சனி, ஜூன் 18, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 32

பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட ஈஸா நபி (அலை) அவர்களைக்கூட இந்த ஸூஃபி அறிவிலிகள் அத்துவைதச் சிலுவையில் அறையத் தவறவில்லை. அவரையும் கடவுளாக, கர்த்தராக வழிபடுபவர்கள்தாம் இன்று பெரும்பான்மை ஜனத் தொகையினராவர்.

இந்த அத்துவைதக் கோட்பாட்டை அடித்துத் தகர்த்துவிட்டு, இறுதி நாள்வரை ஏகத்துவ வழிபாடு ஒன்றை மட்டுமே இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக இறைவனால் நபியாக அனுப்பப் பட்டவர்கள்தாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார். அவர்கள் தம் காலத்திலேயே இந்தத் தூய பணியை நிலை நிறுத்தி, அதில் மகத்தான பெருவெற்றியும் கண்டார்கள். அத்துவைதத்துக்கு அடிகோலக் கூடிய சிலைகள் தகர்ந்தன. தரை மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருந்த சமாதிகள் தவிடு பொடியாயின. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் எனும் கொள்கை ஓங்கி வளர்ந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார் எவருமிலர். இருப்பினும் அவர்கள்கூட அல்லாஹ்வின் அடிமையாகிய அடியார்தாம் என்பதை இஸ்லாம் மிக அழுத்தந் திருத்தமாக வரையறுத்து வலியுறுத்திக் கூறியுள்ளது.

நம்முடைய ஈமானைப் பறை சாற்றும் உயிர்க் கலிமாவின் உன்னத வாசகங்களைப் பாருங்கள்:

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ;
வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியுரைக்கிறேன். அவன் ஏகன்; அவனுக்கு இணை கிடையாது. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நிச்சமாக அவனுடைய அடியாரும் தூதருமாவார் எனவும் சாட்சியுரைக்கிறேன்.

இதுதான் நமது மூல மந்திரத்தின் முழுப் பொருளாகும்.

இந்தக் கலிமாவில் அல்லாஹ் யார்? நபி ஸல்லல்லாஹி அலைஹி வ ஸல்லம் யார்? என்பது மிகத் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப் பட்டுள்ளனர். அல்லாஹ்வுக்குரிய சிறப்பான தன்மைகள் இரண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சிறப்பான தன்மைகள் இரண்டும் இங்குப் பளிச்செனக் காணக் கிடக்கின்றன.

அல்லாஹ் ஒரே ஒருவன்தான். அவனுக்கு எத்தகைய கூட்டும் இல்லை என்பது அல்லாஹ்வுக்குரிய சிறப்பியல்புகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்தாம்; அவர்கள் அவனுடைய தூதராயிருக்கிறார்கள் என்பது நபிகளாரின் சிறப்பியல்புகளாகும்.

இந்தக் கலிமா, அத்துவைதக் கோட்பாட்டைப் புதை குழிக்கு அனுப்புவதற்காகவே புறப்பட்டு வந்தது போல் இல்லையா? ஆம். அதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களுமான ஸஹாபாப் பெருமக்களும் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள் என்பது இஸ்லாமிய வரலாறாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைவிட அல்லாஹ்வுக்கு நெருங்கிய மனிதர் வேறு யார் இருக்கிறார்கள்? அவர்களே அல்லாஹ்வின் அடியார்தாம் என்பதை நாம் சாகும் தறுவாயிலுங்கூட நினைவில் இருத்தத் தவறக் கூடாது.

இந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் அல்லாஹ் வந்து குடியிருந்து கொண்டான் என்றும் எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அல்லாஹ்தான் அல்லது அல்லாஹ்வின் ஒரு கூறுதான் என்றும் எவராவது கருதுவாரானால் அவர் கலிமாவைச் சரியாக விளங்காத பித்தராகத்தான் இருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு அல்லாஹ்வை இணைத்து அத்துவைதம் பேசுவதே மாபெரும் பாவ காரியமாக இருக்கும்போது, வேறொரு மனிதரைக் கொண்டு அல்லாஹ்வுடன் கூட்டாக்கி அத்துவைத அவியல் சமைப்பது எவ்வளவு தவறான செயல்?

இந்தத் தவறான விஷ உணவுதான் குணங்குடி மஸ்தான் பாடல் முழுக்கப் பரிமாறப் படுகிறது. குணங்குடி மஸ்தான் நூலின் முதற்பாடலை இங்குப் பார்ப்போம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மார்ச் 24, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 31

றைவனைத் தவிர உள்ள மற்றெல்லாமும் அவனது படைப்புகளே. அவனே படைப்பாளன். மற்றவை அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவனைப்போல எதுவுமில்லை. தன்னுடைய எல்லாப் படைப்புகளின் எல்லா இயக்கங்களையும் படைத்தவனாகிய அந்த அல்லாஹ் அனைத்தையும் உற்று நோக்குகின்றான்; நன்கு செவியுறுகிறான்.

இஃது இங்ஙனமிருக்க, குணங்குடி மஸ்தானோ படைப்புகள் யாவும் அல்லாஹ்வாகவே இருப்பதாகப் பிதற்றுகிறார். அவனே சூரியனாக, சந்திரனாக, ஒன்றாக, இரண்டாகவெல்லாம் இருப்பதாகக் கூறி இஸ்லாத்தைப் பரிகசிக்கிறார். மஸ்தான் எனும் இந்தப் பித்தருடைய இப்பிதற்றல்களுக்கு வேறுபல சுவையான பின்னணிகள் இருக்கின்றன.

குணங்குடி மஸ்தானுடைய ஆன்மீகக் குருநாதர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஆவார். முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை இவர் அல்லாஹ்வுக்கு இணையானவர் என்றே கருதுகிறார், கதை விடுகிறார். இவருடைய பாடல்களில் பெரும்பாலானவற்றில் 'குணங்குடி ஆண்டவன்' என்று இவர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியையே சுட்டுகிறார்.

'குணம்' என்பதை அல்லாஹ்வாகவும் அந்த அல்லாஹ்வாகிய குணம் முழுவதையும் தன்னுள் குடியிருத்திக் கொண்டவர் முஹைதீன் அப்துல் காதிர் எனவும் கருதுகின்றார் குணங்குடி மஸ்தான். எனவேதான் "குணங்குடி வாழும் முஹையித்தீனே!" என, பாட்டுக்குப் பாட்டுப் பாடிச் செல்கிறார்.

அதாவது, முஹையித்தீன் அப்துல் காதிரிடம் அல்லாஹ்வே குடியிருந்தான் என்ற அத்துவைதக் கோட்பாடுடையவர் இந்த வழிகெட்ட கவிஞர். அத்துவைதம் என்றால் என்னவென்று இங்குத் தெரியக் கடமைப் பட்டிருக்கிறோம்.

'துவைதம்' என்பதன் எதிர்ச் சொல்லே 'அத்துவைதம்' ஆகும். ஆண்டவன் (பரமாத்மா) வேறு; அடியான் (ஜீவாத்மா) வேறு; இவையிரண்டும் தனித்தனியானவை. ஒன்றோடொன்று எக்காலத்திலும் கலக்க முடியாதவை என்னும் கொள்கையே 'துவைதம்' எனப்படும். இந்தக் கொள்கையின்படி ஆண்டவன், எப்போதும் ஆண்டவனேதான். அடியான், எப்போதுமே அடியானேதான். அடியான் எவ்வளவுதான் புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டு எம்பிக் குதித்தாலும் - அதிகபட்சம் - ஆண்டவனுக்கு மிகமிக நெருக்கமான அடியானாகத்தான் ஆகமுடியுமேதவிர ஆண்டவனுக்கு இணையானவனாக, ஆண்டவனோடு கலந்துவிட்டவனாக ஆகவே முடியாது.

ஆனால், இதற்கு நேர் மாற்றமான கொள்கையைக் கொண்டுள்ளது அத்துவைதம் ஆகும். ஆண்டவனும் (பரமாத்வாவும்) அடியானும் (ஜீவாத்மாவும்) வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றேதான் என்பதே அத்துவைதக் கோட்பாடாகும். இந்த அத்துவைதக் கோட்பாட்டுக்காரர்கள் ஆண்டவனுக்கு உகந்தவர்களாக இவர்கள் நம்பும் அடியார்களையும் ஆண்டவனாகவே காண்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே இந்த அத்துவைதக் கோட்பாடு, பல வடிவங்களில் பாரெங்கும் பரவியிருந்தது.

பழமையான கிரேக்க, ஃபார்ஸித் தத்துவங்களும் நம் நாட்டு சைவ-வைணவச் சித்தாந்தங்களும் இந்த அத்துவைதக் கோட்பாடுகளையே மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களை அவர்கள் காலத்துக்குப்பின் மக்கள் கடவுளாகக் கருதி வழிபடலாயினர். அதற்கு அடிப்படையான காரணம், இந்த அத்துவைதக் கொள்கைதான். அல்லாஹ் வேறு, அடியார் வேறு என்பதல்ல; அல்லாஹ்வும் அடியாரும் ஒருவரேதான் என்று அம்மக்கள் எண்ணலாயினர்.

எனவே, திசைமாறிய மானுடர்கள் ஏகத்துவ விதையை வீசியெறிந்து விட்டு, பலதெய்வ வழிபாட்டுக் காளான்களை விளைத்தெடுத்துக் கொண்டார்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜனவரி 15, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 30

"னாகி, ஊனில் உயிராகி ..." எனத் தொடங்கும் பாடலில் வானாகி, கானாகி என்றெல்லாம் யாரைச் சொல்கிறார் குணங்குடி மஸ்தான்?

அல்லாஹ்வைச் சொல்கிறாரா? நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சொல்கிறாரா? முஹ்யித்தீன் அப்துல் காதிரைச் சொல்கிறாரா?
அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

யாரைச் சொல்வதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைப்படி இது மாபெரும் முரணுடையதாகும்.

"இப்பாடலில் இறைவனைத்தான் ஊனாகி, உயிராகி ... என்றெல்லாம் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்" என எஸ்.எம். சுலைமான் ஐஏஎஸ் தமது 'இசுலாமியத் தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்' எனும் நூலில் 'ஞான இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு' எனும் தலைப்பில் குறிப்பிடுகிறார்.

ஊனாக இருப்பவனும் இறைவன்தான்; உயிராக இருப்பவனும் அவன்தான்; ஒன்றாக இருப்பவனும் அவனே; இரண்டாக உள்ளவனும் அவனே; உள், வெளி, ஒளி, இருள், ஊர், பேர், காடு, மலை, கடல் ஆகிய எல்லாமாகவும் அவனே இருக்கிறான். காட்டு விலங்குகளாக இருப்பவனும் அவன்தான். இரவு, பகல், சூரியன், சந்திரன் மட்டுமின்றி, காணும் பொருட்கள், நான், நீ அவன், அவள், நாதம், பூதம் இவை ஒவ்வொன்றாக இருப்பவனும் அவன்தானாம்.

இதன்படி சூரியனை, சந்திரனை, மலையை, கடலை, ஒளியை, இருளை, ஒன்றை, இரண்டை, யாரோ ஓர் அவனை அல்லது அவளை, நாதத்தை, பூதத்தை, காட்டிலுள்ள யானை, புலி, சிங்கம் முதலிய விலங்குகளை, கல்லை, மண்ணை, கண்ட கண்ட பொருட்களை எதை வணங்கினாலும் அல்லாஹ்வை வணங்கியதுபோல்தான் என்று ஆகவில்லையோ?

"அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை; எதுவுமில்லை. அவன் ஏகன், அவனுக்கு இணையாக யாருமில்லை; எதுவுமில்லை எனச் சான்றுரைக்கிறேன்" எனும் இந்த உயிரினும் இனிய உறுதிப் பிரமாணத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி வெளிப்படையாக ஒத்துக் கொண்ட எவரும் இப்படிக் கூறத் துணிவார்களா?

"(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான். ... மேலும் அவனுடன் ஒப்பிடத் தக்கது எதுவுமேயில்லை" (அல்குர் ஆன் 112:001-004).
"அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். உங்களிலிருந்தே (உங்கள்) ஜோடிகளையும் அவன் உங்களுக்காகப் படைத்தான். கால்நடைகளையும் ஜோடி-ஜோடியாகப் படைத்தான். உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்" (அல்குர் ஆன் 042:011).
தொடரும், இன்ஷா அல்லாஹ்.