வெள்ளி, ஏப்ரல் 21, 2006

எதிர்மறைகள்

சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட 'கண்கட்டு வித்தை' என்றே கூறலாம். 

கட்டுகளை அவிழ்ப்பதற்கு முன்னர் இங்கு ஆளப்படும் சில கலைச் சொற்களைச் சொல்லி விடுவது நல்லது:
வஹ்ஹாப்=இறைவன்/அல்லாஹ், 
வஹ்ஹாபிஸம்=வஹ்ஹாபினால் வழங்கப் பட்ட வாழ்க்கைநெறி/இஸ்லாம், 
வஹ்ஹாபி=வஹ்ஹாபிஸத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் /வஹ்ஹாபைச் சார்ந்தவர்/முஸ்லிம்.

வித்தையில் அவிழ்த்து விடப் பட்ட சொற்களை இங்கு எடுத்தாள வேண்டியிருப்பதால், பிராமணர்களின் சுட்டு விரல் என்னை நோக்கி நீளாது என்ற நம்பிக்கையோடு, மறுக்க முடியாத ஒப்பீடுகள் - சான்றுகளுடன்:

ஒவ்வொன்றாகப் பார்ப்போமெனினும் பிராமணீயம் என்று சொன்னவுடனே முதலாவதாக நினைவுக்கு வருவது புரோகிதம்தான்.  

1. புரோகிதம் இஸ்லாமிய மார்க்க மேதைகளுள் நால்வரான இமாம்கள் மாலிக், அபூ ஹனீஃபா, ஷாபியீ மற்றும் இபுனு ஹன்பல் ஆகியோரின் பெயரை மட்டும் பயன் படுத்திக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான (இம்ரானா) தீர்ப்புகளைக் கூறி மக்களை மடையர்களாக்கும் முல்லாப் புரோகிதர்கள், சமாதிகளைக் காட்டிச் சுரண்டிப் பிழைக்கும் 'சாபு'ப் புரோகிதர்கள், ஒரேயொரு நேர்வழியான இஸ்லாத்தைப் பலவாறு துண்டிக்கத் துடிக்கும் எழுத்துப் புரோகிதர்கள் ஆகிய அத்தனைப் புரோகிதர்களுக்கும் எதிராக உரத்துக் குரல் கொடுப்பது வஹ்ஹாபிஸம் மட்டுமே.

முந்நூறுக்கும் மேற்பட்ட சிலைகளை இறையில்லமான கஃபாவைச் சுற்றிலும் வைத்து நடந்து கொண்டிருந்த புரோகிதத்துக்குச் சாவு மணி அடித்ததுதான் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி அவர்கள் செய்த அறப்பணிகளுள் தலையாயது. 

அந்தப் பழைய புரோகிதர்கள் தங்கள் தொழிலுக்குச் சொன்னக் காரணம்: "...அல்லாஹ்விடம் எங்களை அண்மித்து வைப்பர் என்பதற்காகவே இவர்களை நாங்கள் வழிபடுகிறோம் ..." [039:003]. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் புரோகிதர்கள் தமிழகத்தில் அதிகமாகப் புழங்குவது 'பண்பாட்டு மரபியல்' என்று முன்,பின்,அதி,நவீனத்துவ அறிவுசீவிகளால் தூக்கி நிறுத்த முயலும் சமாதி வழிபாடு நடக்கும் தர்ஹாக்களில்தான்.

"எனக்கும் என் அடியானுக்கும் இடையில் யாரும் புரோகிதம் செய்யத் தேவையில்லை" என்று வஹ்ஹாப் தன் மறையில் அறிவுறுத்துகிறான் [002:186].  

2. வர்க்க பேதம் முழு மனுக்குலமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் [004:001] என்றும் வஹ்ஹாபிஸத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எல்லா முஸ்லிம்களும் சகோதரர்களே [049:010] என்றும் வஹ்ஹாப் வரையறுத்துக் கூறி விட்டான். 

அடுத்து, "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்" என்று வஹ்ஹாபிகளின் தலைவரும் வர்க்க பேதத்தைத் தம் காலடியில் போட்டு மூடி விட்டார். 

திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2இல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சிறு பகுதி:
"இஸ்லாமியக் குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும் எந்த இனத்தை, எந்தக் குலத்தை, எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.அங்கே இன பேதமில்லை; நிற பேதமில்லை; புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை."  

3. வேதம் ஓதுதல் "ஓதுவீர்!" என்ற முதல் சொல்லோடு அருளப் பட்ட வேதம் [096:001] உலகிலேயே வஹ்ஹாபிகளின் வேதம் மட்டுமே. "முழு மனுக்குலமும் ஓதி உணர வேண்டியது" என்று பல இடங்களில் [002:185], [047:24], [054:17], [081:027] தன்னுடைய வேதத்தை வஹ்ஹாப் பொதுவில் வைக்கிறான்.  

4. தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துதல் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு தம்பட்டம் அடிப்பதற்கு வஹ்ஹாபிகளுக்குத் தடையிருப்பது [053:32] போலவே பிறரைப் பற்றி இல்லாத குறை கூறித் திரிவதைப் பற்றியும் [104:001] தடையிருக்கிறது.  

5. மதிக்கப் படுதல் வட்டிச் சுரண்டல், வரதட்சணைக் கொடுமை, சமாதிகளைக் காட்டி நடக்கும் வழிப்பறிக் கொள்ளை, இஸ்லாத்தில் இடையில் புகுத்தப் பட்டப் பொல்லாப் புதுமைகள், மன்னிப்பில்லாப் பாவமான இறைவனுக்கு இணை கற்பித்தல் ஆகிய வன் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காகத் தொழ முடியாமல் தடுக்கப் பட்டவர்கள், அடி-உதைகளைப் பரிசாகப் பெற்றவர்கள், ஊர் விலக்கம் செய்யப் பட்டவர்கள், பொய் வழக்குகளால் சிறை வைக்கப் பட்டவர்கள் இன்னும் எத்தனையோ இன்னல்களை ஏற்றுக் கொண்டவர்கள் வஹ்ஹாபிகள். 
இது போன்ற எவ்வளவோ எதிர்மறைகள் பிராமணீயத்துக்கும் வஹ்ஹாபிஸத்துக்கும் உள்ளன என்பதுதான் யதார்த்தம். இவற்றையெல்லாம் அறியாமல், இரண்டும் ஒன்றுதான் என்று 'கண்கட்டு வித்தை' காட்டுகிற கட்டுரை இடம் பெற்ற திண்ணையின் அதே இதழிலேயே வித்தைக் காரரின் 'தேவதைகளின் சொந்தக் குழந்தை' விமர்சனக் கூட்டத்தில் நடந்தவை தொகுக்கப் பட்டு வெளியாகி இருந்தன. 

அதில் கட்டுரையாளரின் எழுத்தைக் குறித்து யூசுப் என்பார் கூறுகிறார் "எதார்த்தம் தவறுதல் என்பது மனநிலை பிறழ்வேயாகும்".
ஃஃஃ
எடுத்தாளப் பட்டச் சுட்டிகள்:

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

மீண்டும் வெளிச்சம்

அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், "முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது" என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா?

மேற்காண்பது திண்ணையின் 30 மார்ச் 2006 பதிப்பில் வெளியான எனது கடிதத்தின் ஒரு சொற்றொடர்.

"அல்குர்ஆன் அரபு மொழி சார்ந்தது இல்லை என்று கூறி எவ்வளவு அப்பட்டமாக வாசகர்களை வகாபி குழப்பப் பார்க்கிறார்." இது சூபியின் குற்றச்சாட்டு

"இந்தக் குர் ஆனை அரபு மொழியில் அருளியிருக்கிறோம் - நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக" - இது அல் குர் ஆன் 012:002.
இலண்டன் ரெவரெண்ட் பாதிரியார் வீட்டுப் பிள்ளை மர்மட்யூக் பிக்தால் என்பாருக்கு அரபு மொழிப் பயிற்றுவிக்கப் பட்டது. எதற்காக? குர் ஆனைக் குறை காண வேண்டும் என்பதற்காக! குர் ஆனில் பிழை தேடப் புகுந்த அவர்தாம், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதோடு மட்டுமின்றி குர் ஆனுக்கு ஆங்கிலத்தில் விரிவுரையும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியும். 

சூபி எழுதியிருப்பதுபோல், அல்குர்ஆன் அரபு மொழி 'சார்ந்தது' (?) இல்லை; வஹ்ஹாபின் வார்த்தைகள் 'தெளிவான அரபு மொழி'யில் அருளப் பெற்றவைதாம் என்பது 'சூரியன்' நக்கீரன் வரைக்கும் தெரிந்த வெள்ளிடை மலை செய்தியாகும். நான் சூபியை இடைமறித்தது "முஸ்லிம்களின் அல்குர் ஆன்" என்று அவர் குறிப்பிட்டதைத்தான். அதற்காகத்தான் 081:027 வசனத்தையும் சான்றாக வைத்திருந்தேன்.

குர் ஆனை மேற்கோள் காட்டினாலே சூபிகளுக்கு மிரட்சி ஏற்பட்டு விடும். அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட முடியுமோ? "... இது மிகத் தெளிவான அரபு மொழியில் (அருளப் பெற்று) உள்ளது" 016:103. ஒரு கருப் பொருள் குறித்த முழு அறிவும் அடிப்படை அறிவும் யாவை என்பதற்கு ஓர் உவமையைப் பார்ப்போமா?

'தமிழில் எழுதுதல்' என்ற ஒரு கருவுக்குத் தமிழின் உயிர் எழுத்துகள் 12ஐயும் மெய் எழுத்துகள் 18ஐயும் உயிர்மெய் 216ஐயும் ஆய்தம் 1ஐயும் சேர்த்து 247 எழுத்துகள் பற்றிய 'முழு அறிவு' கட்டாயம் தேவை. தமிழைச் சீரிய முறையில் தெளிவாக எழுத, அடிப்படை அறிவுக்கு மேற்கொண்டு இலக்கணங்கள் தெரிந்திருக்க வேண்டும். சூபியைவிடச் சிறப்பாக எழுத அடிப்படை அறிவே போதும்.

காலத்திற்கேற்றவாறு வேதங்களில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களை, 'அல்லாஹ்வுக்கே முழு அறிவு இல்லை' என்றுக் கூற விழைதலைவிட அறியாமை ஏதுமுண்டா?.
 " ... இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்; என்னுடைய அருட்கொடை (இறைமறை)யையும் முழுமையாக்கி விட்டேன்; உங்களுடைய வாழும் வழியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்." என்று அல்லாஹ் கூறுகிறான் [005:003].
'இன்றைய நாளில்', 'நிறைவு', 'முழுமை' ஆகிய சொற்கள் உணர்த்துவது யாதெனில், 'இதற்கு முன்னர் முழுமை பெற்றிருக்கவில்லை' என்பதைத்தான்.

இது, சூபியின் சுரியானி, பிரியாணி போன்ற புதுக் கண்டுபிடிப்பன்று. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வஹ்ஹாபே கூறியவைதாம்.

ஹஜ்ஜின்போது பலி கொடுத்தல், முடி மழித்தல் ஆகிய அனைத்தும் அரபுவகைப் பட்டதல்ல என்று முன்பே நிறுவியிருக்கிறேன். ஏனெனில், அவையனைத்தும் அண்ணல் இபுராஹீம் நபி அவர்களின் வழிமுறை; அண்ணல் இபுராஹீம் அரபியரா? என்று கேட்டிருந்தேன். என் கேள்விக்கு பதில் தராமல் தன்னுடைய அறியாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சூபி உறுதியாயிருக்கிறார். அவருடைய உறுதியை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை!.

புதிதாக சூபி புகுத்தியிருப்பது 'இஸ்லாமிய ஆடை விதிகள்' (Dress Code) அரபுவகைப் பட்டன' என்பதாகும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் எல்லாரும் அரபியரைப் போன்று உடையணிந்து திரிவதாகக் கனவு கண்டிருக்கிறார். கிருத்துவப் பாதிரியார்களும் கன்னிகளும்தாம் அரபியரைப் போன்று உடையணிகின்றனர். கிழித்துக் கொண்டு திரிவது சூபிகளின் வழக்கமென்பதால் முழுக்க அணிவது முட்டாள்தனமாகத் தெரிகிறது போலும்.

மாறுபட்ட மொழிகள் பேசுவோர் வாழும் நம் நாட்டுக்கான தேசியப் பாடலாக, வங்கக் கவிஞர் தாகூரின் 'ஜன கன மன'வை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் - அது பிறந்த சூழலைக் கருத்திலெடுக்காமலேயே.

முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர் ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல. 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும். நபிகள் நாயகம் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர் ஆன் தமிழில்தான் அருளப் பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ் மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர். அப்போதும் சீனாவில் பிறந்த ஒரு பி-சூ மேதாவி, "சீன மொழியில் தொழுகை நடத்த தயாரா?" என்று வலையில் சவால் விட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து,

"ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்து கொள்ளலாம்" என்பது , 'காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனை'யன்று. மாறாக, வஹ்ஹாப் வஹ்ஹாபிகளுக்கு வழங்கியிருக்கும் அதிகளவில் வழக்கிலில்லாத அனுமதி - ஆம்; அனுமதிதான்; ஆணையன்று. கூடுதல் விபரங்களுக்கு:

1- பலதார மணம், பாவமா பரிகாரமா? - சுட்டுவிரல்

2- பலதார மணம் - இறைநேசன்

"நினைத்த நேரத்தில் முத்தலாக் சொல்லி பெண்ணை ஒடுக்குமுறை" செய்ய முடியாது. பாஸ்டன் பாலா அறிந்து வைத்திருப்பதைக்கூட அறியாத சூபியின் பார்வைக்கு: தலாக் ஒரு விளக்கம் - அபூ முஹை.

என்னுடைய சொத்தில் என் விருப்பத்திற்கு, நானே யாருக்கும் பங்கு கொடுக்க முடியாது. யாருக்கு எவ்வளவு என்று என் இறைவன் தன் மறையில் வகுத்திருக்கிறானோ அதன்படி அவரவர் எடுத்துக் கொள்வர் - நான் இறந்த பின்னர். அதில் சூபிக்குப் பங்கில்லை.

மேலும்,

தன் பிள்ளைகளின் அப்பன் பெயர் தெரியாத அம்மாப் பட்டியலை உள்ளடக்கிய 'பெண்ணிய இஸ்லாம்' போன்று இன்னும் எத்தனை இஸ்லாம்களை அறிமுகப் படுத்தினாலும் வஹ்ஹாபின் சட்டப்படி [003:019] இஸ்லாம் என்பது ஒன்றுதான் - ஒன்றே ஒன்று!