வியாழன், மே 18, 2006

யாருக்குச் சொந்தம்?

சென்ற வாரத் திண்ணை [11.05.2006] இதழில் வெளியான மூன்று கடிதங்களுக்கு இங்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். முதலாவதாக,
"ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் - ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்?"
என்று ஒரு கண்டனக் குரல். வேற்றுமொழிப் பெயர்ச் சொற்களை அப்படியே குறிப்பதால் திண்ணையில் தீவிரவாதம் எப்படி ஏற்படும் என்று எனக்கு விளங்கவே இல்லை. தாய்மொழிப் பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் தேவையே. அதற்காக, 'மிஸ்ஸிஸ்ஸிப்பி' என்ற ஊரின் பெயர்ச் சொல்லை "சிப்பி என்பவள் செல்வி" என்று தமிழில் எழுதினாலோ 'மிடில்ஸெக்ஸ்'ஐ "நடு இனம்" என்றோ வேறு ஏதாவது தமிழ்ச் சொல்லால் எழுதினாலோ நன்றாகவா இருக்கும்? திண்ணையில் 'கடித இலக்கியம்' எழுதுபவரின் பெயரை, 'அவைத் தலைவர்' என்று நாம் தமிழில் எழுதுவது சபாநாயகம் அவர்களுக்குப் பெருமை சேர்க்குமா? அதுவும், 'மஹாத்மா'வைக் குறித்து 'பரமாத்மா'வின் 'ஜீவாத்மா'க்கள் திண்ணையில் சொல்லாடிக் கொண்டிருக்கும் 'தமிழ்ச் சூழ'லில் 'பாவாத்மா'க்களைக் குறை சொல்வதற்கு, 'ஜடாயு'வின் 'அந்தராத்மா'வுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ!.
***
இரண்டாவதாக,
"தமிழில் தொழுகை நடத்துவதற்கு வகாபி மறுப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஒருவேளை இப்படியான திருக்குர்ஆனிய சில வசனங்களை எப்படி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி சொல்வது என்ற தயக்கமாக இருப்பின் அல்லாவின் வார்த்தைகள் தான் அவை என்ற வகையில் அந்த தயக்கத்தை விட்டொழிக்க முயல வேண்டும் இவ்வசனங்கள் சொல்லப்பட்ட சூழலையும் கருத்திற்கொள்ள வேண்டும். என்பதே எனது வேண்டுகோள்"
என்று சூபி எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குர்ஆன் பிரதிகளை யாராவது பதுக்கி வைத்துக் கொண்டு அஞ்சியஞ்சி விற்கிறார்களா என்ன? இத்தனை விரைவில் காலம்தான் எப்படி மாறிப் போய்விட்டது பாருங்கள்! சூபிகளே குர்ஆனுடைய 'சில' வசனங்களை எடுத்தெழுதுவது மகிழ்வுக்குரிய மாற்றம்தான்! - நோக்கம் எதுவாக இருப்பினும். அஃதென்ன 'சில வசனங்கள்'? அனைத்து வசனங்களையும் உள்ளடக்கிய குர்ஆன் பதிப்புகள், தமிழ் உட்பட உலகின் எல்லா மொழிகளிலும் மூலைக்கு மூலை கிடைக்கிறதே! காசு கொடுத்து வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்கு இப்போது வலைத் தளங்களிலும் குர்ஆன் 'வெளியே தெரியும்படி' திறந்துதான் கிடக்கிறது! திறந்து கிடந்ததைப் படித்துத்தான் கேட் ஸ்டீவன்ஸ், யூஸுஃப் இஸ்லாமாக மாறிதாகக் கூறுகிறார்:
Following a bout of TB early in his career he undertook an ongoing search for peace and ultimate spiritual truth. After almost drowning in the Pacific Ocean at Malibu he received a translation of the Qur'an as a gift from his elder brother, David. His spiritual quest for answers was fulfilled and he embraced Islam in December, 1977. Six months later he changed his name to Yusuf Islam, walked away from the music business to start a new life and raise a family.
முழுச் செய்தியையும் இங்குப் படிக்கலாம்: http://www.yusufislam.org.uk/biodata.htm உள்ளேயே பூட்டி வைக்காமல், எல்லாருக்கும் வெளியே தெரியும்படி உள்ள குர்ஆனினால் ஈர்க்கப் பட்டோரின் பட்டியல் வெகு நீளம் என்பதும் அதில் குலசையைச் சேர்ந்த தமிழ் வலைப் பதிவர் http://iniyaislam.blogspot.com/ ஒருவரும் அடக்கம் என்பதும் சூபிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு. கனவுலக முகமூடியைக் கழட்டி விட்டு, நனவுலகிற்கு சூபி வரவேண்டும் என்பதே என் அவா.
***
இறுதியாக, 'அல்லாவும் வகாபும்' என்ற தலைப்பில் ஒரு கடிதம். அதிலுள்ள 'வகாபு' என்ற பெயரைப் பற்றிப் பல குழப்பமான செய்திகளுக்கு விளக்கமளிக்கும் முன், நான் என்ன எழுத வேண்டும், அதை எப்படி எழுத வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய முடியும்; வேறு யாரும் முடிவு செய்ய முடியாது - குறிப்பாக, குலாம் ரசூல் செய்யக் கூடாது. இனி,
"அல்லாவின் 99 திருநாங்களில் வகாப் என்று திருத்தல்வாதம் செய்தாலும் இச்சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது"
என்று கடிதம் எழுதிய குலாம் குறிப்பிடுகிறார். பாவம், அவருக்கு என்ன சூழ்நிலையோ? இவர் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் உண்மை, உண்மையில்லை என்றாகி விடுமா என்ன?. மீண்டும் சில பெயர்ச் சொற்களையும் உரிச் சொற்களையும் ஆகு பெயர்களையும் வேற்று மொழியில் பயன் படுத்துவதற்காக ஜடாயு அவர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. அவற்றைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப் பட்டுள்ளேன் - அறியாமையை அகற்றும் விளக்கத்திற்காக. bin / ibn என்ற அரபுச் சொல் s/o என்று ஆங்கிலத்தில் பயன் படுத்தப் படும் சொல்லுக்கு ஒப்பானதாகும். மு.க. ஸ்டாலின் என்ற பெயர்ச் சொல்லை அரபியில், 'ஸ்டாலின் bin கருணாநிதி bin முத்துவேல்' என்று குறிப்பிடுவர். 1. "அப்துல்வஹ்ஹாபின் மகன் பெயர் முஹம்மது", அதே "முஹம்மதின் தந்தை பெயர் ஷெய்க்", "அந்த ஷெய்க் உடைய தந்தை அப்துல்வஹ்ஹாப் ஆவார்". எனில், முஹம்மது என்பாருக்கு அப்துல்வஹ்ஹாப் தந்தையா தாத்தாவா? குழப்பந்தானே! குழப்புவது நானல்ல; குலாம்:
"வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்"

இங்குக் குழப்பப் பட்டவர், முஹம்மது s/o அப்துல்வஹ்ஹாப் s/o ஸுலைமான் என்பவராவார். உறுதிப் படுத்திக் கொள்வதற்கும் கூடுதல் தகவல்களுக்குமான சுட்டி : http://www.ahya.org/amm/modules.php?name=Sections&op=viewarticle&artid=180 . மேற்படி முஹம்மது என்பார் தனெக்கென ஒரு கொள்கையைப் புதிதாக ஏற்படுத்திக் கொண்டு அதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் போராடவில்லை. இறைமறையும் நபிவழிமுறையுமே தமது உயிர் மூச்சு என்றார். கடிதம் எழுதியவரின் அதிமுக்கியக் கவலைக்கும் ஆத்திரத்திற்கும் காரணம் என்னவென்றால், வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியின் மறைவுக்குப் பிறகுக் கொஞ்சங் கொஞ்சமாக அரபு குலாம்களால் புதிதாக ஏற்படுத்தப் பட்ட சமாதி வழிபாட்டையும் வழிபாடு நடந்த சமாதிகளையும் முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் தரைமட்டமாக்கினார் என்பதே. அந்தத் தரைமட்டச் சேவையையும் தமது தலைவரின் கட்டளைப்படியே செய்தார் என்பதுதான் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த வரலாறு. இதோ ஒரு ஹதீஸ் - ஒன்பது சான்றுகளுடன்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175]. தரைமட்டச் சேவைக்கான/தேவைக்கான இன்னும் கூடுதல் சான்றுகள் திண்ணை இதழின் 24.02.200 பதிப்பில் எனது கடித இறுதியில் கிடைக்கும். இனி வஹ்ஹாபிஸத்துக்கு வருவோம். நேபாளத்தின் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை அவ்வரசு விடுதலை செய்யப் போவதாக அண்மைச் செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸத்தைப் பின்பற்றுபவர்களே மாவோயிஸ்டுகளாவர். சீனப் புரட்சித் தலைவர் மாவோ ஸெடுங்கின் கொள்கை-கோட்பாடுகள்தாம் அவருடைய முதற் பெயரால் மாவோயிஸம் என்று வழங்கப் படுகிறது. முஹம்மது [bin அப்துல்வஹ்ஹாப்] என்பவருடைய தனித்த கொள்கை-கோட்பாடு என்று ஒன்றிருந்து, அதை இஸத்தோடு இணைத்து வழங்குவதென்றாலும் 'முஹம்மதிஸம்' என்றல்லவா சொல்ல வேண்டும்? மாறாக, ஏன் வஹ்ஹாபிஸம் என்று சொல்லுகின்றனர்/எழுதுகின்றனர்? இந்த இடத்தில்தான் மேற்கத்திய பூர்ஷ்வாக்களின் நரித்தனம் ஒளிந்திருக்கிறது. முஹம்மதிஸம் என்று சொல்லி விட்டால் நபி முஹம்மதின் கொள்கை என்று உலக மக்கள் புரிந்து கொண்டு விடுவர் என்ற அச்சமும் முஸ்லிம்களைக் கூறு போட வேண்டிய தந்திரமும் சேர்ந்து உருவானதே 'வஹ்ஹாபிஸம்' என்ற சொல். கார்ல் மார்க்ஸின் பெயரால் மார்க்ஸிஸம், விளாடிமீர் லெனினின் பெயரால் லெனினிஸம், ஜோஸஃப் ஸ்டாலினின் பெயரால் ஸ்டாலினிஸம் ஆகியவற்றைப் போல் இரண்டாவது பெயரில் ஓர் இஸத்தை இணைத்து வழங்குவதென்றாலும் நியாயப்படி, 'அப்துல்வஹ்ஹாபிஸம்' என்றுதான் வழங்க வேண்டும்.

ஏனெனில், அப்துல்வஹ்ஹாப் என்பது இரண்டு பெயர்கள் அல்ல; ஒரு பெயர்தான் [அப்த்+அல்லாஹ்= அல்லாஹ்வின் அடிமை என்பதுபோல், அப்த்+அல்வஹ்ஹாப்=பெருங் கொடையாளனின் அடிமை]. பலவேளைகளில் தந்திரங்கள் வெற்றி பெற்றாலும் சிலவேளைகளில் உண்மைகளின் முன் தந்திரங்கள் தோற்றுவிடும். மொழியறிவின்றி, தந்திர நோக்கோடு தவறாகக் கொடுக்கப்பட்டிருப்பினும், இறைவனின் பண்புப் பெயர்களுள் ஒன்றான அல்வஹ்ஹாப் [பெருங்கொடையாளன்] என்ற பெயராலேயே அவனுடைய மார்க்கமான இஸ்லாமை 'வஹ்ஹாபிஸம்' என்று வழங்குவதிலும் அந்தப் பெருங்கொடையாளனைச் சார்ந்து நிற்பவரை 'வஹ்ஹாபி' என்று அழைப்பதிலும் நபிகளாரை 'வஹ்ஹாபிகளின் தலைவர்' என்று குறிப்பிடுவதிலும் குழப்பமேதுமில்லை என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வர் - குலாமுக்கு வேண்டுமானால் குழப்பமாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

கேள்வி: 'வஹ்ஹாபி' என்று அழைக்கப் படுவோர் யார்? பதில் : இஸ்லாமிய மார்க்கத்தை அதன் பழைமையான தூய வடிவில் கடைப் பிடிப்போர்.
மேற்காணும் வினாவும் விடையும் எந்த வஹ்ஹாபியும் புதிதாகக் கண்டு பிடித்துச் சொன்னதன்று. மாறாக, +2 வகுப்பிற்கான 'வரலாறு, நவீன உலகம்' என்ற பாடத்திற்கான தினமணி நாளிதழின் மாதிரி வினா-விடைப் பகுதியில் வெளிவந்ததாகும். நாள்: 19 மார்ச் 1984. 'பழைமையான தூய வடிவு' என்றாலே முந்நூறு ஆண்டுகளுக்கே முன்னர் பிறந்த, புதியவரான முஹம்மது அப்துல்வஹ்ஹாப் ஸுலைமான் என்ற 'முழுப் பெயரை' உடையவருக்குப் பழையதில் எவ்விதப் புதிய ஆளுமையும் இல்லை என்பது தெளிவு. [bin நவீனத்துவம் முடிவுக்கு வந்து அதிநவீனத்துவம் ஆரம்பித்து விட்டதால் இப்போதெல்லாம் யாரும் bin போட்டு எழுதுவதில்லை]. என்னுடைய ஆக்கங்களுக்கான 'வஹ்ஹாபிஸ'ச் சான்றுகள் அனைத்தும் வஹ்ஹாபுடைய வேதமான அல்குர் ஆனிலிருந்தும் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியவர்களின் வழிமுறைகளிலிருந்துமே எடுத்தாளப் படுகின்றனவேயன்றி, முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் என்பவரின் 'கிதாபுத் தவ்ஹீத்' என்ற நூலிலிருந்தன்று. 2. அன்னார் எழுதியவற்றுள், நஸீஹத்துல் என்றும் முஸ்லிமீன் என்றும் இரு நூல்களைக் குறிப்பிடுகிறார் குலாம். 'நஸீஹத்துல் முஸ்லிமீன்' [முஸ்லிம்களுக்கு அறிவுரை] என்பது ஒரேயொரு தலைப்பாகும்; இரண்டன்று. தெரியாதவற்றைத் தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டெழுதுவது குற்றமன்று; தெரியாதவற்றைத் தெரிந்ததுபோல் பாசாங்கு செய்து கொண்டு எழுதுவதே குற்றம்.
3. "இமாம் வகாப் அறுநூறுபேர் கொண்ட படையுடன் நேரடியாகப் பங்கேற்று உமர் பின் அல்கதாபின் சகோதரர் அஸ்வரின் சமாதி மக்பராவை இடித்து தள்ளி நிர்மூலமாக்கினார்"

இதுவும் 'அரபு வகைப் பட்ட' வரலாற்று ஆசிரியராகத் தன்னைத் திண்ணைக்கு அறிமுகப் படுத்த முயன்றுள்ள குலாம் எழுதியதுதான். அண்ணல் உமருக்கு அஸ்வர் என்றொரு சகோதரர் இருந்தார் என்பதை மட்டும் சான்றுகளோடு குலாம் நிரூபித்து விட்டால், அவரைப் பேராசிரியர் என்றே அழைக்க நான் தயார். சரி, இல்லையெனில்?

"அப்பட்டமான முட்டாள்தனமும், சமகால வரலாற்று மோசடியாகும்"

இவைதாம் குலாமின் திண்ணைக் கடிதத்தின் இறுதிச் சொற்கள்.

அவை 'யாருக்குச் சொந்தம்?' என்று முடிவுக்கு வர வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.

மயிலாஞ்சி எல்லையோடு நிறுத்திக் கொண்டிருந்தால் 'சவை நடுவே நீட்டோலை வாசியா' வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை குலாமுக்கு ஏற்பட்டிருக்காது!

ஃஃஃ

கருத்துகள் இல்லை: