புதன், அக்டோபர் 04, 2006

சிறப்புச் செய்திகள்-2

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முடவன், "வானம் ஏறி வைகுண்டம் போவேன்" என்று வாய்ச் சவடால் விட்டானாம். வாசகர்களுக்கு விளங்கியிருக்கும்! திண்ணையில் கடை விரித்து, குலாம் ரஸூல் விற்க முயன்ற மவ்லிதுச் சரக்கு [சுட்டி-1] எத்துணை உளுத்துப் போனது என்பதற்கு அவருடைய சரக்கிலிருந்தே நான் எடுத்துக் காட்டிய ஒரேயொரு சான்றான மவ்லிதுக் காவியத்தின் வில்லி தாரியாவின் 'முலையறு சபத'த்திற்கு [சுட்டி-2] பதில் சொல்ல வக்கற்ற குலாம், படைத்த இறைவனின் வேதச் சொற்களை ஏளனம் செய்வதைத் தொடர்கிறார். இதில் இவருடைய பெயர் குறித்து, திண்ணையின் பாதி இடத்தை அடைத்துப் பிலாக்கணமும் கூடவே. 

அது சரி, குலாம் என்ற 'யாரோ ஒருவரு'க்கு நான் அளிக்கும் விளக்கங்களுக்கு, மறுப்பு என்ற பெயரில் ஹெச்.ஜி. ரஸூல் என்பவர் ஏன் கிளை தாண்டிக் குதிக்க வேண்டும்? என்று வாசகர்கள் யாரும் கேட்டு விடக் கூடாது. இவர்தான் 'தீவிர விவாதம்' செய்யும் இஸ்லாமிய (?) முற்போக்கு (??) எழுத்தாளராம்! 

குலாமுடைய உளுத்துப் போன எழுத்துகளை இனங் காட்டுவதற்கு ஒரு வஹ்ஹாபி வீட்டு குலாம் (சிறுவன்) போதும். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களின் பாடங்களுக்கு ஊறு நேர்ந்து விடக் கூடாது என்பதால் நான் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். "தொடர்கிறார்" என்று இங்குக் குறிப்பிடுவதற்குக் காரணம் யாதெனில், 13 ஜனவரி 2006 நாளிட்ட திண்ணை இதழில் வெளியான இவருடைய கட்டுரையில் இறைமறை குர்ஆனில் இடம் பெறும் பல நிகழ்வுகளும் இறைவனின் கட்டளைகளும் இவரால் முன்பே ஏளனம் செய்யப் பட்டிருந்தன [சுட்டி-3]. 

'இறைவேதம்' என்று முஸ்லிம்கள் நம்புகின்றக் குர்ஆனை இவர் நம்ப மறுத்து ஏளனம் செய்வதால் குர்ஆனின் ஓரெழுத்துக்கும் குறைவு வந்து விடாது; இஸ்லாமுக்கு எவ்வித இழப்பும் ஏற்பட்டு விடாது என்பதை இனங் காட்டி, திண்ணையில் விளக்கமளித்திருந்தேன் [சுட்டி-4]. அதையெல்லாம் மறந்து விட்டு இப்போது 'நிழல் சண்டை' என்பதாக மாய்ந்து போகிறார் குலாம். எனக்கு குலாம்களோடு விளையாடுதலே விருப்பம்; சண்டையிடுதலன்று. இனி, விளையாட்டைத் தொடருவோம்: குலாமுக்கு என்னுடைய கேள்வி :
நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை?
குலாமுடைய உளறல்:
நபிகள் நாயகம் பிறந்த தேதி, நேரம், குறித்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எதற்கு என பூஞ்சைத்தனமான கேள்வியைக் கேட்கிறார் ஹாபி. (அப்படியா?) குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இல்லை எனில் எதையும் ஏற்கமாட்டோம், நிராகரிப்போம் என்று முழங்கி வருகிறீர்களே... நபிகள் நாயகத்தின் பிறப்பு விவரங்கள் குறித்து எதுவும் குர்ஆனில் இல்லை. உங்கள் தர்க்கவாத அடிப்படையில் குர்ஆன் ஹதீஸ் படி பிறக்காத ஒருவரை எப்படி இறுதிநபியாக பின்பற்றுவீர்கள்? அவர் மூலம் அறிவிக்கப்பட்ட திருக்குர்ஆனை அல்லாவின் வேதமாக எப்படி நம்புவீர்கள்....
கேள்வி என்ன என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத குலாமின் உளறலுக்குக் குர்ஆனின் விளக்கங்கள்: முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறைவனின் தூதர் [003:144] ; [048:029]. இறைவனிடமிருந்து அருள்மறை குர்ஆனை வஹீ எனும் இறைச் செய்தியாகப் பெற்றவர் [002:097, 004:163, 010:002-015, 018:110, 046:009, 053:002-004 ; 076:023]. எம் தலைவரைக் குறிக்கும் கருவுக்குத் தொடர்புடைய வசனங்களை மட்டுமே ஈண்டு எடுத்தாண்டு, மற்ற வசனங்களை விரிவஞ்சி விடுத்தேன். "அரிசியைச் சமைத்துச் சோறாக்கி உண்ணுங்கள்" என்ற அறிவுரையும்தான் குர்ஆனில் இடம் பெறவில்லை. தமிழ் முஸ்லிம்கள் உட்பட பன்னூறாயிரம் முஸ்லிம்கள் அரிசிச் சோறு சாப்பிடுவதால் இஸ்லாமுக்கு என்ன இழப்பு? குர்ஆன் என்பது பிறப்பு-இறப்புப் பதிவுப் புத்தகமன்று என்ற அடிப்படையைக்கூட அறியாத இந்த அறிவுசீவிதான் இறைவனுடைய சொற்களை மனிதர்களின் கவிதை வரிகளின் சாயல் இருப்பதாக ஆய்வாளர்கள் (?) ஒப்பிட்டுக் கூறுவதாகக் கூத்தடிக்கும் இஸ்லாமிய முற்போக்கு எழுத்தாளராம் - சிரிப்பை அடக்கிக் கொள்ளச் சிரமமாயிருக்கிறது!  

"இவர் முதலில் தான் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் புனைவு மொழி கதையாடல்களிலிருந்து இந்த சிறப்புச் செய்திகளை ஆரம்பிப்பதே சரியானதாகும்" என்பதாக வேண்டுகோள் என்ற பெயரில் ஓர் அறிவுரையும் குலாமிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கிறது. எதை, எப்படி ஆரம்பிக்க வேண்டும்; எப்படி 'பெருங்கதையாடல்களை' முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும். குர்ஆனையும் ஹதீஸையும் கதையாடல் என்று குறிப்பிடும் குலாமிடமிருந்தா நான் படித்துக் கொள்ள முடியும்? என்றாலும், குலாமுடைய வேண்டுகோளுக்கிணங்க குர்ஆனின் 19ஆவது அத்தியாயமான 'மர்யம்' வசனங்கள் 016 முதல் 024 வரைக்குமான விளக்கங்கள் இங்குத் தரப் படுகின்றன [சுட்டி-5]. அறிவுரையை அடுத்து, "தர்கா சியாரத்தையும் சாமி கும்பிடுவதையும் ஒன்றெனக் கூறும் வகாபியர்கள், கிராமப்புறங்களில் பத்திர காளி அம்மனுக்கும், கருப்பண்ண சாமிக்கும் ஆட்டை, மாட்டை பலி கொடுப்பதற்கும், முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளன்று ஆடுகளையோ, மாடுகளையோ, ராஜஸ்தானிலிருந்து வரவழைத்த ஒட்டகங்களையோ பலி கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?" என்ற குலாமுடைய வினா ஒன்றுக்கு, குர்ஆன் கூறும் விடையையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
"மேலும், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அல்லாஹ் உணவாக அருளியுள்ள(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவனுடைய பெயர் நினைவு கூரப்பட்டு அறுப்பதற்காகவே பலியிடுதலை(க் கடமையாக) விதித்திருக்கிறோம்" [022:034].
முஸ்லிம்கள் தம் இறைவனின் கட்டளையை ஏற்றுத்தான் ஹஜ்ஜின்போது மினாவில் மட்டுமின்றி, தம் இல்லங்களிலும் பலியிடுகின்றனர் என்பது குலாமுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் இது பாமர முஸ்லிம்களுக்கும் தெரிந்த மிகச் சாதாரணச் செய்தி. பத்ரகாளி அம்மன் மற்றும் கருப்பண்ணசாமிக்குப் பலியிடுவது குறித்தான விளக்கங்களை அவ்வாறு பலியிடும் 'கிராமப் புறத்து' நண்பர்களிடம் குலாம் கேட்டுத் தெளிவடைந்து கொள்ளட்டும். 

இறுதியாக, பொருத்தமான சிறப்புச் செய்தி-2:
"தென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து (!) நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்."
கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 234இல் 15-16 வரிகள் 5ஆவது ஹிக்காயத்தாக இச்சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. 

ஊரான் வீட்டு மாட்டைத் திருடி உண்டு கொழுப்பதுதான் குலாமுடைய கடைச் சரக்கான உளுத்துப் போன 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிதுக் காவியம் என்பது வாசகர்களுக்குத் தெளிவாகியிருக்கும். சமாதிப் புரோகிதர்களின் வயிறுகள் மட்டுமின்றி, எழுத்துப் புரோகிதர்களின் வயிறுகளும் எரிகின்றன என்றால் காரணமில்லாமலா? ஒருகாலத்தில் நிரம்பி வழிந்த உண்டியல்கள் வஹ்ஹாபிகளின் வரவால் இன்றைக்கு அதலபாதளத்தில்! 

சிறப்புச் செய்திகள் தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ

கருத்துகள் இல்லை: