ஞாயிறு, டிசம்பர் 09, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17

செக்கச் சிவந்த ஆடை அணிந்து, செஞ்சந்தனத்தை மேனியெங்கும் பூசியவர்களாக, செம்மணியிலான ஆபரணங்களையும் சூடிக் கொண்டு, திரண்டு நின்ற பெண்கள் அலீ (ரலி) அவர்களின் அழகைக் கண்ணாரப் பருகினர். அந்தப் பெண்களது உள்ளத்தின் உள்ளே உள்ளக் காமத்தீயின் சிவப்புதான் இவ்வாறு வெளித் தோற்றத்திலும் சிவப்பு மயமாகப் பிரதிபலிக்கிறதோ என வியந்து பாடுகிறார் புலவர் (பாடல் 139).

"அலீயின் அழகைப் பார்ப்பதற்கு இமைகள் இல்லாத ஆயிரம் கண்கள் வேண்டும்" (பாடல் 142).

"பாத்திமா ஒருத்தி மட்டுமோ இந்தப் பேரழகையெல்லாம் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறாள்" (பாடல் 146).

என்றெல்லாம் அங்குத் திரண்டிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்களாம். அவ்வாறு பேசிக் கொண்ட பெண்களின் நிலை பற்றிப் புலவரப்பா பாடுவதைக் கேளுங்கள்:
சிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். (பாடல் 141).
அலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப் பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச் சொட்ட வருணித்துச் செல்கிறார்.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஒவ்வொரு பருவப் பெண்ணின் அங்கங்களையும் வருணிக்கும்போது புலவர் தீட்டுகின்ற சொல்லோவியங்களைப் படித்துப் பார்த்தால், "இதுவும் ஓர் இஸ்லாமிய இலக்கியமா?" என அவை முகம் சுழிக்கச் செய்கின்றன.

ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் கற்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபித்தோழியராம் ஸஹாபியப் பெண்டிரைப் பற்றி இப்படி ஆபாசமாக, அவர்களின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும் விதமாகப் பாடத் துணிந்து விட்டது அவர்மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறன்றோ?

"இளமுலைப் பேதையும்" (பாடல் 148); "குரும்பையின் முலையுடைய பொதும்பையும்" (பாடல் 151); "செம்பொன் குவிமுலை மங்கையும்" (பாடல் 153); "வார் அறுத்து எழுந்து வீங்கும் வனமுலை மடந்தையும்" (பாடல் 155); "கோங்கிள முலை அரிவையும்" (பாடல் 156); அலீ (ரலி) அவர்களைச் சுற்றி நின்று மொய்த்தார்களாம்.

"குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து" நின்ற பெண்களுள் ஒருத்தியாகிய பேரிளம்பெண் என்பவள், "அலீயினைச் சேரா மாதர் அலி என இருத்தல் நன்று" என உரத்துக் கூறி நின்றாளாம் (பாடல் 159).

இவ்வாறாகத் திருவுலா வந்த அலீ (ரலி) அவர்கள் கடைசியாகத் திருமணப் பந்தலை அடைந்தார்கள். பந்தல் வாசலில், "... வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்பக் குரவை எம்மருங்கும் சூழ்ந்து" கடலொலி போல் முழங்கிற்றாம் (பாடல் 166).

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.