இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 16, 2025

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 43

 

‘மெளன குரு வணக்கம்’, ’சின்மயானந்த குரு’ என்னும் தலைப்புகளின் கீழ் தாயுமானவர் பாடியுள்ள பல்வேறு பாடல்களில்,

 தட்சிணா மூர்த்தியே. சின்மயானந்த குருவே,

எனவும்

சின்மயானந்த சுகவெள்ளம் படிந்து நின்

திருவருள் பூர்த்தியான …………

மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில்

வரு மெளன குருவே

எனவும் தன்னுடைய மெளன குருவைக் கூப்பிடுகின்றார், இந்தக் கூப்பாட்டின் எதிரொலிதான் குணங்குடியில் கேட்கின்றது.

தாயுமானவர், தன்னுடைய குருவான மெளன சுவாமிகளையும் அவருக்கும் குருவான திருமூலரையும் சேர்த்து, ‘சித்தர் கணம்’ எனும் தலைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதிலொரு பாடல் :

திக்கொடு திகந்தமும் மனவேகமென்னவே

சென்றோடியாடி வருவீர்,

எனத் தொடங்கும் அப்பாடல்

…… கையில் உழுந்து அமிழும் ஆசனமாய் ஓரேழு

கடலையும் பருக வல்லீர்

இந்த்ரனுலகும் அயிராவதமுமே கைக்கெளிய

பந்தாயெடுத்து விளையாடுவீர்

ககன வட்டத்தையெல்லாம் கடுகிடையிருத்தியே

அஷ்டகுலவெற்பையும் காட்டுவீர்

மேலும் மேலும் மிக்க சக்திகளெல்லாம் வல்ல நீர் அடிமை

முன் விளங்கலருசித்தியிலரோ

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச்

சித்தர்கணமே

என முடிகிறது.

இதன் தொடக்கவரி குணங்குடியாரின், ‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து’ எனும் பாடலை நினைவுபடுத்தும் அதேவேளையில் ஏனைய வரிகள் மற்றொரு பாடலை நினைவூட்டுகின்றன. அப்பாடலுக்கு வரும்முன் இந்தத் தாயுமானவருடைய பாடலின் பொருளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

தொடரும்.

வெள்ளி, நவம்பர் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 29

இவருக்குக் 'குணங்குடியார்' என்ற பெயர் ஏன் வந்தது? இவர் அதை ஒரு குறிச்சொல்போல் தமது பாடல்களில் கூறுகிறார். அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லும்போது குணங்குடி ஆண்டவன் என்கிறார்:
ஆண்டவன் என்செய்வானோ - குணங்குடி
ஆண்டவன் என்செய்வானோ
ஆண்டவன் அணைத்து என்னை அருகில் வைத்திடுவானோ
தீண்டியும் பார்க்காமல் தெருவில் விட்டிடுவானோ
எனப் பாடுகிறார்.
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே
எனப் போற்றும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்குக் குணங்குடி என்ற அடையைக் கொடுக்கிறார்.
சற்குணங்குடி கொண்ட ஷாஹுல் ஹமீதரசரே
எனச் சொல்லும்போது நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களோடும் குணங்குடியை இணைத்துப் பேசுகின்றார்.
இனி, தன்னைப் பற்றிப் பாடும்போதும் குணங்குடியான் எனச் சுட்டுகிறார்:
ஐயன் குணங்குடியானை அன்றி வேறு
உண்டென்று உள்ளாய்ந்து பார்த்தேன்
ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும்
என்னுள்ளாய்க் காணேன்
ஐயன் குணங்குடியானே யானே
என்று அறிந்த பின்பு, என் அறிவாய் நின்ற ஐயன்
குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே
என அமைகிறது பாடல்.

ஆக, இவருடைய பார்வையில் அல்லாஹ், முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாஹுல் ஹமீது ஆகியோரும் இவரும் குணங்குடியார்கள்தாம். இவருடைய பாடல் போக்கைப் பார்த்து, இந்த நால்வருள் யாரைக் குணங்குடியான் எனச் சுட்டுகிறார் என்பதை, படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ரு சோற்றுப் பதமாக இங்குத் தரப்பட்டுள்ள பாடல்களையும் இவரது நூலிலுள்ள இன்னபிற பாடல்களையும் ஒருங்கு நோக்கிப் பார்க்கும்போது, "எல்லாரும் அல்லாஹ்வே" என்ற கொள்கையை - வஹ்தத்துல் உஜூத் - எனும் அத்துவைதக் கொள்கையை உடையவராகக் குணங்குடி மஸ்தான் இருந்துள்ளார் எனும் முடிவுக்கு வருகின்றோம்.

இதன்படி முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களும் இவருடைய பார்வையில் அல்லாஹ்வாகவே படுகின்றனர். இவருடைய உள்ளத்தில் அல்லாஹ் இருக்கிறானாம். அதனால் இவரும் அல்லாஹ் ஆகிவிடுகின்றார்.

"ஐயன் குணங்குடியானே யானே என்று அறிந்த பின்பு ..." எனும் வரியில் குணங்குடியாகிய அல்லாஹ் நானே என்பதைத்தானே சுட்டுகிறார். இன்னும் காண்கின்ற பொருள் எல்லாமே இறைவன்தான் என்பதைப் பறைசாற்றும் பித்தன் மஸ்தானின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்:
ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய் ஒன்றாய் இரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகிக்
கானாகி அலையாகி அலைகடலுமாகி மலை
கானக விலங்குமாகிக்
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள் எவையுமாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி
நாடும் ஒளிபுரிய அடியெனும் உமை நம்பினேன் நன்மை செய்து ஆளுதற்கே
வானோரும் அடிபணிதலுள்ள நீர் பின்தொடர வள்ளல் இரசூல் வருகவே
வளரும் அருள் நிறை குணங்குடி வாழும் என் இரு கண்மணியே முகியித்தீனே.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 28

சுல்தான் அப்துல்கதிர் என்பது குணங்குடி மஸ்தானின் இயற்பெயராகும். பிறப்பு 1207ஹி தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.
"அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் பதாகை (கோவணம்?) அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும்  நீங்கி விட்டனர்.
'முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்' - அப்துர் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1990 - பக்கங்கள் 456, 457.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில் ஹிஜ்ரீ 1254இல் அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான 'தொண்டியார் பேட்டை', இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.

இவர் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஸூஃபிக் கவிஞர் எனச் சுட்டப்படுகிறார். இறைவனையும் நபி (ஸல்) அவர்களையும் பற்றியும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்), நாகூர் ஷாஹுல்ஹமீது (ரஹ்) ஆகியோரைப் பற்றியும் இவர் பாடல்கள் பல பாடியுள்ளார். முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களைத் தம் ஆன்மீக குருவாகக் கொண்டிருந்தார் குணங்குடி.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 31, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 27

னி, "போவோம் குணங்குடிக் கெல்லோரும்".

அதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை சில உள்ளன. இஸ்லாமிய இலக்கியப் புலவர்கள் என்று சொன்னதுமே, "உமருப் புலவர் காப்பியம் பாடியவர்; குணங்குடி மஸ்தான் மெய்ஞானக் கவிஞர் எனப் பலராலும் பாராட்டப் படுபவர்" என்பதுதான் நம்மில் பெரும்பாலோரின் கருத்தில் வரும்.

உமருப் புலவராயினும் குணங்குடி மஸ்தானாயினும் இன்னபிற தமிழ் முஸ்லிம் புலவர்களாயினும் அவர்கள் அனைவரும் இயற்றிய அனைத்துமே இஸ்லாத்துக்கு முரணான குப்பைகள் என்றெல்லாம் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு ஒதுக்கித் தள்ளிவிடுவது நமது நோக்கமன்று.

அவர்களின் பாடல் தொகுப்புகளில் பல நல்ல கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு வேட்டு வைக்கின்ற பல சமூக விரோதச் சங்கதிகளும் அவற்றுள் அடங்கிக் கிடக்கின்றன.

இவர்களுடைய பாடல்களின் 'சிறப்பம்சங்கள்' பற்றி நாம் பல மேடைகளில் பேசியும் பல வால்யூம்களில் எழுதியும் வந்திருக்கிறோம். நாளடைவில் இக்கவிஞர்களை "நாதாக்கள்; வலீயுல்லாக்கள்" எனப் போற்றிப் புகழ்ந்தது போதாதென்று இவர்களுக்கு உரூஸ்களும் நம்மில் சிலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் புலவர்கள், "வலீயுல்லாக்கள்-இறைநேசர்கள்" என்ற அடைமொழிகளோடு இன்றைய தமிழ் உலகத்துக்கு இனங் காட்டப் பட்டுள்ளனர். இதன் விளைவாக, இந்த வலீயுல்லாப் புலவர்களின் ஒட்டுமொத்த எல்லாப் பாடல்களுக்கும் ஒரு 'விலாயத்' எனும் இறைநேச முத்திரை குத்தப்பட்டு அவையெல்லாம் பக்திப் பரவசத்தோடு இன்று பலரால் அணுகப் படுகின்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டன.

இங்கு நாம் இந்தப் புலவர்களின் இறைநேசம் பற்றிப் பேசவரவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. இவர்களுடைய பாடல்களாக நமக்குக் கிடைப்பவற்றை இஸ்லாமிய உரைகல்லில் உரசிப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, குர்ஆன்-ஹதீஸ்களின் கோட்பாடுகளோடு நேரடியாக முரண்படுகின்ற எத்தனையோ கருத்துகள் இப்புலவர்களால் பாடப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது. "இப்புலவர்களின் எல்லாப் படைப்புகளும் கொள்ளத் தக்கவை அல்ல; அவற்றுள் தள்ளத் தக்கவையும் இடம்பெற்றுள்ளன" என்பதை எடுத்துச் சொல்வதே நம் நோக்கமாகும்.

"நம்முடைய இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களிலேயே இஸ்லாத்துக்கு முரணான போக்குகளா? அது எப்படி இருக்க முடியும்? இவற்றைப் பாடிய நாதாக்கள் - ஸூஃபிகள் - வலியுல்லாக்கள் சாமானியமானவர்களா என்ன? கால் குழியிலேயே கஅபத்துல்லாவை தரிசித்தவர்களல்லவா அவர்கள்?" போன்ற தனிமனித வழிபாட்டுத் திரைகளால் தங்கள் அறிவுப் பார்வையை மறைத்துக் கொண்டவர்கள், நமது விளக்கங்களைத் தீண்டத் தகாதவையாகக் கருதுகின்றனர்.

இன்னும் சிலர், "அப்படியே நம்முடைய இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளில் இஸ்லாத்துக்கு முரணான கருத்துகள் இடம்பெற்றிருந்தாலுங்கூட அவற்றை நாமே ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?" எனக் கேட்கின்றனர். "நம்முடைய புலவர்களின் பாடல்களில் உள்ள முரண்பாடுகளைத் தோண்டித் துருவி எடுத்தெழுதும் கோடாறிக் காம்புகளாக நாமே மாறிவிடுவதா?" எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமா நஸ்ரினோ, அருண்ஷோரியோ, ராம் ஸ்வரூப்போ இஸ்லாத்துக்கு முரணான எதையேனும் இஸ்லாம் என்பதாக எழுதினால் ஒட்டுமொத்தமாகக் கொதித்தெழுகின்றனர் நம்மவர். ஆனால், நம்மூர்ப் புலவர்கள் இஸ்லாத்தின்மீது வீசியுள்ள புழுதிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்; அல்லது கண்டுகொள்ள மறுக்கின்றனர். இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நோகடிக்கின்ற - சாகடிக்கின்ற இத்தகையக் கவிதைகள் பல 'இஸ்லாமிய இலக்கியம்' எனும் போர்வையில் உலா வரும்போது, அவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து விலகிக் கொள்வதில் நாம் விழிப்பாயிருத்தல் வேண்டும்.

இந்த வகையில் குணங்குடி மஸ்தானின் நிலை என்ன? என்பதை இனிக் காண்போம். அவருடைய பாடல்களில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூன் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 26

தற்குப் பின்னரும் ஸூஃபிஸம் உயிரோடுதான் இருந்தது. அதற்குப் புத்துயிர் ஊட்டியவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஹிஜ்ரீ 450முதல் 505வரை ஈரானில் வாழ்ந்திருந்த கஸ்ஸாலீ ஆவார். அவருக்கும் பின்னர் ஹிஜ்ரீ 560இல் வருகிறார் இப்னு அரபி எனும் ஸூஃபி. இந்த இப்னு அரபிதான், தன் காலத்துக்கு முன் இருந்த ஸூஃபிக் கோட்பாடுகளை எல்லாம் நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பினார். 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரணமும் இவரால்தான் சூட்டப்பட்டது.

இப்னு அரபியை ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றெல்லாம் ஸூஃபிக் கட்சியினரால் ஆஹா, ஓகோ எனப் பாராட்டப்படும். இவர் எந்த அளவுக்கு வழிகேட்டில் ஊறித் திளைத்தார் என்பதை அவருடைய கவிதைகளைப் படித்த மாத்திரத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.

இபுனு அரபி பாடுகிறார்:
வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது.
இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்;
சிலைகள் கொலுவிருக்கும் கோயில்;
அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி;
ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி;
தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே;
குர் ஆன் வேதமும் இதுவே;
நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன்.
அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே.
அன்பு எனும் மதமே என்னுடையது;
அதுவே என் நம்பிக்கை.
சமயங்களின் பெயரால் பிரிவினை பேசுவதை ஸூஃபிகள் வெறுத்தனர். எல்லாச் சமயங்களும் மூலநிலையில் ஒரே உண்மையைச் சொல்கின்றன என்பது ஸூஃபிகளின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இப்னு அரபியிடம் இப்படிக் கவிதையாக உருவெடுக்கிறது.

இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் என்கிறார் இப்னு அரபி:
அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி
அவனுடைய சாயலில் என்னைப் படைத்து
என்னைப் புகழ்கிறான்.

நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி
அவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனைப் புகழ்கிறேன்.

அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இருக்க முடியும்?

இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.
நான் அவனை அறிகிறேன்;
அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.
இஸ்லாத்தில் மட்டுமில்லாமல் ஏனைய மதங்களிலும் தெய்வீக உண்மைகள் பொதிந்திருக்கின்றன; அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இப்னு அரபியின் கருத்தாகும்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே.
மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர்.
காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்.
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய
கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு;
மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை.
அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர்.
ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு மதத்தினரையும் அன்பினால் தழுவிக் கொள்வதற்கேற்ற வகையில் சயமப் பொறுமையையும் அனுசரித்துப் போதலையும் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் இப்னு அரபி.

"ஒரே உண்மைப் பொருளின் ஒப்பற்ற ஜோதிதான் பள்ளிவாசலிலும் கிறித்துவ திருச்சபைகளிலும் கோவிலிலும் எரிகிறது" என்பது இப்னு அரபி போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் கருத்தாகும்.

இன்று வாழும் ஸூஃபிகள், இபுனு அரபியின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களேயாவர்.

எனவே, ஸூஃபிஸமாயிருந்தாலும் அத்துவைதமாக இருந்தாலும் அல்லது வேறெந்தத் தத்துவமாக இருந்தாலும் அவற்றை குர்ஆன்-ஹதீஸில் ஒப்பிட்டுப் பார்த்து, குர்ஆன்-ஹதீஸுக்கு முரண்படுபவற்றைத் தூக்கித் தூர எறிவோமாக!

குர்ஆன்-ஹதீஸை மட்டுமே பின்பற்றி, உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போமாக!

இந்தக் கொள்கை உறுதியை மனத்தில் இருத்திக் கொண்டு, தமிழ்நாட்டு ஸூஃபிப் புலவர்களின் இலக்கியங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், நவம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 25

ரீஅத்தைத் தாண்டி, தரீக்கத்தைக் கடந்து, ஹகீக்கத்தில் எவர் காலூன்றி விடுகிறாரோ அவர் இறைவனோடு ஃபனா ஆகி, மஃரிஃபாவுடைய ஞானத்தைப் பெற்று விடுகிறாராம். அதாவது இறைவனோடு இரண்றக் கலந்து விடுகிறாராம். இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குவர் ஸூஃபிகள். அதாவது,

இஸ்லாம் என்பது ஒரு வட்டம். அதன் வெளிவிளிம்புதான் வெளிரங்கமான ஷரீஅத். வட்டத்தின் மையப் புள்ளியே உள்ரங்கமான ஹகீக்கத்தாம். ஷரீஅத் எனும் வெளிவிளிம்பிலிருந்து ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கிச் செல்லும் ஆரமே தரீக்கத் எனும் ஞானப் பாட்டையாம். இந்தத் தரீக்கத் எனும் கோடு எந்த அளவுக்கு ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கி நெருங்கி, நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன் இறைவனை நெருங்குகின்றானாம். நெருங்கி, நெருங்கி, இறுதியில் இந்தக் கோடு கடைசியாக அந்த மையப் புள்ளியைப் போய்த் தொடுமன்றோ? அப்போது இந்த ஞானவான், இறைவனோடு ஒன்றிக் கலந்து விடுகிறானாம். இவ்வாறு கலந்த நிலையே மஃரிஃபத்தாம்.

மஃரிஃபாவுடைய நிலயை எய்தி, இறைவனோடு ஃபனாவாகி - ஒன்றிக் கலந்து - விட்ட ஸூஃபிக்கு உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் இறைவனாகவே காட்சி வழங்குமாம். அவனும் இறைவன்தானாம். இந்த வழிகெட்ட கோட்பாட்டை ஸூஃபிஸத்தின் ஆரம்ப நிலையில் அனுபவித்த பக்த கோடிகள் அதைத் தம் உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.

"சொல்லத் தகுமல்ல இப்பொருளை
சுருட்டி மறைக்கிறேன் ஷரஹுக்காக"

என்று பீரப்பா பாணியில் ஆரம்பகால ஸூஃபிகள் மஃரிஃபா ஞானத்தை வெளிப் படுத்தினார்களில்லை.

இவ்வாறு ஒளிவு-மறைவாக மஃரிஃபா ஞானம் அடைந்து கிடந்தபோது அதை வெளிப்படுத்தி ஆன்மீக உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு 'புரட்சித் தலைவர்'.

"நேசனும் நேசிக்கப் பட்டவனும் ஒருவனே! என்னைக் காணும்போது அவனைக் காணுகின்றீர்கள். நாங்கள் இருவரும் ஒரே உருவில் ஒன்றிவிட்ட இரு ஆன்மாக்களாகும்" என்று அந்தப் புரட்சியாளர் பகிரங்கமாகப் பறை சாற்றினார்.

"அனல் ஹக் - நானே அல்லாஹ்" என்பது இவருடைய ஆன்மீக கோஷமாயிற்று. உடனே, அப்போதிருந்த ஷரீஅத் கோர்ட் உஷாராயிற்று. அந்தப் புரட்சித் தலைவரான ஹுஸைன் இப்னு மன்ஸூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபியை, காஃபிர் எனத் தீர்ப்புரைத்தது. அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரீ 309ஆம் ஆண்டு இராக்கில் நடந்ததாகும்.

தொடரும் …

புதன், செப்டம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 23

னி, வ.உக்காரர்கள் தங்கள் கோட்பாட்டுக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பார்ப்போம். புகாரீயில் இடம் பெறும் கீழ்க்காணும் முழு ஹதீஸில் தங்களுக்குச் சாதகமான பகுதியை மட்டும் அவர்கள் மேற்கோளாக எடுத்துப் பேசி, அத்துவைதக் கொள்கைக்கு வக்காலத்து வாங்குவார்கள். அந்த முழு ஹதீஸையும் நாம் பார்ப்போம்:
"என்னுடைய தோழன் ஒருவனோடு பகைமை பாராட்டுபவனோடு நான் பகையாகவே இருப்பேன். என்னுடைய அடியான் என்பவன், நான் அவன் மீது கடமையாக்கி இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவே அல்லாமல் வேறெதையும் கொண்டு என்னை நெருங்க முடியாது. இன்னும் நஃபிலான செயல்களைச் செய்வதன் மூலம் நான் அவனை உவக்கும் காலமெல்லாம் அவன் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவன் மீது அன்பு கொண்டு விட்டால் அவன் செவியுறும் செவியாக, பார்க்கின்ற கண்ணாக, பிடிக்கின்ற கையாக நான் ஆகிவிடுகின்றேன். அவன் என்னிடம் கேட்பானேயானால் அதனை நிச்சயம் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் அடைக்கலம் தேடினால் அதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுக்கின்றேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துச் சொன்ன செய்தியை அபூஹுரைரா (ரலி) வழியாக புகாரீ (6502) பதிவில் பார்க்கிறோம். இந்த ஹதீஸின் முன்-பின் பகுதிகளை மறைத்து விட்டு, "அல்லாஹ்வே அடியானின் காதாக, கண்ணாக, கையாக ஆகிவிடுகிறான் அல்லவா?" எனக் கேட்கும் ஸூஃபிகள், "அல்லாஹ்வும் அடியானும் ஒன்றிக் கலந்து விட்டதைத்தானே இது காட்டுகிறது?" எனக் கேட்டு இணைவைப்புக் கொள்கைக்கு நியாயம் கற்பிப்பார்கள். மேற்காணும் ஹதீஸில் துண்டுப் பார்வை செலுத்தியதால் வந்த வினை இது. இதன் மீது முழுப் பார்வையைச் செலுத்தி இருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது.

அதே பத்ருப் போர் நிகழ்ச்சிகளுடன் இந்த ஹதீஸைப் பொருத்திப் பார்ப்போம். இஸ்லாத்தின் விரோதிகள் அல்லாஹ்வின் நேசர்களாகிய முஸ்லிம் வீரர்களுடன் பகைமை பாராட்டுகிறார்கள். தன்னுடைய நேசர்கள் மீது எவர் பகைமை பாராட்டுகிறாரோ அவர்களுக்கு அல்லாஹ்வே பகைவனாக ஆகிவிடுகின்றான். பத்ரு வீரர்கள் அல்லாஹ்வின் நேசர்களானது எப்படி என்பதையும் மேற்காணும் ஹதீஸ் வரிசையாகச் சொல்லி வருகிறது.

அல்லாஹ் அந்த முஸ்லிம் வீரர்கள் மீது எவற்றையெல்லாம் கடமைகளாக ஆக்கினானோ அவற்றையெல்லாம் அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றனர். அல்லாஹ்வுக்காகத் தங்கள் பிறந்த மண்ணையே பிரிந்து வந்திருக்கின்றனர்.

இவ்வாறாக அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தான் அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருங்கிய நேசர்களானார்கள். அதுமட்டுமின்றி, மென்மேலும் உபரி(நஃபில்) ஆன நற்செயல்களையும் செய்து அவர்கள் அல்லாஹ்வின் முழுப் பொருத்தத்தையும் பெற்றிருந்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படிப் பட்ட இறைப் பொருத்தத்தைப் பெறுவதில் முதலிடம் வகித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் வீரர்களுக்குத் தலைமை தாங்கி, வெற்றிக்காக இறைவனிடம் கையேந்தினார்கள். அவர்கள் எந்த வெற்றிக்காகக் கையேந்தினார்களோ அந்த வெற்றியை இறைவன் அவர்களுடைய கைகளில் வாரிக் கொடுத்தான்.

பகைவர்கள் தோற்று, அவல ஓலமிட்டபோது அந்த ஓசையைத் தன் தோழர்களின் செவிகளுக்கு விருந்தாக அல்லாஹ் ஆக்கி வைத்தான்; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிய காட்சியைத் தன் நேசர்களைக் கொண்டு கண்ணாரக் காண வைத்தான்; தன்னுடைய நேசர்களின் சிறிய கூட்டமொன்று பெரியதொரு வெற்றியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அந்தச் சின்னஞ் சிறிய கூட்டத்தினரின் கைகளுக்கும் கால்களுக்கும் ஓர் அற்புத ஆற்றலை வழங்கினான். அல்லாஹ்வே அவர்களுக்கு உற்ற துணையாயிருந்து வெற்றி புரிந்திருக்கிறான்.

இந்த வெற்றி, முழுக்க முழுக்க பத்ரு வீரர்களுடைய அவயங்களின் ஆற்றலால் ஈட்டியதன்று என்பதைச் சுட்டிக் காட்டுவதாகத்தான் "அவனுடைய காதாக, கண்ணாக, கரமாக நான் ஆகி விடுகிறேன்" என்றான் அல்லாஹ். "நம்மோடு காதாக, கண்ணாக, கரமாக அல்லாஹ் இரண்டறக் கலந்து விட்டான்; இனி நாம் வேறு அவன் வேறு என்றில்லை. நாம்தான் அல்லாஹ்; அல்லாஹ்தான் நாம்" என்று அந்த முஸ்லிம் வீரர்கள் எண்ணினார்களா? அப்படி எண்ணத்தான் முடியுமா? அப்படிப் பட்ட எண்ணத்துக்கு இடமேயில்லை என்பதை அதே ஹதீஸின் பிற்பகுதி தெளிவு படுத்துகிறது.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், ஆகஸ்ட் 13, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 24

ல்லாஹ்வுடைய கையாக ஆகிவிட்ட பிறகு, அந்தக் கை இனி யாரிடம் போய் துஆக் கேட்பது? கேட்பவனும் அவனே; கேட்கப் படுபவனும் அவனே என்று ஆகிவிடவில்லையா? அப்படித்தான் ஆகிவிட்டது வஹ்தத்துல் உஜூதாரிடம். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது; அது ஏகத்துவத்துக்கே உலை வைப்பதாகி விடும் என்பதை உணர்த்திக் காட்டுவதாகவே அதே ஹதீஸின் பிற்பகுதி அமைந்திருக்கிறது. பிற்பகுதி ஹதீஸ் என்ன சொல்கிறது? "அந்த அடியார்கள் இனியும் அவர்களுக்கு எவை தேவையோ அவற்றை என்னிடமே கேட்க வேண்டும். அப்போது நான் அவர்களுக்குக் கொடுப்பேன். என்னிடமே பாதுகாப்புக் கோர வேண்டும். அப்போது அவர்களை நான் பாதுகாப்பேன்" என்கிறான் இறைவன்.

இப்படியாக, அல்லாஹ் தன் அடியானைத் தன்னிலிருந்து வேறாக்கி வைத்து, "நீ என் அடியான் எனும் நிலையிலிருந்து, என் நேசன் எனும் நிலையிலிருந்து என்னிடம் கேள்" எனக் கூறுகிறான்.

ஆக, ஸுஃபிஸவாதிகள் அல்லாஹ்வின் வசனத்தையும் அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸையும் எப்படியெல்லாம் ஞானப்(!) பாட்டைக்குத் தள்ளிக் கொண்டு போய் பங்கு வைத்து விட்டனர் என்பதை அவர்கள் செய்திருக்கும் தகிடுதத்தங்களால் தெரிந்து கொள்ளலாம். இதோடு நின்று விடாமல், ஸூஃபிஸம் பற்றியும் அதன் படித்தரங்கள் பற்றியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமே கூறியிருப்பதாகப் பொய்ச் செய்திகளையும் உண்டு பண்ணினார்கள்.
எவன் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிப் பொய் சொன்னானோ அவன் தனது இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்.
புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ முதலிய ஹதீஸ் நூல்களில் காணப்படும் நபிமொழிகளின் கடும் எச்சரிக்கையையும் புறக்கணித்து விட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பெயராலேயே பொய்ச் செய்திகளைப் பாடினார்கள் ஸூஃபிகள்:
ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நாலாம்
ஓதிய ஷரீஅத் தென்றும் உவந்திடு தரீக்கத்தென்றும்
நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால்
ஆதியைக் காணலாமென் றகுமதர் அருளிச் செய்தார்.
(ஞான மணிமாலை, பாடல் 11).

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் எனும் நான்கு நிலைகளின் ஊடாகத்தான் இறைவனை அறிய முடியும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறியுள்ளதாக, பீரப்பா பாடுகின்றார்.

ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளிய ஹதீஸ்களில் எதிலும் இப்படி ஒரு செய்தி காணப் படவேயில்லை.

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, மே 22, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 22

ல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு உள்ளச்சத்தோடு கட்டுப்பட்டு, அவனுடைய மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு முஸ்லிம் கூட்டத்தினர் நிற்கின்றனர். அப்போது, அந்தக் கூட்டத்தினருக்குத் தலைமை வகித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் கையேந்தி, "யா அல்லாஹ்! எங்கள் இச்சிறுபான்மைக் கூட்டம் தகர்க்கப் படுமானால் உன்னை வணங்கி வழிபட இவ்வுலகில் எவருமே இல்லாமல் போய்விடுவார்களன்றோ?" என்று நெஞ்சுருக, கண்களில் நீர்மல்கப் பிரார்த்தித்து இறைவனின் உதவியை இறைஞ்சினார்கள். அவர்களுக்கு உதவுவதாக அல்லாஹ் நபிக்கு வாக்களித்தான். "வாக்களிக்கப்பட்ட உதவி நமக்கு வந்து விட்டது!" என்று அருகிலிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "இந்த எதிரிகள் புறமுதுகிட்டு ஓடப் போகிறார்கள்" எனச் சொல்லிக் கொண்டே, குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளினார்கள். குறைஷிக் காஃபிர்கள் நின்றிருந்த திசையை நோக்கித் தன் கையை விரித்து மண்ணை ஊதிவிட்டு, "உங்கள் முகங்கள் கருகி விட்டன" எனக் கூறினார்கள். அம்மண், எதிரிகளின் திசையில் சிதறியது. எதிரிகளும் சிதறிப்போவதற்கு அல்லாஹ் பத்ருப்போரில் அற்புதமாக முஸ்லிம்களுக்குப் பேருதவி புரிந்தான்; முஸ்லிம்கள் வென்றார்கள்.

அல்லாஹ்வை அஞ்சி, அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, அவனிடமே தவக்குல் வைத்து, அவனை நோக்கிக் கைகள் விரிகின்றபோது அந்தக் கைகளை வெறுமனே திருப்பி விடுவதற்கு நாணமுறுகிறவனாயிற்றே அவன்! அப்படிப்பட்ட அல்லாஹ், தன்னுடைய மார்க்கம் நிலைநிறுத்தப் படுவதற்கான ஓர் இக்கட்டான காலகட்டத்தில் தன்னுடைய தூதர் கையேந்துகின்றபோது கண்டு கொள்ளாமல் இருந்து விடுவானா? ஆகவே, தனது அடியார்களுக்குத் தனது உதவியைத் தங்கு தடையின்றி வழங்கி வெற்றியடையச் செய்தான். "பத்ரில் பெற்ற இந்த வெற்றி, தூதருடைய - தூதரின் வீரர்களுடைய சாகசத்தால் கிடைத்ததன்று; என்னுடைய உதவியைக் கொண்டு கிடைத்தது" என்பதை இந்த முக்கியக் கட்டத்தில் எல்லாருக்கும் நினைவு படுத்துவதற்காக அல்லாஹ்,
(முஸ்லிம்களே! பத்ருப் போரில் எதிரிகளான) அவர்களை நீங்கள் வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான். (நபியே! பகைவர் மீது மண்ணள்ளி) நீர் வீசியபோது நீர் வீசவில்லை; அல்லாஹ்வே வீசினான்" (அல்குர் ஆன் 008:017)
என்று கூறுகிறான். இதன் மூலம் "என்னை நம்பி, என்னிடம் அபயம் வைத்து, என்னை அஞ்சி வாழும் பொறுமையுடைய அடியாருக்குச் சோதனை ஏற்படும்போது, யாரும் எதிர்பாராத விதத்தில் நான் மகத்தான உதவி புரிந்து அவனை கவுரவிப்பேன்" என்ற பாடத்தைப் புகட்டுகிறான். வஹ்தத்துல் உஜூதுக்காரர்கள், நேரடியாகப் பொருள் தரும் குர்ஆன் வசனங்களுக்கெல்லாம், "இதனுடைய உட்பொருள் வேறு இருக்கிறது" எனத் திசை திருப்புவார்கள். ஆனால், மேற்காணும் 008:017 வசனத்துக்கு மட்டும் Literal meaningஐ அப்படியே எடுத்துக் கொள்வார்கள். விளக்கம் தேவையே இல்லாத தெளிவான வசனங்களுக்கு வேறு அ(ன)ர்த்தம் கற்பிப்பவர்கள், உவமித்துக் கூறும் இந்தக் குறிப்பிட்ட வசனத்தில் உணர்த்தப்படும் படிப்பினையைப் புறக்கணித்து விட்டு, அல்லாஹ்வே ஒவ்வொரு முஸ்லிம் வீரராக பத்ரில் வந்தான் என்பதுபோல அ(ன)ர்த்தம் கற்பிப்பார்கள். "எல்லாமே அல்லாஹ்தான்" என்ற இவர்களுடைய கோட்பாட்டின்படிப் பார்த்தால், அபூஜஹல் முஸ்லிம்களை வெட்டியபோது அபூஜஹல் வெட்டவில்லை; அல்லாஹ்தான் முஸ்லிம்களை வெட்டினான் எனக் கூறினாலும் கூறுவார்கள். இந்த வஹ்தத்துல் உஜூது எவ்வளவு பெரிய வழிகேட்டுக்கு இட்டுச் செல்கிறது பார்த்தீர்களா? இனி, வ.உக்காரர்கள் தங்கள் கோட்பாட்டுக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பார்ப்போம். 

 - தொடரும் இன்ஷா அல்லாஹ்.

புதன், ஏப்ரல் 29, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 21

ந்த ஸுஃபிச் சன்னியாசிகள்- தர்வேஷ்கள் வழியாகத்தான் சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டுப் பெற முடியும் என்ற எண்ணத்தைப் பாமரர்களிடம் பரப்பி வைத்தார்கள். இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக்கொள்ளும் முஸ்லிம்களும் பெருகினார்கள்.

ஸூஃபி்யான ரூமியின் 'மஸ்னவீ' எனும் நூலை, ஃபார்ஸீ மொழியில் அமைந்தக் குர்ஆன் எனச் சொல்லலானார்கள். இத்தகையப் பிஸ்தாக்களும் பிஸ்தாமிகளும் நாளடைவில் இஸ்லாத்தில் பெருகலானார்கள்.

துறவு நெறியில் வாழும் இத்தகைய ஞானிகளின் வாயிலாகத்தான் மறைஞானத் தத்துவமாகிய இறையிணைவு (Mysticism) இரகசியத்தைப் பெறமுடியும் என்றனர் ஸூஃபிகள். இந்த இறையிணைவு இரகசியம் என்பது இவர்களுக்கு முன்பு யாருமே அறியாத பெரிய விஷயமன்று. கிரேக்கர்கள் கூறிய 'இயல்வன யாவும் இறையுருவே' என்ற Pantheismதான் அது. வேதாந்தத்தின் உட்பொருளாகிய 'அத்துவைதம்' என்பதும் அதுவே.

இதையெல்லாம் மாற்றாரிடமிருந்து தத்தெடுத்துக் கொண்ட ஸூஃபிகள், மாற்றாரைப் பார்த்து, "உங்களிடம் வெறும் அத்துவைதம் மட்டும்தானே இருக்கிறது! எங்களிடமோ அத்துவைதத்துடன் ஏகத்துவமும் இருக்கிறதே" என்று மார் தட்டினர். அது எப்படி அத்துவைதமும் ஏகத்துவம் எனும் துவைதமும் சேர்ந்திருக்க முடியும்? இரண்டுமே வெவ்வேறான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட எதிரெதிர் சமயக் கோட்பாடுகளாயிற்றே எனக் கேட்டால், "பாமரர்களாகிய உங்களுக்கு அப்படித்தான் தெரியும். அத்துவைதமாகிய அனேகத்-துவத்தில் ஏக-ஒரு துவத்தைப் பார்ப்பதற்கு உள்ளொளி பெற்றிருந்தால்தான் முடியும்" என்பார்கள்.

உள்ளொளியாகிய அறிவைப் பெறுவது ஸூஃபிஸத்தின் முதற்படி என்றனர். அதாவது, ஒருவன் தன்னை அறியவேண்டும் என்றும் தன்னை அறிந்தவன் தன் ரப்பை (இறைவனை) அறிந்தவனாவான் என்றும் கூறினர். இந்தத் 'தன்னை அறியும்' கடுந்தவ முயற்சியில், மனைவி, மக்கள், குடும்பம், சமுதாயம் முதலியவை குறுக்கே நிற்பதால் உலகப் பற்றை விட்டு நீங்கித் துறவறம் மேற்கொண்டு தியான நிஷ்டையில் மூழ்க வேண்டும் என்றனர்.

அப்படி மூழ்கி முக்குளித்துத் தன்னிடத்தில் தன் ரப்பைக் கண்டவன் எவனோ அவனுக்குக் காண்பவை எல்லாம் ரப்புடைய திருக்காட்சியாகவே ஆகிவிடுகின்றன என்பதும் எல்லாப் பொருளுமே அல்லாஹ்வைத் தவிர வேறல்ல என்னும் கண்ணோட்டத்தில் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதும் ஸூஃபிஸத்தின் நெறியாகும். இங்ஙனம் அறிவு, துறவு, அன்பு என்னும் மூன்றும் ஸூஃபிஸத்தின் முக்கியப் பண்புகள் எனப்பட்டன.

இப்படியாக, இயல்வன யாவும் இறையுருவே என்னும் அத்துவைதக் கோட்பாட்டைத் தன்மயமாக்கிக் கொண்ட ஸூஃபிஸம், அதற்கு ஒரு அரபுப் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது. அப்போதுதானே இஃது இஸ்லாத்தோடு தொடர்புடையது எனப் பறைசாற்ற முடியும்? ஸூஃபிகள் தம் கோட்பாட்டுக்குச் சூட்டிய அரபுப் பெயர் 'வஹ்தத்துல் உஜூது' என்பதாகும். அதாவது, 'உள்ளவை எல்லாம் ஒன்றே' என்பது இதன் பொருளாகும்.

இந்த வஹ்தத்துல் உஜூதுக் கோட்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர்கள் மேற்கோள் காட்டிய இறைவசனம்:
(முஸ்லிம்களே! பத்ருப் போரில் எதிரிகளான) அவர்களை நீங்கள் வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான். (நபியே! பகைவர் மீது மண்ணள்ளி) நீர் வீசியபோது நீர் வீசவில்லை; அல்லாஹ்வே வீசினான்" (அல்குர் ஆன் 008:017).

இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, அல்லாஹ்தான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக புவியில் அவதரித்தான் என்று கூறினார்கள் ஸூஃபிகள்.
இப்புவியில் ஊனுருவாய் நீ அஹ்மத் ஆவனனே (ஞானப் புகழ்ச்சி - பாடல் 134).
நீயே உனக்கு ஸுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய்
நீயே புவிக்குள் ரஸூலாக வந்தவன் (ஞானப் புகழ்ச்சி - பாடல் 118).
என்றெல்லாம் பீரப்பாவும் தன் பங்குக்கு இதனைப் பாடி வைத்தார்.

ஆனால், அந்த 008:017 இறைவசனம் அறிவித்திடும் உண்மையான பொருள் அதுவன்று.

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

புதன், பிப்ரவரி 18, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 20

ஸூஃபிஸம் என்ற போதை மருந்து
ஸூஃபித்துவக் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்.
ஸூஃபித்துவம் என்பது பிளாட்டோவின் கருத்துக்களுடன் இந்து சமயத்தின் வேதாந்த சித்தாந்தங்கள் கலந்தது.
மேலும் ஸூஃபித்துவம், போதை தரும் விஷம் கலந்த மதுபானம்.
இக்கருத்துக்கள் குர்ஆனின் தெளிவான சட்ட திட்டங்களுக்கு முரண்பட்டது.
என்று பாடுகிறார் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை எடுத்தோதுவதற்கு முன்னர் அரபு மண்ணில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலோர் எழுத்தறிவற்ற 'உம்மி' களாக இருந்தனர். மூதாதையர் நெறியிலையே வாழ்ந்தனர். மேலும் அரபு நாடு பாலை நிலமாக இருந்ததால் அம்மண்ணில் வாழ்ந்தவர்கள் நிரந்தரக் குடியிருப்பை உடையவர்களாக இருக்கவில்லை. அவ்வப்போது வெவ்வேறு ஊர்களுக்குப் போய்வரும் நாடோடிப் பிழைப்பை உடையவர்களாருந்தனர். வேற்று நாட்டவர் அதிகமாக அந்த மண்ணை விரும்பிப்போய் அங்கு நிரந்தரமாக வாழ்ந்ததில்லை.

இந்நிலையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் வாழ்க்கைச் சட்டங்களை அம்மக்கள்முன் எடுத்து வைத்தபோது, அவர்கள் ஆரம்பக் காலத்தில் எதிர்த்த போதும் பின்னர் இஸ்லாத்தை முழுதுமாக ஏற்றுக்கொண்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலும் - அலீ (ரலி) அவர்களைத் தவிர்த்து - மூன்று குலஃபாயே ராஷிதீன்கள் காலத்திலும் மதீனாவே இஸ்லாத்தின் தலைநகராயிருந்தது. மட்டுமின்றி ஆட்சித் தலைமை யாரிடமிருந்ததோ அவர்களே சமயத்தலைமையும் உடையவர்களாயிருந்தனர்.

அவர்களது காலத்துக்குப் பிறகு உமைய்யாக்கள் காலத்தில் இஸ்லாமிய அரசின் தலைநகரமாக டமாஸ்கஸ்(சிரியா) திகழலாயிற்று. அதைத் தொடர்ந்த அப்பாஸிய கலீஃபாக்கள் காலத்தில் மெசபடோமியா, பாக்தாத் ஆகிய நகரங்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர்களாக ஆயின. அந்தலூசியா(ஸ்பெயின்), குராஸான்(ஈரான்), பஸரா, கூஃபா(இராக்), இஸ்தன்புல்(துருக்கி) முதலிய பெரு நகரங்களிலும் இஸ்லாம் தழைத்தோங்கத் தொடங்கியது.

மக்கா-மதீனா எல்லைகளிலிருந்து பரவத்தொடங்கிய இஸ்லாம் இவ்வாறாக ஆசிய-ஆப்பிரிக்கக் கண்டங்களின் பல்வேறு நிலப்பரப்புக்களுக்கும் விரிந்து வியாபித்தது. பல்வேறு மண்ணின் மைந்தர்கள் இஸ்லாம் என்னும் கோட்டைக்குள் பிரவேசிக்கத் தொடங்கினர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவர்களிடம் நிலவியிருந்த அந்தந்த நாட்டுச் சமயங்களின் தத்துவங்களிலிருந்து - மிகச் சிலரைத் தவிர - முழுதுமாக அவர்கள் விடுபட்டார்களில்லை.

அக்கால கட்டத்தில் மேலே கண்ட எல்லாப் பெரு நகரங்களிலும் அரிஸ்டாட்டில், பிளோட்டோ போன்றவர்களின் கிரேக்கத் தத்துவக்கல்வி ஓஹோ என்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஈரான் போன்ற நிலப்பரப்புக்களில் நிலவியிருந்த ஆரிய வேதாந்தக் கலாச்சாரத்தையும் இன்னமும் அங்கங்கே காணப்பட்ட புத்த-ஜொராஸ்டிர-யூத-கிறித்துவ- கலாச்சாரங்களையும் இஸ்லாம் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

இது ஒரு புறமிருக்க, உமைய்யாக்கள் காலத்திலும் அப்பாஸிகள் காலத்திலும் ஆட்சித்தலைமையை அனுபவித்தவர்கள் சமயத் தலைமைக்குரிய அருகதையுடையவர்களாகத் திகழ்ந்தார்களில்லை. விதிவிலக்குகளாக ஒரு சிலரே இந்த இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தனர்.

பெரும்பாலான ஆட்சியாளர்கள், ஆட்சித் தலைமையை மட்டும் ஏற்றுக் கொண்டு சமயத் தலைமையை முல்லாக்களிடம் ஒப்படைத்து விட்டனர். அதனால் இஸ்லாமியச் சமயத் தொடர்பிலிருந்து விடுபட்ட அந்த ஆட்சியாளர்கள் மனம் போன போக்கில் வாழத்தலைப்பட்டனர். கேளிக்கை, களியாட்டங்கள், சிற்றின்ப காம உணர்வைத் தூண்டும் கவிதைகள் முதலியவற்றில் அவர்கள் இலயிக்கத் தொடங்கினர். சில ஆட்சியாளர்கள், தாங்களே காமக் களியாட்டக் கவிதைகள் புனைபவர்களாகவும் திகழ்ந்தனர்.

இந்நிலையில், ஆட்சியாளர்களின் ஒழுக்கச் சீர்கேட்டையும் மக்களின் நிலைகுலைந்த வாழ்கையையும் கண்டு நொந்து போன முல்லாக்கள் சிலர் இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தைத் தேடலானார்கள்.

கிரேக்க - ரோமானிய-ஆரிய-யூத-கிறித்தவ-கலாச்சாரங்களும் தத்துவங்களும் வேரோடிப் போயிருந்த பெருநகரங்களின் நாகரிகம் ஒரு புறம்; சமய ஒழுக்கங்களைப் பற்றிக் கவலைப்படாத இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை மறுபுறம்; இவற்றைச் சீர்திருத்த குர்ஆன் ஹதீஸை மட்டுமே முல்லாக்கள் கைக்கொண்டிருந்திருக்கலாம்.

மாறாக, இதற்கு அப்பாலும் சென்று கிரேக்கத் தத்துவங்களிலும் ஆரிய வேதாந்தங்கள் போன்றவற்றிலும் அடைக்கலம் தேடினார்கள். பிறமதச் சித்தாந்தங்கள் கூறும் கருத்துகள் குர்ஆன், ஹதீஸிலும் கூறப்பட்டிருப்பதாகச் சப்பைக்கட்டு கட்டினார்கள்.

ஒரு சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தங்கள் கருத்துக்கிசைய அவர்கள் வளைத்துக் கொண்டார்கள். இதன் விளைவாகப் பிறந்த ஒரு புதிய வழிகேடுதான் ஸுஃபிஸம் ஆகும். அதாவது, கிரேக்கர்களின் கவைக்குவதவாத தத்துவங்களும் ஆரியர்களின் வெற்று வேதாந்தமும் திருச்சபை மடாலயங்கள் அளித்த நன்கொடைகளும் கலந்த ஒரு கலப்படச் சரக்காக-மிக்ஸராக- அமர்க்களமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பழைய போதை மருந்தை, 'ஸுஃபிஸம்' என்னும் புதிய பாட்டிலில் இட்டு நிரப்பினார்கள். இந்த பாட்டிலின் மீது 'இஸ்லாமிய ஞானப்பாட்டை' என்னும் போலி லேபில் மிகச் சாதுரியமாக ஒட்டப்பட்டது.

ஸுஃபிஸத்தின் தேற்றத்துக்கு மற்றொரு காரணமும் இருத்தல் கூடும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் ஆட்சித் தலைமையும் சமயத் தலைமையும் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றலாருக்கும் மட்டுமே கிடைத்தல் வேண்டும் எனக் கூறிக் கொண்டு உதயமானது ஒரு கூட்டம். இக்கூட்டத்தினர் " ஷீஅத்து அலீ" என்னும் அலீயின் கட்சிக்காக உடல் பொருள் ஆவியைக் கொடுக்கச் சித்தமாயினர். இன்றும் ஷியாக்கள் நிறைந்து வாழும் நாடாகிய ஈரானிலிருந்து தான் ஸூஃபிஸம் ஊற்றெடுத்தது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

ஆட்சித் தலைமை உமையாக்களின் கைகளுக்குப் போனதும் சமையத் தலைமையையாவது தாங்களே தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஷியாக்கள் சூழ்ச்சி செய்தனர். இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அலீ (ரலி) அவர்கள் பெயரால் பல புனைவுகளை இட்டுகட்டி, அவர்களுக்கு ஒப்புயர்வற்ற சிறப்பிடத்தை வழங்கத் தலைப்பட்டனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பாத்தின்' ஆன -ரகசியமான அகமிய- விஷயங்களை அலீ (ரலி) அவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுத்தார்களாம்; அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வெளிரங்கமான இஸ்லாத்தைத்தான் அறிந்திருந்தார்களாம்; அலீ (ரலி) அவர்கள்தான் உள்ரங்கமான இஸ்லாத்துக்குச் சொந்தக்காரர்களாம்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இஸ்லாமியப் பட்டணத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமானால் அலீ (ரலி) அவர்களுடைய ஞானப்பாட்டையின் வழியாகத்தான் நுழைய முடியுமாம். இப்படியாகச் சொல்லிக் கொண்ட ஷியாக்கள் ஈரானிலிருந்து ஒரு ஞானப்பாட்டைத் தீட்டினார்கள். ஏற்கனவே ஸுஃபிஸச் 'சரக்கை'ப் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த ஞானப்பாட்டையில் உருளுவது பேரானந்தத்தைக் கொடுத்தது.

இந்த ஞான போதையைப் பெறுவதற்குக் கண்டிப்பாக 'பீர்' இருக்க வேண்டும். 'பீர்' என்னும் ஃபார்ஸிச் சொல்லுக்குக் குருநாதர் என்பது பொருளாகும். இவர்களை 'தர்வேஷ்' என்றும் அழைத்தனர். இந்த பீர் அல்லது தர்வேஷ் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு புனிதம் சேர்ந்தது, அது 'தக்யா' எனப்பட்டது. இந்த ஃபார்ஸிச் சொல் தமிழில் தைக்கா என மருவியது. ' தக்யா'வில் இருந்த 'தர்வேஷ்' தைக்கா சாயிபு எனப்பட்டார். இந்த தர்வேஷ் செத்துப்போன பிறகு அந்தத் தைக்கா 'தர்கா' ஆனது. இவ்வாறாக, ஸூஃபிஸம் தொடர்புடைய சொற்கள் எல்லாவற்றுலும் ஃபார்ஸி மொழியின் ஆதிக்கம்தான்.

செத்துப் போன ஸூஃபியின் தைக்காவில் கல்லைறகளைக் கட்டி, கப்ரு பூஜைகள் நடத்தும் தர்காக் கலாச்சாரத்தை இஸ்லாமிய உலகுக்கு அளித்த பெருமையும் ஸூஃபிஸத்தையே சேரும்.

பிறமதச் சித்தாந்தங்களின் தாக்கம், ஆட்சியாளர்களின் அலங்கோலம் ஆகியவை இந்த ஸூஃபிகளை வேறொரு பாதைக்கும் இட்டுச் சென்றன. அது துறவுப் பாதையாகும். ஸூஃபிஸம் வலியுறுத்தும் துறவு வாழ்க்கைக்கு, உண்மையான இஸ்லாத்தில் இடமே இல்லை. மோட்சம் பெறுவதற்கு சம்சாரத்திலிருந்து விடுபட்டு சன்னியாச வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தக் கருத்தாகும். இப்படி சன்னியாசி ஆனவர்களை, சம்சாரிகள் கடவுளுடைய இடத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். சன்னியாசிகளுடைய வாக்கை, வேதவாக்காகக் கருதி அதற்குக் கட்டுப் பட்டார்கள் அதைப் பார்த்த நம்முடைய ஆசாமிகளும் இஸ்லாத்தில் இதுபோல ஒரு சன்னியாச நெறியை ஸுஃபிஸத்தின் மூலம் அரங்கேற்றினார்கள்.

இந்த ஸுஃபிச் சன்னியாசிகள்- தர்வேஷ்கள் வழியாகத்தான் சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டுப் பெற முடியும் என்ற எண்ணத்தைப் பாமரர்களிடம் பரப்பி வைத்தார்கள். இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக் கொள்ளும் முஸ்லிம்களும் பெருகினார்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்

செவ்வாய், ஜூலை 22, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19

பூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து, "வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப் போடுங்கள்" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்களாம்:
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).
திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.

அல்லாஹ்வின் கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்?

சுவனத்திலுள்ள 'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும் ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி, திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).
அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா?

வானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவா? அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும் ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச் சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).

உமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, மார்ச் 21, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 18

இஃதிவ்வாறிருக்க, மறுபுறம் பாத்திமா நாயகி அவர்கள் தம் தோழிப் பெண்களால் சோடிக்கப் பட்டு மணமுரசு ஒலிக்க, மணப் பந்தலுக்குக் கொண்டு வரப் பட்டார்களாம்.

"மணக்கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார்" (பாடல் 179) எனப் போகிறது புராணக்கதை.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். உமறுப் புலவர் 'ஒலி'யுல்லாஹ் அவர்களுடைய சீறாப் புராணத்தில் மலிந்து கிடக்கும் இத்தகைய அசிங்கங்களை எடுத்தெழுதும்போது வெட்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை; வேதனையை விலக்க முடியவில்லை. சீறாப் புராணத்தை ஒரு வேதநூல் போல இன்றுவரைப் போற்றிக் கொண்டாடும் முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து நேர்வழி பெற வேண்டும் என்ற கடமையுணர்வு, வெட்கத்தையும் வேதனையையும் மிகைத்து நிற்பதால் அசிங்கங்களையும் எடுத்தெழுத வேண்டியது கட்டாயமாகி விட்டது.

குர்ஆன் ஹதீஸின் உண்மையான தாத்பரியங்கள் சென்று எட்டாத, மிகவும் பின் தங்கிய முஸ்லிம் ஜமாஅத்தாருடைய சில ஊர்களில் மரணத் தறுவாயில் கிடப்பவருடைய தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னமும் இந்த சீறாப் புராணம் பாடப் படுகின்றது.

'நேர்வழி நின்று நெறியாட்சி' புரிந்த சிறப்புடையவர்களுள் ஒருவராகிய அலீ(ரலி) அவர்களுக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் நடந்த திருமணத்தை இவ்வாறாகவெல்லாம் கொச்சையாகவும் பச்சையாகவும் வருணித்துப் போகிறார் உமறுப் புலவர். இவருடைய கனவில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஹாளிர்' ஆகி இவரை ஆசீர்வதித்தார்களாம். இந்தக் கர்ண பரம்பரைக் கதையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இந்த 'ஒலி'யுல்லாஹ்வுக்கு உரூஸ் எடுத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

படிப்பவர்களுடைய உள்ளங்களை மாசுபடுத்தக் கூடிய அழுக்குக் கவிதைகளை வைத்துக் கொண்டு இதுதான் நமது ஆத்மக்கறை அகற்றும் சவுக்காரம் எனத் தம்பட்டமடித்துக் கொள்கிறவர்களும் உள்ளனர்.

சல்மான் ரஷ்டியின் நூலை எந்த அளவுக்கு வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு வெறுக்கப் படத்தக்கக் கவிதைகள் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழனியிலும் முற்றிய களைகளாய்ப் பெரிதும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பொருத்தவரை நம்மில் பலர் இலக்கியக் குருடுகளாகவே தட்டழிந்து திரிகின்றனர். ஆக, இத்தகைய விரசமான, மார்க்க முரணான 'சாத்தானின் வரிகள்' சுட்டிக் கட்டப் படுவதன் நோக்கத்தையும் தேவையும் நாம் மறந்து விடலாகாது.

மணமுரசு எங்கணும் முழங்க, அழைத்து வரப் பட்ட பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் இருத்தினராம். "வந்த பொன்மயிலை ... அலியிடத்து இருத்தினாரால்" என அமைகிறது பாடல் (180). மணமகன் அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் மணமகள் பாத்திமா (ரலி) அவர்களை மணப் பந்தலுக்குக் கொண்டு வந்து உட்கார வைக்கிறார் உமருப் புலவர். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் பாடும் இஸ்லாமியத் திருமணத்தின் இலட்சணம் இதுதான் போலும்.

இரு சாட்சிகளின் முன்னிலையில் மணமகளின் தந்தை மணமகனுக்குச் செய்து வைக்கும் வாழ்க்கை ஒப்பந்தம்தான் 'நிக்காஹ்' எனும் இஸ்லாமியத் திருமணமாகும். 220 பாடல்களில் அலீ-பாத்திமா (ரலி) திருமண நிகழ்ச்சிகளை நீட்டி, முழக்கிப் பாடும் உமறுப் புலவருக்கு 'இஸ்லாமியத் திருமணம்' குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே, பிறமதச் சடங்குகளைப் பின்பற்றி மணமேடையில் மாப்பிள்ளையுடன் பெண்ணையும் சேர்த்து வைத்துப் பார்ப்பதில் புலவர் ஆனந்தம் கொள்கிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையான சுன்னத்தின்படி நிக்காஹ் நடைபெறுகிறதோ இல்லையோ; அதுபற்றிக் கவலையில்லை. ஆனால் ஃபாத்திஹா ஓதப் பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் பலர். அதே போக்கை உமறுவிடமும் காண முடிகிறது. பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அடுத்தாற்போல் இருக்கச் செய்து, உற்றார் உறவினர் எல்லோருமாகச் சூழ்ந்திருந்து வாழ்த்தி ஃபாத்திஹா ஓதினார்கள் என்பதை மறவாமல் பாடிச் செல்கிறார் புலவர்:
மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவரெவருஞ் சூழ்ந்து பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திஹா வோதுங் காலை (பாடல் 181).
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.