வெள்ளி, நவம்பர் 15, 2019

கட்டப் பஞ்சாயத்து (அ) பாபரி மஸ்ஜித் தீர்ப்பு 2.0

டந்த 9/11 2.0 19இல் பாபரி மஸ்ஜித் நிலத்துக்கு இரண்டாவது கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வந்திருக்கிறது - இம்முறை உச்ச நீதிமன்றத்திலிருந்து.

முதல் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பைப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள இங்குச் சொடுக்குக!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மொத்தம் 1045 பக்கங்களுடன் வந்துள்ளது. அதன் இறுதிப் பகுதிகள், பக்கம் 920-929 வரையிலுமுள்ள தீர்ப்பின் வாசகங்களின் சுருக்கம்:

1- பாபரி மஸ்ஜித், கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்படவில்லை; ஆனால் அதன் கீழே இருந்தது வேறு ஏதோவொரு புராதனக் கட்டடத்தின் தூண்கள்.

2- 1949 டிசம்பர் மாதம் 22ஆம் நாளின் நள்ளிரவில் அபிராம் தாஸ் எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு கும்பல் பாபரி மஸ்ஜிதுக்குள் அத்துமீறிப் புகுந்து குழந்தை ராமர் சிலையை அங்கு வைத்தது குற்றச் செயலாகும்.

3- 1992 டிசம்பர் மாதம் 6ஆம் நாளில் பாபரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்தவர்கள் குற்றவாளிகள் ஆவர்.

4- 'பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?' எனும் (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் 30.09.2010 அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னவ் பெஞ்ச் வெளியிட்ட தீர்ப்புகள் செல்லாது.

5- பாபர் மஸ்ஜிதுக்குச் சொந்தமான 67 ஏக்கர் நிலமும், இந்த வழக்கின் முதல் வாதியான 'ராம் லல்லா' எனும் குழந்தை ராமருக்குச் சொந்தமானதாகும்.

***

பாபரி மஸ்ஜிதின் உண்மை வரலாறு

(1468)
பாபரி மஸ்ஜிதின் தொடக்கம் பற்றி, "அயோத்தியை ஆட்சி செய்து கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால், 1468இல் கட்டத் தொடங்கப்பட்டது என்று அந்தப் பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது" என்று தொல்லியலாளர் ஷெர்சிங் (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162) ஆவணப் படுத்தியிருக்கின்றார்.

ஷர்க்கிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த லோடி வம்ச மன்னரான இப்ராஹிம் லோடி, அந்தப் பள்ளிவாசலின் பெரும்பகுதியைக் கட்டினார். அப்போதெல்லாம் அந்தப் பள்ளிவாசல், “லோடி மஸ்ஜித்” என்ற பெயரில்தான் அறியப்பட்டது.

(1526)
21 ஏப்ரல் 1526இல் பானிபட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இப்ராஹிம் லோடி, மொகல் வம்சத்து பாபருடன் முதல் பானிபட் யுத்தத்தில் போரிட்ட போது கொல்லப்பட்டார்.

(1528)
இப்ராஹிம் லோடியை வெற்றிகொண்டதன் நினைவாக பாபர், தன் தளபதி மிர் பாகிக்கு உத்தரவிட்டு 1528இல் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டது. அது முதல் அந்தப் பள்ளிவாசல் ‘பாபர் மஸ்ஜித்’ என்று வழங்கப்பட்டது.

“பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் இந்துக் கோயிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜிதைக் கட்டினார்” என்று கி.பி. 1528 முதல் கி.பி. 1853 வரையிலான 325 ஆண்டுகளில் எவரும் குற்றம் சாட்டவில்லை.

(1853)
325 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாக 1853இல் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.

(1857)
வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக ஆற்காட்டு மவ்லவீ அஹ்மதுல்லாஹ் ஷா தமிழகத்திலிருந்து புறப்பட்டு, சென்ற வழியிலேயே விடுதலைக்கான வீர உரையாற்றி ஆயிரக்கணக்கான இந்து-முஸ்லிம் இளைஞர்களைத் தம் "ஜிஹாது"ப் படையோடு அழைத்துக் கொண்டு அயோத்திவரை சென்று ஆங்கிலேயரை எதிர்கொண்டார்.

பிற்காலத்தில் எதிரியாலும் சிலாகிக்கப்பட்டது அஹ்மதுல்லாஹ் ஷாவின் "ஜிஹாத்" வீரம்:
"The Moulvie was a very remarkable man. Of his capacity as a military leader, many proofs were given during the revolt... No other man could boast that he has twice foiled Sir Colin Campbell in the field. -Colonel G.B. Malleson in his 'Indian Mutiny'.

ஒரு கட்டத்தில், ஆங்கிலேயர் படை மவ்லவியால் முற்றுகையிடப்பட்டு உண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் பட்டினி கிடந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் அனுமான் ஹண்ட் கோயில் பூசாரிகளால் உணவு வகையில் உதவியளிக்கப்பட்ட ஆங்கிலேயப்படை, பின்னர் அதற்குப் பிரதியுபகாரமாகப் பூசாரிகளுக்கு ஒரு பரிசு வழங்கினர் - பாபரி பள்ளி வளாகத்தில். அதுதான் 'ராம் சபூட்ரா (இராமர் திண்ணை)'!

That much before 1855 Ram Chabutra and Seeta Rasoi had come into existence and Hindus were worshipping in the same. It was very very unique and absolutely unprecedented situation that in side the boundary wall and compound of the mosque Hindu religious places were there which were actually being worshipped along with offerings of Namaz by Muslims in the mosque.
(அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு 2010).

"பஜனை பாடிக் கொள்ள" என்று கூறி வெள்ளைக்காரனிடம் 'பரிசு' வாங்கிக் கொண்ட ராம் சபூட்ராதான் 1992 டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் முதல் கடப்பாறை.

(1859)
இந்து மகாசபை சந்நியாசிகள், பஜனை பாடுவதாக அவ்வப்போது பதற்றத்தை உருவாக்கினர். ஒரு காலகட்டத்தில் பதற்றம் அதிகரிக்கவே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர். மசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.

(1885)
மஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் முதன் முதலாக ராமருக்கு அங்குக் கோயில் எழுப்ப அனுமதிக்கக் கோரி ஃபரிதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு (எண் 61/280) தொடர்ந்தார். இந்த வழக்கை பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

(1866)
மஹந்த் ரகுபீர் தாஸ், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். அவரது முதல் அப்பீல் (27)ஐ பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் இரண்டாவது (122) அப்பீல் செய்தார். அதையும் பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

(1934)
பாபர் மஸ்ஜிதின் சுற்றுச் சுவர், இந்து மகாசபையினரால் சேதப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் அரசு, இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரைக் கட்டிக்கொடுத்தது.

 ***

பெரிதாகப் பிரச்சினைகள் ஏதுமின்றி, பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.
சுதந்திர இந்தியா பிறந்தது, பாபர் மஸ்ஜிதுக்குத் தலைவலி தொடங்கியது.

(1949)
22.12.1949 பின்னிரவில் அபிராம் தாஸ், ராம் சகல் தாஸ், சுதர்சன் தாஸ்  ஆகிய இந்து மகாசபையின் சன்னியாசிகள் 50-60 பேர்களுடன் பாபர் மஸ்ஜிதுக்குள் அத்துமீறிப் புகுந்து, முஅத்தின் முகம்மது இஸ்மாயீலைத் தாக்கித் துரத்திவிட்டு, கையோடு கொண்டுவந்த ராம் லல்லா (குழந்தை ராமர் - இந்தச் சிலைதான் 1949 முதல் 2019 ஆண்டுவரை நீதிமன்றங்களில் முதல் வாதியாக வழக்கு நடத்தி(!), இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் வென்றது) சிலையை திருட்டுத் தனமாக மஸ்ஜிதில் இமாம் தொழும் இடத்தில் வைத்து பூஜைகள் செய்த பின்னர் "ராமர் தானாகவே அங்குத் தோன்றினார்" என்று கப்ஸா விட்டனர். அந்த இரவு 'அயோத்தியின் இருண்ட இரவு' என்று இந்திய வரலாற்றில் இடம்பெற்றது (Ayodhya : The Dark Night - The Secret history of RAMA’s appearance in babri Masjid).

மறுநாள் (23.12.1949) காலையில் உத்திர பிரதேச மாநிலம், ஃபைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாஸ், ராம் சகல் தாஸ், சுதர்சன் தாஸ் ஆகிய சந்நியாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்  பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குதல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்தார்.

29.12.1949 அன்று  குற்றவியல் சட்டம் 145இன் கீழ் ஃபைஸாபாத் மாஜிஸ்ட்ரேட் K.K. நாயர், பாபர் மஸ்ஜிதைப் பூட்டி, கையகப்படுத்தினார். (பின்னர் இவர் சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தின் நான்காவது மக்களவையின் உறுப்பினராக ஜனசங்கத்தால் பதவி வழங்கப்பட்டார்) பாபர் மசூதி உள்ள இடம் பிரச்னைக்கு உரியது எனக் கூறி இரு தரப்பினரும் உள்ளே நுழைய மாநில அரசு அனுமதி மறுத்தது.

(1950)
5.1.1950 அன்று பிரியா தத் ராம் என்பவர் 'சர்ச்சைக்குரிய பகுதிக்கு' ரிஸீவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில்  கோபால்சிங் விஷாரத் மற்றும் ராமச்சந்திரதாஸ், ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில், நிலத்தைப் பிளந்துகொண்டு 'தானாகத் தோன்றிய' ராமர் சிலைக்குப் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.

(1958)
நிர்மோஹி அகாரா என்ற சாதுக்களின் அமைப்பு, ‘ராமர் பிறந்ததாகக் நம்பப்படும் இடத்தைத் தங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

(1961)
சன்னி சென்ட்ரல் போர்ட், ‘மசூதிக்குள் உள்ள சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனு தாக்கல் செய்தது.

(1984)
'பிரச்னைக்குரிய இடத்தில்' மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப் பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கிய பங்குவகித்தார். அவைத்யநாத் எனும் சன்னியாசியைத் தலைவராகக் கொண்டு  'தாலா கோலோ' (பூட்டைத் திற) இயக்கம் தொடங்கியது.

(1986)
‘பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று ஹரிசங்கர் துபே என்பவர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.

31.1.1986
வரவிருந்த தேர்தலை மனத்தில் கொண்டு, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, பாபர் மஸ்ஜிதின் கதவுகளை இந்துக்களுக்குத் திறந்துவிடுமாறு உத்தரப்பிரதேச முதல்வர் பீர் பகதூர் சிங்குக்குப் பரிந்துரைத்தார். முஸ்லிம்கள் தரப்பிலிருந்துக் கிளம்பிய கடும் எதிர்ப்பையும் மீறி, நீதிபதி K.M. பாண்டேயின் தீர்ப்பு மூலமாக பாபர் மஸ்ஜித் கதவுகள் இந்துக்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டன.

5.2.1986
பாபர் மசூதி ஆக்'ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.

(1989)
பாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது. இதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

(1990)
வி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர். அதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் சோம்நாத்திலிருந்து அத்வானி, ரத யாத்திரையைத் தொடங்கினார்.

(1991)
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க. ரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.

(1992)
டிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். அதில் அநேகர் முஸ்லிம்கள். இதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த முன்னாள் RSSகாரரான பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.

(1993)
பாபர் மஸ்ஜித் இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. அத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதித் திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

(2001)
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரையும் விடுதலை செய்தது. அப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

(2002)
உயர் நீதிமன்றம், பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா? என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி ‘ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.

(2010)
அலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டது. அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்றத் தீர்ப்பை, அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

(2017)
மார்ச் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில் “ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் ‘கால தாமதம்’ என்பது போன்ற ‘டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

2017 மார்ச் 17 ‘பாபர் மஸ்ஜித் இடிப்புச் சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது. ‘இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

2017 ஏப்ரல் 6 ‘அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னவுக்கு மாற்ற உத்தரவிட்டது.

2017 ஏப்ரல் 19 அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2017 மே 30 அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2017 ஆகஸ்ட் 8 ஷியா மத்திய வக்ஃப் போர்டு உச்ச நீதிமன்றத்திடம், ‘அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய இடத்தை விட்டுச் சற்று தள்ளி இஸ்லாமியர்கள் நிறைந்த மற்றோர் இடத்தில் மசூதி கட்டிக் கொள்கிறோம்’ என்று வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்தது.

2017 ஆகஸ்ட் 11 பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி குறித்த 13 முறையீடுகள் டிசம்பர் 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017 டிசம்பர் 5 பாபர் மசூதி இடிப்பு வழக்கை 2018 பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

(2019)
இடைப்பட்ட காலத்தில் 'நீதி மன்றங்களுக்கு வெளியே' பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளப் போவதாக ஒரு சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஃப்.எம். கலீஃபுல்லாஹ், 'வாழும் கலை' ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஶ்ரீராம் பன்சு ஆகிய மூன்று பேர் அடங்கிய சமரசக் குழு, மார்ச் மாதம் 13 முதல் ஆகஸ்ட் 2 வரை பேசித் தோற்றுப் போனது.

9.11.2019 உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது.
***

1- "பாபரி மஸ்ஜித், கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்படவில்லை; ஆனால் அதன் கீழே இருந்தது வேறு ஏதோவொரு புராதனக் கட்டடத்தின் தூண்கள்"

"சரிங்க மை லார்ட்"

2- 1949 டிசம்பர் மாதம் 22ஆம் நாளின் நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதுக்குள் அத்துமீறிப் புகுந்து குழந்தை ராமர் சிலையை அங்கு வைத்தது சட்டப்படி குற்றமாகும்.

"சரியாச் சொன்னீங்க மை லார்ட்" 

3- 1992 டிசம்பர் மாதம் 6ஆம் நாளில் பாபரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்தவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் ஆவர்.

"ரொம்ப கரெக்ட் மை லார்ட்"  

4- 'பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?' எனும் (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் 30.09.2010 அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னவ் பெஞ்ச் வெளியிட்ட தீர்ப்புகள் சட்டப்படி செல்லாது.

"சரியான தீர்ப்பைச் சொல்லிடுங்க மை லார்ட்"   

5- பாபர் மஸ்ஜிதுக்குச் சொந்தமான 67 ஏக்கர் நிலமும், மஸ்ஜிதை இடித்தவர்களும், இந்த வழக்கின் முதல் வாதியான 'ராம் லல்லா' எனும் குழந்தை ராமரின் குழந்தைகளுமான இந்துக்களுக்குச் சொந்தமானதாகும்.

"போங்கடா நீங்களும் ஒங்க தீர்ப்பும்"   


சனி, ஜூன் 18, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 32

பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட ஈஸா நபி (அலை) அவர்களைக்கூட இந்த ஸூஃபி அறிவிலிகள் அத்துவைதச் சிலுவையில் அறையத் தவறவில்லை. அவரையும் கடவுளாக, கர்த்தராக வழிபடுபவர்கள்தாம் இன்று பெரும்பான்மை ஜனத் தொகையினராவர்.

இந்த அத்துவைதக் கோட்பாட்டை அடித்துத் தகர்த்துவிட்டு, இறுதி நாள்வரை ஏகத்துவ வழிபாடு ஒன்றை மட்டுமே இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக இறைவனால் நபியாக அனுப்பப் பட்டவர்கள்தாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார். அவர்கள் தம் காலத்திலேயே இந்தத் தூய பணியை நிலை நிறுத்தி, அதில் மகத்தான பெருவெற்றியும் கண்டார்கள். அத்துவைதத்துக்கு அடிகோலக் கூடிய சிலைகள் தகர்ந்தன. தரை மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருந்த சமாதிகள் தவிடு பொடியாயின. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் எனும் கொள்கை ஓங்கி வளர்ந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார் எவருமிலர். இருப்பினும் அவர்கள்கூட அல்லாஹ்வின் அடிமையாகிய அடியார்தாம் என்பதை இஸ்லாம் மிக அழுத்தந் திருத்தமாக வரையறுத்து வலியுறுத்திக் கூறியுள்ளது.

நம்முடைய ஈமானைப் பறை சாற்றும் உயிர்க் கலிமாவின் உன்னத வாசகங்களைப் பாருங்கள்:

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ;
வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியுரைக்கிறேன். அவன் ஏகன்; அவனுக்கு இணை கிடையாது. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நிச்சமாக அவனுடைய அடியாரும் தூதருமாவார் எனவும் சாட்சியுரைக்கிறேன்.

இதுதான் நமது மூல மந்திரத்தின் முழுப் பொருளாகும்.

இந்தக் கலிமாவில் அல்லாஹ் யார்? நபி ஸல்லல்லாஹி அலைஹி வ ஸல்லம் யார்? என்பது மிகத் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப் பட்டுள்ளனர். அல்லாஹ்வுக்குரிய சிறப்பான தன்மைகள் இரண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சிறப்பான தன்மைகள் இரண்டும் இங்குப் பளிச்செனக் காணக் கிடக்கின்றன.

அல்லாஹ் ஒரே ஒருவன்தான். அவனுக்கு எத்தகைய கூட்டும் இல்லை என்பது அல்லாஹ்வுக்குரிய சிறப்பியல்புகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்தாம்; அவர்கள் அவனுடைய தூதராயிருக்கிறார்கள் என்பது நபிகளாரின் சிறப்பியல்புகளாகும்.

இந்தக் கலிமா, அத்துவைதக் கோட்பாட்டைப் புதை குழிக்கு அனுப்புவதற்காகவே புறப்பட்டு வந்தது போல் இல்லையா? ஆம். அதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களுமான ஸஹாபாப் பெருமக்களும் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள் என்பது இஸ்லாமிய வரலாறாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைவிட அல்லாஹ்வுக்கு நெருங்கிய மனிதர் வேறு யார் இருக்கிறார்கள்? அவர்களே அல்லாஹ்வின் அடியார்தாம் என்பதை நாம் சாகும் தறுவாயிலுங்கூட நினைவில் இருத்தத் தவறக் கூடாது.

இந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் அல்லாஹ் வந்து குடியிருந்து கொண்டான் என்றும் எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அல்லாஹ்தான் அல்லது அல்லாஹ்வின் ஒரு கூறுதான் என்றும் எவராவது கருதுவாரானால் அவர் கலிமாவைச் சரியாக விளங்காத பித்தராகத்தான் இருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு அல்லாஹ்வை இணைத்து அத்துவைதம் பேசுவதே மாபெரும் பாவ காரியமாக இருக்கும்போது, வேறொரு மனிதரைக் கொண்டு அல்லாஹ்வுடன் கூட்டாக்கி அத்துவைத அவியல் சமைப்பது எவ்வளவு தவறான செயல்?

இந்தத் தவறான விஷ உணவுதான் குணங்குடி மஸ்தான் பாடல் முழுக்கப் பரிமாறப் படுகிறது. குணங்குடி மஸ்தான் நூலின் முதற்பாடலை இங்குப் பார்ப்போம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மார்ச் 24, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 31

றைவனைத் தவிர உள்ள மற்றெல்லாமும் அவனது படைப்புகளே. அவனே படைப்பாளன். மற்றவை அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவனைப்போல எதுவுமில்லை. தன்னுடைய எல்லாப் படைப்புகளின் எல்லா இயக்கங்களையும் படைத்தவனாகிய அந்த அல்லாஹ் அனைத்தையும் உற்று நோக்குகின்றான்; நன்கு செவியுறுகிறான்.

இஃது இங்ஙனமிருக்க, குணங்குடி மஸ்தானோ படைப்புகள் யாவும் அல்லாஹ்வாகவே இருப்பதாகப் பிதற்றுகிறார். அவனே சூரியனாக, சந்திரனாக, ஒன்றாக, இரண்டாகவெல்லாம் இருப்பதாகக் கூறி இஸ்லாத்தைப் பரிகசிக்கிறார். மஸ்தான் எனும் இந்தப் பித்தருடைய இப்பிதற்றல்களுக்கு வேறுபல சுவையான பின்னணிகள் இருக்கின்றன.

குணங்குடி மஸ்தானுடைய ஆன்மீகக் குருநாதர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஆவார். முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை இவர் அல்லாஹ்வுக்கு இணையானவர் என்றே கருதுகிறார், கதை விடுகிறார். இவருடைய பாடல்களில் பெரும்பாலானவற்றில் 'குணங்குடி ஆண்டவன்' என்று இவர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியையே சுட்டுகிறார்.

'குணம்' என்பதை அல்லாஹ்வாகவும் அந்த அல்லாஹ்வாகிய குணம் முழுவதையும் தன்னுள் குடியிருத்திக் கொண்டவர் முஹைதீன் அப்துல் காதிர் எனவும் கருதுகின்றார் குணங்குடி மஸ்தான். எனவேதான் "குணங்குடி வாழும் முஹையித்தீனே!" என, பாட்டுக்குப் பாட்டுப் பாடிச் செல்கிறார்.

அதாவது, முஹையித்தீன் அப்துல் காதிரிடம் அல்லாஹ்வே குடியிருந்தான் என்ற அத்துவைதக் கோட்பாடுடையவர் இந்த வழிகெட்ட கவிஞர். அத்துவைதம் என்றால் என்னவென்று இங்குத் தெரியக் கடமைப் பட்டிருக்கிறோம்.

'துவைதம்' என்பதன் எதிர்ச் சொல்லே 'அத்துவைதம்' ஆகும். ஆண்டவன் (பரமாத்மா) வேறு; அடியான் (ஜீவாத்மா) வேறு; இவையிரண்டும் தனித்தனியானவை. ஒன்றோடொன்று எக்காலத்திலும் கலக்க முடியாதவை என்னும் கொள்கையே 'துவைதம்' எனப்படும். இந்தக் கொள்கையின்படி ஆண்டவன், எப்போதும் ஆண்டவனேதான். அடியான், எப்போதுமே அடியானேதான். அடியான் எவ்வளவுதான் புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டு எம்பிக் குதித்தாலும் - அதிகபட்சம் - ஆண்டவனுக்கு மிகமிக நெருக்கமான அடியானாகத்தான் ஆகமுடியுமேதவிர ஆண்டவனுக்கு இணையானவனாக, ஆண்டவனோடு கலந்துவிட்டவனாக ஆகவே முடியாது.

ஆனால், இதற்கு நேர் மாற்றமான கொள்கையைக் கொண்டுள்ளது அத்துவைதம் ஆகும். ஆண்டவனும் (பரமாத்வாவும்) அடியானும் (ஜீவாத்மாவும்) வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றேதான் என்பதே அத்துவைதக் கோட்பாடாகும். இந்த அத்துவைதக் கோட்பாட்டுக்காரர்கள் ஆண்டவனுக்கு உகந்தவர்களாக இவர்கள் நம்பும் அடியார்களையும் ஆண்டவனாகவே காண்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே இந்த அத்துவைதக் கோட்பாடு, பல வடிவங்களில் பாரெங்கும் பரவியிருந்தது.

பழமையான கிரேக்க, ஃபார்ஸித் தத்துவங்களும் நம் நாட்டு சைவ-வைணவச் சித்தாந்தங்களும் இந்த அத்துவைதக் கோட்பாடுகளையே மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களை அவர்கள் காலத்துக்குப்பின் மக்கள் கடவுளாகக் கருதி வழிபடலாயினர். அதற்கு அடிப்படையான காரணம், இந்த அத்துவைதக் கொள்கைதான். அல்லாஹ் வேறு, அடியார் வேறு என்பதல்ல; அல்லாஹ்வும் அடியாரும் ஒருவரேதான் என்று அம்மக்கள் எண்ணலாயினர்.

எனவே, திசைமாறிய மானுடர்கள் ஏகத்துவ விதையை வீசியெறிந்து விட்டு, பலதெய்வ வழிபாட்டுக் காளான்களை விளைத்தெடுத்துக் கொண்டார்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜனவரி 15, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 30

"னாகி, ஊனில் உயிராகி ..." எனத் தொடங்கும் பாடலில் வானாகி, கானாகி என்றெல்லாம் யாரைச் சொல்கிறார் குணங்குடி மஸ்தான்?

அல்லாஹ்வைச் சொல்கிறாரா? நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சொல்கிறாரா? முஹ்யித்தீன் அப்துல் காதிரைச் சொல்கிறாரா?
அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

யாரைச் சொல்வதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைப்படி இது மாபெரும் முரணுடையதாகும்.

"இப்பாடலில் இறைவனைத்தான் ஊனாகி, உயிராகி ... என்றெல்லாம் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்" என எஸ்.எம். சுலைமான் ஐஏஎஸ் தமது 'இசுலாமியத் தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்' எனும் நூலில் 'ஞான இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு' எனும் தலைப்பில் குறிப்பிடுகிறார்.

ஊனாக இருப்பவனும் இறைவன்தான்; உயிராக இருப்பவனும் அவன்தான்; ஒன்றாக இருப்பவனும் அவனே; இரண்டாக உள்ளவனும் அவனே; உள், வெளி, ஒளி, இருள், ஊர், பேர், காடு, மலை, கடல் ஆகிய எல்லாமாகவும் அவனே இருக்கிறான். காட்டு விலங்குகளாக இருப்பவனும் அவன்தான். இரவு, பகல், சூரியன், சந்திரன் மட்டுமின்றி, காணும் பொருட்கள், நான், நீ அவன், அவள், நாதம், பூதம் இவை ஒவ்வொன்றாக இருப்பவனும் அவன்தானாம்.

இதன்படி சூரியனை, சந்திரனை, மலையை, கடலை, ஒளியை, இருளை, ஒன்றை, இரண்டை, யாரோ ஓர் அவனை அல்லது அவளை, நாதத்தை, பூதத்தை, காட்டிலுள்ள யானை, புலி, சிங்கம் முதலிய விலங்குகளை, கல்லை, மண்ணை, கண்ட கண்ட பொருட்களை எதை வணங்கினாலும் அல்லாஹ்வை வணங்கியதுபோல்தான் என்று ஆகவில்லையோ?

"அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை; எதுவுமில்லை. அவன் ஏகன், அவனுக்கு இணையாக யாருமில்லை; எதுவுமில்லை எனச் சான்றுரைக்கிறேன்" எனும் இந்த உயிரினும் இனிய உறுதிப் பிரமாணத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி வெளிப்படையாக ஒத்துக் கொண்ட எவரும் இப்படிக் கூறத் துணிவார்களா?

"(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான். ... மேலும் அவனுடன் ஒப்பிடத் தக்கது எதுவுமேயில்லை" (அல்குர் ஆன் 112:001-004).
"அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். உங்களிலிருந்தே (உங்கள்) ஜோடிகளையும் அவன் உங்களுக்காகப் படைத்தான். கால்நடைகளையும் ஜோடி-ஜோடியாகப் படைத்தான். உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்" (அல்குர் ஆன் 042:011).
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, நவம்பர் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 29

இவருக்குக் 'குணங்குடியார்' என்ற பெயர் ஏன் வந்தது? இவர் அதை ஒரு குறிச்சொல்போல் தமது பாடல்களில் கூறுகிறார். அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லும்போது குணங்குடி ஆண்டவன் என்கிறார்:
ஆண்டவன் என்செய்வானோ - குணங்குடி
ஆண்டவன் என்செய்வானோ
ஆண்டவன் அணைத்து என்னை அருகில் வைத்திடுவானோ
தீண்டியும் பார்க்காமல் தெருவில் விட்டிடுவானோ
எனப் பாடுகிறார்.
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே
எனப் போற்றும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்குக் குணங்குடி என்ற அடையைக் கொடுக்கிறார்.
சற்குணங்குடி கொண்ட ஷாஹுல் ஹமீதரசரே
எனச் சொல்லும்போது நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களோடும் குணங்குடியை இணைத்துப் பேசுகின்றார்.
இனி, தன்னைப் பற்றிப் பாடும்போதும் குணங்குடியான் எனச் சுட்டுகிறார்:
ஐயன் குணங்குடியானை அன்றி வேறு
உண்டென்று உள்ளாய்ந்து பார்த்தேன்
ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும்
என்னுள்ளாய்க் காணேன்
ஐயன் குணங்குடியானே யானே
என்று அறிந்த பின்பு, என் அறிவாய் நின்ற ஐயன்
குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே
என அமைகிறது பாடல்.

ஆக, இவருடைய பார்வையில் அல்லாஹ், முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாஹுல் ஹமீது ஆகியோரும் இவரும் குணங்குடியார்கள்தாம். இவருடைய பாடல் போக்கைப் பார்த்து, இந்த நால்வருள் யாரைக் குணங்குடியான் எனச் சுட்டுகிறார் என்பதை, படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ரு சோற்றுப் பதமாக இங்குத் தரப்பட்டுள்ள பாடல்களையும் இவரது நூலிலுள்ள இன்னபிற பாடல்களையும் ஒருங்கு நோக்கிப் பார்க்கும்போது, "எல்லாரும் அல்லாஹ்வே" என்ற கொள்கையை - வஹ்தத்துல் உஜூத் - எனும் அத்துவைதக் கொள்கையை உடையவராகக் குணங்குடி மஸ்தான் இருந்துள்ளார் எனும் முடிவுக்கு வருகின்றோம்.

இதன்படி முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களும் இவருடைய பார்வையில் அல்லாஹ்வாகவே படுகின்றனர். இவருடைய உள்ளத்தில் அல்லாஹ் இருக்கிறானாம். அதனால் இவரும் அல்லாஹ் ஆகிவிடுகின்றார்.

"ஐயன் குணங்குடியானே யானே என்று அறிந்த பின்பு ..." எனும் வரியில் குணங்குடியாகிய அல்லாஹ் நானே என்பதைத்தானே சுட்டுகிறார். இன்னும் காண்கின்ற பொருள் எல்லாமே இறைவன்தான் என்பதைப் பறைசாற்றும் பித்தன் மஸ்தானின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்:
ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய் ஒன்றாய் இரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகிக்
கானாகி அலையாகி அலைகடலுமாகி மலை
கானக விலங்குமாகிக்
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள் எவையுமாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி
நாடும் ஒளிபுரிய அடியெனும் உமை நம்பினேன் நன்மை செய்து ஆளுதற்கே
வானோரும் அடிபணிதலுள்ள நீர் பின்தொடர வள்ளல் இரசூல் வருகவே
வளரும் அருள் நிறை குணங்குடி வாழும் என் இரு கண்மணியே முகியித்தீனே.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், செப்டம்பர் 30, 2010

கட்டப் பஞ்சாயத்து (அ) பாபரி மஸ்ஜித் தீர்ப்பு

ந்திய வரலாற்றில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற 'பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?' எனும் (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் இன்று (30.09.2010) அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னவ் பெஞ்ச் தீர்ப்பு(கள்) வெளியிட்டிருக்கிறது.
http://www.youtube.com/watch?v=JIO6nme7EuA
தீர்ப்பின் சுருக்கம் என்னவென்றால், பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதற்கு பாபரின் பெயரால் பத்திரப்பதிவு (ரிஜிஸ்ட்ரேஷன்) இல்லை; பட்டாவும் இல்லை. அதனால் அதை 3 பங்கு வைத்து, அதில் ஒரு பங்கை போனால் போகிறதென்று முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் மீதி இரண்டு பங்கையும் இந்துக்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் தீர்ப்பாகியுள்ளது.

இந்துக்களிடம் பத்திரமோ பதிவோ பட்டவோ இருக்கிறதா? என்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ஏனெனில், தீர்ப்புக்கு முன்னரே "மத நம்பிக்கையில் நீதி மன்றங்கள் குறுக்கிடக் கூடாது" என்று இந்துமத அமைப்புகள் பலமுறை நீதிபதிகளை அன்புடன் எச்சரித்திருக்கின்றன. அந்த எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

அயோத்தியைப் பற்றிய உண்மையான இந்து மதநம்பிக்கை என்ன?
இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில்தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்தப் பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது.  16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை.
11ஆம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார். தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
- வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள 'வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும்' என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். 1990 வெளியீடு பக்கம்-34,35).
மத்திய காலம்வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தைவிட, சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில்தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது ...
- வரலாற்றாசிரியர் சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியது (இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89).

1850 வாக்கில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக ஆற்காட்டு மவ்லவீ அஹ்மதுல்லாஹ் ஷா தமிழகத்திலிருந்து புறப்பட்டு, சென்ற வழியிலேயே விடுதலைக்கான வீர உரையாற்றி ஆயிரக்கணக்கான இந்து-முஸ்லிம் இளைஞர்களைத் தம் "ஜிஹாது"ப் படையோடு அழைத்துக் கொண்டு அயோத்திவரை சென்று ஆங்கிலேயரை எதிர்கொண்டார்.

பிற்காலத்தில் எதிரியாலும் சிலாகிக்கப்பட்டது அஹ்மதுல்லாஹ் ஷாவின் "ஜிஹாத்" வீரம்:
"The Moulvie was a very remarkable man. Of his capacity as a military leader, many proofs were given during the revolt... No other man could boast that he has twice foiled Sir Colin Campbell in the field. -Colonel G.B. Malleson in his 'Indian Mutiny'.

ஒரு கட்டத்தில், ஆங்கிலேயர் படை இவரால் முற்றுகையிடப்பட்டு உண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் பட்டினி கிடந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் அனுமான் ஹண்ட் கோயில் பூசாரிகளால் உணவு வகையில் உதவியளிக்கப்பட்ட ஆங்கிலேயப்படை, பின்னர் அதற்குப் பிரதியுபகாரமாகப் பூசாரிகளுக்கு ஒரு பரிசு வழங்கினர் - பாபரி பள்ளி வளாகத்தில்.அதுதான் 'ராம் சபூட்ரா (இராமர் திண்ணை)'!
That much before 1855 Ram Chabutra and Seeta Rasoi had come into existence and Hindus were worshipping in the same. It was very very unique and absolutely unprecedented situation that in side the boundary wall and compound of the mosque Hindu religious places were there which were actually being worshipped along with offerings of Namaz by Muslims in the mosque.

"பஜனை பாடிக் கொள்ள" என்று கூறி வெள்ளைக்காரனிடம் 'பரிசு' வாங்கிக் கொண்ட ராம் சபூட்ராதான் 1992 டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் முதல் அடிப்படைக் கடப்பாறை.

"பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தின்கீழ் இராமனுக்குக் கோயில் இருந்ததா?" என்பதை விசாரித்துச் சொல்லுமாறு நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தைக் கேட்டபோது, "அது எங்கள் வேலையில்லை" என்று உச்சநீதிமன்றம் பதிலளித்து இருந்தது.

இப்போது அலஹாபாத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி ஷர்மா தனது தீர்ப்பில், "கடவுள் இராமன் பிறந்த இடத்தின் மீதுதான் பாபர் பள்ளிவாசல் கட்டினார்" என்று நேரில் நின்று பார்த்ததுபோல் சூடம் கொளுத்தி இருக்கிறார்

நீதிபதி ஷர்மாவுக்கு 'அனுபோகச்சட்டம்' என்றால் என்னவென்றும் தெரியவில்லை; இந்துமத நம்பிக்கை, வழிபாட்டு ஆகமம் போன்றவையும் தெரியவில்லை.

ஒரு கோயிலில் உள்ள சிலைக்கு 12 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் செய்யவில்லை என்றால் அந்தச்சிலை, கடவுள் சிலையாகக் கருதப்பட மாட்டாது. அது இருக்கும் இடத்தைக் கோயிலாகவும் கொள்ளக் கூடாது.

எனில், 22.12.1949 இரவில் திருட்டுத்தனமாக பாபரி மஸ்ஜிதுக்குள் வைக்கப்பட்ட சிலை கடவுளுமல்ல; அது இருந்த இடம் கோவிலுமல்ல.

போலவே, வழிபாடு நடந்து கொண்டிருந்த இராமன் கோயிலை இடித்துவிட்டு பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது எனும் குறிப்பு எங்குமே காணப்படவில்லை.

இவற்றையெல்லாம் மீறி, காவிக்கூட்டத்தின் ஊதுகுழலாகத்தான் நீதிபதி ஷர்மாவின் தீர்ப்பு அமைந்திருகிறது:
"... Justice D V Sharma ruled that the disputed site is the birth place of Lord Ram and that the disputed building constructed by Mughal emperor Babur was built against the tenets of Islam and did not have the character of the mosque ..."
"... Justice DV Sharma in his minority verdict said the “disputed structure cannot be treated as a mosque as it came into existence against the tenets of Islam ..."
  1. சர்ச்சைக்குரிய கட்டடம் ராமன் பிறந்த இடத்தில் கட்டப்பட்டது.
  2. சர்ச்சைக்குரிய கட்டடம் மொகலாய மன்னன் பாபரால் கட்டப்பட்டது.
  3. அந்தக் கட்டடம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிராகக் கட்டப்பட்டு, மஸ்ஜித் என்பதற்கு அருகதையற்றதாக இருந்தது.
  4. சர்ச்சைக்குரிய கட்டடம், மஸ்ஜிதாகக் கருதப்படக் கூடாது.
ஆகியன நீதிபதி ஷர்மாவின் காவிக்கருத்துகள்.

இந்திய முஸ்லிம்களின் கேள்வி என்னவென்றால், "மஸ்ஜிதாகக் கருதுவதா? வேண்டாமா? அங்குத் தொழுவதா? கூடாதா? என்பதெல்லாம் முஸ்லிம்களுடைய கவலைகள், பிரச்சினைகள். அதைப்பற்றிக் கருத்துச் சொல்ல நீ யார்?"

"1,2,3,4இல் உள்ளவற்றைச் சொல்லிவிட்டு, அப்புறம் என்ன ...க்கு 1/3 நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்று தீர்ப்புச் சொல்கிறாய்?"
  • 'பாபர் பள்ளிவாசல்' எனப் பிற்பாடு வழக்கில் வந்தது பாபரினால் கட்டப்பட்டது அல்ல என்பதும்
  • அந்தப் பள்ளியின் தொன்மைப் பெயர் 'லோடி மஸ்ஜித்' என்பதும்
  • "அயோத்தியை ஆட்சி செய்து கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468இல் கட்டப்பட்டது என்று அந்தப் பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது" என்று தொல்லியலாளர் ஷெர்சிங் (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162) ஆவணப் படுத்தியிருப்பதும்
நீதிபதி ஷர்மாவுக்குத் தெரியாது என்று நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறுவழி?

நீதியைத் தகர்க்கும் காவிக்கடப்பாறையின் இலக்கு அலஹாபாத்தோடு நின்றுவிடுமா அல்லது உச்சநீதிமன்றம் வரையும் பாயுமா? காத்திருப்போம்!

60 ஆண்டுகள் காத்திருந்த ஏமாளிச் சமுதாயம் இன்னும் சில/பல ஆண்டுகள் காத்திருக்காதா என்ன - மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு?

(குறிப்பு : மேற்காணும் தகவல்கள் சில பேரா. அருட்செல்வனின் 'பாபரி மஸ்ஜித் ராமஜன்ம பூமியா?' எனும் நூலில் இருந்து பெறப்பட்டவை)

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 28

சுல்தான் அப்துல்கதிர் என்பது குணங்குடி மஸ்தானின் இயற்பெயராகும். பிறப்பு 1207ஹி தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.
"அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் பதாகை (கோவணம்?) அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும்  நீங்கி விட்டனர்.
'முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்' - அப்துர் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1990 - பக்கங்கள் 456, 457.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில் ஹிஜ்ரீ 1254இல் அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான 'தொண்டியார் பேட்டை', இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.

இவர் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஸூஃபிக் கவிஞர் எனச் சுட்டப்படுகிறார். இறைவனையும் நபி (ஸல்) அவர்களையும் பற்றியும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்), நாகூர் ஷாஹுல்ஹமீது (ரஹ்) ஆகியோரைப் பற்றியும் இவர் பாடல்கள் பல பாடியுள்ளார். முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களைத் தம் ஆன்மீக குருவாகக் கொண்டிருந்தார் குணங்குடி.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 31, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 27

னி, "போவோம் குணங்குடிக் கெல்லோரும்".

அதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை சில உள்ளன. இஸ்லாமிய இலக்கியப் புலவர்கள் என்று சொன்னதுமே, "உமருப் புலவர் காப்பியம் பாடியவர்; குணங்குடி மஸ்தான் மெய்ஞானக் கவிஞர் எனப் பலராலும் பாராட்டப் படுபவர்" என்பதுதான் நம்மில் பெரும்பாலோரின் கருத்தில் வரும்.

உமருப் புலவராயினும் குணங்குடி மஸ்தானாயினும் இன்னபிற தமிழ் முஸ்லிம் புலவர்களாயினும் அவர்கள் அனைவரும் இயற்றிய அனைத்துமே இஸ்லாத்துக்கு முரணான குப்பைகள் என்றெல்லாம் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு ஒதுக்கித் தள்ளிவிடுவது நமது நோக்கமன்று.

அவர்களின் பாடல் தொகுப்புகளில் பல நல்ல கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு வேட்டு வைக்கின்ற பல சமூக விரோதச் சங்கதிகளும் அவற்றுள் அடங்கிக் கிடக்கின்றன.

இவர்களுடைய பாடல்களின் 'சிறப்பம்சங்கள்' பற்றி நாம் பல மேடைகளில் பேசியும் பல வால்யூம்களில் எழுதியும் வந்திருக்கிறோம். நாளடைவில் இக்கவிஞர்களை "நாதாக்கள்; வலீயுல்லாக்கள்" எனப் போற்றிப் புகழ்ந்தது போதாதென்று இவர்களுக்கு உரூஸ்களும் நம்மில் சிலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் புலவர்கள், "வலீயுல்லாக்கள்-இறைநேசர்கள்" என்ற அடைமொழிகளோடு இன்றைய தமிழ் உலகத்துக்கு இனங் காட்டப் பட்டுள்ளனர். இதன் விளைவாக, இந்த வலீயுல்லாப் புலவர்களின் ஒட்டுமொத்த எல்லாப் பாடல்களுக்கும் ஒரு 'விலாயத்' எனும் இறைநேச முத்திரை குத்தப்பட்டு அவையெல்லாம் பக்திப் பரவசத்தோடு இன்று பலரால் அணுகப் படுகின்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டன.

இங்கு நாம் இந்தப் புலவர்களின் இறைநேசம் பற்றிப் பேசவரவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. இவர்களுடைய பாடல்களாக நமக்குக் கிடைப்பவற்றை இஸ்லாமிய உரைகல்லில் உரசிப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, குர்ஆன்-ஹதீஸ்களின் கோட்பாடுகளோடு நேரடியாக முரண்படுகின்ற எத்தனையோ கருத்துகள் இப்புலவர்களால் பாடப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது. "இப்புலவர்களின் எல்லாப் படைப்புகளும் கொள்ளத் தக்கவை அல்ல; அவற்றுள் தள்ளத் தக்கவையும் இடம்பெற்றுள்ளன" என்பதை எடுத்துச் சொல்வதே நம் நோக்கமாகும்.

"நம்முடைய இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களிலேயே இஸ்லாத்துக்கு முரணான போக்குகளா? அது எப்படி இருக்க முடியும்? இவற்றைப் பாடிய நாதாக்கள் - ஸூஃபிகள் - வலியுல்லாக்கள் சாமானியமானவர்களா என்ன? கால் குழியிலேயே கஅபத்துல்லாவை தரிசித்தவர்களல்லவா அவர்கள்?" போன்ற தனிமனித வழிபாட்டுத் திரைகளால் தங்கள் அறிவுப் பார்வையை மறைத்துக் கொண்டவர்கள், நமது விளக்கங்களைத் தீண்டத் தகாதவையாகக் கருதுகின்றனர்.

இன்னும் சிலர், "அப்படியே நம்முடைய இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளில் இஸ்லாத்துக்கு முரணான கருத்துகள் இடம்பெற்றிருந்தாலுங்கூட அவற்றை நாமே ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?" எனக் கேட்கின்றனர். "நம்முடைய புலவர்களின் பாடல்களில் உள்ள முரண்பாடுகளைத் தோண்டித் துருவி எடுத்தெழுதும் கோடாறிக் காம்புகளாக நாமே மாறிவிடுவதா?" எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமா நஸ்ரினோ, அருண்ஷோரியோ, ராம் ஸ்வரூப்போ இஸ்லாத்துக்கு முரணான எதையேனும் இஸ்லாம் என்பதாக எழுதினால் ஒட்டுமொத்தமாகக் கொதித்தெழுகின்றனர் நம்மவர். ஆனால், நம்மூர்ப் புலவர்கள் இஸ்லாத்தின்மீது வீசியுள்ள புழுதிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்; அல்லது கண்டுகொள்ள மறுக்கின்றனர். இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நோகடிக்கின்ற - சாகடிக்கின்ற இத்தகையக் கவிதைகள் பல 'இஸ்லாமிய இலக்கியம்' எனும் போர்வையில் உலா வரும்போது, அவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து விலகிக் கொள்வதில் நாம் விழிப்பாயிருத்தல் வேண்டும்.

இந்த வகையில் குணங்குடி மஸ்தானின் நிலை என்ன? என்பதை இனிக் காண்போம். அவருடைய பாடல்களில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூன் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 26

தற்குப் பின்னரும் ஸூஃபிஸம் உயிரோடுதான் இருந்தது. அதற்குப் புத்துயிர் ஊட்டியவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஹிஜ்ரீ 450முதல் 505வரை ஈரானில் வாழ்ந்திருந்த கஸ்ஸாலீ ஆவார். அவருக்கும் பின்னர் ஹிஜ்ரீ 560இல் வருகிறார் இப்னு அரபி எனும் ஸூஃபி. இந்த இப்னு அரபிதான், தன் காலத்துக்கு முன் இருந்த ஸூஃபிக் கோட்பாடுகளை எல்லாம் நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பினார். 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரணமும் இவரால்தான் சூட்டப்பட்டது.

இப்னு அரபியை ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றெல்லாம் ஸூஃபிக் கட்சியினரால் ஆஹா, ஓகோ எனப் பாராட்டப்படும். இவர் எந்த அளவுக்கு வழிகேட்டில் ஊறித் திளைத்தார் என்பதை அவருடைய கவிதைகளைப் படித்த மாத்திரத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.

இபுனு அரபி பாடுகிறார்:
வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது.
இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்;
சிலைகள் கொலுவிருக்கும் கோயில்;
அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி;
ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி;
தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே;
குர் ஆன் வேதமும் இதுவே;
நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன்.
அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே.
அன்பு எனும் மதமே என்னுடையது;
அதுவே என் நம்பிக்கை.
சமயங்களின் பெயரால் பிரிவினை பேசுவதை ஸூஃபிகள் வெறுத்தனர். எல்லாச் சமயங்களும் மூலநிலையில் ஒரே உண்மையைச் சொல்கின்றன என்பது ஸூஃபிகளின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இப்னு அரபியிடம் இப்படிக் கவிதையாக உருவெடுக்கிறது.

இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் என்கிறார் இப்னு அரபி:
அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி
அவனுடைய சாயலில் என்னைப் படைத்து
என்னைப் புகழ்கிறான்.

நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி
அவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனைப் புகழ்கிறேன்.

அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இருக்க முடியும்?

இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.
நான் அவனை அறிகிறேன்;
அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.
இஸ்லாத்தில் மட்டுமில்லாமல் ஏனைய மதங்களிலும் தெய்வீக உண்மைகள் பொதிந்திருக்கின்றன; அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இப்னு அரபியின் கருத்தாகும்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே.
மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர்.
காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்.
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய
கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு;
மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை.
அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர்.
ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு மதத்தினரையும் அன்பினால் தழுவிக் கொள்வதற்கேற்ற வகையில் சயமப் பொறுமையையும் அனுசரித்துப் போதலையும் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் இப்னு அரபி.

"ஒரே உண்மைப் பொருளின் ஒப்பற்ற ஜோதிதான் பள்ளிவாசலிலும் கிறித்துவ திருச்சபைகளிலும் கோவிலிலும் எரிகிறது" என்பது இப்னு அரபி போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் கருத்தாகும்.

இன்று வாழும் ஸூஃபிகள், இபுனு அரபியின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களேயாவர்.

எனவே, ஸூஃபிஸமாயிருந்தாலும் அத்துவைதமாக இருந்தாலும் அல்லது வேறெந்தத் தத்துவமாக இருந்தாலும் அவற்றை குர்ஆன்-ஹதீஸில் ஒப்பிட்டுப் பார்த்து, குர்ஆன்-ஹதீஸுக்கு முரண்படுபவற்றைத் தூக்கித் தூர எறிவோமாக!

குர்ஆன்-ஹதீஸை மட்டுமே பின்பற்றி, உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போமாக!

இந்தக் கொள்கை உறுதியை மனத்தில் இருத்திக் கொண்டு, தமிழ்நாட்டு ஸூஃபிப் புலவர்களின் இலக்கியங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

தமிழ்ச்செல்வனுக்கு ...

டந்த 08.01.2010 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது.

இந்தியாவின் பிரிவினை சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது" எனும் வரிகளை மறுத்து, "வஹ்ஹாபியின் மோசடி" எனும் தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பார் பாகிஸ்தானுக்குப் போட்டுக் கொடுத்த இந்திய முஸ்லிம்கள் என்பதாக ஐந்து சுட்டிகளைக் கொடுத்திருந்தார் [ சுட்டி-02].

அவற்றுள் முதலாவதில் [சுட்டி-03] அஃப்ரோஸ் என்பவன் நமது இராணுவ முகாம்களைப் பற்றிய தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுக்க' முயன்று கடந்த 11.08.2006ஆம் தேதி ராம்பூரில் கைது செய்யப் பட்டு, 19.02.2009 அன்று லக்னவ் நீதிமன்றத் தீர்ப்புப்படி பத்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவன்.

அஃப்ரோஸ் வழக்கில் நாம் கருத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில், தன் உறவினர்களின் பொது நலன் கருதி அவன் போட்டுக் கொடுத்தவன் அல்லன். யாரோ போட்டுக் கொடுத்ததைக் காசுக்காக "வாங்கிக் கொடுக்க" முயன்று தோற்றுப் போனவன்.

"அஃப்ரோஸிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இரகசியக் குறியீடுகளைக் கொண்டவை என்றும் ஆனால் இரகசியத் தகவல்களை அவன் எவ்வாறு பெற்றான் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நமது இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியிருக்கிறார்" என்பதாக மாவட்டக் குற்றப் பிரிவின் துணை ஆலோசகர் இர்ஃபான் அஹ்மது கான் குறிப்பிட்டதை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் 21.02.2009 இதழ் Pakistani spy gets 10-year jail term என்று பொருள் மயக்கம் தரும் தலைப்போடு வெளியிட்டுள்ளது [சுட்டி-04].

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நடைபெற்ற விசாரணையில் நமது இராணுவ இரகசியங்களை அவனுக்குப் 'போட்டுக் கொடுத்த' புள்ளி யார் எனும் தகவலை அவனிடமிருந்து கறக்க முடியவில்லையா? அல்லது புள்ளி பெரியது என்பதால் வெளியிடவில்லையா? என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்கள்.

தண்டனை கொடுக்கப்பட்ட இன்னொரு வழக்கில், ஜஹான் ஆரா எனும் பெண் வருகிறாள். தொலைக்காட்சி வழியாக உலகம் முழுக்கக் காண்பிக்கப் படும் நமது குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் ஆயுதங்களை நிழற்படம் எடுத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அவனிடமிருந்து 10 கையெறி குண்டுகளைப் பெற்று அவற்றுள் எட்டை முஸாஃபர் நகரைச் சேர்ந்த இஃப்திகார் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் வழக்கு. அவள் 20.09.1994இல் கைது செய்யப்பட்ட இடம் பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகம். Terrorist And Disruptive Activities (Prevention) Act (TADA) மற்றும் Official Secrets Act (OSA) விதிகளின்படி அவளுக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐயாயிரம் அபராதமும் விதித்து (ஏழாண்டுகள் கழித்து) 07.03.2001இல் உ.பி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கையெறி குண்டுகள் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை இஃப்திகாரிடமிருந்து கைப்பற்ற முடியாமல் அரசுத் தரப்புக் கையைப் பிசைந்து நின்றதால் அவன் வழக்கிலிருந்தே விடுவிக்கப் பட்டான் [சுட்டி-05].

மற்ற மூன்று சுட்டிகளில் உள்ள தகவல்கள் கைதுப் படலம்வரை நின்று விடுபவை. வழக்கு நடந்ததா? தீர்ப்பு வந்ததா? போன்ற கூடுதல் விபரங்களைப் பெற முடியவில்லை. அவற்றுள் 1995இல் இராணுவத்தில் இணைந்த முஹம்மது நஸீம் என்பவனது வழக்கு முக்கியமானது. அவன், கார்கில் தியாகி அஹ்மது அலீ [சுட்டி-06] வகித்த Lance Naik பதவி வகித்தவன். அவன் 2006 மார்ச் மாதம் அலீ ஜாட்டூன் எனும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நமது இராணுவ நிலைகள், வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்ற தகவல்களை ஏஜண்டுக்குத் தெரிவித்ததாக 29.06.2007இல் டெல்லியில் வைத்துக் கைது செய்யப் பட்டான்.

நமது இராணுவம் ஒளிந்து கொண்டோ துப்பாக்கிகளை ஒளித்து வைத்துக் கொண்டோ போர் செய்யவில்லை. வேண்டிய தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம் [சுட்டி-07]. அமெரிக்காவினால் இரண்டாவது செல்லப் பிள்ளையாகத் தத்து எடுக்கப்பட்ட பாகிஸ்தான்காரன் இதுபோன்ற சப்பைத் தகவல்களுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறான் [சுட்டி-08] என்றால் நிச்சயம் அவன் கேனையன்தான். அவன் கேனையனாகவே இருக்கட்டும்; அதுதான் நமக்கு நல்லது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்ற மோரீகான் மற்றும் அப்பாஸ்கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தானின் உளவுத்துறையினர் என்று 'சொல்லப் படுகின்ற' சிலர் அணுகி இந்திய இராணுவத்தைக் குறித்துத் தகவல் கேட்டதாகவும் கைப்பேசி வழியாக இருவரும் காசுக்காகத் தகவல்கள் கொடுத்ததாகவும் 'சொல்லப் படுகின்ற' வழக்கும் ஒன்று. இதில் reportedly working as spies, Morey apparently told cops போன்ற சொற்கள் மூலம், வழக்குக் கெட்டிப் படுத்தப் படாமல் இருப்பதாக அறிய முடிகிறது [சுட்டி-09].

இறுதியாக, கைப்பேசிகளும் பாகிஸ்தானியப் பணமும் வைத்திருந்ததாக அனீஸ்கான், அனீக்கான், கோராகான் ஆகிய மூவரை 04.05.2007இல் கைது செய்த வழக்கு [சுட்டி-10]. மூவரையும் Official Secrets Act (OSA) விதியின்கீழ் நமது இராணுவம் கைது செய்து ஃபாஸில்கா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் வெறும் சுட்டிகளாகக் கொடுத்தவற்றைத் தேடிப் பிடித்து இங்கு நான் விளக்கமாக எடுத்து வைப்பதற்குக் காரணம், என்னைப் போன்றே வாசகர்கள் பலருக்கு/சிலருக்கு மேற்காண்பவை புதிய தகவல்களாக இருக்கக் கூடும். இணையத்தில் "உளவு" எனும் சொல் குறித்துத் தேடியபோது மாலிக் என்பவனைப் பற்றி மரைக்காயர் எனும் பதிவர் தனது வலையில் விபரம் கொடுத்திருந்தார் [சுட்டி-11]. அப்பதிவின் அடியில் கண்ட தொடர்புடைய அவரது பழைய பதிவுகளான

ஆகியவற்றைப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனேன்! திண்ணை வாசகர்கள் சிலருக்காவது அவை புதிய தகவலாக இருக்கக் கூடும். தகவல் தெரியாத திண்ணை வாசகர்களை, "மோசடி"க்காரர்கள் என்று தமிழ்ச்செல்வன் சொல்ல மாட்டார் என்று நம்புவோமாக!

எவ்வாறாயினும், எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது" எனும் பேசுபொருளிலும் அவ்வாறு தகாத செயல்களைச் செய்வோர் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியோர் என்பதிலும் தண்டனைக்கு உரியோர் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

நன்றி!
ஃஃஃ


சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001081&format=html
02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001153&format=html
03 - http://newshopper.sulekha.com/man-gets-10-year-jail-for-spying-for-pakistan_news_1038667.htm
04 - http://www.indianexpress.com/news/pakistani-spy-gets-10year-jail-term/426409/
05 - http://www.hinduonnet.com/2001/03/08/stories/0208000q.htm
06 - http://www.kashmir-information.com/Heroes/ali.html
07 - http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=
08 - http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=706300614&cat=&n_date=20070630
09 - http://www.tribuneindia.com/2009/20090620/nation.htm#11
10 - http://www.dailyexcelsior.com/web1/06may07/news.htm#10
11 - http://maricair.blogspot.com/2007/06/raw.html
12 - http://maricair.blogspot.com/2006/08/blog-post.html
13 - http://maricair.blogspot.com/2006/10/blog-post.html
14 - http://maricair.blogspot.com/2006/10/blog-post_24.html
15 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_05.html
16 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_12.html

சனி, ஜனவரி 30, 2010

புதுவகை நோய்: இமி-முற்றியது

கழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

அகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர்! அவர்களது துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் உருவானதே அகழிப் போர்.

இணைகற்பிப்பவர்களான மக்காவாசிகளுக்கும் இஸ்லாமியப் படை வீரர்களான மதீனத்து முஸ்லிம்களுக்கும் மதீனாவை அடுத்துள்ள மலைப் பகுதியான உஹதில் ஒரு போர் நடைபெற்றது. காலம் ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு ஷவ்வால் (பத்தாவது) மாதம். அப்போரின் இறுதியில், "அடுத்த ஆண்டு பத்ருக் களத்தில் ஷஅபான் (எட்டாவது) மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்'' என்று முஸ்லிம்களுக்கு மக்காவின் தலைவர் அபூஸுஃப்யான் சவால் விட்டிருந்தார்; முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் [சுட்டி-42].

ஆனால் ஒப்புக் கொண்டபடி மக்காவிலிருந்து அடுத்த ஆண்டில் எவரும் படை திரட்டி வரவில்லை.

யூதத் தலைவர்களுள் 20 பேர் மக்கத்துக் குறைஷிகளிடம் வந்து, அவர்களை நபியவர்களுக்கு எதிராகப் போர் புரியத் தூண்டினர். குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்தால் அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். "பத்ருக் களத்தில் அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று உஹதுப் போர்க்களத்தில் சவால் விடுத்து, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட குறைஷிகள், தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

இத்துணைக்கும் யூதர்களும் முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட, கீழ்க்காணும் 12 அம்ச உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே உருவாக்கப் பட்டிருந்தது:

(01) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராகக் கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரைச் சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு.
(02) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர்.
(03) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும் யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.
(04) யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்; குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
(05) ஒருவரின் நண்பன் செய்த குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக மாட்டார்.
(06) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
(07) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும்போது யூதர்களும் போர்ச் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.
(08) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.
(09) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய தீர்வு, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மூலம் பெறப் படும்.
(10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாது.
(11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.
(12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது [சுட்டி-43].

மேற்காணும் உடன்படிக்கையை யூதர்கள் முறித்தனர்.

மக்காவின் குறைஷியர், திஹாமாவின் கினானாவினர், ளஹ்ரானின் ஸுலைமியர், கீழ்த்திசையின் கத்ஃபானியர், ஃபஜாராவினர், முர்ராவினர், அஷ்ஜவினர், அஸதியர், ஆகிய பல குலத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் அயராது ஈடுபட்ட 20 யூதக் தலைவர்கள் அடங்கிய குழு, ஏறத்தாழப் பத்தாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டி மதீனாவை முற்றுகையிட அனுப்பி வைப்பதில் வெற்றி பெற்றனர்.

மதீனத்து முஸ்லிம்களுள் போரில் ஈடுபடத் தகுதியுடையோர் அப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் மட்டுமே. மதீனாவை எதிரிகளிடமிருந்து எவ்வாறு காப்பது?

அது புலப்பெயர்வின் (ஹிஜ்ரீ) ஐந்தாம் ஆண்டின் இறுதிக் கட்டம். அக்கால கட்டத்தில் புதுமையான போர்த் தந்திரம் ஒன்று (இதைப் புனித மோசடியார் 'சூழ்ச்சி' என்று சொல்வார்) நபித்தோழர் ஸல்மான் அல் ஃபார்ஸீ (ரலி) அவர்களால் முன்மொழியப் பட்டது. மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் வழியைச் சுற்றிலும் அகழ் தோண்டி, எதிரிகளைத் தடுப்பது என்பது திட்டம்.

இன்றைக்கு நபியின் பள்ளிவாயில் இருக்குமிடத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தில், மதீனாவின் அன்றைய நகர் எல்லையின் இறுதியில் நெடிய அகழி ஒன்று தோண்டப் பட்டது. எதிரிகள் மதீனாவில் எல்லையில் வந்து சேர்ந்து அகழைப் பார்த்துத் திகைத்து நின்றனர்.

இஸ்லாமிய எதிரிகள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அகழில் இறங்குவதோ அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாமலாகி விட்டது. முற்றுகையின்போது எதிரிகள் பலமுறை அகழியில் இறங்குவதற்கும் அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு முன்னர் எதிரிகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இவ்வாறாக எதிரிகளின் 'அகழ் முற்றுகை' ஏறத்தாழ ஒருமாத காலம் நீடித்தது.

இதற்கிடையில், சாகசம் செய்வதாக எண்ணிக் கொண்டு அகழைக் கடக்க முனைந்த அம்ரு இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடிப் பிடித்துத் தம் குதிரைகளுடன் இறங்கினர். அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் இடையிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரலி), முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ரு, "என்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?" என்று கேட்க, அலீ (ரலி) "நான்" என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரலி), அவன் கோபமடையும்படி சில சொற்களைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கிச் சீறினான். இருவரும் தங்களின் வாளைச் சுழற்ற, சில நொடிகளில் அலீ (ரலி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரைப் பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். குறைஷியருள் மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமாகூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

அந்நிகழ்வுதான் அகழிப் போர் வெற்றியின் திறவுகோல்.

இரண்டாவது தந்திரம் செய்தவர் இஸ்லாத்தில் அண்மையில் இணைந்திருந்த நுஐம் என்பார். இவரைத்தான் புனித மோசடியார் தனது மோசடிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவரைப் பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

உண்மையில் நுஐம், முஸ்லிம்களின் எதிரிப் படைகளுக்குத்தான் நன்மை செய்தார்; எவ்வாறு என்பதை இறுதியில் பார்ப்போம்.

பல்குலக் கலவையான எதிரிப் படைகளில் கத்ஃபான் எனும் ஒரு குலம் இடம் பெற்றிருந்ததை முன்னர் கண்டோம். அந்தக் குலத்தைச் சேர்ந்த நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்வேன்" என்றார். அதற்கு நபியவர்கள், "நீ தனியாக என்ன செய்துவிட முடியும்? உன்னால் முடிந்தால் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்" என்று கூறினார்கள்.

முதன் முதலாக நுஐம் சென்று சந்தித்தவர்கள், மதீனாவின் எல்லையோரத்தில் வசித்துக் கொண்டு இஸ்லாமிய எதிரிப் படையினருக்கு உணவுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மதீனத்து எட்டப்பர்களான குரைளா எனும் யூதக் குலத்தினர். நுஐம் குரைளா குலத்தாரிடம், "நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?" எனக் கேட்டார். அதற்கவர்கள், "ஆம்!" என்றனர். "இந்த மதீனா உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும் பிள்ளைகளும் பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகளின் நிலை வேறு. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலோ போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று உயிர் பிழைத்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். முஹம்மது உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். அதற்கு யூதர்கள், "நுஐமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்?" எனக் கேட்டனர். அதற்கவர், "நீங்கள் குறைஷியரிடம் அவர்களுள் சிலரை உங்களிடம் அடைமானமாக வைத்துக் கொள்ளக் கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போர் புரியாதீர்கள்" என்று அறிவுறுத்தினார். அதற்கு யூதர்கள், "நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்" என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஐம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம், "உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்! அப்படித்தான்" என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஐம், "யூதர்கள் முஸ்லிம்களோடு செய்திருந்த உடன்படிக்கையை முறித்தது பற்றி இப்போது மிகவும் வருந்துகின்றனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சிலரை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ்ரீ 5, ஷவ்வால் (பத்தாம்) மாதம் குறைஷிகள் யூதர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அதாவது, "நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும் ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்கள் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

அந்தச் செய்தி அனுப்பப் பட்ட நாள் சனிக்கிழமை!

குறைஷிகளின் அக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன், "இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த தண்டனை [007:163] என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும்வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாகச் சண்டையிட மாட்டோம்" என்று பதில் கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் சேர்த்தபோது, "நுஐம் நமக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்" என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

அதற்குப்பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி, "நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஐம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்" என்று தங்களுக்குள் கூறிவிட்டு, வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. மதீனத்து யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது [சுட்டி-44].

ஏறக்குறைய முற்றுகை முடிவுக்கு வந்தது. முற்றுகையின் மொத்த நாட்களிலும் - அதாவது அகழிப் போரின்போது - பத்தாயிரம் எதிரிகளுள் பத்துப் பேர் மட்டுமே கொல்லப் பட்டனர். இறுதியில், எல்லாரும் 'வெற்றிகரமாகப் பின்வாங்கி' உயிர் பிழைத்து, அவரவர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர்.

முற்றுகையின்போது மேட்டுப் பகுதியில் முஸ்லிம் வில்லாளிகள். தாழ்வான பகுதியில் எதிரிகள். இடையில் அகழி. போர் நடந்திருந்தால் எதிரிகள் முக்கால்வாசிப் பேர் உயிரிழந்திருப்பர்.

நுஐம் செய்த சூழ்ச்சியினால் அதிக இலாபம் அடைந்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிப் படையினர்தாம்.

ஒருமை-பன்மை வேறுபாடுகூட விளங்காத புனித மோசடியாருக்கு இந்த வேறுபாடு விளங்கும் என்று எதிர் பார்க்க முடியாதுதான்.

- புதுவகை நோய்: இமி முற்றியது -

நன்றி!

ஃஃஃ

சுட்டிகள்:
42 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#110
43 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
44 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#116

ஞாயிறு, ஜனவரி 17, 2010

புதுவகை நோய்: இமி-5

சலுகையா? கட்டாயமா?

"என்னை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வலுக்கட்டாயத்திற்கு உள்ளாகி, உயிர் போகும் சூழலில், என்னை மறுதலிப்பதாகச் சொல்லி உயிர் பிழைத்துக் கொள்ளலாம்" என்னும் அல்லாஹ்வின் விதிவிலக்குச் சலுகையை - உறுதியான நம்பிக்கையாளர்கள் பயன்படுத்தாத சலுகையை - அனுதினமும் கட்டாயமாகச் செயல் படுத்தப் படுகின்ற நிகழ்வைப்போல் அடுத்த அரைகுறையில் புனித மோசடி செய்யப் பட்டது.

அரைகுறை-6 சுரா (16:106) - எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது). - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப் படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் காஃபிரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

அபிசீனியா (எதியோப்பியா/ஹபஷா)வைச் சேர்ந்த ரபாஹ்-ஹமாமா அடிமைப் பெற்றோருக்குப் பிறந்த பிலால் (ரலி) என்பவர், இணைவைப்பாளர்களைச் சேர்ந்த மக்கத்துத் தலைவர்களுள் ஒருவனான உமைய்யா பின் கலஃப் என்பவனிடம் அடிமையாக இருந்தார். மீளெழுச்சியின்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தொடக்க கால மக்கத்து முஸ்லிம்களுள் ஒருவராவார் பிலால் (ரலி).

மக்காவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவனான தன்னிடம் அடிமையாக இருக்கும் பிலால் (ரலி), இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து உமைய்யா வெகுண்டான். ஓரிறைக் கொள்கையைக் கைவிடச் சொல்லி, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் பிலால் (ரலி) மீது கட்டவிழ்த்து விட்டான். கணக்கின்றிக் கசையடிகளைப் பரிசாக்கினான். அடிப்பதில் தன் கை சோர்ந்து போனால் தன்னச் சார்ந்த இன்னொருவரிடம் கொடுத்து அடிக்கச் சொன்னான். அத்தனைக்கும் பிலால் (ரலி) அசைந்து கொடுக்கவில்லை.

இறுதியில், கொளுத்தும் பாலை மணலில் ஆடையின்றி அவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சின் மீது ஒரு பாராங்கல்லை ஏற்றி வைத்து விட்டு, "இஸ்லாத்தைக் கைவிடு; அல்லது கைவிடுவதாகச் சொல், இப்போதே உனக்கு விடுதலை" என்று ஆசை காட்டினான். அப்போதும் அவர், "ஏகன், (அவன்);ஏகன்" என்றே உறுதியுடன் உரைத்தார். அவர் சொன்ன ஒவ்வொரு "ஏகன்" எனும் சொல்லுக்கும் அடியும் உதையும் அதிகரித்தன. அவை அதிகரிக்க அதிகரிக்க "ஏகன்" எனும் கொள்கைச் சொல் பிலாலிடமிருந்து முன்னைவிட யானைப் பிளிறலாய் வெளியானது. ஓரிறைக் கொள்கை என்பது உயிரைக் காட்டிலும் பெரிது எனும் உறுதி கொண்ட நெஞ்சினராய்த் திகழ்ந்ததால்தான் திண்ணையிலும் அவர் "சாகாத கருப்பு யானை"யாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் [சுட்டி-36].

தம் தோழர் பிலாலைக் குரைஷியர் பாலை மணலில் கிடத்தி சித்திரவதை செய்து கொண்டிருக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்து, அவரை விடுவிப்பதற்கு அபூபக்ரு (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். அபூபக்ரு (ரலி) உமையாவிடம் ஒன்பது பவுன் (9 தீனார்) செலுத்தி பிலால் (ரலி) அவர்களின் அடிமைத் தளையை அறுத்து விடுவித்தார். அப்போது அவ்விருவருக்கும் நடந்த உரையாடல், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

"அபூபக்ரே! என்னால் சித்திரவதைக்குள்ளாகி, ஏறக்குறைய செத்துவிட்ட, இனிமேல் எதற்கும் பயன்படாத இந்த முக்கால் பிணத்தை ஒரு பவுனுக்கு நீங்கள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனைக் கொடுத்து நீங்கள் ஏமாறிப் போனீர்கள்" என்றான் உமைய்யா.

"உமய்யா, அவசரப் பட்டு விட்டாய்!. நீ இந்தச் சொக்கத் தங்கத்துக்கு விலையாக நூறு பவுன் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனுக்கு இவரை விற்ற நீதான் ஏமாளிகளின் தலைவன்!" என்றார் அபூபக்ரு (ரலி).

உயிர் போகும் சூழலில் தம் கொள்கையை மாற்றிச் சொல்லச் சலுகையிருந்தும் நாவளவில்கூட அதைச் சொல்ல மறுத்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் பிலால் (ரலி) அவர்கள் இன்றும் உலக முஸ்லிம்களிடத்துத் தனி மரியாதையுடன் மதிக்கப் படுகிறார். Bilal Habashi the first muezzin of Islam was so named as he was from the Habash area, now known as Ethiopia. His life story resonates courage and consistency in a revolutionary time for the Arabs.

He had been amongst the slaves owned by Umaya ibn Khalaf, a member of the leading tribe of Arabia - the Quraish. This man became infamous in history due to his cruelty towards the new Muslims especially his slave Bilal.

Islam had been practiced undercover when Bilal chanced upon knowledge about this new religion which preached equality and worship of One Creator- Allah. He had heard about the prophet of Islam, Muhammad. Muhammad was also from the Quraish tribe and was known amongst his community as"Al-Amin"(the truthful one). This newfound belief led Bilal to being severely punished by his master who hated this new upstart religion.

The torture of Bilal is famous in the history of Islam as it depicted the religious ostracism the new Muslims faced. Umaya ibn Khalaf used to leave Bilal in the middle of the desert, in soaring temperatures, with huge stones placed upon his chest. Bilal Habashi refused under all this duress to give up his beliefs. Even as he was whipped and beaten he would not stop believing in one god. This defiance against his slave master, who may have owned his body, proved ultimately that nobody could own ones mind or ones thought.

Hearing of his plight another companion of the prophet Muhammad, Abu Bakr Siddiqui, came to his aid and bought his freedom for the price of nine dinars. Umaya felt he had won- and he reportedly told Abu Bakr that he would have gladly sold Bilal for one dinar. Abu Bakr replied that he would have paid one hundred dinars. This describes the high place and value of Bilal Habashi, the Ethiopian slave, amongst the early Arab Muslims. His status nor his colour bore any importance amongst them but the strength of his character and his unyielding adherence to his belief. [சுட்டி-37].

தூதுத்துவத்தில் பங்கு கேட்ட பொய்யன் முஸைலமாவை மறுத்த காரணத்தால் ஒவ்வோர் உறுப்பும் வெட்டப் பட்டு மரணித்த தியாகி ஹபீப் பின் ஸைத் அல் அன்ஸாரீ (ரலி) என்பவர், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற இன்னொருவராவார். உயிர்போகும் அதுபோன்ற சூழலில்கூட, தாம் இறைத்தூதராக உள்ளத்தால் ஏற்றுக் கொண்டவருக்கு இணையாக இன்னொருவனையும் "இறைத்தூதனே" என வெறும் நாவளவில் விளிக்க மறுத்தவராவார்.

"கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அரசில் பங்கும் அழகிய மங்கையரும் வழங்கப் படுவீர்; மறுத்தால் சிலுவையில் அறையப் படுவீர்" எனும் ஆசைகாட்டலையும் அச்சுறுத்தலையும் அலட்சியப் படுத்திய கைதி அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா அல் ஸஹ்மீ (ரலி) அவர்களின் உறுதிமிக்க தியாகத்தையும் வரலாறு தன்னில் பதித்துக் கொண்டுள்ளது. நபித்தோழர் அப்துல்லாஹ் அல் ஸஹ்மீ (ரலி) - இறுதிக் கட்டமாக ரோமாபுரி மன்னனின் தலையை மட்டும் முத்தமிட்டார், அதுவும் தம் சக கைதிகளின் விடுதலைக்காக.

மேற்காண்பவை அனைத்தும் சிலிர்ப்பூட்டும் சில்லரைக் கதைகளல்ல. மாறாக, அரைகுறை-6இல் எடுத்து வைக்கப் பட்ட இறைவசனம் 016:106இல் பின்னிக் கிடக்கும் வரலாற்றுப் பின்னணிகள் (except one who was forced while his heart is at peace with the faith) This is an exception in the case of one who utters statements of disbelief and verbally agrees with the Mushrikin because he is forced to do so by the beatings and abuse to which he is subjected, but his heart refuses to accept what he is saying, and he is, in reality, at peace with his faith in Allah and His Messenger . The scholars agreed that if a person is forced into disbelief, it is permissible for him to either go along with them in the interests of self-preservation, or to refuse, as Bilal did when they were inflicting all sorts of torture on him, even placing a huge rock on his chest in the intense heat and telling him to admit others as partners with Allah. He refused, saying, "Alone, Alone.'' And he said, "By Allah, if I knew any word more annoying to you than this, I would say it.'' May Allah be pleased with him. Similarly, when the Liar Musaylimah asked Habib bin Zayd Al-Ansari, "Do you bear witness that Muhammad is the Messenger of Allah'' He said, "Yes.'' Then Musaylimah asked, "Do you bear witness that I am the messenger of Allah'' Habib said, "I do not hear you.'' Musaylimah kept cutting him, piece by piece, but he remained steadfast insisting on his words. It is better and preferable for the Muslim to remain steadfast in his religion, even if that leads to him being killed, as was mentioned by Al-Hafiz Ibn 'Asakir in his biography of 'Abdullah bin Hudhafah Al-Sahmi, one of the Companions. He said that he was taken prisoner by the Romans, who brought him to their king. The king said, "Become a Christian, and I will give you a share of my kingdom and my daughter in marriage.'' 'Abdullah said: "If you were to give me all that you possess and all that Arabs possess to make me give up the religion of Muhammad even for an instant, I would not do it.'' The king said, "Then I will kill you.'' 'Abdullah said, "It is up to you.'' The king gave orders that he should be crucified, and commanded his archers to shoot near his hands and feet while ordering him to become a Christian, but he still refused. Then the king gave orders that he should be brought down, and that a big vessel made of copper be brought and heated up. Then, while 'Abdullah was watching, one of the Muslim prisoners was brought out and thrown into it, until all that was left of him was scorched bones. The king ordered him to become a Christian, but he still refused. Then he ordered that 'Abdullah be thrown into the vessel, and he was brought back to the pulley to be thrown in. 'Abdullah wept, and the king hoped that he would respond to him, so he called him, but 'Abdullah said, "I only weep because I have only one soul with which to be thrown into this vessel at this moment for the sake of Allah; I wish that I had as many souls as there are hairs on my body with which I could undergo this torture for the sake of Allah.'' According to some reports, the king imprisoned him and deprived him of food and drink for several days, then he sent him wine and pork, and he did not come near them. Then the king called him and asked him, "What stopped you from eating'' 'Abdullah said, "It is permissible for me [under these circumstances], but I did not want to give you the opportunity to gloat.'' The king said to him, "Kiss my head and I will let you go.'' 'Abdullah said, "And will you release all the Muslim prisoners with me'' The king said, "Yes.'' So 'Abdullah kissed his head and he released him and all the other Muslim prisoners he was holding. When he came back, 'Umar bin Al-Khattab said, "Every Muslim should kiss the head of 'Abdullah bin Hudhafah, and I will be the first to do so.'' And he stood up and kissed his head. May Allah be pleased with them both. [சுட்டி-38].

***

தனக்கு அரபு மொழியெல்லாம் அத்துப்படி என்பதாகக் காட்டிக் கொள்ள புனித மோசடிக்காரர் பெரிதும் பிரயாசைப் பட்டார். 'ஸூரா' (அத்தியாயம்) எனும் சொல்லை "சுரா" என்றார்; 'ஸீரா' (நபி வாழ்ந்த வரலாறு) என்பதை "சிரா" என்றார். 'பனூ குரைளா' (குரைளாவின் சந்ததியினர்)ஐ, //முஸ்லிமில்லாத அரேபியர்கள், பானு குஃரைஸா என்ற யூதனின் உதவியை நாடினர்// என்று ஒருமைப் படுத்தினர்; போலவே, //நேராக குஃரைஸ்ஸிடம் சென்று, "நான் உங்களிடம் வைத்திருக்கும் அன்பை நன்கறிவீர்கள். உங்களிடம் என் காதில் விழுந்த பரம ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். ரகசியத்தைக் காத்து என்னையும் காப்பீர்களா?" என அப்பட்டமாக நடித்தான். இதற்கு அவனும் சம்மதித்தான்// 'குரைஷி' எனும் மக்கத்துப் பெருங்குலத்தவரைப் பன்மை என விளங்க வேண்டிய அறிவின்றி "குஃரைஸ்" என்று ஓர் ஆளாகக் காட்டினார். போதாதென்று, //ஒரு அரேபிய பழமொழி பழக்கத்தில் உண்டு (Darabani, wa baka; Sabaqani, wa'shtaka)...// என்பதாக அரபுப் பழமொழிக்குள்ளும் புகுந்து விளையாடினார்.

ஆனால், பாவம்! வெட்டி-ஒட்டும்போது ஏற்பட்ட இமி நோய் நடுக்கத்தில் அத்தனை முயற்சிகளையும் தானே பாழாக்கிக் கொண்டு, தான் அரைகுறையே என்பதை வெளிச்சம் போட்டு அவரே காட்டி விட்டார்.

அரைகுறை-7 சுரா (40:28) - காபிஃர் அவனின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: "என் இறைவன் அல்லாஹ்வே தான்!" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்."
Sura (40:28) - YUSUFALI: It is He Who has sent His Messenger with Guidance and the Religion of Truth, to proclaim it over all religion: and enough is Allah for a Witness.

"Pharaoh" என ஆங்கிலத்தில் குறிக்கப் படும் 'ஃபிர்அவ்ன்' எனும் பெயருடைய எகிப்திய கொடுங்கோல் மன்னனைப் பற்றியோ அவனது காலகட்டத்தைப் பற்றியோ ஏதும் அறிந்திராத புனித மோசடியார், இறைவசனத் தமிழாக்கத்தில் குழம்பியதோடு மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் தான் அரைகுறையே என்பதை அசைக்க முடியாமல் உறுதிப் படுத்தி விட்டார்.

அரைகுறை-7இன் தமிழ்-ஆங்கில முழுவசனங்கள்:
'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர், "என் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறுவதற்காக (மூஸா-மோஸஸ் எனும்) ஒருவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்" என்று (மூஸாவுக்காக) வாதாடினார். [அல் குர்ஆன் 040:028]. A believer, a man from among the people of Pharaoh, who had concealed his faith, said: "Will ye slay a man because he says, 'My Lord is Allah'?- when he has indeed come to you with Clear (Signs) from your Lord? and if he be a liar, on him is (the sin of) his lie: but, if he is telling the Truth, then will fall on you something of the (calamity) of which he warns you: Truly Allah guides not one who transgresses and lies! [சுட்டி-39].
அரைகுறை-7க்கான கூடுதல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் "Musa was supported by a believing Man from Fir-awn's Family" எனும் தலைப்பில் கிடைக்கின்றன [சுட்டி-40].

தாம் ஏற்றிருந்த கொள்கையை, வெளிப்படுத்த வேண்டிய வேளையில், வெளிப்படுத்தத் தக்க விதத்தில், தம் கொடுங்கோல் மன்னனின் எதிரில் எடுத்துரைத்த அதே இறைநம்பிக்கையாளரைப் பற்றி அடுத்தடுத்த வசனங்கள் தெளிவாகப் பேசுகின்றன:
"...என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் அஞ்சுகிறேன். 'நூஹு(நோவா)' உடைய சமூகத்திற்கும் 'ஆது' உடைய சமூகத்திற்கும் 'ஸமூது' உடைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான (அழிவு)நிலையைப் போன்று (உங்களுக்கும் நிகழ்ந்து விடுமோ என அஞ்சுகிறேன்); ஆனால், அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் ..." [அல் குர்ஆன் 040:030-031] Then said the man who believed: "O my people! Truly I do fear for you something like the Day (of disaster) of the Confederates (in sin)! Something like the fate of the People of Noah, the 'Ad, and the Thamud, and those who came after them: but Allah never wishes injustice to his Servants. [சுட்டி-41].
தனக்கே விளங்காதவற்றைத் திண்ணை வாசகர்களுக்கு விளக்க வந்தவர் செய்ததும் வைத்த தலைப்பும் மிகப் பொருத்தம் - அதுதான் "புனித மோசடி".

அடுத்து, அகழிப் போரைப் பற்றித் தெரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ

சுட்டிகள் :