தாயுமானவருடைய குருநாதர்களாகிய சித்தர் குழுவினர் ஏழு கடல்களையும் குடிக்க வல்லவர்களாம். இந்திரலோகத்தையெல்லாம் எடுத்துக் கைக்குள் வைத்துப் பந்தாக விளையாடுவார்களாம். ஆகாய உலகத்தையும் அஷ்டகுல மலைகளையும் கடுகைத் துளைத்து அதில் புகுத்திவிடுவார்களாம். இத்தகைய ஆற்றல் மிக்க சித்தர்களே இந்த அடிமை முன் வர மாட்டீர்களோ என வேண்டுகிறார் தாயுமானவர்.
இந்தப் பாடல், குணஙுடியைப் பாதித்த விதத்தை இனிப் பார்ப்போம்:
அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள் அடக்கி
விளையாட வல்லீர்
அகிலமோர் ஏழினையும் ஆடும் கறங்கு போல் ஆட்டி
விளையாட வல்லீர்
மண்டலத்து அண்டரை அழைத்து அருகிருத்தியே வைத்து
விளையாட வல்லீர்
மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்து அதில்
மாட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகில் எழுகடலைப் புகட்டிக் கலக்கி
விளையாட வல்லீர்
கருதரிய சித்தெல்லாம் வல்லநீர் அடிமை என் கண்முன் வரும்
சித்தில்லையோ
நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர் நல்லடிக்காளாகியும்
நற்குணனங்குடி கொண்ட பாதுஷாவான குருநாதன் முகிய்யித்தீனே !
முஹ்யித்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்களுக்கு விளையாடுவதைத் தவிர வேறு வேலையே இல்லை என்பது போல குணங்குடி பாடுகின்றார். அதுவும் அன்னார் சாதாரண விளையாட்டு விளையாடவில்லை. அன்னார் பந்தாடுகின்றார் என்றால் அங்குப் பந்தாக இருப்பவை அண்ட கோடிகள்தாம். கறங்கு ஆடும்போதோ ஏழு உலகும் அவர்கள் கையில் காற்றாடி ஓலைகளாகி விடுகின்றன.
- தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக