திங்கள், மார்ச் 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தமனை நோக்கி அல்லாஹ்வின் வீடாகிய கஃபா ஸஜ்தா செய்ததாகப் பாடி ஒரு வகையாக முரண்பட்ட உமறுப் புலவர், இன்னொரு இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்தமனையைப் பற்றிப் பாடும்போது வேறொரு வகையாக முரண்படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பெரிய தந்தையான அபூதாலிபின் வீட்டில் வளருகின்ற காரணத்தால் அபூதாலிபுடைய வீட்டில் செல்வமெல்லாம் செழித்து வளர்கிறதாம்.

அதுமட்டுமல்ல!

தாமரை மலரில் வாழும் சீதாதேவியாகிய செல்வி லட்சுமி என்பவள் அபூதாலிபுடைய வீட்டு முற்றத்தில் நாள்தோறும் வந்து வீற்றிருந்தாளாம். அப்படி லட்சுமி கொலுவிருந்தமையால் அபூதாலிபிடம் வீரமும் கல்வியும் வெற்றியும் குடிகொண்டன எனக் கற்பனை செய்கிறார் புலவர்.

அல்லாஹ்வுடைய வீட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டுக்கு சிரம் சாய்க்கச் செய்ததன் மூலம் இஸ்லாமிய வட்டத்துக்குள்ளே முரண்பட்டு நின்ற உமறுப் புலவர், இந்துமதப் பெண் கடவுளைப் பெருமானார் வளர்ந்து வந்த வீட்டு முற்றத்தில் கொண்டுபோய் குடியமர்த்தி வைத்ததன் மூலம் பிற சமயத்தாரின் வழிபடு தெய்வங்களையெல்லாம் தாமும் வழிமொழிகின்றார். முன்னதை அகமுரண் என்றால் பின்னதைப் புறமுரண் எனலாம். இத்தகைய இருவகை முரண்களும் சீறாப்புராணத்தில் மலிந்து கிடக்கின்றன.

'புகைறா கண்ட படலம்' என்ற படலத்தின் முதல் பாடலில் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிபுடைய வீட்டில் வளர்ந்ததனால் அந்த வீட்டில் ஒன்றுக்குப் பத்தாகச் செல்வம் கொழித்தது" எனப் பாடிய உமறுப் புலவர், அதைத் தொடர்ந்த இரண்டாம் பாடலில் பாடுகிறார்:
சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற் குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய் நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத் திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்.
(சலத ரத்தைநேர்=கருமேகத்தை ஒத்த) (வனசத் திலகு செல்வி=தாமரை மலரில் இலங்கும் லட்சுமி).

இன்னொரு படலமாகிய 'தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படல'ப் பகுதியில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தசைக்கட்டியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கிக் காட்டியதாகப் பாடுகின்ற வேளையிலும் லட்சுமியை மறந்துவிட வில்லை உமறு. "தாமரை மலரிலிருந்து தோன்றி நிற்கின்ற லட்சுமியைப் போன்று தசைக் கட்டியில் உதித்த அந்தப் பெண் எழிலோடு திகழ்ந்தாள்" என வர்ணிக்கிறார் புலவர் "விரிநறைக் கமல மென்மலரில் செய்யவள் இருப்பதென எழில் சிறந்து ..." (பாடல் 25) எனப் போகிறது பாடல்.

புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள் 'லட்சுமி கடாட்ச'த்தின் மீது எந்த அளவுக்கு மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை உமறுவின் புராணம் பிரதிபலித்துக் காட்டுகிறது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: