வியாழன், ஆகஸ்ட் 02, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15

கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுடைய வரலாற்று நாவல்களை நம்மில் பலர் படித்திருக்கிறோம். வரலாற்று மாந்தர்களோடு தம் சொந்தக் கற்பனையையும் வருணனைகளையும் கலந்து, படிப்பவர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய அளவுக்கு இந்த நாவலாசிரியர்கள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்வர். அதிலும் சாண்டில்யன் போன்றோருடைய படைப்புகளில் விரசமான வருணனைகள் விரிவாக இடம் பெறுவதுண்டு.

அதே சாண்டில்யன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வரலாற்று நாயகரின் புண்ணிய நாயகியரைப் பற்றி அவருடைய 'மாமூலான பாணியில்' விரசமாக வருணிப்பாரானால் முஸ்லிம்கள் அதனைச் சகித்துக் கொள்வார்களா? 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா? ஒருபோதும் மாட்டார்களன்றோ! காரணம்,
"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத் திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த் திகழ்கின்றனர்..."[033:006].
என்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதை மனதில் ஏந்திக் கொண்டு இந்த 'இலக்கிய'ப் பிரச்சினையை அணுகுவோம். இன்றைக்கு நாவல் என்னும் இலக்கிய வடிவம் பெற்றிருக்கின்ற செல்வாக்கினை பதினேழாம் நூற்றாண்டில் செய்யுள் வடிவம் பெற்றிருந்தது. உமறுப் புலவர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் 'வரலாற்று நாவல்'தான் எழுதியிருப்பார். ஆனால், அவருடைய காலம் 17ஆம் நூற்றாண்டாக இருந்தமையால் அக்காலத்தில் வழக்கிலிருந்த 'செய்யுள் வடிவத்தில்' அவர் இலக்கியச் சேவை(!) செய்ய வேண்டியதாகி விட்டது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றை, செய்யுளில் காப்பியமாகப் பாடலானார்.

அவ்வாறு பாடிய உமறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றுக்குப் புறம்பான பல கட்டுக்கதைகளைத் தம் காப்பியம் நெடுகக் கட்டவிழ்த்து விடுகின்றார். அதோடு மட்டுமின்றி, அன்னை கதீஜா முதலியவர்களைப் பற்றிப் புலவர் பாடுமிடங்கள், நம் பார்வையைக் கூசச் செய்கின்றன. கதீஜா நாயகியைப் பற்றிய உமறுவின் வருணனையை ஓரளவு பார்த்தோம்.

அந்நியப் பெண்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கின்றது. ஆனால், உமறுப் புலவரின் எழுத்தாணியோ நமது அன்னையர் திலகங்களைப் பற்றியே திரைக்கப்பால் சென்று தரங் கெட்டு வருணிக்கிறது.

இந்நிலையில், இத்தரங் கெட்ட வருணனைகளைத் தன்னகத்தே கொண்ட சீறாப்புராணத்தைப் பாடியவர் 'உமறு' என்னும் பெயருடைய ஒரு முஸ்லிம் புலவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய வரம்பு மீறிய வருணனைகளை 'இலக்கியங்கள்' என்று நியாயப் படுத்தி நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: