வெள்ளி, மார்ச் 21, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 18

இஃதிவ்வாறிருக்க, மறுபுறம் பாத்திமா நாயகி அவர்கள் தம் தோழிப் பெண்களால் சோடிக்கப் பட்டு மணமுரசு ஒலிக்க, மணப் பந்தலுக்குக் கொண்டு வரப் பட்டார்களாம்.

"மணக்கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார்" (பாடல் 179) எனப் போகிறது புராணக்கதை.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். உமறுப் புலவர் 'ஒலி'யுல்லாஹ் அவர்களுடைய சீறாப் புராணத்தில் மலிந்து கிடக்கும் இத்தகைய அசிங்கங்களை எடுத்தெழுதும்போது வெட்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை; வேதனையை விலக்க முடியவில்லை. சீறாப் புராணத்தை ஒரு வேதநூல் போல இன்றுவரைப் போற்றிக் கொண்டாடும் முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து நேர்வழி பெற வேண்டும் என்ற கடமையுணர்வு, வெட்கத்தையும் வேதனையையும் மிகைத்து நிற்பதால் அசிங்கங்களையும் எடுத்தெழுத வேண்டியது கட்டாயமாகி விட்டது.

குர்ஆன் ஹதீஸின் உண்மையான தாத்பரியங்கள் சென்று எட்டாத, மிகவும் பின் தங்கிய முஸ்லிம் ஜமாஅத்தாருடைய சில ஊர்களில் மரணத் தறுவாயில் கிடப்பவருடைய தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னமும் இந்த சீறாப் புராணம் பாடப் படுகின்றது.

'நேர்வழி நின்று நெறியாட்சி' புரிந்த சிறப்புடையவர்களுள் ஒருவராகிய அலீ(ரலி) அவர்களுக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் நடந்த திருமணத்தை இவ்வாறாகவெல்லாம் கொச்சையாகவும் பச்சையாகவும் வருணித்துப் போகிறார் உமறுப் புலவர். இவருடைய கனவில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஹாளிர்' ஆகி இவரை ஆசீர்வதித்தார்களாம். இந்தக் கர்ண பரம்பரைக் கதையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இந்த 'ஒலி'யுல்லாஹ்வுக்கு உரூஸ் எடுத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

படிப்பவர்களுடைய உள்ளங்களை மாசுபடுத்தக் கூடிய அழுக்குக் கவிதைகளை வைத்துக் கொண்டு இதுதான் நமது ஆத்மக்கறை அகற்றும் சவுக்காரம் எனத் தம்பட்டமடித்துக் கொள்கிறவர்களும் உள்ளனர்.

சல்மான் ரஷ்டியின் நூலை எந்த அளவுக்கு வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு வெறுக்கப் படத்தக்கக் கவிதைகள் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழனியிலும் முற்றிய களைகளாய்ப் பெரிதும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பொருத்தவரை நம்மில் பலர் இலக்கியக் குருடுகளாகவே தட்டழிந்து திரிகின்றனர். ஆக, இத்தகைய விரசமான, மார்க்க முரணான 'சாத்தானின் வரிகள்' சுட்டிக் கட்டப் படுவதன் நோக்கத்தையும் தேவையும் நாம் மறந்து விடலாகாது.

மணமுரசு எங்கணும் முழங்க, அழைத்து வரப் பட்ட பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் இருத்தினராம். "வந்த பொன்மயிலை ... அலியிடத்து இருத்தினாரால்" என அமைகிறது பாடல் (180). மணமகன் அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் மணமகள் பாத்திமா (ரலி) அவர்களை மணப் பந்தலுக்குக் கொண்டு வந்து உட்கார வைக்கிறார் உமருப் புலவர். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் பாடும் இஸ்லாமியத் திருமணத்தின் இலட்சணம் இதுதான் போலும்.

இரு சாட்சிகளின் முன்னிலையில் மணமகளின் தந்தை மணமகனுக்குச் செய்து வைக்கும் வாழ்க்கை ஒப்பந்தம்தான் 'நிக்காஹ்' எனும் இஸ்லாமியத் திருமணமாகும். 220 பாடல்களில் அலீ-பாத்திமா (ரலி) திருமண நிகழ்ச்சிகளை நீட்டி, முழக்கிப் பாடும் உமறுப் புலவருக்கு 'இஸ்லாமியத் திருமணம்' குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே, பிறமதச் சடங்குகளைப் பின்பற்றி மணமேடையில் மாப்பிள்ளையுடன் பெண்ணையும் சேர்த்து வைத்துப் பார்ப்பதில் புலவர் ஆனந்தம் கொள்கிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையான சுன்னத்தின்படி நிக்காஹ் நடைபெறுகிறதோ இல்லையோ; அதுபற்றிக் கவலையில்லை. ஆனால் ஃபாத்திஹா ஓதப் பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் பலர். அதே போக்கை உமறுவிடமும் காண முடிகிறது. பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அடுத்தாற்போல் இருக்கச் செய்து, உற்றார் உறவினர் எல்லோருமாகச் சூழ்ந்திருந்து வாழ்த்தி ஃபாத்திஹா ஓதினார்கள் என்பதை மறவாமல் பாடிச் செல்கிறார் புலவர்:
மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவரெவருஞ் சூழ்ந்து பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திஹா வோதுங் காலை (பாடல் 181).
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: