ஞாயிறு, டிசம்பர் 20, 2009

புதுவகை நோய் : இமி - 1

டந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், "இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது" எனும் தவறான கருவோடு, 'புனித மோசடி-1' [சுட்டி-01 மற்றும்-2 சுட்டி-02] வெளியாகி இருந்ததைப் படிக்க நேர்ந்தது.

அக்கட்டுரைக்கான எதிர்வினை விளக்கங்களை வாசகர்களுக்குத் தருவதற்கு முன்னர், திசைதிருப்பும் அரைகுறைச் சான்றுகளோடு காழ்ப்பைக் கக்கும் தரமற்ற எழுத்துகளைப் பதிக்கும் திண்ணையின் அண்மைப் போக்கைப் பற்றிய எனது வருத்தங்களையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அக்கட்டுரையில் காணப்படும் கருவுக்குத் தொடர்பில்லாத
01. உலகநாதர்,
02. வள்ளுவர்,
03. ஜெர்மனியின் கோயபல்ஸ்,
04. நாஸி ஹிட்லர்,
05. கம்யூனிஸ்ட்கள், இடதுசாரிகள், பொதுவுடைக்காரர்கள்
06. காந்திஜி,
07. முன்னேற்றம் அடைந்த/அடையாத கழகங்கள்,
08. வெங்காயம்,
09. நேரு, இந்திரா,
10. திராவிட நாடு,
11. முரட்டு தாதா,
12. தேபால், உபகணஸ்தான், கூபா, உதபந்தபுரா, லவகுசபுரா

ஆகியோர்/ஆகியன பற்றியெல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள மட்டுமே எழுதப் பட்டிருக்கிறது; இங்குப் பேசுபொருளுக்கு மீக்குறியவை அப்பாற் பட்டவை என நான் கருதுவதால், இஸ்லாம் குறித்து அவர் எடுத்து வைத்த,
"குரான் Qur'an, ஹடித்-சுன்னா ( Hadith & Sunna -- Traditions) அல்லது சிரா (Sira) (biographies) அடிப்படையில் பொய் பேசலாம்; சத்தியம் செய்யலாம்; பிற மதத்தவரிடம் எந்தக் காலத்திலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசலாம்; புனித(!) மோசடி (தகிய்யா) செய்யலாம்"
 

எனும் தலையாய குற்றச் சாட்டுகளுக்கு முன்வைக்கப் பட்ட அரைகுறைச் சான்றுகளை முழுதுமாக வாசகர்கள்முன் வைக்க விரும்புகிறேன். 

அரைகுறை-1: (குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்).

இஸ்லாத்தின் உயிர்நாடியான "கடவுள் இல்லை - அல்லாஹ்வைத் தவிர" என்பதில் பாதியை மட்டும் சான்று என யாராவது முன்வைத்தால், இஸ்லாம் என்பது நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒரு மதம் என்றுதான் எவரும் விளங்குவர். அதுபோலவே குர்ஆன் கூறுவதைப் பாதியாக்கி இருக்கிறார் கட்டுரையாளர். "பிற மதத்தவரைக் கொன்று குவிக்கும்படி இஸ்லாம் சொல்கிறது" என்ற புனைவை நிறுவச் செய்யும் திருகுதாளமாகும் அவரது முயற்சி.  

பிற மதத்தவர் குறித்துக் குர்ஆன் கூறுவதென்ன?  
"(நபியே) கூறுவீராக! : இறை மறுப்பாளர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்;
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
மேலும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபனல்லன்;
அன்றியும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
உங்களுக்கு உங்கள் மதம்; எனக்கு என் மார்க்கம்" [குர்ஆன் 109:001-006].
"Say : O ye that reject Faith!  
I worship not that which ye worship,  
Nor will ye worship that which I worship.  
And I will not worship that which ye have been wont to worship,  
Nor will ye worship that which I worship.  
To you be your Way, and to me mine. [சுட்டி-03]. 
"மேலும் உம் இறைவன் நாடியிருப்பின் இப்பூவுலகின் மாந்தர் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டிருப்பர். எனவே, எல்லாரும் இறைநம்பிக்கையாளராக ஆகிவிடவேண்டும் என அவர்களை நீர் வலுக்கட்டாயப் படுத்த முடியுமா என்ன?" [குர்ஆன் 010:099]. "If it had been thy Lord's will, they would all have believed,- all who are on earth! wilt thou then compel mankind, against their will, to believe!" [சுட்டி-04] .
 

"(நபியே!) இணைவைப்பாளர்களுள் எவர் உம்மிடம் புகலிடம் தேடி வந்தாலும் அவருக்குப் புகலிடம் அளிக்கவும். அதனால், அல்லாஹ்வுடைய சான்றுமிகு வசனங்களை அவர் செவியேற்கலாம்.  பின்னர், அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் இடத்துக்கு அவரை அனுப்பி விடுவீராக! ஏனெனில் அம்மக்கள் அறியாச் சமூகத்தவராவர்" [குர்ஆன் 009:006]. "If one amongst the Pagans ask thee for asylum, grant it to him, so that he may hear the word of Allah; and then escort him to where he can be secure. That is because they are men without knowledge. [சுட்டி-05].
 

"(இஸ்லாம்) மார்க்கத்தில் (இணைவதில்) வலுக்கட்டாயம் என்பது இல்லை ..." [குர்ஆன் 002:256] "Let there be no compulsion in religion ..." [சுட்டி-06]. 
இத்துணைத் தெளிவான நல்லிணக்க இறைவசனங்களைக் கூறும் குர்ஆன், "பிற மதத்தவர் எவராயினும் கொல்லுங்கள்" எனக் கூறுவதாகப் பித்தலாட்டம் செய்யலாமா

அரைகுறை-1இல் காணப்பட்ட முழு வசனம்:
"(இறைநம்பிக்கையாளர்களே!) தொடர் தாக்குதல்களும் அடக்குமுறையும் ஒழிக்கப் பட்டு, நீதி நிலைநாட்டப் படும்வரை, இறைநம்பிக்கை முற்றிலும் அல்லாஹ்வுக்கென்று ஆகும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டு விடுங்கள். ஏனெனில்,) அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். அவர்கள் (தாக்குதலை நிறுத்த) மறுதலித்தால், (எதிர்த் தாக்குதல் புரியுங்கள்). அல்லாஹ் உங்களின் திண்ணமான பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் ..." [குர்ஆன் 008:039-040].
"And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do. If they refuse, be sure that Allah is your Protector ..." [சுட்டி-07]. 
மேற்காணும் வசனங்களில் அப்பாவிகள் எவரையும் கொல்லும்படி கட்டளை ஏதுமில்லை. முஸ்லிம்களை அழித்தொழிக்கப் போர் தொடுக்கும் பகைவரை எதிர்த்துப் போர் செய்வது பற்றிப் பேசப் படுகிறது. இந்த வசனங்கள் பேசும் எட்டாவது அத்தியாயத்தின் பெயரே "போர் வெற்றிப் பொருட்கள்"தான். அதை, அடுத்து வரும் வசனம் உறுதி செய்கிறது: 
 "(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒன்று (20%) அல்லாஹ்(வின் அறவழியில் செலவழிப்பதற்)கும் அவனின் தூதருக்கும் உறவினர்க்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் ..." [குர்ஆன் 008:041]. "And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to Allah,- and to the Messenger, and to near relatives, orphans, the needy, and the wayfarer ..." [சுட்டி-08]. 
*** 
ஹிஸ்டீரியா நோயாளிகள், பேயாடுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரம்வரை எல்லாமே அத்துப்படி என்று பிறரை நம்ப வைப்பதற்காக ஏதேதோ உளறிக் கொட்டுவார்கள். முக்காலமும் உணர்ந்தவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு "இவனுக்கு அது நடக்கும்; அவனுக்கு இது நடக்கும்" என்று குறி சொல்வார்கள். பாமரப் பேயாடிகள்கூட பல பாஷைகள் பேசுவர். எனக்குத் தெரிந்த ஒரு ஹிஸ்டீரியா நோயாளிப் பெண் அதுபோல் ஒருமுறை பேய்(!) வந்து உளற, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில், மூன்று மாத விஸிட்டிங் விசாவில் மலேஷியாவுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்த ஒருவர் சொன்னார் : "பேய் மலாய் பாஷை சூப்பராப் பேசுது!

 
திண்ணையில் 'புனிதமோசடி'யைப் படித்தபோது எனக்கு அந்தப் பெண் பேயாடிதான் நினைவுக்கு வந்தார்.

 
பார்ப்பதற்குக் கலர் நன்றாக இருப்பதாக நினத்துக் கொண்டு, காவி கலந்த உணவைக் கண்ட இடத்தில் தின்று விட்டு, அதனால் ஏறிய பித்தம், வாந்தி, மயக்கம், அத்தோடு ஹிஸ்டீரியாப் பேயாட்டம் போன்ற கலவைகள் அனைத்துக்கும் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு பெயர் கூறுகின்றனர்: "இஸ்லாமோஃபோபியா". தமிழில் "இஸ்லாமிய மிரட்சி".  தற்போது தமிழகத்தில் பரவுகின்ற புதுவகை நோய்.

சுருக்கமாக இமி்.

அதைத்தான் தலைப்பில் படித்தீர்கள். 

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ
சுட்டிகள்:
சுட்டி - 01 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911296&format=html


சுட்டி - 02 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912045&format=html


சுட்டி - 03 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/109.qmt.html


சுட்டி - 04 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/010.qmt.html#010.099


சுட்டி - 05 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt.html#009.006


சுட்டி - 06 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt.html#002.256


சுட்டி - 07 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.039


சுட்டி - 08 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.041

2 கருத்துகள்:

பி.ஏ.ஷேக் தாவூத் சொன்னது…

அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு, இத்தகைய இஸ்லாமிய மிரட்சி நோய் ஹிந்துத்துவவாதிகளுக்கு மட்டுமல்ல சமீப காலமாக தங்களை முற்போக்குவாதிகள் என்றழைக்கும் பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதை களைவது இஸ்லாமியர்கள் மீது கடமையான ஒன்று. ஆனால் இணையத்தில் உலாவரும் பல முஸ்லிம் பெயர் தாங்கிகள் இதை செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு தேவை புகழ் மட்டுமே. ஆகையால் இஸ்லாத்தை உண்மையாக நேசிக்கும் ஒரு சிலர் தான் செய்ய வேண்டும். தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி.

வஹ்ஹாபி சொன்னது…

அன்புச் சகோதரர் ஷேக் தாவூத்,

திண்ணைக் கட்டுரையில் திசைதிருப்பும் திருகுதாளங்கள் இறைவசனம் எனும் பெயரால் அரைகுறையாக இடம் பெற்றுள்ளன. அவற்றின் முழுமையையும் குறிப்பிட்டு ஒவ்வொன்றாய் விளக்கம் கொடுத்து வருகிறேன்.

அடுத்த பதிவில் "உடன்படிக்கை முறித்தல்", "பொய்ச்சத்தியம்" ஆகியவற்றின் முழு இறைவசனங்களையும் அவற்றின் பின்னணி, கூடுதல் விளக்கங்கள் ஆகியவற்றை எழுதவிருக்கிறேன்.

ஒரு ஆதாரம்கூடத் தராமல் அரைகுறைகளை வெளியிட்ட திண்ணை இதழ், முழுச் சான்றுகளுடன் எழுதப்பட்ட எனது விளக்கங்களை வெளியிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.