திங்கள், நவம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 25

ரீஅத்தைத் தாண்டி, தரீக்கத்தைக் கடந்து, ஹகீக்கத்தில் எவர் காலூன்றி விடுகிறாரோ அவர் இறைவனோடு ஃபனா ஆகி, மஃரிஃபாவுடைய ஞானத்தைப் பெற்று விடுகிறாராம். அதாவது இறைவனோடு இரண்றக் கலந்து விடுகிறாராம். இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குவர் ஸூஃபிகள். அதாவது,

இஸ்லாம் என்பது ஒரு வட்டம். அதன் வெளிவிளிம்புதான் வெளிரங்கமான ஷரீஅத். வட்டத்தின் மையப் புள்ளியே உள்ரங்கமான ஹகீக்கத்தாம். ஷரீஅத் எனும் வெளிவிளிம்பிலிருந்து ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கிச் செல்லும் ஆரமே தரீக்கத் எனும் ஞானப் பாட்டையாம். இந்தத் தரீக்கத் எனும் கோடு எந்த அளவுக்கு ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கி நெருங்கி, நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன் இறைவனை நெருங்குகின்றானாம். நெருங்கி, நெருங்கி, இறுதியில் இந்தக் கோடு கடைசியாக அந்த மையப் புள்ளியைப் போய்த் தொடுமன்றோ? அப்போது இந்த ஞானவான், இறைவனோடு ஒன்றிக் கலந்து விடுகிறானாம். இவ்வாறு கலந்த நிலையே மஃரிஃபத்தாம்.

மஃரிஃபாவுடைய நிலயை எய்தி, இறைவனோடு ஃபனாவாகி - ஒன்றிக் கலந்து - விட்ட ஸூஃபிக்கு உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் இறைவனாகவே காட்சி வழங்குமாம். அவனும் இறைவன்தானாம். இந்த வழிகெட்ட கோட்பாட்டை ஸூஃபிஸத்தின் ஆரம்ப நிலையில் அனுபவித்த பக்த கோடிகள் அதைத் தம் உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.

"சொல்லத் தகுமல்ல இப்பொருளை
சுருட்டி மறைக்கிறேன் ஷரஹுக்காக"

என்று பீரப்பா பாணியில் ஆரம்பகால ஸூஃபிகள் மஃரிஃபா ஞானத்தை வெளிப் படுத்தினார்களில்லை.

இவ்வாறு ஒளிவு-மறைவாக மஃரிஃபா ஞானம் அடைந்து கிடந்தபோது அதை வெளிப்படுத்தி ஆன்மீக உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு 'புரட்சித் தலைவர்'.

"நேசனும் நேசிக்கப் பட்டவனும் ஒருவனே! என்னைக் காணும்போது அவனைக் காணுகின்றீர்கள். நாங்கள் இருவரும் ஒரே உருவில் ஒன்றிவிட்ட இரு ஆன்மாக்களாகும்" என்று அந்தப் புரட்சியாளர் பகிரங்கமாகப் பறை சாற்றினார்.

"அனல் ஹக் - நானே அல்லாஹ்" என்பது இவருடைய ஆன்மீக கோஷமாயிற்று. உடனே, அப்போதிருந்த ஷரீஅத் கோர்ட் உஷாராயிற்று. அந்தப் புரட்சித் தலைவரான ஹுஸைன் இப்னு மன்ஸூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபியை, காஃபிர் எனத் தீர்ப்புரைத்தது. அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரீ 309ஆம் ஆண்டு இராக்கில் நடந்ததாகும்.

தொடரும் …