மவ்லிதுகள் திண்ணை வாசகர்களுக்கு அலுப்பூட்டக் கூடும் என்று நான் அஞ்சுவதால், 'சிறப்புச் செய்திகளை' மட்டும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். ("அரபுச் சொற்கள் எங்களுக்கு அலுக்காது" என்ற உறுதிமொழியுடன் வாசகர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வற்புறுத்தினால் அரபியையும் எழுதுவேன்). சிறப்புச் செய்தி-1
நாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, "திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்" என்று சபதமேற்றாள்.
(முஜீபு ரஹ்மானின் 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற காப்பியடிக்கப் பட்டத் திண்ணைத் தலைப்புடன் இணைத்து, இதைத்தான் 'வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகள்' என்று படிமமாக குலாம் கூறுகிறாரோ என்ற ஐயம் எனக்குண்டு).
அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.
கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் ஏழாவது கண்ணி 27 முதல் 32 வரிகளில் முப்பதாவது ஹிக்காயத்தாக இச்சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. "பாதுகாக்கப் படவேண்டும்" என்று குலாம் பதறித் துடிக்கின்ற 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில்தான் மேற்காணும் 'சிறப்புச் செய்தி' இடம் பெற்றுள்ளது. இதுபோல் நிறையச் சிறப்புச் செய்திகள் 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில் உள்ளன. வாசகர்களின் ஆர்வத்தைப் பொருத்து ஒவ்வொன்றாய் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். 

கூர் மழுங்கிய வாட்களை இனிமேல்தான் தீட்டத் தொடங்க வேண்டும்.
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 22, 2006

கிச்சன் ஜர்னலிஸம்

முன் குறிப்பு: இவ்வாக்கம், நேசகுமார் என்பவர், திண்ணையில் உளறியதற்கான எதிர்வினையாகும். இதைத் திண்ணை பிரசுரிக்கவில்லை. தனிமனித எள்ளல் என்பதாகத் திண்ணை காரணம் வைத்திருக்கலாம். வலைப் பதிவர்களுள் பத்தோடு பதினொன்றான, அந்தப் பதினொன்றிலும் மனநோயாளியான நேசகுமாரை எள்ளுவது திண்ணையின் பாலிஸிக்கு எதிரானதாக இருக்கலாம். கோடானுகோடி முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனம்போனவாறு திட்டித் தீர்ப்பது தனிமனிதத் தாக்குதலில்லையா? அதைப்பிரசுரிப்பது எழுத்து வக்கிரமில்லையா? நல்ல பாலிஸிதான் போங்க!
___________________________________________________ 

ஜன்னல் ஜர்னலிஸம் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிச்சன் ஜர்னலிஸம்? அதுதான் கமலா சுரைய்யா விஷயத்தில் நடந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, கழிவுகளைத் தெருவிலுள்ளக் குப்பைத் தொட்டியில் கொட்ட வந்த சுரைய்யாவின் வீட்டு வேலைக்காரியை இடைமறித்தது ஒரு பரிதாபக் குரல்: "அம்மோய்! இந்தப் பக்கமா போடுங்கம்மோய்" என்று கெஞ்சிக் கூத்தாடிக் கமலா சுரைய்யா வீட்டுக் கழிவுகளை வாங்கிப் போய், அந்தக் கொஞ்சக் கழிவுகளோடு, தன்னிடம் மிகுதியாய் மிஞ்சியிருந்தவற்றைப் போட்டுக் கலக்கி, தானே சமைத்ததுபோல் 'மடுத்த' தட்டில் வைத்து 'மாத்ருபூமி'யில் பரிமாறினார் அதன் ஃபோட்டோகிராஃபர்.

"ஆஹா எவ்வளவு அற்புதமான உணவு! என்னே மணம், என்னே ருசி! மலையாளிகள் மட்டும் இதை உண்பதா? தனியொரு தமிழனுக்கு இவ்வுணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற சூளுரையோடு அதற்கு உள்ளூர் மசாலா தூவி, திண்ணைத் தட்டில் வைத்துச் சுடச்சுடப் பரிமாறினார் இரா.முருகன்.

இதெல்லாம் இருபது மாதங்களுக்கு முன்னர் பரிமாறப் பட்டு ஆறிப்போன அவியல். உடனடியாக தேஜஸிலும் அண்மையில் விகடனிலும் வெளிவந்த கமலா சுரைய்யாவின் உண்மையான பேட்டிகளையும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதிலிருந்து இன்றுவரை மாறாத கமலா சுரைய்யாவின் நிலையையும் அறியாமல் திண்ணையில் உளறி [சுட்டி-1], அபூசுமைய்யா [சுட்டி-2] மற்றும் இப்னு பஷீர் [சுட்டி-3] ஆகியோரின் உறுதியான சான்றுகளுடன் கூடிய, நிதானமான எதிர் வினைகளால் முகமிழந்து நிற்கும் நேசகுமார் என்பவரைப் பற்றி அறிய முற்பட்டபோது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின! இவருடைய அகநோயின் வீரியம் புரியாமல், 'நட்புக்கான வழியும் மொழியும்' என்று நாகூர் ரூமி, இவருக்கு அமிர்தாஞ்சன் தடவி [சுட்டி-4] குணப் படுத்த வீண் முயற்சி செய்துள்ளார். 

இஸ்லாமோஃபோபியா என்ற மன நோயினால் மிகக் கடுமையாகப் பீடிக்கப் பட்டுள்ள இவருக்கு அனுபவமுள்ள சிறந்த மருத்துவர்களான அபூஆதில், அபூமுஹை, அப்துல்லாஹ், சுட்டு விரல், ஸலாஹுத்தீன், அக்பர் பாஷா, நல்லடியார், சுவனப் பிரியன், இப்னு பஷீர் போன்றோரால் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை இவர் 'உள்வாங்க' மறுப்பதால் உளறல் நோய் நீங்கிய பாடில்லை. அதனால்தான் ஜிஹாதைப் பற்றி முன்னர் உளறியதையே மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுகிறார் [சுட்டி-5].

இவரது தொடர் உளறல்களுக்கு, குறிப்பாக "முஹம்மது விஷம் வைத்துக் கொல்லப் பட்டார்" என்ற உளறலுக்கு, திண்ணை மருத்துவர் ஒருவரும் தம்மால் முடிந்தவரை சிகிச்சை அளித்திருக்கிறார்; [சுட்டி-6] ம்ஹூம், பயனில்லை.

இவருக்கு அளிக்கப் பட்டத் தொடர் சிகிச்சையையும் இவருடைய அத்து மீறிய உளறல்களையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கம்பவுண்டர் இறை நேசன் என்பவர் இவரை 'மறை கழண்ட கேஸு' என்று [சுட்டி-7] முடிவுக்கு வந்திருக்கிறார். இறை நேசனின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. இவர் மறை கழண்ட கேஸல்ல; மாறாக, தேறாத கேஸ் என்பது என் கணிப்பு.

மன நோயாளி என்பதால் இவர் மீது பரிவும் இவருடைய உளறல்களால் சில முஸ்லிம்கள் மருத்துவப் படிப்பைப் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நன்றியுணர்வும் ஒருபுறமிருந்தாலும் இவர் மேலும் மேலும் உளறிக் கொட்டுவதைப் பார்க்கும்போது - அதுவும் திண்ணை என்ற திறந்த வெளியில் - இவர் மீது பரிதாமே எஞ்சி நிற்கிறது!
ஃஃஃ
4- http://www.tamiloviam.com/unicode/11030512.asp