ஸுஃபிஸம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸுஃபிஸம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 16, 2025

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 43

 

‘மெளன குரு வணக்கம்’, ’சின்மயானந்த குரு’ என்னும் தலைப்புகளின் கீழ் தாயுமானவர் பாடியுள்ள பல்வேறு பாடல்களில்,

 தட்சிணா மூர்த்தியே. சின்மயானந்த குருவே,

எனவும்

சின்மயானந்த சுகவெள்ளம் படிந்து நின்

திருவருள் பூர்த்தியான …………

மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில்

வரு மெளன குருவே

எனவும் தன்னுடைய மெளன குருவைக் கூப்பிடுகின்றார், இந்தக் கூப்பாட்டின் எதிரொலிதான் குணங்குடியில் கேட்கின்றது.

தாயுமானவர், தன்னுடைய குருவான மெளன சுவாமிகளையும் அவருக்கும் குருவான திருமூலரையும் சேர்த்து, ‘சித்தர் கணம்’ எனும் தலைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதிலொரு பாடல் :

திக்கொடு திகந்தமும் மனவேகமென்னவே

சென்றோடியாடி வருவீர்,

எனத் தொடங்கும் அப்பாடல்

…… கையில் உழுந்து அமிழும் ஆசனமாய் ஓரேழு

கடலையும் பருக வல்லீர்

இந்த்ரனுலகும் அயிராவதமுமே கைக்கெளிய

பந்தாயெடுத்து விளையாடுவீர்

ககன வட்டத்தையெல்லாம் கடுகிடையிருத்தியே

அஷ்டகுலவெற்பையும் காட்டுவீர்

மேலும் மேலும் மிக்க சக்திகளெல்லாம் வல்ல நீர் அடிமை

முன் விளங்கலருசித்தியிலரோ

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச்

சித்தர்கணமே

என முடிகிறது.

இதன் தொடக்கவரி குணங்குடியாரின், ‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து’ எனும் பாடலை நினைவுபடுத்தும் அதேவேளையில் ஏனைய வரிகள் மற்றொரு பாடலை நினைவூட்டுகின்றன. அப்பாடலுக்கு வரும்முன் இந்தத் தாயுமானவருடைய பாடலின் பொருளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

தொடரும்.

வியாழன், அக்டோபர் 13, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-40

கி.பி 1705ஆம் ஆண்டிலிருந்து 1742ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்த தாயுமானவர், ஒரு இந்துமத ஸூஃபிக் கவிஞர். குணங்குடி மஸ்தான் என்ற இஸ்லாமியச் சித்தரோ கி.பி.1788ஆம் ஆண்டில் தொண்டியில் பிறந்தவர். தாயுமானவர் இறந்து, 47 ஆண்டுகளுக்குப் பிறகு குணங்குடி மஸ்தான் பிறக்கின்றார்.

தாயுமானவர் ஒரு ‘முஷ்ரிக்’ கவிஞர். இதில் யாருக்கும் சந்தேகமேயில்லை. இந்த முஷ்ரிக்கின் வழித்தடத்தில் அப்படியே கால் பதித்துக் கவி தொடுக்கின்றார் குணங்குடியார்.

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு’ நூலின் முகப்புப் பக்கத்தில், ஶ்ரீ தாயுமான சுவாமிகளின்’ உருவப் படமொன்று இடம்பெற்றிருக்கக் காணலாம்.


அதுபோலக் ‘குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல் திரட்டி’லும் குணங்குடி மஸ்தானின் உருவப் படமொன்று தவறாமல் தரப்பட்டிருக்கும்.

இரண்டு உருவப் படங்களிலும் எப்படி ஒரு கோவணம் மட்டுமே உடையாக இருக்கின்றதோ இதுபோல இரண்டு புலவர்களின் பாடல்களிலும் ஒரே அத்துவைதக் கோவணமே இழையோடிக் கிடப்பதைக் காணலாம்.

எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை தன்னில் வரித்துக்கொண்டு, அவர்களைப் போன்று செயல்படுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்” என்பது நபிமொழி (அபூதாவூத் 4031).

பிறரின் ஆச்சார-அநுஷ்டானங்களைப் பின்பற்றி, அதுபோன்று நடப்பவன் நம்மைச் சார்ந்தவனல்லன்” என்பதும் நபிமொழி (திர்மிதீ).

மேற்காணும் நபிமொழிகளைப் படித்தறிந்துள்ள நாம், தாயுமானவரின் பிரதிபலிப்பைக் குணங்குடியாரிடம் பார்க்கின்றபோது எத்தகைய முடிவுக்கு வரவேண்டியதிருக்கும்?

அப்படி என்னதான் தாயுமானவரின் பிரதிபலிப்புக் குணங்குடியாரிடம் காணப்படுகிறது என வினவலாம். இரண்டு பேருடைய பாடல் போக்குகள், கருத்துப் பரிமாற்றங்கள், சொல்லடுக்குகள் ஆகியவை மட்டுமல்லாது வாழ்க்கை முறைகளிலும் தாயுமானவரை அப்படியே பின்பற்றி வாழ்கின்றார் குணங்குடியார்.

- தொடரும்

திங்கள், ஜனவரி 24, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 39

குணங்குடி மஸ்தான், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைத் தன்னுடைய ஆன்மீக குருவாகவும் அதற்கும் மேலாக, அல்லாஹ்வுக்கே இணையாகவும் பல பாடல்களில் பாடிச் செல்கின்றார். அத்துவைதக் கவிதைகளைக் குஞ்சு பொரிப்பதற்காக அவர் தமிழ்நாட்டுத் தாயுமானவரிடமிருந்து ஏகப்பட்ட முட்டைகளை எடுத்துக் கொள்கின்றார். தாயுமானவரின் முட்டைகளை மட்டுமல்ல, அவரின் கவிதைப் பறவைகளைக்கூட அப்படியே வளைத்துப் பிடித்து, இலேசாகச் சாயம் தடவி தன்னுடையதாகவே காட்டிக் கொள்கின்றார்.

அப்படிப்பட்ட இடங்களில் மாற்றாருக்குரிய கடவுள் பெயர்கள், அவர்களுடைய பக்திநெறிக் குறியீடுகள் ஆகியவைகூட அப்படியே குணங்குடியாருடைய கவிதை(?)களிலும் இடம்பெறுகின்றன. நந்தீஸ்வரன், மனோன்மணி, வாலை, அம்பலம், சிவம், தட்சிணாமூர்த்தி, மூர்த்தி, திருநடனம், திருக்கூத்து, சிவயோகம், சின்மயம், சிவராஜயோகம், சச்சிதானந்தம், பஞ்சாட்சரம், சரியை, கிரியை, யோகம், ஞானம், பசுபதி, பாசம் போன்ற சொல்லாட்சிகளுக்குக் குணங்குடிப் பாடல்களில் குறைவே இருக்காது.

'இச்சொற்களெல்லாம் உள்ளர்த்தம் பேசும் அகமியக் கருத்துடையவை. இவை, சாமானியருக்குப் புரியாது. இவைகளுக்குரிய இஸ்லாமிய பரிபாஷையே வேறாகும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மீக குருவாகிய ஷெய்க்கைக் கைப்பிடித்தால்தான் இயலும்' என வாய்க்கு வந்தவாறு இஸ்லாத்தோடு முடிச்சுப் போட்டு இவற்றை சிம்பாலிசப்படுத்துவர் சிலர். குர்ஆன் - ஹதீஸைப் புறக்கணித்துவிட்டு, பிறமதச் சித்தாந்தங்களுடன் கொண்டுள்ள கள்ளத் தொடர்பை நியாயப்படுத்துவதற்காக ஸூஃபித் தோன்றல்கள் கட்டிவிடும் கதைகள்தாம் இவை.

இத்தகைய ஒரு கள்ளத் தொடர்பைத் தாயுமானவர் மூலமாக நிலைநாட்டிக் கொண்டவர்தான் குணங்குடியார். யார் இந்தத் தாயுமானவர்?

- தொடரும்

வியாழன், ஜூன் 10, 2021

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 38

 இஸ்லாமியத் தாயுமானவர்

புராண இதிகாசக் கதையளப்புகள் ஒவ்வொன்றுக்கும் எப்படி எப்படியெல்லாமோ ஸிம்பாலிக்கான உள்ளர்த்தங்களை அவரரும் அவரவர் மனம்போன போக்கில் கற்பித்துச் சொல்வார்கள். அதுபோலத்தான் குணங்குடி மஸ்தான் போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் பிதற்றல் கவிதைகளுக்கும் சில 'மார்க்க மேதைகள்' என்பவர்கள் உள்ளர்த்தம் கற்பிப்பார்கள். அவை பாமர வாசகனுக்குப் பிடிபடாத 'முதஷாபிஹாத்'தான சமாச்சாரங்கள் எனச் சரடு விடுவார்கள்.

வேசி என்று பேர் படைத்து வெளியில்
                           புறப்பட்டவளை
தாசி என்று சொல்லத் தகாதோ மனோன்
                           மணியே

என்று அல்லாஹ்வை விளித்துக் "குணங்குடி மஸ்தான் பாடுவதெல்லாம் அகமிய விஷயங்களாகும். இதில் குறுக்குக் கேள்வி கேட்பவன் குதர்க்கவாதி" எனக் கூறித் திரிவர் ஸூஃபிஸ விசிறிகள்.

இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான இந்த ஸூஃபிசச் சரக்கு இங்குத் தமிழ்நாட்டுக்கு இறக்குமதியான போது, கூடுதலாகப் பல்வேறு கலப்படங்களுக்கு உள்ளானதை அப்பட்டமாக அறிந்துகொள்ள முடிகின்றது. குணங்குடி மஸ்தான் எனும் இந்த ஸூஃபிக் கவிஞரை இந்தக் கலப்படம் எங்ஙனம் பாதித்துள்ளது என்பதைச் சற்று அலசிப் பார்ப்போம் ...


ஞாயிறு, மே 10, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 36

உன்னை அலங்கரித்து, உனக்குச் சுவையானவற்றை உண்ணத் தந்து, இப்படியாக உனக்குப் பணிவிடை செய்ய நான் தயாராக இருக்கும்போது நீ ஏன் என்னை ஏறெடுத்தும் பாராமல் இருக்கின்றாய் மனோன்மணியே?

உனக்கு என் மீது ஆசை இல்லையோ?

                        எனக் கேட்கின்றான் கவிஞன்.

உன் மீதுள் ஆசித்து உயிர் பொருள் உன் தாளுக்கு அளிப்ப
   என் மீதில் ஆசை உனக்கில்லை ஏன் மனோன்மணியே

என அமைகிறது பாடல். இது மட்டுமன்று, இன்னும் சொல்கின்றான் கவிஞன்.

என்னுடைய காசையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு, நீ என் ஒருவனை மட்டுமே அணைத்துக்கொள்ளாமல், கண்டவனையெல்லாம் கட்டி அணைத்துக்கொள்கின்றாயே? இப்படி நீ வேசியாயிருப்பாய் என்பது தெரிந்திருந்தால் நான் காசு பணத்தை உன்னிடம் காட்டாமலே இருந்திருப்பேன் என்கின்றான் புலவன்.

வேசைக் குணத்தை விரும்புவாய் என்றறிந்தால்
   காசைப் பணத்தை நான் காட்டேன் மனோன்மணியே

இப்படி வேசி என்ற பெயரைப் பெற்று, வீட்டிலிருந்து வெளியேறி ஊர் சுற்றித் திரிகின்ற உன்னை 'தாசி' என்று சொன்னாலும் தகுமன்றோ என மகத்துவம் மிக்க வல்ல அல்லாஹ்வைப் பார்த்து பிறமதச் சித்தாந்தத்திற்குச் சோரம் போன இந்தக் கழிசடைக் கவிஞன் குறிப்பிடுகின்றான்.

இது மட்டுமல்ல, இறைவனாகிய இந்தத் தாசியைக் கூட்டிக் கொடுப்பதாகக்கூட (லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்) கற்பனை செய்து, கற்பனையில் இழிந்த நிலைக்கு இறங்கிச் செல்கின்றான் புலவன். வேசியாக, தாசியாக நீ இருக்கும்போது தடி போலிருக்கும் நான் உன்னை எப்படி ஜாதிகெட்டக் குணங்குடியாருக்குக் கூட்டிக் கொடுப்பேன்? எனக் கேட்கின்றான் கவிஞன்.

வேசி என்று பேர் படைத்து வெளியில் புறப்பட்டவளைத்
   தாசி என்று சொல்லத் தகாதோ மனோன்மணியே

தடி போலிருந்து உனை யான் சாதிகெட்ட பாழுங் குணங்
   குடியார்க்கு எப்படிக் கூட்டிக் கொடுப்பேன் மனோன்மணியே

என இவ்வளவும் சொல்லி, இகழ்ந்து பாடி, அல்லாஹ்வாகிய காதலியோடு ஊடல் கொள்கின்றான் இப்புலவன். இனி, ஊடல் நீங்கிக் கூடல் நிலைக்கு வந்து புலவன் புலம்புபவைப் பின்னால் அணிவகுக்கின்றன.

இங்ஙனமாக ஏக அல்லாஹ்வுடைய மகோன்னதத்துக்கு மாசு கற்பிக்கின்ற வகையில் மாப்பிள்ளை-பெண்டாட்டி உறவு பேசி இறைவனைப் பெண்டாள நினைக்கின்றான் இச்சண்டாளக் கவிஞன்.

இந்தப் புலவனெல்லாம் மாபெரும் இறைநேசனாம். மெஞ்ஞான நாதாவாம்; ஸூஃபித் திலகமாம். இப்புலவனுடைய பாடல் நூலின் பழைய பதிப்பு ஒன்றில் இப்புலவனின் பெயருக்கு முன்னால் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகளைப் பார்ப்போம் …

புதன், மே 06, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 35

‘மனோன்மணிக் கண்ணி’யில் இறைவனை மனோன்மணி என்னும் பெண்ணாக உருவகித்துக்கொண்டு, இவருடைய விரக தாபங்களை எல்லாம் விவரித்துப் பாடுகின்றார். அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்பதற்கு முன்னால், மனோன்மணிக் கண்ணியின் கடைசிப் பாடலாகக் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளதை முதலில் பார்த்தாக வேண்டும்.

அப்பாடல்:
உமையாள் பாதம் முன் நிற்க
ஆதியந்தம் கடந்த உமையாள்தன் பாதம்
   அகண்ட பரி பூரணமாம் ஐயர் பாதம்
சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம்
   தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றிச்செய்து
ஆதியந்தங் கடந்த நந்திபாதம் என்றும்
   வாலை மனோன் மணியம்மை பாதமென்றும்
ஓதியந்தங் கடந்தண்ட மிரண்ட தாக
   ஒன்றுமறியா வறிஞன் உரை செய்தானே

உமையாள் பாதத்தையும் ஐயராகிய சிவபெருமான் பாதத்தையும் கணபதியின் பாதத்தையும் கைகுவித்து வணங்கித் துதி செய்துவிட்டு, நந்திப் பெருமான் பாதத்தையும் இறுதியாக மனோன்மணியம்மை பாதத்தையும் ஓதி உரை செய்தாராம் இந்தப் புலவர்.

“இல்லை இறைவன் அல்லாஹ்வைத் தவிர” என ஈமான் கொண்டவன் எவனும் இவ்வாறு பாடத் துணிய மாட்டானன்றோ? உமையாள் பாதத்துக்குத்தான் இப்புலவன் முன்னுரிமை கொடுக்கின்றான். ‘உமையாள் பாதம் முன் நிற்க’ என்னும் பாடல் தலைப்பு இதைத்தானே காட்டுகிறது? உமையாளை அடுத்து, சிவபெருமானை கும்பிட்டுவிட்டு, அதையடுத்து கணபதி கடவுளுக்குத் தொழுது இறைஞ்சிக் கரம் குவிக்கின்றார். பிறகுதான் இவருடைய மனோன்மணி என்னும் காதலியாகிய அல்லாஹ்வைப் பற்றிப் பாட வருகின்றார்.

இதிலிருந்து குணங்குடி மஸ்தானின் கடவுள் கொள்கையைக் குன்றின் மேலிட்ட விளக்கு போல நாம் சிரமமின்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது.

பெண்ணாக, ஆணாக, குழந்தையாக என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு இறைவனைப் பிற மதத்தார் எப்படியெல்லாம் வழிபட்டார்களோ அதுபோலக் குணங்குடி மஸ்தானும் வழிபடுகின்றார். இறைவனைப் பெண்ணாகக் கருதி அவர் பாடும்போது அவர் அபத்தத்தின் எல்லைகே சென்றுவிடுகின்றார். அதையும் பார்ப்போம்:

கண்ணே என் கண்மணியே கண்குளிர்ந்தக்கட்டழகுப்
     பெண்ணே அமிர்தப்பிழம்பே மனோன்மணியே

எனக் கூப்பிடுகின்றார். இறைவனாகிய பெண்ணோடு மணவறையில் கைகோர்த்துக்கொண்டு அப்பெண்ணின் கண்களில் மைதீட்டி, மார்பில் கைவைத்துக் காமப்பாலைக் குடிப்பதாகவெல்லாம் கனவு காண்கிறாராம் இந்தக் குணங்குடி மஸ்தான்.

மலர்ந்திருக்கும் பொற்கமல மணவறையில் இருவரும் கை
   கலந்திருக்கவும் கனவு கண்டேன் மனோன்மணியே
மைதீட்டவும் கயற்கண் மலரின் மலர் முலையில்
   கைப்பூட்டவும் கனவு கண்டேன் மனோன்மணியே
வாமப் பாலைப் பருக மறுவாலிபம் வருக
   காமப்பாலுண்ணக் கனவு கண்டேன் மனோன்மணியே

இவ்வாறு கனவு கண்ட புலவர், அடுத்து இறைவனிடம் – அதாவது அல்லாஹ்வாகிய காதலியிடம் என்ன கூறுகின்றார் பாருங்கள்:

கூந்தல் இலங்கக் குரும்பைத் தனம் குலுங்க
   நேர்ந்து நடம் புரிந்து நிற்பாய் மனோன்மணியே

மலர்மாலைகள் கிடந்து மார்பில் பின்னலாடும் உன்றன்
   அலர் முலையும் யான் என்று அணைவேன் மனோன்மணியே

பிடியாரைப் போலும் பிடிப்பேன் முலையைக் குணங்
   குடியாரைப் போலும் குடிப்பேன் மனோன்மணியே

காதம்பரிமளிக்கும் கஸ்தூரிப் பொட்டிடுவேன்
   போதும் சவ்வாதுமணிந்து புணர்வேன் மனோன்மணியே

தலைக்கு மினுக்கெண்ணெய் தடவிச் சடை பின்னி வைப்பேன்
   முலைக்கு வன்னக்கச்சு இறுக்கி முடிப்பேன் மனோன்மணியே

இப்படிப் பலவாறாகத் தன் காதலிக்கு அலங்காரம் செய்து அவளைப் புணர விரும்பிய புலவன், பின்னர் அக்காதலிக்கு தீப ஆராத்தி எடுத்து அவளுக்கு உணவு படைக்கின்றானாம்.

கற்பூர மேற்றிக் கரத்தீப ஆலாத்தி
   எப்பாரும் போற்ற எடுப்பேன் மனோன்மணியே

முக்காலமும் பூசை முடிப்பேன் முக்காலமல்லால்
   எக்காலமும் பொங்கலிடுவேன் மனோன்மணியே

சாதம் தளிகை சமைத்துச் சாம்பிராணித் தூபமிட்டுப்
   பாதம் தொழுதிட்டுப் படைப்பேன் மனோன்மணியே

முட்டை பொரிப்பேன் முழுக் கோழியும் பொரிப்பேன்
   தட்டைப் பீங்கானில் தருவேன் மனோன்மணியே

இவ்வாறாக எல்லாம் தன் காதலிக்குப் பணிவிடை செய்வாராம்.

இந்தப் பாடல்களுக்கு உள்ளர்த்தம் பேசி இதைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்ற ஸூஃபிச் சாம்பிராணிகள் அனேகர் உள்ளனர். பிற மதத்தவர் சிவலிங்கத்துக்குக்கூட சிம்பாலிஸம் சொல்வார்கள். அதுபோல சிம்பாலிஸம் பேசியே சீரழிந்து போனவர்கள் இந்த ஸூஃபிஸவாதிகள். இனி, மனோன்மணி கண்ணியைத் தொடருவோம்.

புதன், ஏப்ரல் 29, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 34

சந்நியாசியின் சல்லாபம்

இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றே ஸூஃபிஸமாகும். இந்த ஸூஃபிஸ வியாதியை முஸ்லிம்களிடமிருந்து முற்றாகக் குணப்படுத்தினால் தான் இஸ்லாம் நலம் பெறும்.

ஸூஃபிஸத்தை ஏன் வியாதி என்கின்றோம்?

கிரேக்க கீழை நாட்டுச் சித்தாந்தங்களைப் பார்த்து இஸ்லாத்துக்குள்ளும் அத்துவைதக் கோட்பாட்டைத் திணித்தவர்கள் இந்த ஸூஃபிஸவாதிகளே. இறைவனோடு இரண்டறக் கலப்பதில் இவர்களுக்கு அப்படி என்னவோ ஓர் அலாதி இன்பம்! அல்லாஹ்வோடு எந்த அடியானும் இரண்டறக் கலந்துவிட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

அல்லாஹ், ஒரே இறைவனே! அவன், ‘அஹது’ ஆகவே இருக்கின்றான். இரண்டு என்கிற பேச்சுக்கே அங்கு இடம் கிடையாது. அப்படியிருக்க, பலவீனமான அடியானும் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வும் கலந்து, இரண்டு பேரும் வெவ்வேறு என்ற தன்மையிலிருந்து நீங்கி, இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து, இரண்டற ஆகிவிடுகின்றார்களாம். இங்ஙனம் இரண்டறக் கலக்கும் தன்மையே அத்துவைதம் ஆகும்.

இப்படியிருக்க, அடியானும் ஆண்டவனும் இரண்டறக் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாகி நிற்கின்ற நிலைதான் பேரின்ப நிலையாம். இப்பேரின்ப நிலையைப் பாடுவதற்குச் சில வழிகெட்ட கவிஞர்கள் சிற்றின்ப உருவகங்களை அமைத்துக் கவிதை இயற்றி இருக்கின்றார்கள்.

சைவ வைணவத் தமிழிலக்கியங்களில் இறைவனைக் காதலியாகவும் தன்னைக் காதலனாகவும் உருவகித்துக்கொண்டு புலவர்கள் பாடுகின்ற இத்தகு இயல்பினை சகஜமாகக் காணலாம். இதை பக்தி இலக்கியத்தின் உன்னத மரபு என அவர்கள் போற்றிக் கொண்டாடுவர். ஆனால் இஸ்லாத்தில் அப்படியெல்லாம் உருவகிப்பதற்கோ பாடுவதற்கோ கிஞ்சிற்றும் அனுமதி இல்லை. அவர்களுக்கு வேண்டுமானால் அது உன்னத மரபாயிருக்கலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை அது கண்டிக்க வேண்டிய கழிசடை மரபேயாகும்.

அல்லாஹ்தான் எஜமானன். மனிதப் படைப்புகள் அனைத்தும் அவனுடைய அடிமைகளே. ஏன்? நபி (ஸல்) அவர்களைக்கூட, ‘அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ’ (முஹம்மது – ஸல் அவனுடைய அடிமை) என்றுதானே உறுதிப் பிரமாணம் கூறுகின்றோம்?

நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்வை ஆண்டவன் என்றும் தன்னை அடிமை என்றும்தானே கூறினார்கள்? அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எந்நிலையிலும் இரண்டறக் கலந்து ஒன்றாக ஆகிவிடவில்லையே! இப்படியிருக்க இந்த ஸூஃபிஸவாதிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகின்றார்கள் என்று கருதுவது இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்றாகும்.

இனி, குணங்குடியாருக்கு வருவோம். குணங்குடியார் அல்லாஹ்வோடு இரண்டறக் கலந்து பேரின்ப நிலை பெறுவதற்காக வழிகெட்ட கவிஞர்களைப் பின்பற்றி சிற்றின்ப உருவகம் அமைத்துப் பல பாடல் தொகுப்புகளைப் பாடியுள்ளார்.

“அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக யாரும் / எதுவும் இல்லை”

என இறைமறை இயம்புகிறது. ஆனால் குணங்குடி மஸ்தானோ இறைவனை ஒரு பெண்ணுக்குச் சமமாக வைத்து உருவகம் செய்கின்றார். இது அவர் செய்த முதல் தவறென்றால், இறைவாகிய அப்பெண்ணை இவருடைய காதலியாகக் கற்பனை செய்கின்றாரே, அது இரண்டாவது பாவமாகும். இனி, அக்காதலியாகிய அல்லாஹ்வோடு இக்காதலனாகிய கவிஞன் கூடுவதையும் ஊடுவதையும் சல்லாபிப்பதையும் மனம் போன போக்கில் பாடிச் செல்வது இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகவே நமக்குக் காட்சியளிக்கிறது.

இவ்வாறு காமக் களியாட்டப் பாடல்களைப் பாடிப் பாடி இணைகின்றாராம் குணங்குடி மஸ்தான். செக்ஸ் சாமியார் ரஜனீஷ்கூட ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என ஒரு நூல் எழுதியுள்ளாரன்றோ? அதே பாணிதான் இந்த மஸ்தானிடமும் காணப்படுகின்றது.

நிராமயக் கண்ணி, பராபரக் கண்ணி, ரஹ்மான் கண்ணி, மனோன்மனிக் கண்ணி, நந்தீஸ்வரக் கண்ணி ஆகிய குணங்குடி மஸ்தானுடைய கண்ணிவகைப் பாடல்களை எடுத்துக்கொள்வோம். இவற்றிலெல்லாம் புலவர் இறைவனைப் பெண்ணாக உருவகித்துக்கொண்டு தாறுமாறாகக் கற்பனை செய்து பாடியுள்ளார்.

இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகின்ற வழிகெட்டக் கோட்பாட்டினைக் குணங்குடி மஸ்தான் கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய பாடல் வரிகளே சான்று பகர்கின்றன:

அத்து விதமே அறிவகண்டி தாகாரக்
       கர்த்தவியமே என் கண்ணே பராபரமே
                            (கண்மணிமாலைக் கண்ணி, பாடல்-1)

அத்துவிதம் வாழி அறிவுகண்டிதம் வாழி
        கர்த்தனே நீ வாழி கண்ணே பராபரமே
                             (கண்மணிமாலைக் கண்ணி, பாடல்-94)

என்பவை அத்துவைதத்துக்கு வக்காலத்து வாங்கி இவர் பாடியுள்ள பாடல்களாகும்.

 தொடரும், இன்ஷா அல்லாஹ் ...

ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 33

சாதாரணமாக, எந்த வழிகெட்ட ஒரு கவிஞருங்கூட தம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தையே பாடுவார். இங்குக் குணங்குடி மஸ்தான் அதுகூட பாடவில்லை. இவருடைய கடவுளே இவருடைய குருநாதரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தானே! இவரைப் பொருத்தவரை கடவுள் வணக்கம் பாடுவதும் குருவணக்கம் பாடுவதும் ஒன்றுதான். இனி, பாடலைப் பார்ப்போம்:

இணங்கு மெய்ஞ்ஞானப் பேரின்பக் கடலின்
     இன்னமு தெடுத்து எமக்களிப்போன்
பிணங்கிய கோச பாசமா மாயைப்
     பின்னலைப் பேர்த் தெறிந்திடுவோன்
வணங்கிய தவத்தினோர்க்கு அருள் புரிய
     வள்ளலாய் வந்த மாதவத்தோன்
குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என்
     குருபாதம் சிரத்தின் மேல்கொள்வாம்


“முஹ்யித்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் தான் தமக்கு இன்பம் செய்விப்பார்களாம். தம்முடைய துன்பம் துயரங்களை எல்லாம் அவர்கள் தான் பேர்த்து எறிவார்களாம். அவர்களை வணங்கித் தவம் செய்பவர்களுக்கு, அவர்கள் அருள் புரியும் வள்ளலாம். அத்தகைய குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என் குருவின் பாதத்தை யாம் தலைமேல் வைப்போமாக” எனப் பாடுகின்றார் குணங்குடி மஸ்தான்.

‘கோசம்’, ‘பாசம்’, ‘மா மாயை’ இவையெல்லாம் சைவ சித்தாந்த சாம்ராஜ்யத்தின் தனிப்பட்ட காப்பிரைட் உரிமைகள். மாற்றாருக்குரிய இந்த காப்பிரைட் சமாச்சாரங்களை எல்லாம் பேர்த்தெடுத்து, குணங்குடி மஸ்தான் இஸ்லாமிய மாளிகை மீது வீசி மாசுபடுத்துகின்றார்.

இந்த அந்நிய சாம்ராஜ்யத்து வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, "இவை உள்ளர்த்தம் பேசும் இறை ரகசியக் குறியீடுகள்" எனப் பிதற்றுகின்றன சில அகமியக் கிறுக்குகள். மஸ்தானின் உளறல்களில் அகமியம் கற்பிப்பதற்காகவே இவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, “அஷ்ஹது கலிமாவுக்கும் அகமியப் பொருள் உண்டு” என அளந்துவிடுகின்றனர்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தராத, கற்றுத் தராதவற்றையெல்லாம் கடை விரித்துப் பேசும் இந்த அகமிய அதிமேதாவிகள், மெய்ஞான நாதாக்களாம்! ஸூஃபிகளாம்! இவர்களுடைய வெற்று வார்த்தைகள் ஸூஃபித்துவக் கோட்பாடாம்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நீர், நெருப்பு, காற்று எல்லாம் கடவுளர்களே என அத்துவைதம் பேசும் புழுத்துப் போன சித்தாந்தமே கிரேக்கத் தத்துவங்களாகும். அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல இந்து மத வேதாந்தங்கள்.

இவ்விரண்டையும் எடுத்து வந்து புனிதமிக்க இஸ்லாமியப் பேழையில் திணித்தவர்கள் பெரும்பாலான நம் ஸூஃபிக் கவிஞர்களாவர். இவர்களுடைய ஸூஃபித்துவ வலையில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பூச்சிகள் மீது ஒருவித மயக்க மருந்து தெளிக்கப்படுகின்றது. அதிலிருந்து அவ்வளவு எளிதில் இந்தப் பூச்சிகளால் மீள முடிவதில்லை. கடைசியாக நரகின் எரிவிறகுகளாக இவைகளை இட்டுச் செல்லக்கூடிய விஷம் கலந்த மதுபானம் தான் ஸூஃபிஸமாகும்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ் ...

சனி, ஜனவரி 15, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 30

"னாகி, ஊனில் உயிராகி ..." எனத் தொடங்கும் பாடலில் வானாகி, கானாகி என்றெல்லாம் யாரைச் சொல்கிறார் குணங்குடி மஸ்தான்?

அல்லாஹ்வைச் சொல்கிறாரா? நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சொல்கிறாரா? முஹ்யித்தீன் அப்துல் காதிரைச் சொல்கிறாரா?
அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

யாரைச் சொல்வதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைப்படி இது மாபெரும் முரணுடையதாகும்.

"இப்பாடலில் இறைவனைத்தான் ஊனாகி, உயிராகி ... என்றெல்லாம் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்" என எஸ்.எம். சுலைமான் ஐஏஎஸ் தமது 'இசுலாமியத் தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்' எனும் நூலில் 'ஞான இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு' எனும் தலைப்பில் குறிப்பிடுகிறார்.

ஊனாக இருப்பவனும் இறைவன்தான்; உயிராக இருப்பவனும் அவன்தான்; ஒன்றாக இருப்பவனும் அவனே; இரண்டாக உள்ளவனும் அவனே; உள், வெளி, ஒளி, இருள், ஊர், பேர், காடு, மலை, கடல் ஆகிய எல்லாமாகவும் அவனே இருக்கிறான். காட்டு விலங்குகளாக இருப்பவனும் அவன்தான். இரவு, பகல், சூரியன், சந்திரன் மட்டுமின்றி, காணும் பொருட்கள், நான், நீ அவன், அவள், நாதம், பூதம் இவை ஒவ்வொன்றாக இருப்பவனும் அவன்தானாம்.

இதன்படி சூரியனை, சந்திரனை, மலையை, கடலை, ஒளியை, இருளை, ஒன்றை, இரண்டை, யாரோ ஓர் அவனை அல்லது அவளை, நாதத்தை, பூதத்தை, காட்டிலுள்ள யானை, புலி, சிங்கம் முதலிய விலங்குகளை, கல்லை, மண்ணை, கண்ட கண்ட பொருட்களை எதை வணங்கினாலும் அல்லாஹ்வை வணங்கியதுபோல்தான் என்று ஆகவில்லையோ?

"அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை; எதுவுமில்லை. அவன் ஏகன், அவனுக்கு இணையாக யாருமில்லை; எதுவுமில்லை எனச் சான்றுரைக்கிறேன்" எனும் இந்த உயிரினும் இனிய உறுதிப் பிரமாணத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி வெளிப்படையாக ஒத்துக் கொண்ட எவரும் இப்படிக் கூறத் துணிவார்களா?

"(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான். ... மேலும் அவனுடன் ஒப்பிடத் தக்கது எதுவுமேயில்லை" (அல்குர் ஆன் 112:001-004).
"அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். உங்களிலிருந்தே (உங்கள்) ஜோடிகளையும் அவன் உங்களுக்காகப் படைத்தான். கால்நடைகளையும் ஜோடி-ஜோடியாகப் படைத்தான். உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்" (அல்குர் ஆன் 042:011).
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூன் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 26

தற்குப் பின்னரும் ஸூஃபிஸம் உயிரோடுதான் இருந்தது. அதற்குப் புத்துயிர் ஊட்டியவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஹிஜ்ரீ 450முதல் 505வரை ஈரானில் வாழ்ந்திருந்த கஸ்ஸாலீ ஆவார். அவருக்கும் பின்னர் ஹிஜ்ரீ 560இல் வருகிறார் இப்னு அரபி எனும் ஸூஃபி. இந்த இப்னு அரபிதான், தன் காலத்துக்கு முன் இருந்த ஸூஃபிக் கோட்பாடுகளை எல்லாம் நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பினார். 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரணமும் இவரால்தான் சூட்டப்பட்டது.

இப்னு அரபியை ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றெல்லாம் ஸூஃபிக் கட்சியினரால் ஆஹா, ஓகோ எனப் பாராட்டப்படும். இவர் எந்த அளவுக்கு வழிகேட்டில் ஊறித் திளைத்தார் என்பதை அவருடைய கவிதைகளைப் படித்த மாத்திரத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.

இபுனு அரபி பாடுகிறார்:
வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது.
இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்;
சிலைகள் கொலுவிருக்கும் கோயில்;
அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி;
ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி;
தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே;
குர் ஆன் வேதமும் இதுவே;
நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன்.
அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே.
அன்பு எனும் மதமே என்னுடையது;
அதுவே என் நம்பிக்கை.
சமயங்களின் பெயரால் பிரிவினை பேசுவதை ஸூஃபிகள் வெறுத்தனர். எல்லாச் சமயங்களும் மூலநிலையில் ஒரே உண்மையைச் சொல்கின்றன என்பது ஸூஃபிகளின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இப்னு அரபியிடம் இப்படிக் கவிதையாக உருவெடுக்கிறது.

இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் என்கிறார் இப்னு அரபி:
அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி
அவனுடைய சாயலில் என்னைப் படைத்து
என்னைப் புகழ்கிறான்.

நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி
அவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனைப் புகழ்கிறேன்.

அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இருக்க முடியும்?

இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.
நான் அவனை அறிகிறேன்;
அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.
இஸ்லாத்தில் மட்டுமில்லாமல் ஏனைய மதங்களிலும் தெய்வீக உண்மைகள் பொதிந்திருக்கின்றன; அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இப்னு அரபியின் கருத்தாகும்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே.
மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர்.
காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்.
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய
கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு;
மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை.
அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர்.
ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு மதத்தினரையும் அன்பினால் தழுவிக் கொள்வதற்கேற்ற வகையில் சயமப் பொறுமையையும் அனுசரித்துப் போதலையும் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் இப்னு அரபி.

"ஒரே உண்மைப் பொருளின் ஒப்பற்ற ஜோதிதான் பள்ளிவாசலிலும் கிறித்துவ திருச்சபைகளிலும் கோவிலிலும் எரிகிறது" என்பது இப்னு அரபி போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் கருத்தாகும்.

இன்று வாழும் ஸூஃபிகள், இபுனு அரபியின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களேயாவர்.

எனவே, ஸூஃபிஸமாயிருந்தாலும் அத்துவைதமாக இருந்தாலும் அல்லது வேறெந்தத் தத்துவமாக இருந்தாலும் அவற்றை குர்ஆன்-ஹதீஸில் ஒப்பிட்டுப் பார்த்து, குர்ஆன்-ஹதீஸுக்கு முரண்படுபவற்றைத் தூக்கித் தூர எறிவோமாக!

குர்ஆன்-ஹதீஸை மட்டுமே பின்பற்றி, உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போமாக!

இந்தக் கொள்கை உறுதியை மனத்தில் இருத்திக் கொண்டு, தமிழ்நாட்டு ஸூஃபிப் புலவர்களின் இலக்கியங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், நவம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 25

ரீஅத்தைத் தாண்டி, தரீக்கத்தைக் கடந்து, ஹகீக்கத்தில் எவர் காலூன்றி விடுகிறாரோ அவர் இறைவனோடு ஃபனா ஆகி, மஃரிஃபாவுடைய ஞானத்தைப் பெற்று விடுகிறாராம். அதாவது இறைவனோடு இரண்றக் கலந்து விடுகிறாராம். இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குவர் ஸூஃபிகள். அதாவது,

இஸ்லாம் என்பது ஒரு வட்டம். அதன் வெளிவிளிம்புதான் வெளிரங்கமான ஷரீஅத். வட்டத்தின் மையப் புள்ளியே உள்ரங்கமான ஹகீக்கத்தாம். ஷரீஅத் எனும் வெளிவிளிம்பிலிருந்து ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கிச் செல்லும் ஆரமே தரீக்கத் எனும் ஞானப் பாட்டையாம். இந்தத் தரீக்கத் எனும் கோடு எந்த அளவுக்கு ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கி நெருங்கி, நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன் இறைவனை நெருங்குகின்றானாம். நெருங்கி, நெருங்கி, இறுதியில் இந்தக் கோடு கடைசியாக அந்த மையப் புள்ளியைப் போய்த் தொடுமன்றோ? அப்போது இந்த ஞானவான், இறைவனோடு ஒன்றிக் கலந்து விடுகிறானாம். இவ்வாறு கலந்த நிலையே மஃரிஃபத்தாம்.

மஃரிஃபாவுடைய நிலயை எய்தி, இறைவனோடு ஃபனாவாகி - ஒன்றிக் கலந்து - விட்ட ஸூஃபிக்கு உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் இறைவனாகவே காட்சி வழங்குமாம். அவனும் இறைவன்தானாம். இந்த வழிகெட்ட கோட்பாட்டை ஸூஃபிஸத்தின் ஆரம்ப நிலையில் அனுபவித்த பக்த கோடிகள் அதைத் தம் உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.

"சொல்லத் தகுமல்ல இப்பொருளை
சுருட்டி மறைக்கிறேன் ஷரஹுக்காக"

என்று பீரப்பா பாணியில் ஆரம்பகால ஸூஃபிகள் மஃரிஃபா ஞானத்தை வெளிப் படுத்தினார்களில்லை.

இவ்வாறு ஒளிவு-மறைவாக மஃரிஃபா ஞானம் அடைந்து கிடந்தபோது அதை வெளிப்படுத்தி ஆன்மீக உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு 'புரட்சித் தலைவர்'.

"நேசனும் நேசிக்கப் பட்டவனும் ஒருவனே! என்னைக் காணும்போது அவனைக் காணுகின்றீர்கள். நாங்கள் இருவரும் ஒரே உருவில் ஒன்றிவிட்ட இரு ஆன்மாக்களாகும்" என்று அந்தப் புரட்சியாளர் பகிரங்கமாகப் பறை சாற்றினார்.

"அனல் ஹக் - நானே அல்லாஹ்" என்பது இவருடைய ஆன்மீக கோஷமாயிற்று. உடனே, அப்போதிருந்த ஷரீஅத் கோர்ட் உஷாராயிற்று. அந்தப் புரட்சித் தலைவரான ஹுஸைன் இப்னு மன்ஸூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபியை, காஃபிர் எனத் தீர்ப்புரைத்தது. அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரீ 309ஆம் ஆண்டு இராக்கில் நடந்ததாகும்.

தொடரும் …

புதன், செப்டம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 23

னி, வ.உக்காரர்கள் தங்கள் கோட்பாட்டுக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பார்ப்போம். புகாரீயில் இடம் பெறும் கீழ்க்காணும் முழு ஹதீஸில் தங்களுக்குச் சாதகமான பகுதியை மட்டும் அவர்கள் மேற்கோளாக எடுத்துப் பேசி, அத்துவைதக் கொள்கைக்கு வக்காலத்து வாங்குவார்கள். அந்த முழு ஹதீஸையும் நாம் பார்ப்போம்:
"என்னுடைய தோழன் ஒருவனோடு பகைமை பாராட்டுபவனோடு நான் பகையாகவே இருப்பேன். என்னுடைய அடியான் என்பவன், நான் அவன் மீது கடமையாக்கி இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவே அல்லாமல் வேறெதையும் கொண்டு என்னை நெருங்க முடியாது. இன்னும் நஃபிலான செயல்களைச் செய்வதன் மூலம் நான் அவனை உவக்கும் காலமெல்லாம் அவன் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவன் மீது அன்பு கொண்டு விட்டால் அவன் செவியுறும் செவியாக, பார்க்கின்ற கண்ணாக, பிடிக்கின்ற கையாக நான் ஆகிவிடுகின்றேன். அவன் என்னிடம் கேட்பானேயானால் அதனை நிச்சயம் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் அடைக்கலம் தேடினால் அதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுக்கின்றேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துச் சொன்ன செய்தியை அபூஹுரைரா (ரலி) வழியாக புகாரீ (6502) பதிவில் பார்க்கிறோம். இந்த ஹதீஸின் முன்-பின் பகுதிகளை மறைத்து விட்டு, "அல்லாஹ்வே அடியானின் காதாக, கண்ணாக, கையாக ஆகிவிடுகிறான் அல்லவா?" எனக் கேட்கும் ஸூஃபிகள், "அல்லாஹ்வும் அடியானும் ஒன்றிக் கலந்து விட்டதைத்தானே இது காட்டுகிறது?" எனக் கேட்டு இணைவைப்புக் கொள்கைக்கு நியாயம் கற்பிப்பார்கள். மேற்காணும் ஹதீஸில் துண்டுப் பார்வை செலுத்தியதால் வந்த வினை இது. இதன் மீது முழுப் பார்வையைச் செலுத்தி இருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது.

அதே பத்ருப் போர் நிகழ்ச்சிகளுடன் இந்த ஹதீஸைப் பொருத்திப் பார்ப்போம். இஸ்லாத்தின் விரோதிகள் அல்லாஹ்வின் நேசர்களாகிய முஸ்லிம் வீரர்களுடன் பகைமை பாராட்டுகிறார்கள். தன்னுடைய நேசர்கள் மீது எவர் பகைமை பாராட்டுகிறாரோ அவர்களுக்கு அல்லாஹ்வே பகைவனாக ஆகிவிடுகின்றான். பத்ரு வீரர்கள் அல்லாஹ்வின் நேசர்களானது எப்படி என்பதையும் மேற்காணும் ஹதீஸ் வரிசையாகச் சொல்லி வருகிறது.

அல்லாஹ் அந்த முஸ்லிம் வீரர்கள் மீது எவற்றையெல்லாம் கடமைகளாக ஆக்கினானோ அவற்றையெல்லாம் அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றனர். அல்லாஹ்வுக்காகத் தங்கள் பிறந்த மண்ணையே பிரிந்து வந்திருக்கின்றனர்.

இவ்வாறாக அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தான் அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருங்கிய நேசர்களானார்கள். அதுமட்டுமின்றி, மென்மேலும் உபரி(நஃபில்) ஆன நற்செயல்களையும் செய்து அவர்கள் அல்லாஹ்வின் முழுப் பொருத்தத்தையும் பெற்றிருந்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படிப் பட்ட இறைப் பொருத்தத்தைப் பெறுவதில் முதலிடம் வகித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் வீரர்களுக்குத் தலைமை தாங்கி, வெற்றிக்காக இறைவனிடம் கையேந்தினார்கள். அவர்கள் எந்த வெற்றிக்காகக் கையேந்தினார்களோ அந்த வெற்றியை இறைவன் அவர்களுடைய கைகளில் வாரிக் கொடுத்தான்.

பகைவர்கள் தோற்று, அவல ஓலமிட்டபோது அந்த ஓசையைத் தன் தோழர்களின் செவிகளுக்கு விருந்தாக அல்லாஹ் ஆக்கி வைத்தான்; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிய காட்சியைத் தன் நேசர்களைக் கொண்டு கண்ணாரக் காண வைத்தான்; தன்னுடைய நேசர்களின் சிறிய கூட்டமொன்று பெரியதொரு வெற்றியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அந்தச் சின்னஞ் சிறிய கூட்டத்தினரின் கைகளுக்கும் கால்களுக்கும் ஓர் அற்புத ஆற்றலை வழங்கினான். அல்லாஹ்வே அவர்களுக்கு உற்ற துணையாயிருந்து வெற்றி புரிந்திருக்கிறான்.

இந்த வெற்றி, முழுக்க முழுக்க பத்ரு வீரர்களுடைய அவயங்களின் ஆற்றலால் ஈட்டியதன்று என்பதைச் சுட்டிக் காட்டுவதாகத்தான் "அவனுடைய காதாக, கண்ணாக, கரமாக நான் ஆகி விடுகிறேன்" என்றான் அல்லாஹ். "நம்மோடு காதாக, கண்ணாக, கரமாக அல்லாஹ் இரண்டறக் கலந்து விட்டான்; இனி நாம் வேறு அவன் வேறு என்றில்லை. நாம்தான் அல்லாஹ்; அல்லாஹ்தான் நாம்" என்று அந்த முஸ்லிம் வீரர்கள் எண்ணினார்களா? அப்படி எண்ணத்தான் முடியுமா? அப்படிப் பட்ட எண்ணத்துக்கு இடமேயில்லை என்பதை அதே ஹதீஸின் பிற்பகுதி தெளிவு படுத்துகிறது.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.