வியாழன், மார்ச் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9

இஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப் பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ... ஏராளம்.

தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால், ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம்பெற்றிருக்காது.

ஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக் கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை, 'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது செய்து எழுந்தனவாம்.

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.

சீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும் உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன.

உலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.

புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 106)

பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ஸுஜூது செய்த கஃபத்துல்லாஹ், "இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்" என்று வாய் திறந்து ஓதியதாம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: