புதன், மார்ச் 12, 2008

பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்

திண்ணை எழுத்தாளர் கற்பக வினாயம் எழுதிய திண்ணைக் கட்டுரையின் ஒரு பகுதியை நான் எடுத்தாண்டால்/பயன் படுத்தினால் அது முழுக்க முழுக்க நான் எழுதியது போல்தானாம், நேச குமார் சொல்கிறார். சரி, "சனாதனக் குட்டை" அவருக்குக் கிடைக்கின்றவரை "பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற இரு சொற்களையும் நானே என் கைகளால் எழுதியதாகவே வைத்துக் கொள்வோம். திண்ணை பிப்ரவரி 1, 2008 பதிப்பில் நேச குமார் என்னைப் பற்றி, //பார்ப்பனர், சங்கராச்சாரி என்பது போன்ற பதங்களை பயன்படுத்துவதை அவர் சற்றும் தவறாக எண்ணவில்லை - இதுவே இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம். என்னைக் கேட்டால் பார்ப்பனர் என்று ஏசுவதும், சங்கராச்சாரியார்களையும் இந்து மதத்தையும் ஏசுவதையும் (இதே திண்ணை வஹ்ஹாபி ஒரு முறை சனாதானக் குட்டை என்ற பதத்தை இந்து சமுதாயத்தைக் குறித்து பயன்படுத்தியிருந்தார்)// என்று குறிப்பிடுகிறார். சொற்களைப் பயன் படுத்தியவன் 'இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம்' கொண்டவனாயின், அவற்றைச் சுயமாய் எழுதிய கற்பக வினாயகமும் 'இஸ்லாமிஸ்ட்' தானே? அவர் மட்டுமா இஸ்லாமிஸ்ட்? "பார்ப்பனர்" என்று யாரெல்லாம் எழுதுகிறார்களோ அவர்களைவரும் இஸ்லாமிஸ்ட் என்றே அறியப் படுவராம். இஸ்லாமிஸ்ட் 'எதேச்சாதிகார மனோபாவ'த்தைக் கட்டுடைப்பதற்காகக் கொஞ்சம் பட்டியல் பார்ப்போம்: தொல்காப்பியர் எனும் இஸ்லாமிஸ்ட்:
பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு அளவியன் மரபின், அறு வகையோரும் களவினில் கிளவிக்கு உரியர் என்ப (தொல்காப்பியச் சூத்திரம் - பொருள் 181).

வள்ளுவர் எனும் இஸ்லாமிஸ்ட்:
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (ஒழுக்கமுடமை 134).
நானூறு இஸ்லாமிஸ்ட்கள்:
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் ... (புறம் 9).
பார்ப்பார்த் தப்பிய கொடுமை ... (புறம் 34).
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ... (புறம் 367).
யாகம் என்றால் என்ன என்றே அறியாதயதவரை, "வேளாப் பார்ப்பான்" என்று குறிக்கும் அகம் (24). இளங்கோ எனும் இஸ்லாமிஸ்ட்:
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ் வானூர் மதியஞ் சகடணைய வானத்துச் சாலி யொருமீன் றகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார் ... (சிலப்பதிகாரம் 1:1:49)
சீத்தலைச் சாத்தனார் எனும் இஸ்லாமிஸ்ட்:
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் யாப்பறை என்றே எண்ணினன் ஆகி ... (மணிமேகலை 22:41,42).
மரியாதை தெரியாத இஸ்லாமிஸ்ட் காளமேகம்:
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும் பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - … (பாடல் 6).
மாடுதின்பான், பார்ப்பான் மறைஓதுவான்குயவன் கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான் பரும்புடைவை தப்பும்;பறை (பாடல் 90).
டிஸ்கி: காற்புள்ளி இருப்பதை மறந்து "மாடு தின்பான் பார்ப்பான்" என்று வாசகர்கள் படித்துக் குழம்பிவிட வேண்டாம். இறுதிச் சொல்லைப் படித்து விட்டு முதற் சொல்லுக்குப் போக வேண்டிய லூப் வகைச் செய்யுளாகுமிது. இதைக் "கடைமொழி மாற்று" என்று கூறுவர். பாரதி எனும் இஸ்லாமிஸ்ட்:
பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால் பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான் (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சமூகம் - மறவன் பாட்டு 6 - பக்கம் 505).
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சுதந்திரப் பள்ளு - பக்கம் 181).
சூத்திர னுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; சாத்திரம் சொல்லிடு மாயின் - அது சாத்திரமன்று; சதியென்று கண்டோம் (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - ஸ்மிருதிகள் 13 - பக்கம் 679).
நெடுங்கண்ணனார் எனும் இஸ்லாமிஸ்ட்:
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கி னன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே (குறுந்தொகை-156)
நல்லாதனார் எனும் இஸ்லாமிஸ்ட்:
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து முறைநிலை கோடா அரசும் ... (திரிகடுகம் 34).
பரஞ்சோதி முனிவர் எனும் இஸ்லாமிஸ்ட்:
மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின் மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளைப் ... (திருவிளையாடற் புராணம் - விருத்த குமார பாலாரான படலம் 23 பாடல் 1460).
சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன ... (திருவிளை. மா. பாத. 28).
மேற்காணும் பழைய இஸ்லாமிஸ்ட்கள் தவிர்த்து, நம் சமகால இஸ்லாமிஸ்ட்களும் நிறைய உள்ளனர். குந்தைவையின் சொற்களைப் 'பயன்படுத்திய' பாலகுமாரன் என்ற இஸ்லாமிஸ்ட்:
சேரதேசத்துப் பார்ப்பனர்களால் மதுரையிலுள்ள வாலிபப் படை ஒன்று போருக்குப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் போர் புதுவகையானது என்று சொல்லப் பட்டது. விடியற்காலை வேளை - அல்லது இருள் பரவும் நேரம் ஓடிவந்து தாக்கி விட்டு மறைந்து கொள்வார்கள். வீடுகளுக்கு நெருப்பு வைத்து விட்டுக் கொள்ளையடிப்பார்கள். மூன்று நான்கு குழந்தைகளாய் கயிற்றில் கட்டி, கொத்தாய் குதிரில் போட்டு ... (உடையார் முதல் பாகம் - பக்கம் 388).
"தண்டச் சோறுண்ணும் பார்ப்பை"ப் 'பயன் படுத்தும்' பல நூறு இஸ்லாமிஸ்ட்கள் இணைய உலகில் இன்னும் வலம் வந்து கொண்டு தங்கள் எதேச்சாதிகார மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அவர்களையெல்லாம் பட்டியலிட்டால் இஸ்லாமிஸ்ட்டுகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, திண்ணையில் 'பயன் படுத்திய' இஸ்லாமிஸ்ட்களை மட்டும் இங்குத் தருகிறேன்:
'சூத்திரற்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று காண்' என்றான் பாரதி. 'இஸ்லாமியருக்கொரு நீதி; விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு வேறொரு நீதி, சங்கர மடம் சொல்லிடுமாயின் அது சமரசமன்று சதியென்று காண்' என்பதல்லவா இந்த நிலைமை
"சமரசமன்று : சதியென்று காண்!" என்ற தலைப்பில் திண்ணையில் எழுதி இஸ்லாமிஸ்ட் ஆனார் ஞாநி.
இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும் தலித்துக்களும் மிகக் குறைவே
என்று திண்ணையில் எழுதிய எ.அ.பாலாவும் இஸ்லாமிஸ்ட்தான்.
பால் வேறு, குலம் வேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள். பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள்.பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர். அந்தணர், ஐயர், அறிபர், தாபதரென்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் கூற்றுகளைத் திண்ணையில் 'பயன் படுத்திய' எஸ்ஸார்சி ஐயமின்றி ஓர் இஸ்லாமிஸ்ட்டேதான்.
வடக்கே ராணுவம், காவல் துறை போன்ற உடல் வலிமை சார்ந்த பிரிவுகளில் பார்ப்பனர்கள் ஏராளமாக இடம்பெற்றிருப்பதையும் கண்டிருக்கிறேன். எனவே எனக்குப் பரிச்சயமான வட மாநிலச் சமூகங்களைச் சேர்ந்த பார்ப்பனர்கள் போர்க்குணம் மிக்கவர்களாகவும், தமது உடல் வலிமையின் காரணமாக மற்ற பிரிவினரால் மிகவும் மதிக்கத் தக்கவர்களாகவுமே இருந்தனர். அத்தகைய பார்ப்பனர்களைப் பார்த்துப் பழகியிருந்த எனக்குத் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் இயலாமையினையும் சுய பச்சாதாபத்தையும் பார்க்கையில் ஆச்சரியமாகவும் வெறுப்பாகவுங்கூட இருந்தது. அந்தக் கால கட்டத்தில் வாய்ப்பேச்சளவிலும் எழுத்து மூலமாகவும் பார்ப்பனர் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்று வந்த போதிலும் மிகவும் அபூர்வமாகவே அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன.பார்ப்பனர் மீது மிகக் கடுமையான எதிர்ப் பிரசாரம் இருந்த போதிலும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு என்பதெல்லாம் எப்பொழுதேனும் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்களாகத்தான் இருக்கும். அவற்றுக்கு ஆளாகிறவர்களும் வறியவராய் நோஞ்சான்களான அப்பாவி அர்ச்சகர்களாகவோ, புரோகிதர்களாகவோ சமையல்காரர்களாகவோதான் இருப்பார்கள். ஒரு வக்கீலாகவோ அரசாங்க அதிகாரியாகவோ இருக்க மாட்டார்கள்! ஆக பார்ப்பன வெறுப்பாளர்களின் தாக்குதலும் கையாலாகாத அப்பாவி பார்ப்பனர்கள் மீதுதான் நடக்கும்.
இதே திண்ணையில் "தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்" என்று தலைப்பே வைத்து, மேற்கண்டவாறு வரிக்கு வரி பார்ப்பனர் என்று 'பயன் படுத்தும்' தீவிர இஸ்லாமிஸ்ட் யாராயிருக்கும்? பார்ப்பனர் என்ற சொல்லைப் 'பயன் படுத்திய' எனக்கெதிராக வழக்காட வந்த, லாயர் நேச குமாருடைய க்ளையண்ட் மலர் மன்னன்தான் அது. மேற்காணும் இத்தனைபேர் "பார்ப்பனர்" என்று 'பயன் படுத்திய' போதெல்லாம் பதறாத - "அபார்ப்பனர்" என்று தன்னை வெளியில் சொல்லிக் கொள்ளும் - நேச குமாருக்கு வஹ்ஹாபி 'பயன் படுத்திய'போது வந்த ஆவேச மர்மப் புதிரை உடைக்கிறார் பாபுஜி என்ற இஸ்லாமிஸ்ட்:
என்னுடைய இக்கேள்வியை, அப்போதே நேச குமாரை பேட்டி எடுத்து ஃபிலிம் காட்டிய ஒரு 'பெட்டிக்கடை'யிலும் பின்னூட்டமாக வைத்திருந்தேன். வழக்கம் போல் பதில் தான் இல்லை.ஆனால் யாரேனும் இவருடைய திரித்தல்களை கேள்வி கேட்டால் 'இஸ்லாமிஸ்ட்' என்று முத்திரை குத்த மட்டும் தயங்குவதில்லை.
விரிவஞ்சி "பார்ப்பனர்" விஷயத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். *** இனி, "சங்கராச்சாரி" என்ற பயன்பாடு பற்றியும் சான்றுகளைப் பார்ப்போம்:
குடமுழுக்குச் செய்வோர் சங்கராச்சாரியையும் சமஸ்கிருதத்தையும் புறக்கணிப்பது சிறந்த பொதுத் தொண்டாகும்.
-"சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு" என்ற தலைப்பில் பெ.மணியரசன்.
சமூகத்துக்கு சாதகமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதைச் செய்தவரின் உள் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதை விடுத்து நிகழ்ச்சியின் சாதகத் தன்மையைப் பாராட்டுகிறோம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் சங்கராச்சாரி ஜயேந்திரர் கைது. தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இதில் என்ன உள் நோக்கம் இருந்தாலும் சரி, சங்கராச்சாரி கைது என்பது சமூக நன்மைக்கு உதவுகிற ஒரு முன்னோடி நடவடிக்கை என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை.
-திண்ணை 16 டிஸம்பர் 2004 இதழில் ஞாநி.
படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் 'பிள்ளை கெடுத்தாள் விளை' - ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே.
-சு.ரா.வின் 'பிள்ளை கொடுத்தாள் விளை'பற்றி ஆதவன் தீட்சண்யா.
தமிழர்கள் வெறுத்த வகுப்புவாதத்தை இந்திய தேசியத்தின் பெயரால் அவர்கள் மீது திணித்ததைத் தவிர சோ தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் செய்தது என்ன? தமிழுக்கு செம்மொழி தகுதி தரப்பட்டதை கிண்டல் செய்தார். தனித் தமிழ் ஈழம் அமைவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தித் திணிப்பை ஆதரித்து எழுதினார். மண்டல் குழு அறிக்கையை எதிர்த்தார். நள்ளிரவு கலைஞர் கைதை தமிழகமே கண்டித்த போது, அதை ஆதரித்தார். சங்கராச்சாரி கைதை தமிழகமே ஆதரித்த போது, அதைக் கண்டித்தார்.
-"அன்புள்ள ஆசிரியருக்கு" அருளடியான், 15 ஏப்ரல் 2005.
சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு! சங்கராச்சாரி மீது கொலைவழக்கு!! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!! நன்றாகப் புரியவைத்த உனக்கு, நன்றி சங்கரா நன்றி! - திண்ணையில் நா.முத்து நிலவன்.
திண்ணை தேடுபொறிக்கு நன்றி; மேற்காணும் அத்தனையும் திண்ணையில் வெளியானவைதாம். போகட்டும். மற்றவர்கள் 'பயன் படுத்துவதி'லாவது இடம்பாடு/உடன்பாடு இருக்கக் கூடும்; இல்லாமலும் இருக்கக் கூடும். (TAMBRAS) வெள்ளி விழா மாநாடு சென்னை அண்ணா நகரில் டி.கே. ரெங்கநாதய்யர் நகர் - ஸ்ரீ கிருஷ்ணா கார்டனில் 24,25 டிசம்பர் 2005 ஆகிய இரு நாட்களிலும் பெரும் பணச் செலவில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய மணிகண்டன் என்பவரின் பிரகடனம்:
"நாம் இன்று ஒன்று கூடி விட்டோம். நான் இத்தனை காலமாக எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றுதான் எனக்காக பேசுகிறேன். இங்கு கூடியிருந்த கூட்டத்தில் பெருமையோடு கூறுகிறேன். நான் ஒரு பார்ப்பான் என்று தமிழ்நாட்டை பார்த்து நாங்கள் இன்று எச்சரிக்கை செய்கிறோம்".
தான் யார் என்றும் தன்னை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று சம்பந்தப் பட்டவரே கூறும்போது அவ்வாறு அழைப்பதுதான் நியாயம். இந்த நியாயத்தைத்தான் மலர் மன்னனிடம் நானும் வேண்டுகோளாக வைத்தேன். அதை, நான் 'பங்ரா' நடனம் ஆடுவதாக நேச குமார் கேலி பேசினார். அவரது மனநிலையைக் கருத்தில் கொண்டவனாக என்னைப் பற்றியதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; திண்ணையும் அதைக் கண்டு கொள்ளவில்லை; அது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை. "பார்ப்பனர்" கருப் பொருள்தான் முடிந்து போய் விட்டதே, மீண்டும் "சங்கராச்சாரி" பகுதியில் மணிகண்டன் ஏன் வரவேண்டும்?" என்று வாசகர்கள் சலித்துக் கொள்ள வேண்டாம். மணிகண்டனைப் போலவே,
"இந்து மதத்தின் குறைகளை திராவிடர் கழகம் விமர்சிப்பது பரவாயில்லை. ஆனால், அதனால் முஸ்லீம்களுக்கு பலம் வந்துவிடுகிறது. எனவே, திராவிடர் கழகம் இந்து மதத்தையோ, சங்கராச்சாரியையோ விமர்சிப்பதற்கு பதிலாக, சேரிகளில் சங்கர மடம் செய்யும் நிவாரணப் பணிகளில், கைகொடுக்கட்டும். எது எப்படியானாலும் முஸ்லீம்களை வளரவிடும் விதத்தில் திராவிடர் கழகம் செயல்படக் கூடாது"
என்று தன்னை எவ்வாறு விளிப்பது/குறிப்பது என்று சம்பந்தப் பட்ட சங்கராச்சாரியே கட்டளை இட்டு விட்டார். தீர்ந்ததா? *** நேச குமாரின் குற்றச் சாட்டுகளில் இப்போது மீந்திருப்பது, //(இதே திண்ணை வஹ்ஹாபி ஒரு முறை சனாதானக் குட்டை என்ற பதத்தை இந்து சமுதாயத்தைக் குறித்து பயன்படுத்தியிருந்தார்)// என்ற "குட்டை" குற்றச் சாட்டு மட்டுமே. அவரது மேற்காணும் குற்றச் சாட்டைச் சான்றுகளோடு அவர் நிரூபித்தே ஆகவேண்டும். இல்லையெனில் தான் மனம் பிறழ்ந்த நிலையில் நிதானமின்றித் தவறாக எழுதி விட்டதாகத் திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். //...அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா?// என்று 27 பிப்ரவரி 2008 திண்ணை இதழில் கேள்வி கேட்கும் இவரை மனம் பிறழ்ந்து நிதானமிழந்தவர் என்று குறிப்பதில் தவறேதுமுண்டோ? இவருடைய பேதலிப்புக்கு எத்தனை முறைதான் எழுத்து வைத்தியம் பார்ப்பது? அவர் கேள்வி வைத்த ஒரு வாரத்திற்கு முன்னரே (21 பிப்ரவரி 2008) பதிப்பான எனது திண்ணைக் கடிதத்திலிருந்து மீண்டும்: "ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.
ஃஃஃ

கருத்துகள் இல்லை: