சனி, ஜூலை 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14

பாவையர் உரைத்த வண்ணம் பச்சைக் கடுதாசின் கண் மேவரக் கனகமையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையின் நினைவு மாறாச் செவ்விய ஜிபுறயீல் பால் ஈவது ஈது என்னவோதி இறையவன் அளித்திட்டானால் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 55)
வரத்தினில் உயர்ந்த பேறே! மகுசறு வெளியில் என்றன் கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை ஒருத்தரும் தீண்டாவண்ணம் உயிரென ஓம்பி ஓர்பால் இருத்தும் என்று இறசூலுல்லா இளந்தளிர் கையில் ஈந்தார் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 62).
கொஞ்சமும் ஆதாரமற்ற புனைசுருட்டான சமாச்சாரங்கள் இவை. அல்லாஹ், ஜிப்ரீல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பாத்திமா நாயகி ஆகியோரைப் பற்றி உமறுப் புலவர் இவ்வாறு புனைவதற்கு எங்கிருந்துதான் ஆதாரங்களைப் பெற்றாரோ? துணிச்சலைப் பெற்றாரோ?

விண்ணுலக நிக்காஹ்வையும் இந்தப் பச்சைக் கடுதாசிச் சங்கதிகளையும் தொடர்ந்து, பாத்திமா நாயகிக்கு மண்ணுலகின் மதினமா நகரில் நிகழ்ந்த நடைமுறைத் திருமணத்தைப் பாடும் போது உமறுப் புலவரின் கற்பனை, இன்னமும் 'பச்சை'யாகப் பரந்து செல்கிறது. அந்தப் பகுதிகளைக் காண்பதற்கு முன் இத்தகைய இஸ்லாமிய(?) இலக்கியங்களைப் பற்றி வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.