ஞாயிறு, மார்ச் 11, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10

கஃபத்துல்லாஹ் என்பது, கஅபா என்ற, 'புனிதமும் புகழும் பெற்றுச் சிறந்துள்ளது' என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். புனித ஆலயமான கஃபத்துல்லாஹ்வை, 'கியாமன் லின்னாஸ்' - மனிதர்களுக்கு ஆதார ஸ்தலமாக, அபயம் அளிக்கக் கூடியதாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் [005:097]. ஆனால், கஃபாவோ தனக்கே அபயம் தேடக் கூடிய இடமாக ஆமினாவின் வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீட்டை நோக்கி ஸுஜூது செய்ததாகப் பாடுகிறார் உமறுப் புலவர்.

கஃபா என்றாலே புனிதத்தைத் தன்னகத்தே கொண்டது எனப் பொருளிருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா புனிதத்தையே அடைந்தது என்பதாக முரண்படக் கவிதை எழுதியுள்ளார் புலவர்.

"அவர்கள் (நன்றி செலுத்துவதற்காக) இந்த இல்லத்தின் இறைவனையே வணங்கட்டும்" [106:003] என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் இல்லத்தை நோக்கி இறைவனின் இல்லமான கஃபத்துல்லாஹ் ஸுஜூது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.

இவ்வாறு அல்லாஹ்வின் இல்லம், அவனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பவருடைய தாயின் வீட்டுக்கு ஸுஜூது செய்து புனிதமடைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப் புலவர்.
பெருமானாரின் புகழை நிமிர்த்திப் பாடுவதாக நினைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் இல்லமான கஃபத்துல்லாஹ்வின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிக்கின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்வான்? அவனுடைய அடியாரும் தூதருமாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை எப்படி அங்கீகரிப்பார்கள்?
"அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்?" [003:094], [061:007]
என அடுக்கிக் கூறுவதோடு,
"அப்பொய்யர்கள் (மறுமையில்) வெற்றியடைய மாட்டார்கள்" [010:069], [016:116]
என்றும் உறுதி செய்கிறது அருமறை குர்ஆன்.
"என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், தன் இருப்பிடத்தை நரகில் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது)
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் எச்சரிக்கையும் அவன் தூதருடைய எச்சரிக்கையும் இவ்வாறு இருக்க, இந்தச் சீறாப்புராணத்துக் காரருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அவருடைய கற்பனை வண்டவாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக்கொடி காட்டினார்கள் எனக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்?

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: