திங்கள், பிப்ரவரி 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7

இஸ்லாமுக்கு முரணான கவிதைகள் துர்நாற்றம் பிடித்த சீழைவிட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட 'இஸ்லாமிய இலக்கியம்' என்னும் பெயரால் இஸ்லாமுக்கு முரணானக் கருத்துகளைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.

அல்குர்ஆன், நபிமொழிகள் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாமுக்கு முரணான கருத்துகளைக் கொண்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்' எப்படித்தான் தலையெடுத்தன?

பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வம் இதற்குக் காரணமாகும்.

இன்றுங்கூட புதிதாக இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்கும் சகோதர-சகோதரிகள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு-சம்பிரதாயங்களிலிருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபட இயலாத நிலையில் இருப்பதை நாம் காணுகிறோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு-ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்?

அக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில் இருத்தியே அவர்களுடைய நிலையை அணுக வேண்டியுள்ளது. அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப் போயிருந்த நிலையில், அவற்றை விட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் இருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிலிருந்து இன்னொரு புதிய பண்பாட்டுக்கு மாறுகின்ற கட்டத்தில் (Transitional period) அவர்களுடைய நிலை இருந்தது எனலாம்.

பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதா-காலட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேரோட்டம், ஆனை-குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல், கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிறசமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதனைக் கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் 'அறிஞர்கள்' புதிய முஸ்லிம்களின் தொடரும் பழமைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி? என யோசித்தனர். அதன் விளைவாக, பிறசமயச் சடங்குகளுக்கு ஒப்பாக இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசினர்.

மூர்த்தி உற்சவங்கள் தர்ஹா உரூஸ்-கந்தூரிகள் ஆயின; தேரோட்டம் என்பது சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை-குதிரைடன் உண்டியல் ஊர்வலங்கள் அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கபுறு(மண்ணறை)களுக்குப் பூசும் சந்தன அபிஷேகமாக அட்ஜஸ்ட் செய்யப் பட்டது.

இந்தப் 'போலச் செய்தல்' (To imitate) என்னும் மனித இயல்பு, இஸ்லாமியத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத் துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.

எனவே, புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாசத் தாகத்திற்கு அந்தச் சமகாலப் புலவர்களும் கற்பனை நீர் வார்த்து, பிறமத இலக்கியங்களைப் போல 'இஸ்லாமிய இலக்கியங்களை' இயற்றத் தொடங்கினர்.

இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கு ஆதாரங்களாக அமைந்த குர்ஆன்-ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய கடமையைப் பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, குர்ஆனின் மொழியாகிய அரபுமொழியின் மீது அக்காலத் தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு விதமான தெய்வீக பக்தி ஊட்டப் பட்டது.

தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபுமொழியில் அமைந்த குர் ஆன் ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. வேற்றுமொழியில் குர்-ஆனையோ ஹதீஸ்களையோ மொழிபெயர்ப்பது, அவற்றின் புனிதத்தைக் களங்கப் படுத்துவதாகும் என்ற மடத்தனமான நம்பிக்கை நிலவிய காலம் அது. இவ்வாறாக, இஸ்லாமின் அடிப்படைகளான குர்-ஆனையும் ஹதீஸையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு, அவற்றைத் தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப் பட்டது.

தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துகளை எடுத்தெழுதுவதைத் தவறாகக் கருதிய அக்கால கட்டத்தில், அரபுமொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமீது வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.

மக்களுடைய இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொண்ட சிலர், (தங்களுடைய படைப்புகளுக்குப் புனிதப் பூச்சு வேண்டி) தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அரபு எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடலாயினர். 'அவன் வந்தான்' என்பதை avan vanthaan என (தற்கால யுனிகோடில்) எழுதுவதுபோல் அரபு எழுத்து வடிவத்தில் தமிழை எழுதியமையால் 'அரபுத் தமிழ்' என ஒரு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், இந்த அரபுத்தமிழ் வடிவத்தில்கூட குர்ஆன்-ஹதீஸ்களுடைய பொருளை எழுதி யாரும் வெளியிடவில்லை.

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: